under review

நெஞ்சில் நிறைந்த நபிமணி

From Tamil Wiki
Revision as of 09:55, 24 April 2024 by ASN (talk | contribs)
நெஞ்சில் நிறைந்த நபிமணி நூல்

நெஞ்சில் நிறைந்த நபிமணி, (1965) ஸதக்கத்துல்லாஹ் ஸிராஜ் பாக்கவி எழுதிய இஸ்லாமிய இலக்கிய நூல். நபிபெருமானின் வரலாற்றை மிக எளிய தமிழில் கூறுகிறது.

வெளியீடு

நெஞ்சில் நிறைந்த நபிமணி நூல், சென்னை, இஸ்லாமிக் ரேடியன்ட் பப்ளிகேஷன்ஸால் 1965- வெளியிடப்பட்டது. இந்நூலை இயற்றியவர், ஜி.எம். ஸதக்கத்துல்லாஹ் ஸிராஜ் பாகவி ஜமாலி. இவர், இக்காப்பியத்தை 1959-ல் எழுதத் தொடங்கி, 1964-ல் எழுதி முடித்தார். 1965-ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் எம்.எம். இஸ்மாயில் சாஹேப் அவர்களுடன் ஹஜ் பயணம் சென்று, மதினா ரவ்ளா ஷரீஃபில் நெஞ்சில் நிறைந்த நபிமணி முழுவதும் படித்து அரங்கேற்றம் செய்தார். இந்நூலின் மறுபதிப்பை, யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் நிறுவனம் 2021-ல் வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு

அல்ஹாஜ், கவிஞர், மௌலவி ஜி.எம். ஸதக்கத்துல்லாஹ் ஸிராஜ் பாகவி ஜமாலி, இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுள் ஒருவர். டிசம்பர் 24, 1924-ல் பிறந்த இவர் மார்க்கக் கல்வி பயின்று ஜமாலி, பாகவி ஆகிய பட்டங்களைப் பெற்றார். சிறந்த கவிஞரும், பேச்சாளருமான ஜி.எம். ஸதக்கத்துல்லாஹ் ஸிராஜ் பாகவி ஜமாலி, 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். மு. கருணாநிதி இவருக்கு ஆலிம் கவிஞர் என்ற பட்டத்தைச் சூட்டினார்.

நூல் அமைப்பு

நெஞ்சில் நிறைந்த நபிமணி நூல் நபியவர்களின் வரலாற்றுப் பகுதி, நபியவர்களின் போதனைப் பகுதி என இரு பகுதிகளாக அமைந்துள்ளது.

நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

நபியவர்களின் வரலாற்றுப் பகுதியில் கீழ்க்காணும் தலைப்புகளில் பாடல்கள் இடம் பெற்றன.

இருளை அகற்றிய இன்னொளிச் செல்வர்
  • பெற்றோர் சிறப்பு
  • தாயைப் பிரிந்தார்
  • பாட்டனை இழந்தார்
  • வெளிநாடு சென்று வரலானார்
  • மக்களுள்ளம் புகுந்தார்
  • வாய்மை காக்கும் வர்த்தகரானார்
  • அண்ணலார்பால் கதீஜா அன்புகொள்ளல்
  • நபீஸா தூது செல்லல்
  • அண்ணலார்க்கும் கதீஜா நாயகியார்க்கும் திருமணம் ஆகுதல்
இலட்சியம் வகுத்த இன்னருட் கொண்டல்
  • திருக்-குர்ஆன் அருளைப் பெற்றார்
  • கொள்கை காத்த குவலயத் தலைவி
  • கிளர்ந்தெழும் இஸ்லாம்
  • துன்பம் சுமந்த துணிவுடை வீரர்
  • துன்பம் படர்ந்தது
  • இஸ்லாமிற்காக இன்னுயிரளித்த முதல்தியாகிகள் (யாஸிர், சுமய்யா)
  • அடைக்கலம் புகுதல்
  • அபூதாலிப் பிரியுதல்
  • துணைவியைப் பிரியுதல்
  • நாயகரைச் சோதித்த தாயிபு
இறையரசு நிறுவிய இணையிலாத் தலைவர்
  • அருந்தவம் புரிந்த பெருந் தூதர்
  • அரிய விண்ணேற்றம் செய்த ஆன்ம வீரர்
  • முதல்வன் வல்லமையில் முடியாததும் ஒன்றுண்டோ?
  • நிறைவுபெற்ற சாமுத்ரிகா லட்சணம்
  • வான்பயணத்திற்குப் பின் இஸ்லாம்
  • கொள்கை விளக்கம் செய்வதானார்
  • ஹிஜ்ரத் செய்தல்
  • மதீனா நோக்கிப் புறப்படுதல்
  • மதீனா வாசிகளின் வரவேற்பு
  • யுத்தத்திற்கு வித்திட்டனர் மக்கத்துப்பகைவர்கள்
  • புனித நகர் காத்த போரியல் தந்திரி
  • பத்ருப் போர்க்களம்
  • அபூஜஹில் இறப்பு
  • மதீனா மீட்சி
வெற்றியில் நிறைந்த வியத்தகு மேதை
  • அலி,பாத்திமாவின் அன்புத் திருமணம்
  • உஹதுப் போர்
  • குபைப் கொல்லப்படல்
  • அகழிப் போர்
  • ஹுதைபிய்யா உடன்படிக்கை
  • திருமுகம் அனுப்பப்படுதல்
  • கைபர் போர் மூத்தா யுத்தம்
  • மக்கா வெற்றி
பாரினை வென்ற பண்புடைச் செம்மல்
  • காலத்தை வென்ற கடைசி நபி
  • இறுதி ஹஜ்ஜு யாத்திரை
  • மன நிறைவு பெற்ற மாநபி
  • மாநபியவர்கள் பிரியுதல்
நபியவர்களின் போதனைப் பகுதி

நபியவர்களின் போதனைப் பகுதியில் கீழ்க்காணும் தலைப்புகளில் பாடல்கள் இடம் பெற்றன.

அறிவியக்கம் கண்ட அண்ணலார்
  • ஐங்கடன் பணித்த அறிவரசு
  • பெண்ணுலகு காத்த பெருந்தகையாளர்
  • தேன்மொழி பொழிந்த தெய்வத் தூதர்
  • நெஞ்சில் நிறைந்த நபிமணி
  • நபிகள் நாயக வரலாற்றின் காலக் குறிப்பு

உள்ளடக்கம்

நெஞ்சில் நிறைந்த நபிமணி நூல், அறுசீர் விருத்தத்தில் இரண்டு அடிகளாக இசையுடன் பாடுவதற்கேற்ப இயற்றப்பட்டுள்ளது. 3663 பாடல்கள் இந்நூலில் உள்ளன. நபிகள் நாயகத்தின் அரும்பெருஞ் சிறப்பு, அவரது அறிவின் தெளிவு, ஆற்றலின் திறமை, அன்புள்ளம், அவர் ஏழை எளிய மக்களிடம் காட்டிய இரக்கம்; மக்களை நன்னெறியில் செலுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அவற்றின் காரணமாக ஏற்பட்ட எதிர்ப்புக்கள், கொள்கையையும் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்ட அவர் எதிர்கொண்ட போராட்டங்கள், கொள்கையை நிலை நாட்டுவதில் அவர் கண்ட வெற்றி, அவர் வகுத்துத்தந்த வாழ்க்கைநெறி, உலகை உய்விக்கும் முறை போன்றவை குறித்த செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

பாடல்கள்

இஸ்லாத்தின் பெருமை

அங்கிங்கெ னாத வண்ணம்  
   அனைத்திலும் அனைத்து மாகி
தங்கியே காக்கும் அந்தத்   
     தலைவனே தலைவன் நெஞ்சே!

அறிவதை முடியாய்க் கொண்டு
   அன்பதை அகமாய்க் கொண்டு
உறவதை உயிராய்க் கொள்ளும்
      உயர்இஸ்லாம் என்றார் நெஞ்சே

பகுத்தறி வுக்கும் மேலாய்ப்  
     படைத்திலன் இறைவன் ஒன்றை;
பகுத்திதை அறிவீர் என்று   
   பகர்ந்தவர் நபியே நெஞ்சே !

உலகத்துப் படைப்பு யாவும்  
   உயரிறைக் குடும்பம் என்றே
அலகிலா அன்பு செய்வோன்  
     உயர்ந்தவன்’ என்றார் நெஞ்சே !

உலகத்து மக்க ளெல்லாம்   
   ஓர்குடும் பத்தார் என்ற
நிலையன்பு நேச வாழ்வில்  
   இறங்குக என்றார் நெஞ்சே !

இறைமறை குர்ஆ னுக்கோர்  
  இயைந்தநல் விளக்க மாகிக்
குறையெலாம் களைந்த அண்ணல்
  குணமிகு நபியே நெஞ்சே !

அன்பதற் கன்பே என்றே   
   அகிலத்தை அணைத்து நின்றே
இன்பத்தைத் தந்த அண்ணல்
    இதயத்தைப் பாராய் நெஞ்சே !

மக்களை அழிக்க என்னை  
  மண்ணதற் கனுப்ப வில்லை
துக்கத்தைப் பொறுப்போ மென்றே
   தூயவர் சொன்னார் நெஞ்சே ;

கடுமையை அவர்கள் கொண்டால்
   கனிவதைக் கொள்வோம் நாமே
கொடுமையை அன்பால் வெல்லும்
   குணம்வேண்டும் என்றார் நெஞ்சே !

மதிப்பீடு

நெஞ்சில் நிறைந்த நபிமணி நூல், இஸ்லாமிய இலக்கிய நூல்களுள் எளிய தமிழில் எழுதப்பட்ட நூல். சொற்சுவை, பொருட்சுவை இலக்கியச் செறிவுடன் அமைந்துள்ள குறிப்பிடத்தகுந்த இஸ்லாமிய இலக்கிய நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.