பாரதிதாசன் பரம்பரை

From Tamil Wiki
Revision as of 23:13, 25 February 2022 by Jeyamohan (talk | contribs)

பாரதிதாசன் பரம்பரை : கவிஞர் பாரதிதாசனின் வழிவந்தவர்கள் என தன்னை அறிவித்துக் கொண்டவ கவிஞர்களின் வரிசை. இவர்கள் பெரும்பாலும் நவீன மரபுக்கவிதைகளை எழுதினர். எளிய யாப்பில் சமூகசீர்திருத்தக் கவிதைகளையும் அரசியல் கவிதைகளையும் காதல் கவிதைகளையும் எழுதுவது இம்மரபு. இவர்கள் தமிழில் முக்கியமான இலக்கிய இயக்கமாகச் செயல்பட்டனர். இவர்கள் பேசிய அதே உள்ளடக்கத்துடன் புதுக்கவிதை வடிவில் எழுதும் வானம்பாடி கவிதை இயக்கம் தோன்றியதும் இவர்களின் இலக்கிய வீச்சு குறைந்து பின்னர் ஓய்ந்தது

பாரதிதாசன் பரம்பரை உருவாக்கம்

பாரதிதாசன் தன் கவிதைக்கொள்கையை நிலைநாட்டும் பொருட்டு குயில் என்னும் இதழை தொடங்கினார். தொடக்கத்தில் தீவிர அரசியல் பேசிய குயில் 1948 ல் அரசால் தடைசெய்யப்பட்டது. அதன்பின் தொடங்கியபோது இலக்கிய இதழாக மாறியது. அவ்விழின் வழியாக பாரதிதாசன் ஒரு கவிப்பரம்பரையை உருவாக்குவதன் தேவையை முன்வைத்தார்.

மக்களுக்கு முத்தமிழின் சிறப்பைப் பாடிக் காட்டுவது

கலகம் செய்யும் கட்சிகளில் தலையிடாமல் இருப்பது

வலிய வரும் சண்டையை வாவென வரவேற்பது

சாதி மதச் சிந்தனைகளை குயில் இதழ் தவிர்க்கும்

உலகெங்கும் வாழும் தமிழ்க்கவிஞர் பெருமக்களை

ஒன்று சேர்க்க உழைக்கும் கவிஞரிடையே உயர்ந்த

பண்பாட்டை வளர்க்க உதவும் தமிழ்க்கவிஞர் எழுதிய

கவிதைகளை அழகிய நூலாய் அச்சிட்டு வெளியிடுதல்

அவற்றை ஆங்கிலத்தில் பெயர்த்துத் தமிழ்நிலத்தின்

பெருமையை உலகெங்கும் பறைசாற்றுதல்

என அடிப்படையாக ஒரு கவிஞர் மரபு தோன்றுவதற்கான தேவையை முன்வைக்கும் பாரதிதாசன் அதன் வழியாக உருவாகவேண்டிய விளைவையும் வரையறை செய்கிறார்

தொன்று தொட்டப் பாட்டுச் சுவையில் மனம்பறி

கொடுத்து வாழ்ந்து வந்த தமிழர் தற்காலத்தில்

அச்சுவை மறந்து நிற்கும் நிலைமாற்றி அவர்களைத்

தமிழ்ச்சுவை மாந்தச் செய்தல்’’      (குயில் 15.4.1962- பக் 46-48)

உலகமெங்கும் இருந்து தமிழ்க் கவிஞர்களை ஓர் அமைப்பாக ஒருங்குதிரட்டவேண்டும் என்னும் எண்ணம் பாரதிதாசனுக்கு இருந்தது. அதற்காக அவர் தமிழ்க்கவிஞர் மன்றம் என்னும் அமைபபி 1961ல் தொடங்கினார். பாரதிதாசன் பரம்பரை கவிஞர்கள் அந்த இயக்கம் வழியாக உருவானவர்கள்

முதல் காலகட்டத்து கவிஞர்கள்

குயில் இதழின் முதல் காலக்கட்ட பாரதிதாசன் பரம்பரையினர் 1946 முதல் 1948 வரை குயிலில் எழுதிய தொடக்கக் கால கவிஞர்கள்

  • சுரதா
  • வாணிதாசன்
  • கோவேந்தன்
  • மதியரசன்
  • சாரண பாசுகரன்
  • மதுரை மன்னன்
  • முடியரசன்

இரண்டாம் காலகட்டக் கவிஞர்கள்

1958 ஆம் ஆண்டு குயில் மீண்டும் வெளிவந்து 1961ல் நின்றது. இக்காலகட்டத்து கவிஞர்கள் இரண்டாம் தலைமுறையினராகக் கருதப்படுகின்றனர்

துரை மாணிக்கம்(பெருஞ்சி்த்திரனார்)

  • வேழவேந்தன்
  • புதுவை சிவம்
  • லெனின் தங்கப்பா
  • அரிமதி தென்னகன்
  • பட்டுக்கோட்டை ராஜேந்திரன்
  • தமிழன்பன்
  • எழில் முதல்வன்
  • தமிழ்க்கோவன்
  • காசி ஆனந்தன்

மூன்றாம் காலகட்டக் கவிஞர்கள்

1962க்குப்பின் எழுதியவர்கள் இந்த மரபில் இணைகிறார்கள்

  • வல்லம் வேங்கடபதி
  • நாரண துரைக்கண்ணன்
  • ஈரோடு ஆற்றலரசு
  • முருகு சுந்தரம்
  • அழ. வள்ளியப்பா
  • பொன்னடியான்
  • நாரா நாச்சியப்பன்
  • நா. முத்தையா

நான்காம் காலகட்டக் கவிஞர்கள்

அறுபதுகளுக்குப்பின் பாரதிதாசன் கவிதாமண்டலம் என்னும் அமைப்பை பாரதிதாசனின் குயில், பொன்னி போன்ற பல இதழ்கள் பல திசைகளில் முன்னெடுத்தனர். இக்காலக்கட்டத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் பாரதிதாசன் மரபில் இணைந்திருந்தனர். இவ்வெண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்துவது என்பதே பாரதிதாசன் பரம்பரையின் நோக்கமாக இருந்தது. பொன்னி இதழ் பாரதிதாசன் பரம்பரை என்னும் தலைப்பில் பலகாலம் தொடர்ந்து கவிஞர்களை புகைப்படத்துடன் அறிமுகம் செய்துகொண்டிருந்தது.

  • மு. அண்ணாமலை
  • புத்தனேரி நா. சுப்பிரமணியம்
  • நாக முத்தையா
  • இராம. வே. சேதுராமன்
  • சாமி.பழனியப்பன்
  • அண. இராமநாதன்
  • கோவை இளஞ்சேரன்
  • சி. மாணிக்கம்
  • கே.டி. தேவர்
  • நா.கு. நமச்சிவாயன்
  • கு.திரவியம்
  • வழித்துணைராமன்
  • ரங்க துரைவேலன்
  • வா.செ. குழந்தைசாமி
  • வெ. குருசாமி
  • வே. சண்முகம்
  • பெ. நாகப்பன்
  • சி.சு. சீனிவாசன்
  • ஜே.எஸ். பொன்னையா
  • சி. திருநாவுக்கரசு
  • க. சீதாராமன்
  • செயராமன்
  • ஞா. மாணிக்கவாசகன்
  • கி. மனோகரன்
  • எஸ். எம். இராமநாதன்
  • டி.கே. கிருஷ்ணமூர்த்தி
  • கதி. சுந்தரம்
  • எம்.எஸ்.மணி
  • நா. கணேசன்
  • தி.அரசுமணி
  • ப. சண்முகசுந்தரம்
  • சு.பரமசிவன்
  • மா.குருசாமி
  • ப. முத்துச்சாமி
  • செரீப்
  • சுப்பு ஆறுமுகம்
  • குப்புசாமி
  • சிவப்பிரகாசம்

இவர்கள் தவிர பாரதிதாசனுடன் ஒன்றிணைந்து கவியரங்குகளில் கலந்து கொண்ட கவிஞர்களும் பாரதிதாசனின் தாக்கம் பெற்றே கவிபுனையத்தொடங்கினர். நவீன தமிழ்க் கவிதையின் தொடக்குநர்களான மீரா, சிற்பி, பாலா, அப்துல்ரகுமான் போன்ற பலரும் பாரதிதாசன் பரம்பரையின் தாக்கம் பெற்றவர்களே ஆவர்.

இவர்கள் தவிர தமிழக அரசு பாவேந்தர் விருது அளித்து பல சான்றோர்களைப் பாரட்டியுள்ளது. அவர்கள் அனைவரும் பாரதிதாசன் பரம்பரையினர் ஆவர். அவர்களில் பாரதிதாசன் வழியில் கவிதை எழுதியவர்களும் உண்டு. பாரதிதாசன் பற்றிய திறனாய்வுகளை வரைந்தவர்களும் உள்ளார்கள். சுரதா, எஸ். டி. சுந்தரம், வாணிதாசன், முத்துலிங்கம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், புத்தனேரி சுப்பிரமணியம், வகாப், நா. காமராசன்,  ஐ. உலகநாதன், மு. மேத்தா, முடியரசன், பொன்னிவளவன், அப்துல்ரகுமான், வேழவேந்தன், புலமைப்பித்தன், பொன்னடியான், கோவை இளஞ்சேரன், சாமி பழனியப்பன், குடியரசு, அரிமதிதென்னவன், முருகுசுந்தரம், ஈரோடு தமிழன்பன், நாரா. நாச்சியப்பன், மு. பி. பாலசுப்பிரமணியன், கவிதைப்பித்தன், அரசுமணிமேகலை, நிர்மலாசுரேஷ், பொன்மணி வைரமுத்து, தி. நா. அறிவொளி, வெற்றியழகன், புதுமைவாணன், மா. செங்குட்டுவன், கருவூர்கன்னல், அருள்மொழி, சாலை இளந்திரையன்,. பாவலர் பாலசுந்தரம், கே. சி. எஸ். அருணாசலம், வல்லம்வேங்கடபதி, சௌந்தராகைலாசம், லெனின்தங்கப்பா (ம. இலெ. தங்கப்பா), நீலமணி, த. கோவேந்தன், சிற்பி பாலசுப்பிரமணியம்,. கவிஞர். மீ. இராஜேந்திரன், தமிழ்நாடன், எழில் முதல்வன் (ப. இராமலிங்கம்), சோதிதாசன், ஆலந்தூர் மோகனரங்கன், ஆ. பழனி, நன்னியூர் நாவரசன், இளந்தேவன், குருவிக்கரம்பை சண்முகம், பனப்பாக்கம் சீத்தா, அமுதபாரதி, மரியதாசு, தமிழழகன் (வே. சண்முகசுந்தரம்),. பெரி. சிவனடியான், முத்துராமலிங்கம், பெ. அ. இளஞ்செழியன், கரு. நாகராசன், மறைமலையான், இரா. வைரமுத்து, சரளா ராசகோபாலன், முரசுநெடுமாறன்(மலேசியா), சிலம்பொலி செல்லப்பன், பாவலர் மணிவேலன், மணிமொழி, ச. சு. இராமர்இளங்கோ, அ.தட்சிணாமூர்த்தி, லெ.ப. கரு. இராமநாதன், கா.செல்லப்பன், திருச்சிஎம். எஸ். வெங்கடாசலம், தமிழச்சி தங்கப்பாண்டியன், தமிழ்தாசன், இரா. இளவரசு, ஏர்வாடிசு. இராதாகிருஷ்ணன்,சோ. ந. கந்தசாமி, இராதாசெல்லப்பன் ஆகியோர் பாரதிதாசன் விருதினைப் பெற்றவர்கள் ஆவர். இவர்கள் பாவேந்தத்திற்கு ஆற்றிய பணிகள் இவர்களைப் பாரதிதாசன் பரம்பரையினராக அறியவைக்கின்றது.

இவர்களையும் இணைக்க இற்றைக் காலத்தில் மரபு யாப்பினை எழுதும் கவிஞர்கள் வரை ஓராயிரம் எண்ணிக்கையைப் பாரதிதாசன் பரம்பரையினர் தொட்டிருக்கமுடியும் என்பது பாரதிதாசன் நூற்று இருபத்தைந்தாம் ஆண்டினைப் போற்றும் இவ்வாண்டின் வெற்றியாகும்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்ற பெருங்கவிஞரை முன்வைத்து அவர்காட்டிய பாதையில் அவரின் துணையுடன் மரபுக்கவிதையை இருபதாம் நூற்றாண்டில் ஏற்றம் பெறச் செய்யப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் முன்வந்தனர். இவர்களில் குறிக்கத்தக்கச் சிலரைத் தொட்டுக்காட்டுவது என்பது கட்டுரையின் தேவையாகின்றது.

சுரதா

இராசகோபலன் என்ற பெயரை இவர் சுரதா என அமைத்துக்கொண்டவர். சுப்புரத்தினதாசன் என்பதன் சுருக்கவடிவமே சுரதா ஆகும். பாரதிக்குப் பாரதிதாசன் போல, பாரதிதாசனின் வழியைப் பின்பற்றிய தாசன் சுரதா ஆவார். 1941 ஆம் ஆண்டில் பாரதிதாசனைச் சந்தித்த இவர் அவருடன் பழகியவர். அவர் வழி மரபுக்கவிதையின் ஆளுமையை அறிந்தவர். உவமைக்கவிஞராகப் பரிணமித்தவர். பாரதிதாசனாருக்குப் படியெடுத்தல், சொல்வதெழுதல் உள்ளிட்ட பல பணிகளை இவர் ஆற்றியவர். தேன்மழை, அமுதும் தேனும், சாவின் முத்தம், உதட்டில் உதடு போன்றன இவரின் கவிதை ஆக்கங்கள் ஆகும். இவருக்குப் பின்னரே பாரதிதாசன் பரம்பரை பின்தொடர்கிறது.

வாணிதாசன்

பாரதிதாசன் பரம்பரையின் முன்னவர் வாணிதாசன். இவரின் இயற்பெயர் எத்திராசலு என்ற அரங்கசாமி என்பதாகும். வில்லியனூரைச் சார்ந்த இவர் பாரதிதாசனின் மாணவர். அவரின் யாப்பறிவிற்கும் இவரே மாணவர். இவர் தமிழ்நாட்டின் தாகூர் எனப் பாரட்டப்பெற்றவர். தமிழச்சி, கொடிமுல்லை. எழிலோவியம், இன்ப இலக்கியம், எழில் விருத்தம், சிரித்த நுணா, தீர்த்த யாத்திரை, பொங்கற் பரிசு போன்ற பல கவிதையாக்கங்களைத் தந்தவர் ஆவார்.

முடியரசனார்

பெரிய குளம் துரைராசு தமிழ்ப்பற்றால் முடியரசனானார். இவர் திருப்பத்தூரில் பாரதிதாசன் அவர்களை நேரடியாகக் கண்டு அவரின் பேச்சால் ஈர்க்கப்பெற்று அவரின் பரம்பரையினருள் ஒருவராக ஆனார். புரட்சிக்கவிஞர் தலைமையில் இவரின் கலப்பு மணம் நடைபெற்றது. தமிழாசிரியராக, பல்கலைக் கழகப் பேராசிரியராக, திரைத்துறை பாடலாசிரியராகவும் இவர் மிளிர்ந்தார். இவரின் படைப்புகள் காவியப்பாவை, பாடுங்குயில், நெஞ்சு பொறுக்குதில்லையே, மனிதனைத் தேடுகிறேன், தாய்மொழிக் காப்போம், வீரகாவியம் போன்றனவாகும். ஊன்றுகோல் என்று இவர் படைத்த பண்டிதமணி பற்றிய காவியம் இவரின் நோய் வருத்தலையும் தாண்டி வெளிவந்த படைப்பாகும்.

கோவேந்தன்

இவரின் பதிமூன்றாம் வயதில் பாரதிதாசனுக்குப் பணிவிடைகள் செய்யும் நிலை இவருக்கு வந்ததன் காரணமாகப் புரட்சிக் கவிஞரின் தொடர்பு ஏற்பட்டு அதன்வழி குயில் இதழுக்குக் கவிதைகள் எழுதி மும்முறைப் பரிசு பெற்றுப் பாரதிதாசன் பரம்பரையில் நுழைந்தவர் கோவேந்தன். இவரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பெற்றுள்ளன. இவர் எழுதிய ‘பாவேந்தம்’, ‘பல கோணங்களில் பாரதிதாசன்’ ஆகிய நூல்கள் இவரின் பாரதிதாச விருப்பத்தை வெளிப்படுத்துவனவாகும். இவர் எழுதிய நகைப்பா தனித்த பாவகையாகும். அரசு அலவலர்களின் குற்றச்செயல்களை மென்மைாயக்கண்டிக்கும் நகைப்பா அங்கதப்பாவாகும்.

சாரண பாசுகரன்

சாரண பாசுகரனின் இயற்பெயர் அகமது. இவர் எழுதிய காவியம் யூசுப் சுலைகா என்பதாகும். இறைதூதர் ஒருவரின் வாழ்க்கைவரலாறாக இக்காவியம் அமைந்தது. எல்லா நூல்களுக்கும் பாரதிதாசனின் முன்னுரையுடன் வெளியிடும் சாரண பாசுகரன் அவர்கள் இந்நூலுக்கு முன்னுரை பெறவில்லை. அதற்குரிய காரணங்களைப் பாரதிதாசனாரிடமே நேருக்கு நேராக இவர் சொன்னார். இதனை ஏற்றுக் கொண்ட பாரதிதாசனும் அதனை ஏற்றுக்கொண்டார். பாரதிதாசனின் ஒத்த காலத்தைச் சார்ந்த இக்கவிஞர் தன்மான உணர்வு பெரிதும் உடையவர்.

துரை மாணிக்கம் (பெருஞ்சி்த்திரனார்),

தனித்தமிழ் ஆர்வலரான இவர் பாரதிதாசன் பரம்பரையில் அமைந்த கவிஞர் ஆவார். பாவாணரும், மறைமலை அடிகளும் இவரின் கருத்தாழத்திற்குக் காரணமானவர்கள். பாரதிதாசன் இவரின் கவியாற்றலுக்கு வழி அமைத்தவர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் பாரதிதாசன் மீது இவருக்குப் பற்று ஏற்பட்டது. கொய்யாக்கனி என்ற இவரின் பாவியத்தைப் பாரதிதாசன் அவர்களே வெளியிட்ட அளவு பாரதிதாசனாரோடு நட்பு பாராட்டியவர். இவரின் ஐயை சிறந்த தமிழ்ப்பாவியம்.

வேழவேந்தன்

பாவேந்தர் பாரதிதாசனின் குயில் இதழில் கவிதைகள், சிறுகதைகள் எழுதியவர். மு.வரதராசனாரின் மாணவர். இவர் அரசியலில் அங்கம் வகித்து வருபவர். வேழவேந்தன் கவிதைகள், வண்ணத்தோகை, ஏக்கங்களின் தாக்கங்கள், தூறலும் சாரலும் போன்ற பல கவிதை ஆக்கங்கள் இவருடையதாகும்.

புதுவை சிவம்

கனக சுப்புரத்தின் வாத்தியாரின் மாணவராகவும், அவரின் நண்பராகவும், அவரின் நெறிப்படி நடப்பவருமாக விளங்கியவர் புதுவை சிவம் ஆவார். இவர் கனக சுப்புரத்தின வாத்தியாரைச் சந்தித்த பிறகு இவர் வாழ்வில் பாரதிதாசன் இரண்டறக் கலந்தார். புதுவை சிவம் புதுவை முரசு என்ற இதழைத் தொடங்க அதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறார் பாவேந்தர். பாவேந்தரின் கவிதைகளை வெளியிட அனுப்புவது, தானும் எழுதுவது என்று புதுவை சிவம் பாரதிதாசன் பரம்பரையில் இணைந்தார். இவரின் முயற்சியால் பல அரிய பாரதிதாசனின் கட்டுரைகள் வெளியுலகிற்கு வந்தன.

முருகு சுந்தரம்

திருச்செங்கோடு சார்ந்தவர் இவர். பொன்னி இதழின் ஆசிரியர்களுள் ஒருவர். பாவேந்தரைப் பற்றிய பல நூல்களை யாத்தவர். பனித்துளி இவரின் சிறப்பான காவியம். பாவேந்தர் நினைவுகள், குயில் கூவிக் கொண்டிருக்கும், பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் என்பன போன்ற நூல்கள் பாவேந்தம் தொடர்பானவை. கடைத்திறப்பு, சந்தனப் பேழை, தீர்த்தக்கரையினிலே, எரிநட்சத்திரம் போன்றன இவரின் கவிதைப் படைப்புகள்.

புத்தனேரி நா. சுப்பிரமணியம்

திருநெல்வேலியைச் சார்ந்த புத்தனேரியைச் சொந்த மண்ணாகக் கொண்ட இவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றியவர். கலை சார்ந்த பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக இருந்தவர். பாரதி ஒரு நெருப்பு, பெரியார் – அண்ணா பெருமை, பாட்டும் கூத்தும், பாவேந்தர் நெஞ்சில் குழந்தைகள் போன்ற பல நூல்களின் ஆசிரியர் இவர் ஆவார்.

சாமி. பழனியப்பன்.

புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டியைச் சாரந்த சாமி. பழனியப்பன் கொன்னி, கண்ணதாசன், தென்றல், சிவாஜி, தமிழகம், தமிழரசு போன்ற இதழ்களில் பணியாற்றியவர். மலரும் தமிழகம், சிரிக்கும் வையம், பாரதியும், பாரதிதாசனும், வள்ளுவர் தந்த அறநெறி, வள்ளுவர் தந்த பொருளியல், வள்ளுவர் தந்த காதல் இன்பம், சாமி பழனியப்பன் கவிதைகள் ஆகியன இவரின் படைப்புகளுள் குறிக்கத்தக்கதாகும்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

அறிஞர் அண்ணாவின் வழியாகப் பாரதிதாசனின் நட்பைப் பெற்றவர். தஞ்சை மாவட்டம் செங்கப்படுத்தான காடு என்ற ஊரைச் சார்ந்த இவர் பல்வேறு தொழில்களைச் செய்துத் திரைப்பட பாடலாசிரியராக விளங்கி மக்கள் மனதில் நிற்பவர். எட்டாண்டுகள் திரைத்துறையில் இருந்த இவர் முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிப் புகழ்பெற்றார். இவரின் கவிதைகள் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பாடல்கள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன.

கண்ணதாசன்

திரையிசைப்பாடல்கள் புனைவதில் தனக்கென தனித்த இடத்தைப் பெற்ற கவிஞர் கண்ணதாசன் ஆவார். முத்தையா என்ற இயற்பெயருடைய இவர் தனிப்பாடல்கள், நாவல்கள், நாடகம் போன்ற பல்துறைப் படைப்புகளை அளித்தவர். மேலும் இவர் தென்றல், கண்ணதாசன் ஆகிய இதழ்களை நடத்தியவர்.

நாரா. நாச்சியப்பன்

ஆத்தங்குடியைச் சொந்த மண்ணாகப் பெற்ற இவர் பாரதிதாசன் பரம்பரையை அறிமுகம் செய்த பொன்னி இதழின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். பத்தாயிரம் தலைப்புகளில் பத்தாயிரம் கவிதைகள் எழுதியவர். கொய்யாக்காதல், நாரா. நாச்சியப்பன் கவிதைகள், கவியரசர் பாரதிதாசன், பாரதிதாசன் ஆய்வுக்கோவை போன்ற இவரின் படைப்புகளில் குறிக்கத்தக்கவை.

குலோத்துங்கன்

கரூர் மாவட்டம் வாங்கலாம் பாளையத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பொறியியல் வல்லுநர். இவர் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக பணியாற்றியவர். குலோத்துங்கன் கவிதைகள், வளர்க தமிழ், வாயில் திறக்கட்டும், அணையாத்தீபம் போன்ற கவிதைத் தொகுதிகளைத் தந்தவர். பல விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவர். பாரதியின் அறிவியல் பார்வை, தமழ் எழுத்துச் சீரமைப்பு போன்றன இவரின் கட்டுரை நூல்களில் குறிக்கத்தக்கவை.

பெரி.சிவனடியான்

சிவகங்கை மாவட்டம் புதுவயலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கல்லூரிப் பேராசிரியர். பாரதிதாசனாரின் வழியில் வடமொழி ஆதிக்கத்தில் இருந்துத் தமிழ் விடுப்பட்டு தனித்து நிற்கப் பாடியவர்களுள் இவரும் ஒருவர். இசையோடு தன் பாடல்களைப் பாடும் திறம் மிக்கவர். கவியரங்கக் கவிதைகள், கனிக்குவியல், முருகாஞ்சலி, சக்தி சரணங்கள், சக்தியும், மைந்தனும், பெரி. சிவனடியான் கவிதைகள் போன்றன இவரின் கவிதைப் படைப்புகளில் குறிக்கத்தக்கவை.

பொன்னடியான்

கோயம்புத்தூரைச் சார்ந்த இவர் பாவேந்தரின் நெஞ்சுக்கு இனிய நட்பினர். இவர் முல்லைச்சரம் என்ற இதழைக் கவிதைக்காக நடத்தி வருபவர். இவர் கடற்கரை கவியரங்கம் என்ற அமைப்பினைத் தொடங்கி ஆயிரத்திற்கு மேற்பட்ட கவிஞர்களை அதில் பாடவைத்தவர். அரங்கேற வருகின்ற அன்னப்பறவைகள், பொன்னடியான் கவிதைகள், பனிமலர், ஓர் இதயத்தின் ஏக்கம் போன்றன இவரின் படைப்புகளில் சிலவாகும்.

ஆற்றலரசு

ஈரோட்டைச் சார்ந்த ஆற்றலரசு பாவேந்தருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். இவர் ஆற்றல் கவிதைகள், பாப்பா பாரதம், ஞான விழுதுகள், முகில் முத்துக்கள், உல்லாச பயணம், நிலா நானூறு போன்ற பல படைப்புகளைத் தந்தவர்.

கா. மு. ஷெரீப்

தஞ்சை மாவட்டத்திலுள்ள அபிவிருத்தீஸ்வரம் என்ற ஊரில் பிறந்த ஷெரீப் இயற்கையை வியந்து பாடும் அழகியல் கவிஞராவார். கலைமாமணி விருது பெற்றவர். ஐந்து நூல்களின் ஆசிரியர். திரைப்படப் பாடலாசிரியராகவும் விளங்கியவர்.

அழ. வள்ளியப்பா

புதுக்கோட்டை மாவட்டம் இராயவரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இக்கவிஞர் குழந்தைகளுக்காக எழுதியவர் ஆவார். பாலர்மலர், டமாரம், சங்கு ஆகிய இதழ்களின் ஆசிரியராக விளங்கிவயர். குழந்தை எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவர் இவர். எழுநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் நாற்பத்து மூன்று நூல்களையும் படைத்தளித்தவர். பாட்டிலே காந்தி கதை, ஈசாப் கதைப் பாடல்கள், பாப்பாவுக்குப் பாட்டு, சின்னஞ்சிறு பாடல்கள், பாட்டு பாடுவோம், பாலர் பாடல், சிட்டுக்குருவி, மல்லிகை போன்ற பல தொகுப்புகள் இவரின் பெயரை நிலைநாட்டுவன. காரைக்குடியில் தங்கியிருந்த இவர் பாரதிதாசனரின் காரைக்குடி வருகையின்போது அவருடன் பழகியவர்.

சாலை இளந்திரையன்

சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன் ஆகிய இருவரும் இலக்கியக் குடும்பமாகத் திகழ்ந்து தன்மானத் தமிழ் வளர்த்தவர்கள். தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியராக விளங்கிய சாலை இளந்திரையன், நல்ல மரபுக்கவிஞர். இளந்திரையன் கவிதைகள், மானுடம், வீறுகள் ஆயிரம், நடை கொண்ட படை வேழம் போன்ற பல நூல்களின் ஆசிரியர் ஆவார். பாரதிதாசனார் வழியில் தன்மானத் தமிழ் இனமாய்த் தமிழினம் மலரப் பாடுபட்டவர்.

இதுபோன்று இன்னமும் பல்வேறு கவிஞர்கள் பாரதிதாசன் பரம்பரையைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். பாவேந்தரின் நேரடித் தொடர்பில் அவர் மேல் கொண்ட ஈர்ப்பால், அவர் எழுத்தின்மேல் கொண்ட ஆர்வத்தால் பலரும் பாவேந்தர் பரம்பரையாகினர். இயல்பாகவே பாரதிதாசன் பரம்பரை என்ற நிலையில் குடும்ப அளவில் முன்னிற்பவர் மன்னர் மன்னன் ஆவார்.

பாரதிதாசனாருக்கு மூன்று பெண்மக்கள். சரசுவதி, வசந்தா. இரமணி ஆகிய மூவரும் பாரதிதாசனின் நேரடிப் பரம்பரையிர் ஆவர். கோபதி என்ற இயற்பெயருடைய மன்னர் மன்னன் பாவேந்தரின் மகன் ஆவார். இளமை முதலே பாவேந்தரின் கொள்கைகளை அறிந்து அவற்றில் பிடிப்பும் ஈடுபாடும் கொண்டு வளர்ந்தார் கோபதி. இவரும் தமிழ்ஒளியும் இணைந்து நடத்தி முரசு இதழ் அரசிற்கு எதிராகச் செயல்படுகிறது என தடுத்து நிறுத்தப்பட்டது. இதன்பிறகு இவர்மன்னர்மன்னன் என்ற பெயரில் எழுதத்தொடங்கினார்.

இவரின் கருப்புக்குயிலின் நெருப்புக் குரல், பாவேந்தரின் இலக்கியப் பாங்கு, பாவேந்தர் படைப்புப் பாங்கு, பாவேந்தர் உள்ளம் ஆகிய நூல்கள் பாவேந்தம் சார்ந்தனவாகும். இவர் பாரதிதாசன் குயில் என்ற இதழை நடத்தி பாவேந்தர் பரம்பரை தழைக்க உதவியவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றிய இவர் தன் தந்தையைப் போலவே நாடகத்தமிழுக்கு அணிசேர்த்து வருகிறார்.

இவ்வாறு இரத்த உறவாலும், பழக்க உறவாலும் பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரை தமிழ் உலகம் முழுவதும் பரவி இருந்தது, வெளிநாடுகளிலும் பாவேந்தர் புகழ் பரவி அங்கும் அவரின் பரம்பரையினர் என்ற அடையாளம் ஏற்பட்டது.

கவிதைத்துறையாக வளர்ந்த பாரதிதாசன் பரம்பரை பின்னாளில் உரைநடை, நாடகம், கதை, திறனாய்வு ஆகிய துறைகளில் கால்பதித்து வெற்றி கண்டு வருகிறது. தமிழக அரசின் பாரதிதாசன் விருது பாரதிதாசன் பரம்பரையை அடையாளம் காட்டிவருகி்ன்றது, இவ்வடையாளம் ஆண்டுக்கு ஒருவர் என்று அமையாமல் ஆண்டுக்குப் பல்லோர் என்று அமையவேண்டும். அப்படி அமைவதன் வழியாக பாவேந்தத்தை முன்னெடுத்துச் செல்ல இயலும்.