நீலகண்ட சிவம்
நீலகண்ட சிவம் (நீலகண்ட தாசர்) (1839-1900) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்னாடக இசைக் கலைஞர். 4000-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர். இவருடைய கீர்த்தனைகள் சுவரப்படுத்தப்பட்டு அடையாறு கலாக்ஷேத்ராவால் இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டன.
பிறப்பு, கல்வி
நீலகண்ட சிவம் கன்யாகுமரி மாவட்டத்தில், பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த நாகர்கோயிலில், வடிவீஸ்வரம் அக்ரஹாரத்தில் 1839-ல் சுப்ரமணிய ஐயர் -அழகம்மாள் இணையருக்கு பிறந்தார். சுப்ரமணிய ஐயர் திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தின் இரண்டாம் தலைநகரமான பத்மநாபபுரத்தில் இருந்த நயினார் நீலகண்டசுவாமி ஆலயத்தில் (கல்குளம் மகாதேவர் ஆலயம்) அர்ச்சகராக பணியாற்றினார்.
நீலகண்ட சிவனின் இயற்பெயர் சுப்ரமணியன் என்றும், நீலகண்டசாமியின் மீதான பற்றினால் நீலகண்டதாசன் என்று பெயர்சூட்டிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. பத்மநாபபுரத்தில் அவர் இளமைப்பருவத்தை கழித்தார். முறையான இசைக்கல்வி எதுவும் பெறவில்லை. பஜனைக்குழுக்களில் பாடி இசை பயின்றார். அப்போது நீலகண்டதாஸ் என்று பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் இசையறிஞர் கொடுங்கல்லூர் சுந்தர சுவாமிகளின் மாணவராகி இசைநுணுக்கங்களைக் கற்றார்.
தனிவாழ்க்கை
நீலகண்ட சிவம் இருபது வயதில் திருவிதாங்கூர் அரசின் பிரவர்த்தியார் (கிராமநீதிபதி, வரிவசூலாளர், அரசுப்பிரதிநிதி) பதவியில் அமர்ந்தார். பதினைந்தாண்டுகள் இவ்வேலையில் இருந்தார்.
நீலகண்ட சிவன் திருவனந்தபுரம் கரமனை அக்ரஹாரத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாளை மணந்தார். அவருக்கு நான்கு புதல்வர்கள் - ஸ்தாணுநாத சிவன், சுப்பிரமணிய சிவன், மகள் பார்வதி அம்மாள்.
அகச்சான்றுக்கு விரோதமாக தீர்ப்பளிக்குமாறு அரசரிடமிருந்து குறிப்பு வந்தது என்றும், அவ்விதம் சொல்ல விரும்பாமல், யாரும் அறியாது வெகுகாலம் ஒரு விநாயகர் கோவிலில் ஒளிந்திருந்தார் என்றும், அதன் பிறகு இறையருளால் பாடல் இயற்றும் திறன் பெற்றவராக வெளிப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
இசைப்பணி
நீலகண்ட சிவம் 80-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் இயற்றி இருக்கிறார். பல புண்ணிய தலங்களுக்கு பதிகங்கள் எழுதியிருக்கிறார். பாடல்களின் பண் குறித்தும், கீர்த்தனைகளின் ராக மற்றும் தாளம் குறித்தும் குறிப்புகளோடு 936 பாடல்களைக் கொண்ட முதற்பகுதியை தோத்திரம் என்ற பெயரில் அமைத்திருக்கிறார். பண்முறை என்ற பெயரில் ஏனைய பாடல்களை அமைத்திருக்கிறார். இவரது கீர்த்தனங்களில் 36 ராகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. லலிதபஞ்சமி, தேராவராளி, நாகநந்தினி போன்ற அரிய ராகங்களில் இசையமைத்திருக்கிறார்.
லலிதாதேவி பண்டாசுர வதம் செய்த புராணக்கதையை மிக விரிவாகக் காலட்சேபத்துக்கு ஏற்ற வகையில் லலிதாதேவி மான்மியம் என்ற பெயரில் இயற்றினார். இந்நூலில் 80 கீர்த்தனைகள் உள்ளன. பல பாடல்கள் ராகமாலிகையாக ல் அமைக்கப்பட்டிருகின்றன. அதில் ஒரு கீர்த்தனையை பல்லவி, அனுபல்லவி இரண்டையும் தோடியிலும், ஒன்பது சரணங்களை ஒன்பது ராகங்களிலும் அமைத்திருக்கிறார்.
நீலகண்ட சிவன் ஸ்ரீவித்யா தத்துவக் கருத்துக்களையு தன் பாடல்களில் எழுதியிருப்பது அவரது சாஸ்திரத் தேர்ச்சியைக் காட்டுகிறது. ஈற்றடிக்கும் முந்தைய அடியில் 'நீலகண்டம்’ என்ற தன் முத்திரையை[1] அமைத்துப் பாடுவார்.விருத்தம், பதிகம், சிந்து எனப்பல வகைகளில் பாடல்கள் எழுதினார்.
கீர்த்தனைகளில் ஒன்று
ராகம்: முகாரி, ஆதி தாளம்
பல்லவி:
என்றைக்கு சிவகிருபை வருமோ - ஏழை
என் மனச் சஞ்சலம் அறுமோ (என்றைக்கு)
அனுபல்லவி:
கன்று குரலைக்கேட்டுக் கனியும் பசுபோல நோக்கி
ஒன்றுக்கும் அஞ்சாதென்றன் உள்ளத் துயரம் நீக்கி (என்றைக்கு)
சரணம்:
உண்டானபோது வெகுறவுண்டு இத்தரையிற்
கொண்டாடித் தொண்டாகிக் கொள்வார் தனங்குறையிற்
கண்டாலும் பேசாரிந்தக் கைதவமான பொல்லாச்
சண்டாள உலகத்தைத் தள்ளி சற்கதி சொல்ல (என்றைக்கு)
மற்றொன்று:
ராகம்: அமீர்கல்யாணி, ஆதிதாளம்
பல்லவி:
சிவனை நினைமனமே ஸாம்பஸதா
சிவனை நினைமனமே (சிவனை)
அனுபல்லவி:
பவவினை அகன்றுபோகும்படி கிருபை தந்தாளும்
பரனைப் பரமதயாகரனை உமாவரனை (சிவனை)
இவருடைய மாணவர்களில் பாபநாசம் சிவன் மிகப் புகழ்பெற்றவர்.
வெளியீடுகள்
- நீலகண்ட சிவனின் 10 பாடல்கள் அவரது மகள் பார்வதியம்மாள் பாடிக்காட்டிய விதத்தில் ஸ்வரப்படுத்தப்பட்டு அண்ணாமலைப் பல்கலைகழகத்தாரின் இசை நூல் வரிசையின் மூன்றாம் தொகுதியில் வெளியிடப்பட்டன.
- நீலகண்டசிவம் இயற்றிய 4446 பாடல்கள் 1895-ல் திருநீலகண்டபோதம் என்ற பெயரில் 640 பக்கங்கள் கொண்ட பெரிய நூலாக அவரது மகன் சுப்பிரமணிய சிவத்தால் அச்சிடப்பட்டன.
- லலிதாதேவி மான்மியம் இசைக்கதை 1925-ல் ஸ்ரீவனிதாதேவி மான்மியக் கீர்த்தனைகள் என்ற பெயரில் அவரது மகன் ஸ்தாணுநாத சிவனால் வெளியிடப்பட்டது
- நீலகண்ட சிவனின் கீர்த்தனைகள் 1955-ல் சென்னை அடையாறு கலாக்ஷேத்ரா வெளியீடாக இரு தொகுதிகளாக ஸ்வரக்குறிப்புகளுடன் வெளியாகின
- பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இசைக்கீர்த்தனைகளை(நாடகங்கள்)திருவனந்தபுரத்தில் ஞானஸ்கந்தைய்யா என்பவர் 130 பாடல்களை பஜனைக் கீர்த்தனங்கள் என்ற பெயரில் வெளியிட்டார்.
- முசிறி சுப்ரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர் ஆகியோர் நீலகண்ட சிவம் எழுதிய பாடல்களை பாடிப் புகழ்பெறச்ச் எய்தனர். முகாரி ராகத்திலமைந்த என்றைக்கு சிவகிருபை வருமோ, கமாஸ் ராகத்தில் அமைந்த இகபரம் தரும் பெருமாள், கரஹரபிரியா ராகத்திலமைந்த நவசித்தி பெற்றாலும் ஆகிய கீர்த்தனைகள் அவர்களால் புகழ்பெற்றன
புகழ்பெற்ற கீர்த்தனைகள்:
- என்றைக்கு சிவகிருபை - ராகம் முகாரி
- ஒருநாள் ஒருதரமாகிலும் - ராகம் கமாஸ்
- சம்போ மகாதேவா - ராகம் பௌளி
- இகபரம்தரும் - ராகம் கமாஸ்
- தாயே கதிநீயே - ராகம் கமாஸ்
- தரிசிக்க வேணும் - ராகம் நாதநாமக்கிரியை
- ஆதிபராசக்தி மகதேவி -ஆனந்த பைரவி
நீலகண்ட சிவனின் 258 கீர்த்தனைகள் ஆங்கில எழுத்துருவில் பார்க்க இணைப்பு
மறைவு
தன் மறைவுக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே வரும் திங்கட்கிழமை அன்று தான் சிவபதம் அடையவிருப்பதாக அறிவித்து அதன்படியே 1900-ஆம் ஆண்டு ஆடி மாதம் 8 ஆம் தேதி ஊர் திரண்டிருக்க எல்லோருக்கும் திருநீற்றுப் பிரசாதம் கொடுத்துவிட்டு மறைந்தார் எனப்படுகிறது.
மாணவர்கள்
இசைப்பாடலாசிரியரான பாபநாசம் சிவன், தமிழிசை அறிஞர் டி.இலட்சுமண பிள்ளை ஆகியோர் நீலகண்ட சிவனின் மாணவர்கள் எனப்படுகிறது. இலட்சுமணபிள்ளை நேரடி மாணவர் என்பதற்கான சான்று இல்லை.
பரிசுகள், விருதுகள்
திருவனந்தபுரம் மகாராஜா, கொல்லம் மகாராஜா, ராமநாதபுரம் சேதுபதி, புதுக்கோட்டை மன்னர் ஆகியோரால் நீலகண்ட சிவன் கௌரவிக்கப்பட்டார்
உசாத்துணை
- நீலகண்ட சிவன் இசைப்படைப்புகளில் ரசானுபவம் - டாக்டர் பேபி ஸ்ரீராம்
- ஓராறு முகனே - ராகம் ரீதிகௌளை - ரஞ்சனி காயத்ரி
- தேறுவதெப்போ நெஞ்சே - ராகம் கமாஸ் - அக்ஷய் பத்மநாபன்
- https://www.swathithirunal.in/composeres/neelakanta.htm
- நீலகண்டசிவம் கீர்த்தனைகள் வலிவலம் வெங்கட்ராமன்
- https://www.sruti.com/index.php?route=archives/artist_details&artId=78
- http://www.hcmacarnatic.org/blog/neelakanta-sivan-krithis
- https://www.karnatik.com/co1034.shtml நீலகண்ட சிவன் கீர்த்தனைகள் இணைப்பு
- https://www.sruti.com/index.php?route=archives/artist_details&artId=78
- http://www.carnatica.net/neelakantasivan.htm
- https://www.celextel.org/carnatic-music-krithis/neelakanta-sivan/
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
- ↑ கீர்த்தனைகளை இயற்றும் பாடலாசிரியர்கள், ஒரு குறிப்பிட்ட சொல் தங்களின் ஒவ்வொரு பாடலிலும் இடம்பெறும் வகையில் எழுதுவார்கள். அச்சொல் முத்திரை எனப்படும்.
✅Finalised Page