under review

பரலி சு. நெல்லையப்பர்

From Tamil Wiki
பரலி சு.நெல்லையப்பர்

பரலி சு.நெல்லையப்பர்  (செப்டம்பர் 18, 1889 - மார்ச் 28, 1971) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட வீரர், வ.உ. சிதம்பரம் பிள்ளைக்குத் தொண்டர், சுப்பிரமணிய பாரதிக்குப் புரவலர் என பன்முகம் கொண்டவர்.

பிறப்பு மற்றும் குடும்பம்

பரலி சு.நெல்லையப்பர், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரலிக்கோட்டை என்னும் சிற்றூரில் 1889- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18- ஆம் நாள் சுப்பிரமணிய பிள்ளை, முத்துலட்சுமி அம்மாள் என்னும் இணையரின் மூன்று ஆண் மக்களுள் இரண்டாவது மகனாகப் பிறந்தார். சு. நெல்லையப்பருக்கு மூத்தவர் பரலி சு. சண்முகசுந்தரம் பிள்ளை. இவர் வ.உ. சிதம்பரனாரோடு இணைந்து அவர்தம் சுதேசி இயக்கத்தைப் பரப்புவதில் முனைப்போடு இருந்தவர். சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குகள் பலவற்றை திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தின் பல இடங்களில் விற்றுப் பல்லாயிரம் ரூபாயைத் திரட்டிக் கொடுத்தவர். அன்றைய மதுரை மாவட்டம் வத்தலக்குண்டில்  பிறந்த சுப்பிரமணிய சிவாவை தூத்துக்குடிக்கு  அழைத்து வந்து வ.உ.சிதம்பரனாருக்கு அறிமுகம் செய்து வைத்தவர். சுப்பிரமணிய சிவாவால் 'வந்தே மாதரம் பிள்ளை' என அழைக்கப்பட்டார்.

நெல்லையப்பருக்கு இளையவரான பரலி சு. குழந்தைவேலன். சு.  நெல்லையப்பரோடு இணைந்து வ.உ. சிதம்பரனாரின் கப்பல் கம்பெனியில் கணக்கராக வேலைப் பார்த்தவர். பின்னாளில் லோகோபகாரி என்னும் இதழை நடத்துவதில் நெல்லையப்பருக்குத் துணைநின்றவர்.

நெல்லையப்பர் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே, தன்னுடைய இறுதிக் காலத்தில் பூங்கோதை என்னும் பெண்ணைத் தத்தெடுத்து வளர்த்தார்.

கல்வி மற்றும் இளமை

பரலி சு. நெல்லையப்பர் மெட்ரிக்குலேசன் வரை பள்ளியில் படித்தவர். அதற்கு அப்பால் தமிழிலக்கிய, இலக்கணங்களைக் கற்று, கவிதை எழுதும் திறமை பெற்றிருந்தார். 1907- ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த சில நாள்களிலேயே தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனார் நடந்திய சுதேசி கப்பல் கம்பெனியில் கணக்கராகப் பணியாற்றத் தொடங்கினார்.  மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள  சூரத் நகரில் நடைபெற்ற  இந்திய தேசிய காங்கிரஸ்  மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வ.உ. சிதம்பரனார் உள்ளிட்டவர்களைத் திரட்டுவதற்காகத் தூத்துக்குடிக்கு வந்த  சி. சுப்பிரமணிய பாரதியை பரலி சு. நெல்லையப்பர்  முதன்முறையாக, வ.உ. சிதம்பரனாரின் வீட்டில்  கண்டார். அங்கிருந்த பாரதியின் கவிதைகள் அடங்கிய நான்கு பக்க வெளியீடு ஒன்றையும் இந்தியா இதழையும்  படித்தவுடன் சி. சுப்பிரமணிய பாரதிமேல் அன்பு கொண்டார்.

விடுதலைப் போரில் பங்கேற்பு

ஆரம்ப பள்ளி

வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, சி. சுப்பிரமணிய பாரதி,  நீலகண்ட பிரமச்சாரி, அரவிந்தர், வ.வே.சு.ஐயர் முதலிய விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரோடு தொடர்ந்து பழகிய பரலி சு.  நெல்லையப்பர் தானும் விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றார். அவற்றுள் சில:

  • ஆங்கிலேயருக்கு இயன்ற வழிகளில் எல்லாம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கில் இருந்த வ.உ. சிதம்பரனார், ஆங்கிலேயர்களின் வீடுகளில் வேலைபார்த்த துணி வெளுப்பாளர்கள், வேலையாட்கள், சமையற்காரர்களைத் திரட்டி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்திற்கு பரலி சு.  நெல்லையப்பர் பெரிதும் உதவியாக இருந்தார்.
  • 1908- ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 3- ஆம் நாள் விடுதலைப் போராட்ட வீரர் விபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்டார். அந்நிகழ்வைக் கொண்டாடுவதற்காக காவல்துறையினரின் தடையை மீறி வ.உ. சிதம்பரனார் தூத்துக்குடியில் சுப்பிரமணிய சிவாவோடு இணைந்து மார்சு 9- ஆம் நாள் ஊர்வலம் ஒன்றை நடத்தினார். அதில் பரலி சு. நெல்லையப்பரும் கலந்துகொண்டார். கப்பல் கம்பெனி நடத்தியது, ஊர்வலம் நடத்தியது, வந்தே மாதரம் எனக்கூவியது ஆகிய குற்றங்களுக்காக திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகிய இருவரும் மார்சு 12- ஆம் நாள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைக் கண்டித்துக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான துண்டறிக்கை ஒன்றினை அச்சிட்டு பரலி சு.  நெல்லையப்பர் வெளியிட்டார். அதற்காக அவரை காவல்துறை கைது செய்து, வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோரோடு  பாளையங்கோட்டைச் சிறையில் அடைத்தது.
  • 1930- ஆம் ஆண்டில்  வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டதனால் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.
  • 1932- ஆம் ஆண்டில் காந்தியடிகளின் கட்டளையை ஏற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.
  • 1941- ஆம் ஆண்டில் நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரகம் என்னும் தனியாள் அறப்போராட்டத்தில் கலந்துகொண்டதனால் பெல்லாரி சிறையில் ஆறு மாதங்கள் அடைக்கப்பட்டார்.

புதுவை வாழ்க்கை

1909- ஆம் ஆண்டில் இறுதியில் வ.உ. சிதம்பரனாருக்கு சட்டப்படி விடுதலைப் பெற்றுத்தர ஏதேனும் வழியிருக்கிறதா என அறிவதற்காக பாரிஸ்டர் பாலசுப்பிரமணிய ஐயர், வழக்கறிஞர் சாமிநாதன் ஆகியோரைச் சந்திக்க சென்னைக்கு வந்த பரலி சு.  நெல்லையப்பர் வாய்ப்பில்லை என அறிந்தார். அப்பொழுது புதுவையில் இருந்து சென்னை வந்திருந்த நீலகண்ட பிரமச்சாரியைச் சந்தித்தார். அவரோடு சேர்ந்து புதுவையில் வாழும் சி. சுப்பிரமணிய பாரதியைச் சந்திக்க சென்றார். 1910- ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 1911- ஆம் ஆண்டு ஜூன் வரை சி. சுப்பிரமணிய பாரதி வீட்டில் தங்கினார். அப்போது பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'சூரியோதயம்' என்னும் பத்திரிக்கையின் துணையாசிரியராகப் பணியாற்றினார்.  1910- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடல் வழியாக புதுவைக்கு வந்த அரவிந்தரை துறைமுகத்திற்குச் சென்று அழைத்து வந்தார். 1911- ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கோயம்புத்தூர் சிறையிலிருந்த வ.உ. சிதம்பரனாரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார்.

கோயம்புத்தூர் வாழ்க்கை

வ.உ. சிதம்பரனாருக்கு பாரதியார் எழுதிய மூன்று விருத்தங்கள் கொண்ட சீட்டுக்கவியை எடுத்துக்கொண்டு பரலி சு. நெல்லையப்பர் கோயம்புத்தூர் சென்றார். அங்கு வழக்கறிஞர் சி. கே. சுப்பிரமணிய முதலியார் உதவியோடு கோவை, பேரூர் சாலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்துத் தங்கினார். அவ்வப்பொழுது சிறைக்குள் சென்று வ.உ. சிதம்பரனாரைச் சந்தித்து, அவர் இடும் கட்டளைகளை அந்த ஆசிரமத்தில் இருந்தவாறே நிறைவேற்றினார். வ.உ.சி.யை தன்வரலாறு எழுதும்படி வேண்டினார். 1912- ஆம் ஆண்டின் மத்தியில் வ.உ. சிதம்பரனாரை கேரளாவிலுள்ள  கண்ணனூர் சிறைக்கு மாற்றியதும், நெல்லையப்பர் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

சென்னை வாழ்க்கை

1912-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  விடுதலை பெற்ற வ.உ. சிதம்பரனார் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் குடியேறினார். அவரைக் காண்பதற்காக அங்கு வந்த நெல்லையப்பர் முதலில் வ.உ. சிதம்பரனாரின் வீட்டிலும் பின்னர் வெவ்வேறு இடங்களிலும் தன் இறுதிக் காலம் வரை வாழ்ந்தார்.

இதழாளர்

1908- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7- ஆம் நாள் வ.உ. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் தண்டனையும் சுப்பிரமணிய சிவாவிற்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டன. இதனைக் கண்டித்து நெல்லையப்பர் கட்டுரையொன்று எழுதினார். அது பாரதியார் நடத்திய 'இந்தியா' இதழில் வெளியிடப்பட்டது. இதுவே அச்சில் வந்த இவரின் முதல்  படைப்பு.

புதுவையில் இருந்து பாரதியர் வெளியிட்டு வந்த 'சூரியோதயம்'  இதழில் 1910- ஆம் ஆண்டிலும் கர்மயோகி மாத இதழில் 1911- ஆம் ஆண்டிலும் நெல்லையப்பர் துணையாசிரியராக இருந்தார்.

சென்னையிலிருந்து கோ.வடிவேலு செட்டியார் வெளியிட்ட லோகோபகாரி  இதழில் 1913-1915- ஆம் ஆண்டுகளிலும் 1917-1918- ஆம் ஆண்டுகளிலும் துணையாசிரியராக இருந்தார்.

தெ.பொ.கிருட்டிணசாமிப் பாவலர் என்பவருடன் இணைந்து 1915-1916- ஆம் ஆண்டுகளில் 'பாரதி' என்னும் இதழை நடத்தினார்.

1917- ஆம் ஆண்டு முதல் 1921- ஆம் ஆண்டு செப்டம்பர் வரை 'தேசபக்தன்' இதழில் திரு.வி.க., வ.வே.சு.ஐயர் ஆகியோர் ஆசிரியர்களாக  இருந்தபொழுது நெல்லையப்பர் துணையாசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

1922- ஆம் ஆண்டில் 'லோகோபகாரி'  இதழை விலைக்கு வாங்கி 1941- ஆம் ஆண்டு வரை ஆசிரியராக இருந்தார். அப்பொழுது மதுரையைச் சேர்ந்த ஐ. மாயாண்டி பாரதி இவ்விதழில் துணையாசிரியராக இருந்தார்.

மீண்டும் 1943- ஆம் ஆண்டு முதல் 1948- ஆம் ஆண்டு வரை 'லோகோபகாரி' இதழில் ஆசிரியராக இருந்தார்.

பாரதியாருக்கு புரவலர்

பாரதியின் புகழைத் தமிழகம் எங்கும் பரப்ப ஆவல் கொண்ட பரலி சு. நெல்லையப்பர், நண்பர் கிருஷ்ணசாமிப் பாவலருடன் இணைந்து 'பாரதி' என்ற இதழை ஆரம்பித்தார். அவ்விதழில்தான், "பாரத தேசம் என்று..", "பாருக்குள்ளே நல்ல நாடு", "புதுமைப் பெண்", "தமிழ்மொழி வாழ்த்து", "செந்தமிழ்நாடு" ஆகிய பாடல்கள் வெளியாகின. லோகோபகாரி, பாரதி இதழ்களைத் தொடர்ந்து திரு.வி.க. நடத்தி வந்த தேசபக்தன் இதழின் துணையாசிரியராகவும் சிலகாலம் பணியாற்றினார். அதிலும் தொடர்ந்து பாரதியின் உணர்ச்சி பொங்கும் கவிதைகளை வெளியிட்டு வந்தார். பாரதியாரின் 'கண்ணன் பாட்டு' நூலை  சு.நெல்லையப்பர் பதிப்பித்தபோது, அவரது அந்தப் பணியைப் பாராட்டி நூலுக்கு அழகான முன்னுரை அளித்தார் வ.வே.சு. ஐயர். தொடர்ந்து பாரதியின் நாட்டுப் பாட்டு, பாப்பாப் பாட்டு, முரசுப் பாட்டு போன்றவற்றை தன் கடின சூழ்நிலையிலும் பரலி சு. நெல்லையப்பர் வெளியிட்டார்.  கண்ணன் பாட்டுக்கு எழுதிய முன்னுரையில் அவர், "ஸ்ரீமான் பாரதியார் ஒரு பெரிய மேதாவி; மகா பண்டிதர்; தெய்வீகப் புலவர்; ஜீவன் முக்தர்; இவர் எனது தமிழ்நாட்டின் தவப்பயன். அவருக்கு யான் கொடுக்கும் உச்சஸ்தானம் நிச்சயமானது. இதனைத் தற்காலத்தில் அறியாதவர்கள் பிற்காலத்தில் அறிவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

1913- ஆம் ஆண்டு முதல் பாரதி சென்னைக்கு இரண்டாவது முறையாக வந்து வாழத் தொடங்கிய 1919- ஆம் ஆண்டு மார்ச் திங்கள் வரை தான் பணியாற்றிய இதழ்களிலும் சுப்பிரமணிய சிவா நடத்திய 'ஞானபாநு' முதலிய இதழ்களிலும் பாரதியார் கவிதைகளை வெளிவரச் செய்தார். அவற்றிற்காக கிடைத்த பணத்தையும், பாரதிக்கு தேவைப்பட்ட பணத்தை வேறு வகைகளில் திரட்டியும், புதுவை நண்பர்கள் யாருடைய பெயருக்காவது அனுப்பி பாரதிக்குக் கிடைக்கச் செய்து வந்தார். அவ்வாறு செய்வது நெல்லையப்பரின் கடமையெனப் பாரதியார் கருதினார்.  பாரதியாரால் "தம்பீ!" என அழைக்கப்பட்ட நெல்லையப்பர், 1921- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11- ஆம் நாள் இரவு ஒரு மணிக்கு இறந்த பாரதியாரின் உடலை மறுநாள் சுடுகாட்டிற்குத் தூக்கிச் சென்றவர்களுள்  ஒருவராக இருந்தார்.

1950- ஆம் ஆண்டு முதல்  குரோம்பேட்டையில் வசித்த நெல்லையப்பர் தான் வாழ்ந்த பகுதிக்கு 'பாரதிபுரம்' எனவும், அங்கிருந்த பிள்ளையாருக்கு 'பாரதி விநாயகர்' எனவும் பெயரிட்டார்

பாரதியாரின் புகழைப் பரப்பும் நோக்குடன் தனது 'லோகோபகாரி' இதழில் 'பாரதி போட்டி'களையும் செப்டம்பர் 11- ஆம் நாள் பாரதி விழாவையும் ஆண்டுதோறும் நடத்தினார்.

பாரதியாரின் கடிதம்

பரலி சு. நெல்லையப்பருக்கு பாரதியார் எழுதிய ஒரு கடிதத்தின் சிறு பகுதி கீழ்காணுமாறு இருந்தது;

"தமிழ்! தமிழ்!! தமிழ்!!! எப்போதும் தமிழை வளர்ப்பதையே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி; புதிய புதிய யோசனைகள்; புதிய புதிய உண்மை; புதிய புதிய இன்பத் தமிழில் எழுதிக் கொண்டே போகவேண்டும்.

தம்பீ! உள்ளமே உலகம். ஏறு... ஏறு... ஏறு... மேலே... மேலே... உனக்கு சிறகுகள் தோன்றுக. பறந்து போ..."

பாரதியார் படைப்புகளின் பதிப்பாளர்

1917- ஆம் ஆண்டு பாரதியாரின் கண்ணன் பாட்டு (ஆகஸ்ட்), 19 பாடல்கள் அடங்கிய நாட்டுப்பாட்டு (அக்டோபர்), பாப்பா பாட்டு, முரசுப் பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தார்.

1923- ஆம் ஆண்டில் தன் நண்பர்கள் சிலரோடு இணைந்து 'பாரதி பிரசுராலயம்' என்னும் நிறுவனத்தைத் தொடங்கி அதன்வழியாக குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாரதி அறுபத்தாறு ஆகிய பாடல்கள் அடங்கிய தொகுதி ஒன்றை வெளியிட்டார்.

1953- ஆம் ஆண்டில் பாரதியார் படைப்புகளை தமிழக அரசு வெளியிடுவதற்காக அமைத்த குழுவில் நெல்லையப்பர் இடம்பெற்றார்.

கவிஞர்

நெல்லையப்பர் இயல்பாகவே கவிதை மனம் கொண்டவராக இருந்தார். வ.உ. சிதம்பரனாரோடு தூத்துக்குடியில் இருந்தபொழுதே கவிதைகள் புனைந்தார். புதுவையில் பாரதியோடு இருந்த பொழுது அவருடைய பாடல்களைப் படித்து கருத்தும், திருத்தமும் கூறும் அளவிற்குக் கவிதை நுட்பங்களை அறிந்திருந்தார். 'தேசபக்தன்' இதழில் பணியாற்றியபோது பாரதிதாசன், நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை எழுதிய பாடல்களில் திருத்தம் செய்து வெளியிட்டு வந்தார்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளாகத் தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 142 பக்கங்களில் 'நெல்லைத் தென்றல்' என்னும் நூலாக 1966- ஆம் ஆண்டு வெளியிட்டார். மேலும், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களையும் வெளியிட்டார்.

எழுத்தாளர்

இதழ்களில் பணியாற்றிய பொழுது தலையங்கம், செய்திக் கட்டுரைகள், மதிப்புரைகள் எனப் பலவற்றை தன்னுடைய

வ.உ.சி. சரித்திரம்

இயற்பெயரிலும் பாரி என்னும் புனைப் பெயரிலும் எழுதினார்.

அவற்றுள் கைக்குத்தல் அரிசியின் மகத்துவம், பாரதியின் தமிழ்ப்புலமை, கங்கைகொண்ட சோழபுரம், பாரம் சுமக்கும் பள்ளிப் பிள்ளைகள்,  குழந்தைகள் அதிகம் பெற வேண்டா, தமிழின் பெருமை போன்ற சில ஓரிரு பக்கக் குற்றேடுகளாக அச்சிட்டு பலருக்கும் வழங்கினார்.

பாரதியார், வ.உ.சி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை முறையே பாரதியார் சரித்திரம் (1928 – சோமசுந்தர பாரதியார், சக்கரைச் செட்டியார் ஆகியோருடன் இணைந்து), வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம் (1944 – சக்தி காரியாலய வெளியீடு) என்னும் பெயரில் நூல்களாக வெளியிட்டார்.

மேலும் 'தமிழ்த் திருமண முறை' என்னும் நூலையும் எழுதினார். இவர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகள் முறையாக இதுவரை தொகுக்கப்படவில்லை.

மொழிபெயர்ப்பாளர்

பரலி சு. நெல்லையப்பர் பின்வரும் நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்:

  • பக்கிம் சந்திர சட்டர்சியின் 'ராதாராணி'
  • பக்கிம் சந்திர சட்டர்சியின் 'ஜோடி மோதிரம்'
  • சுவர்ணலதா (டாக்டர் பா.நடராசனுடன் இணைந்து)
  • காந்தியடிகளின் 'சுயராஜ்யம்'
  • காந்தியடிகளின் 'சுகவழி'
  • சிவானந்தர் உபதேசமாலை
    பாரதி வாழ்த்து

பதிப்பாளர்

லோகோபகாரி வெளியீடு, பாரி வெளியீடு ஆகிய பதிப்பகங்களை பரலி சு. நெல்லையப்பர் நடத்தினார். அவற்றின் வழியே பின்வரும் நூல்களை வெளியிட்டார்:

  • பாரதியார் சரித்திரம்
  • வ.உ.சிதம்பரபிள்ளை சரித்திரம்
  • பாரதி வாழ்த்து
  • நெல்லைத் தென்றல்
  • உய்யும் வழி
  • தமிழ்த் திருமண முறை
  • ராதாரானி (மொழி பெயர்ப்பு)
  • ஜோடி மோதிரம் (மொழி பெயர்ப்பு)
  • சுவர்ணலதா
  • மகாத்மா காந்தியின் இந்திய சுயராஜ்ஜியம்
  • மகாத்மா காந்தியின் சகவழி
  • சிவானந்தர் உபதேசமாலை
  • பூ லோகத்து சப்த அதிசயங்கள்
  • பகவான் அரவிந்தர் பத்தினிக்கு எழுதிய கடிதங்கள்
  • மகாகவி பாரதியாரின் கண்ணன் பாட்டு
  • நாட்டுப்பாட்டு, பாப்பா பாட்டு
  • முரசுப்பாட்டு, குயில்பாட்டு
  • பாரதி அறுபத்தாறு
  • ராஜாஜியின் ஆத்ம சோதனை
  • பி.வி. சுப்பையாவின் மாதர்கடமை
  • திருவாசகம். மாணிக்கவாசகர் (மலிவுப்பதிப்பு)
  • நளன் தூது (நைடதம்), அதிவீராம பாண்டியன்

இறுதிக்காலம்

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவித்தொகையை இந்திய  அரசாங்கம் ( Government of India) இவருடைய இறுதிக்காலத்தில் வழங்கி வந்தது. அந்த உதவித்தொகையை 1967- ஆம் ஆண்டில் இவருடைய பொருளாதார நிலை உயர்ந்துவிட்டது என தமிழக அரசு அனுப்பிய குறிப்பின் அடிப்படையில் இந்திய  அரசாங்கம் நிறுத்திவிட்டது. எழுத்தாளர் எதிரொலி விசுவநாதன், அன்றைய சட்ட மேலவை உறுப்பினர்களாக இருந்த நாமக்கல் வெ. இராமலிங்கம், தி. க. சண்முகம் ஆகியோரின் முயற்சியால் 1969- ஆம் ஆண்டு முதல் மீண்டும் அவ்வுதவித் தொகை கிடைத்தது.

நெல்லையப்பரைப் பற்றிய நூல்கள்/ கட்டுரைகள்

  • தனிப்பாடல்கள், வ.உ.சி. (1915)
  • பாரதியாரின் தம்பி, எதிரொலி விசுவநாதன்
  • இருவர் கண்ட பாரதி, எதிரொலி விசுவநாதன், அசோகன் பதிப்பகம் – சென்னை, 1989.
  • வ.உ.சி.யும் பரலி சு. நெல்லையப்பரும், செ.திவான், வ.உ.சி.இலக்கியப்பேரவை-திருநெல்வேலி
  • தியாகத்தின் இமயம் ஐயா பரலி சு.நெல்லையப்பர், நமச்சிவாயம் இராமகிருஷ்ணன், சைவநெறி – இந்திய சுதந்திரப் பொன்விழா மலர், 1998
  • பரலி சு.நெல்லையப்பர், கவியோகி சுத்தானந்த பாரதியார், ந. சோமயாஜூலு பதிப்பித்த நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு, நெல்லை 1977.
  • தமிழ் வளர்த்த எழுத்துச் சிற்பிகள் தொகுதி 1, கலைமாமணி விக்கிரமன், நிவேதிதா புத்தகப் பூங்கா

மறைவு

பரலி சு.நெல்லையப்பர், சென்னைக்கு அருகிலுள்ள குரோம்பேட்டையில் 1971- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28- ஆம் நாள் மறைந்தார்.

உருவச்சிலை

நினைவுப் பள்ளி

பரலி சு.நெல்லையப்பருக்கு 1954- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சென்னை, குரோம்பேட்டையில், 3.16 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அதில், 5,000 சதுர அடி நிலத்தை, ஆரம்ப பள்ளி நடத்துவதற்காக, பரலி சு.நெல்லையப்பர், அரசுக்கு தானமாக அளித்தார். 1968ல், அந்த இடத்தில் ஆரம்ப பள்ளி ஒன்றை அரசு துவக்கியது. ஆண்டுக்கு 300 குழந்தைகளுக்கு மேல் அதில் படித்தனர். பிற்காலத்தில், செயல்படாமல் முடங்கியது. அப்பள்ளியை, 2 கோடி ரூபாய் செலவில் அறிவுசார் மையமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உருவச்சிலை

பரலி சு.நெல்லையப்பர் மறைந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 28, 1993 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் நெல்லையப்பரின் உருவச் சிலையை சென்னை குரோம்பேட்டையில் திறந்து வைத்தார்.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.