பிரதாப முதலியார் சரித்திரம்: Difference between revisions

From Tamil Wiki
Line 63: Line 63:
[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp6kZUy#book1 பிரதாப முதலியார் சரித்திரம் மின்னூல்]
[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp6kZUy#book1 பிரதாப முதலியார் சரித்திரம் மின்னூல்]


[https://www.ijoes.in/papers/v2i11/6.IJOES-Dr%20RAJENDRA%20PRASAD%20(38-44)%20(1).pdf
[https://www.ijoes.in/papers/v2i11/6.IJOES-Dr%20RAJENDRA%20PRASAD%20(38-44)%20(1).pdf THE SPIRIT OF RATIONALISM AND REFORMISM IN SAMUEL VEDANAYAGAM PILLAI’S PRATHAPA MUDALIAR CHARITHRAM – By Dr. Srinivasarao Kasarla  - Research article in "International Journal Of English and Studies (IJOES)"]
THE SPIRIT OF RATIONALISM AND REFORMISM IN SAMUEL VEDANAYAGAM PILLAI’S PRATHAPA MUDALIAR CHARITHRAM – By Dr. Srinivasarao Kasarla  - Research article in "International Journal Of English and Studies (IJOES)"]


[https://www.google.co.in/books/edition/The_Life_and_Times_of_Pratapa_Mudaliar/WuO24gKgWroC?hl=en&gbpv=1&kptab=overview
[https://www.google.co.in/books/edition/The_Life_and_Times_of_Pratapa_Mudaliar/WuO24gKgWroC?hl=en&gbpv=1&kptab=overview Afterword by Sascha Ebeling in ‘The Life and Times of Pratapa Mudaliar’, English translation]
Afterword by Sascha Ebeling in ‘The Life and Times of Pratapa Mudaliar’, English translation]

Revision as of 18:59, 15 January 2022

பிரதாப முதலியார் சரித்திரம். ஆசிரியர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826- 1889). தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் ஆகும். அதுவரை செய்யுள் வடிவ இலக்கியங்களே இருந்து கொண்டிருந்த தமிழிற்கு உரைநடை வடிவிலான புனைகதை இலக்கிய வகை இந்நூல் வழியாக அறிமுகமானது. அவ்வகையில் இது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்நாவலின் கதாநாயகன் பிரதாப முதலியாரின் வாழ்க்கை நிகழ்வுகளை சொல்வதாக அமைந்த நாவல். இது பெண்விடுதலை, சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றைப் பேசும் சமூக மிகுகற்பனை படைப்பாகும்.

உருவாக்கம்

1857ல் எழுதப்பட்ட இந்நாவல் 1879ல் வெளியாகியது. ஆங்கிலமும் தமிழும் நன்றாகக் கற்றிருந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆங்கில நாவல்களைப் படித்து அது போலத் தமிழில் எழுத வேண்டுமென விரும்புகிறார். தமிழில் உரைநடை நூல்கள் இல்லை என்ற குறையை நீக்குவதற்காக இதை எழுதுவதாக நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அதற்கு முன்னர் அவர் எழுதிய நீதி நூல், பெண்மதிமாலை, சர்வ சமய சமரசக் கீர்த்தனம் போன்ற செய்யுள் நூல்களில் எழுதியிருந்த அறநெறிக் கொள்கைகளுக்கு உதாரணங்கள் காட்டவும் பிரதாப முதலியார் சரித்திரம் எழுதுவதாகவும் முன்னுரையில் குறிப்பிடுகிறார். பத்மாவதி சரித்திரத்தின் முன்னுரையில் அ.மாதவையா பிரதாப முதலியார் சரித்திரத்தை ’அதிகப் பயன்படாமை கருதி மேலை நாட்டினரால் சிறுபான்மையே கையாளப்படும் உரோமான்ஸ் வகுப்பைச் சேர்ந்தது’ என்கிறார்.

வசன காவியம் என்றே தனது நாவலைக் குறிப்பிடும் வேதநாயகம் பிள்ளை அறநெறிக்கருத்துகளை சொல்லும் அதே நேரம் வாசகர்களின் ரசனயை ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டுமென எண்ணி நகைச்சுவைப் பகுதிகளையும் இதில் எழுதியுள்ளார்.

பதிப்பு

1857ல் எழுதப்பட்ட இந்நாவலின் முதற்பதிப்பு 1879ல் வெளியாகியது. இந்த நாவல் அடைந்த பிரபலம் காரணமாக பல பதிப்புகளும், திருத்தங்களுடன் கூடிய மறுபதிப்புகளும் வெளியாகி இருக்கின்றன. 1819-ல் மூன்றாவது பதிப்பு வெளியானது. 1914-ல் வெளிவந்த ஐந்தாம் பதிப்பில் அதன் பதிப்பாசிரியராக இருந்த வேதநாயகம் பிள்ளையின் மகன் திரு. வி. ஞானப்பிரகாசம் பிள்ளை அவர்களால் முதல் முறையாக சில பிழை திருத்தங்களும் ஒரு முகவுரையும் சேர்க்கப்பட்டது. 1917-ல் வெளிவந்த எழாம் பதிப்பு ஆயிரத்து ஐநூறு பிரதிகள் அச்சிடப்பட்டது. அதில் மாயவரத்தை சேர்ந்த வி. ஜி. ஆரோக்கியசாமி & ப்ரதர்ஸ் பதிப்பகம் (வேதநாயகம் பிள்ளையின் பேரர்கள் நடத்திய) மேலும் சில திருத்தங்கள் செய்து வெளியிட்டார்கள்.

வேதநாயகம் பிள்ளையால் அந்தக் கால இயல்புக்கேற்ற தமிழ்நடையில் எழுதப்பட்டிருந்த இந்த நாவலைத் 1948ல் தென்னிந்திய சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்ட பதிப்பில் வடமொழி சொற்கள் அனைத்தும் தமிழாக்கம் செய்யப்பட்டு முற்றிலும் மாற்றி வெளியிடப்பட்டது. இச்செயல் பின்னர் தமிழ் எழுத்தாளர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. க.நா.சு இதனை ‘வன்முறைச் செயல்’ என்று குறிப்பிட்டுக் கண்டிதிருக்கிறார். இவ்விதம் ஆசிரியருக்கு இழைக்கப்பட்ட அநீதியை சீர்செய்யும் விதமாக சக்தி காரியாலயம் 1957ல் மீண்டும் ஒரு மாற்றமில்லாத முழுப் பிரதியை வெளியிட்டது.

1979-ல் இந்நாவலின் நூற்றாண்டு நினைவு சிறப்புப் பதிப்பு வேதநாயகம் பிள்ளையின் பேரன் வே.ஞா.ச. இருதயநாதன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.

மொழியாக்கம்

  • பிரதாப முதலியார் சரித்திரம் மீனாட்சி தியாகராஜன் மொழியாக்கத்தில் 2005ஆம் ஆண்டு ’தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் பிரதாப முதலியார்’ என்னும் பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. The Life and Times of Pratapa Mudaliyar - Mayuram Vedanayakam Pillai - Translated by Meenakshi Tyagarajan
  • பேராசிரியர் வின்செண்ட் M. லாரன்ஸ் என்பவரின் மொழியாக்கத்தில் எதிர் வெளியீடாக ஆங்கிலத்தில் 2016ல் வெளியாகி இருக்கிறது. The History of Prathaba Mudaliar (எதிர் வெளியீடு)
  • தி அட்வென்சர்ஸ் ஆஃப் ப்ரதாபன் (The Adventures of Pratapan - Amar Chitra Katha)என்ற பெயரில் அமர் சித்திரக் கதையாகவும் வெளிவந்துள்ளது. இது இந்திரா அனந்தகிருஷ்ணன் என்பவரால் எழுதபட்ட நாவலின் சுருக்கமான தழுவல் ஆகும். இப்போதும் இது பதிப்பிக்கப்படுகிறது.
  • பிரதாப முதலி – தமிழு சாகித்யத மொதலனேய காதம்பரி [1] என்ற பெயரில் 1957-ல் மாத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது. Nētrāvati Prakāśana, Mangalore : Basel Mission Press 1957

கதைச்சுருக்கம்

இந்நாவல் பிரதாப முதலியார் என்பவரைக் கதாநாயனாகக் கொண்டு அவரது தற்கூற்றாக எழுதப்பட்டுள்ளது. அவன் ஞானாம்பாள் என்பவளைத் திருமணம் செய்வதும் பின்னர் அவர்கள் பிரிவதும் அதன் பின்னர் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் இதன் கதைக்களம்.

பிரதாப முதலியாரின் குழந்தைப்பருவத்தில் இருந்து கதை துவங்குகிறது. இந்நாவலின் கதைநாயகி ஞானாம்பாள். சிறுவயது முதலே இருவரும் ஒன்றாகக் கல்வி கற்கிறார்கள். அவளை இளமை முதலே காதலிக்கும் பிரதாப முதலியார் அவளையே மணந்துகொள்கிறான். ஆனால் அதற்கு முன்னர் திருமணம் நிகழ்வதிலேயே பல சிக்கல்கள் வருகின்றன. திருமணத்துக்குப் பிறகு வீட்டோடு மருமகனாக இருக்க வேண்டுமென ஞானாம்பாளின் தந்தை சம்பந்த முதலியார் சொல்கிறார். அதை பிரதாப முதலியாரின் தந்தை கனகாச்சல முதலியார் ஏற்க மறுப்பதால் திருமண ஏற்பாடு நின்று போகிறது.

அதன் பின்னர் பிரதாப முதலியார், ஞானாம்பாள் இருவருக்கும் வேறு இடங்களில் முறையே மணமகளும் மணமகனும் நிச்சயம் செய்யப் படுகிறது. இரண்டு குடும்பங்களுக்கும் தொடர்புடைய உறவினர் இறந்து போகவே திருமணம் மீண்டும் தடைப்படுகிறது. இரண்டு குடும்பத்தினரும் தத்தமது சம்பந்திகளுக்கு குறித்த நாள் அன்று திருமணம் நடைபெற இயலாதென கடிதம் அனுப்புகிறார்கள். ஆனால் அது இருவருக்கும் சென்று சேராமையால் அந்த இரு குடும்பங்களும் நிச்சயித்த தினத்தன்று திருமணம் நடக்க இருந்த ஊருக்கு வருகிறார்கள். சம்பந்திகளை சரியாக அறிமுகம் செய்திருக்காத நிலையில் அவ்விரு குடும்பங்களும் ஒருவரை ஒருவர் சம்பந்தி என்று எண்ணிக் கொள்கிறார்கள். பிரதாப முதலியாருக்கு பேசிய பெண்ணுக்கும் ஞானாம்பாளுக்குப் பேசிய மணமகனுக்கும் திருமணம் நடந்து விடுகிறது.

அதன் பிறகு ஒரு நாள் ஞானாம்பாளை மணக்க விரும்பிய வேறொருவர் அவளை ஆள் வைத்துக் கடத்த முயல்கிறார். அதிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பும் ஞானாம்பாளை பிரதாப முதலியார் மீட்டு வருகிறார். இதனால் மனம் மாறிய ஞானாம்பாளின் தந்தை பிரதாப முதலியாருக்கு அவளை மணமுடித்து வைக்கிறார். அதன் பிறகு ஒருமுறை வேட்டை காணச் சென்ற பிரதாப முதலியார் அண்டை நாடாகிய விக்கிரமபுரியில் அநீதியான முறையில் சிலரால் வழக்குத் தொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவரைப் பிரிந்த ஞானாம்பாள் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, ஆண் வேடமிட்டு, காட்டில் அலைந்து திரிகிறாள். இதற்கிடையில், அந்த அண்டை நாட்டில் அரியணைக்குரிய வாரிசை இழக்கிறது. அவர்களது வழக்கப்படி, பட்டத்து யானை ஒரு புதிய அரசனை மாலையிட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டும். யானை காட்டுக்குள் அலைந்து திரிந்து ஆண்வேடமிட்டிருந்த ஞானாம்பாளுக்கு மலர் மாலை அணிவிக்கிறது. விரைவில், அவள் அந்நாட்டின் அரசனாக அறிவிக்கப்பட்டு அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள்.

ஆண் வேடத்தில் அரசு புரியும் ஞானாம்பாள் தன் கணவன் அங்கு சிறைப்பட்டிருப்பதை அறிந்து வழக்கை விசாரித்து நியாயம் வழங்குகிறாள். பிரதாப முதலியாரை துணை அரசனாக்கி ஆண்டு வருகிறாள். அந்நாட்டின் இளவரசி(முந்தைய மன்னனின் மகள்) ஆண் வேடமிட்டிருக்கும் ஞானாம்பாளை மணக்க விரும்புகிறாள். ஞானாம்பாளும் பிரதாப முதலியாரும் இரவோடிரவாக அங்கிருந்து நீங்குகிறார்கள். தான் ஒரு பெண் என்பதை அந்த இளவரசியிடம் கடிதம் எழுதித் தெரிவித்து அவளுக்கே முடிசூட்டி வைக்கிறார்கள். இருவரும் தங்கள் ஊராகிய சத்தியபுரிக்குத் திரும்பும் வழியில் ஞானாம்பாளுக்கு அம்மை நோய் தாக்குகிறது. அவள் இறந்து போனதாக மருத்துவர்கள் அறிவித்துவிட அனைவரும் துயரத்துடன் ஊர் திரும்புகிறார்கள். அதன் பிறகு, அவள் இறக்கவில்லை, நோயின் கடுமையில் மயக்கம் அடைந்திருந்தவளை இறந்து போனதாகத் தவறாகத் தெரிவித்து விட்டதாக தெரிய வருகிறது. அனைவரும் மகிழ்சியோடு சத்தியபுரியில் வாழ்கிறார்கள்.

இதுவே மையக்கதை என்றாலும் பல்வேறு கிளைக் கதைகளோடு நாவல் பயணிக்கிறது.

கதைமாந்தர்

  • பிரதாப முதலியார்- கதைநாயகன். ஞானாம்பாளின் இளமைக்காதலன். கணவன்.
  • ஞானாம்பாள்- கதைநாயகி. அழகும், அடக்கமும், அறிவும், கொடையும், பெருந்தன்மையும், இனிமையாகப் பேசும் இயல்பும், சொற்சாதுர்யமும் நிறைந்த பெண். கணவனை நேசிப்பவள். மாறுவேடத்தில் ஒரு நாட்டையே நிர்வக்கிக்கும் திறன் கொண்டவள்.
  • சுந்தரத்தண்ணி: பிரதாப முதலியாரின் அம்மா. ஞானம் உடையவள். ஆண்களுக்கு அறிவுரை கூறும் ஆற்றல் கொண்டவள். அவளது துணிவையும் வழக்காடும் திறனையும் சென்னை கவர்னரே பாராட்டுகிறார்.
  • கனகாச்சல முதலியார் - பிரதாப முதலியாரின் தந்தை. செல்வந்தராயினும் பொறுமை மிக்கவர்.
  • சம்பந்த முதலியார் – ஞானாம்பாளின் தந்தை. செல்வத்தின் மீது மிகுந்த நாட்டம் கொண்டவர். ஞானாம்பாளால் மாற்றம் அடைகிறார்.
  • கனகசபை - பிரதாப முதலியாரின் நண்பன்.
  • தேவராஜ பிள்ளை – ஆதியூரின் தலைவர். கனகசபையின் தந்தை. அறிவார்ந்தவர், பிரதாப முதலியார்-ஞானம்பாள் இருவருக்கும் பல விதங்களில் உதவுபவர்.

மதிப்பீடு

பெங்களூரில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்த ”தி ஹார்வெஸ்ட் ஃபீல்ட்” என்னும் இதழ் மார்ச் 1886 இதழில் ”இந்த புத்தகம் தமிழ் சிந்தனை மற்றும் இலக்கியத்தில் தெளிவான முன்னேற்றத்தின் ஒரு அறிகுறியாகும். ஏனெனில் இதில் இடம்பெறும் தமிழ் பேச்சில் மேற்கத்திய சிந்தனைப் போக்கு இடம்பெறுகிறது. இது சிறந்த குடும்பப் பாங்கான புத்தகம் மற்றும் நன்கு திட்டமிட்டு எழுதப்பட்டுள்ளது” என்று இந்நாவல் வந்த காலகட்டத்தில் மதிப்புரை வெளியாகியது.

இந்நாவல் நீண்ட வாக்கிய அமைப்புகளும், எராளமான உருவகங்களும், பழமொழிகளும், அணிகளும் கொண்ட நடையில் அமைந்தது. அக்காலகட்டத்தில் புழங்கிய வடமொழிச் சொற்கள் அதிகம் புழங்கும் தமிழ் நடையில் எழுதப்பட்டிருந்தது. பிரதாப முதலியார் சரித்திரம் விரிவான புறச்சூழல் சித்தரிப்பும், கதைமாந்தரின் இயல்புகளில் நுட்பமும் கொண்டது அல்ல. ஆரம்பகாலக் கதைகள் பலவற்றில் வருவது போல நிகழ்வுகள் நம்ப முடியாத அசாதாரணத் தன்மை கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் பலர் நீதி உபதேசக் கருத்துக்களையும் நீதிக்கதைகளையும் சொல்கிறார்கள். பல இடங்களில் நீதிக் கருத்துக்கள் கட்டுரைகள் போல தொடர்பின்றி ஆசிரியரின் குரலாக இடம்பெறுகின்றன. இன்னும் சில கதாபாத்திரங்கள் அதற்கென்றே கதையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக பிரதாப முதலியாரின் ஆசிரியராக வரும் கனகானந்த பிள்ளை பல மூடவழக்கங்களுக்கு எதிரான கருத்துக்களை சொல்வதற்காகவே வரும் கதாபாத்திரமாக தோன்றுகிறது. மையக்கதை ஓட்டதிற்கு விலகி பல உபகதைகளும் நாவலில் வருகின்றன.

இந்நாவலின் வழியாக அன்றிருந்த சமூக அரசியல் நிலைமைகளை ஒரளவு அறிந்து கொள்ள முடிகிறது. கதை நிகழும் காலகட்டம் முகலாய அரசு முடிவடைந்து ஆங்கிலேய அரசு காலூன்றி விட்ட காலகட்டம். அதனால் இஸ்லாமிய அரசர்களின் கீழ் திவான்களாக இருந்து செல்வந்தர்களாக ஆகியவர்களின் குடும்பங்கள், பாளையப்பட்டு ஆட்சியாளர்களின் கதைகள் இதில் வருகின்றன. 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த டல்ஹளசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட வாரிசு இழப்புக் கொள்கை (Doctrine of Lapse) ஆண் வாரிசின்றிப் போகும் நாடுகளில் ஆண் குழந்தைகள் தத்தெடுக்கப்படுவது எற்கப்படவில்லை என்பதன் பாதிப்பும் இந்த நாவலில் வருகிறது. சமுதாயத்தில் ஆங்கிலத்தின் மீது உருவாகி பெருகி வரும் மோகமும் தமிழறிஞர்களை ஆங்கிலம் கற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பதன் சித்திரமும் வருகின்றன. மேலை கலாசாரத்தின் மீது பெரும் பற்று கொண்டு மக்கள் நாத்திகவாதம் பேசத் துவங்குவதும் வருகிறது. பாளையப்பட்டு ஆட்சியாளர் குடும்பத்தில் வாரிசுகளுக்குத் திருமணம் நிச்சயம் ஆனால் ஆங்கிலேய ஆட்சியாளர் அனுமதி பெற வேண்டும் என்பது போன்ற தகவல்களை இக்கதையில் காண முடிகிறது. மேலும் அன்று பிரிட்டிஷார் உருவாக்கியிருந்த நீதிமன்ற நடைமுறையில் நிலவிய ஊழல்கள் ஆகியவையும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

பெண் கல்விக்கும் சுதந்திரத்துக்கும் அளித்த முக்கியத்துவம், ஆணுக்கு இணையான நிர்வகிக்கும் திறனும் சொற்சாதுர்யமும் கொண்ட பெண் கதைமாந்தர் சித்தரிப்புகள் ஆகியவற்றால் இந்நாவல் முக்கியமானதாக ஆகிறது.

இணைப்புகள்

தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்: கி.வா.ஜகந்நாதன் இணைப்பு

பிரதாப முதலியார் சரித்திரம் மின்னூல்

THE SPIRIT OF RATIONALISM AND REFORMISM IN SAMUEL VEDANAYAGAM PILLAI’S PRATHAPA MUDALIAR CHARITHRAM – By Dr. Srinivasarao Kasarla - Research article in "International Journal Of English and Studies (IJOES)"

Afterword by Sascha Ebeling in ‘The Life and Times of Pratapa Mudaliar’, English translation

  1. ’பிரதாப முதலி – தமிழு சாகித்யத மொதலனேய காதம்பரி’ [1]