நாஞ்சில் பி.டி.சாமி
நாஞ்சில் பி. டி. சாமி (1930- 12 செப்டெம்பர் 2004) பி.டி.சாமி. தமிழ் எழுத்தாளர்,இதழாளர். பேய்க்கதைகள் மற்றும் திகில்கதைகள் எழுதுவதில் புகழ்பெற்றிருந்தார். பொதுவாசிப்புக்கான ஏராளமான கதைகளை எழுதியிருக்கிறார். திரைக்கதை எழுதுவதிலும் ஈடுபட்டிருந்தார்
பிறப்பு, கல்வி
நாகர்கோயில் அருகே மறவன்குடியிருப்பு என்னும் ஊரில் 1930ல் பி.டி.சாமி பிறந்தார். முழுப்பெயர் பி.தங்கசாமி நாடார். பள்ளியிறுதி வரை பயின்றார்
தனிவாழ்க்கை
பி.டி.சாமி நாகர்கோயில் கோட்டாறில் தையல்கலைஞராக வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் தினத்தந்தியின் முகவரும் செய்தியாளருமாக ஆனார். தினத்தந்தியில் இருந்து வெளியேறிய பின்னர் முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தார். தன் படைப்புகளை தானே வெளியிட பதிப்பகம் ஒன்றையும் நடத்தினார். பி.டி.சாமியின் மனைவி இலட்சுமி. தங்கம், சித்ரா என இரண்டு மகள்கள்.
எழுத்துவாழ்க்கை
தினத்தந்தியில் செய்திகள் எழுதிக்கொண்டிருந்த பி.டி.சாமி தினத்தந்தி ராணி வார இதழை தொடங்கியபோது அதில் கதைகளை எழுதத்தொடங்கினார். விரைவிலேயே அவருடைய பேய்க்கதைகள் எளியவாசகர்கள் நடுவே புகழ்பெற்றன.
திரைவாழ்க்கை
1970 முதல் சென்னையில் வெவ்வேறு திரைப்படங்களின் கதைவிவாதங்களில் பி.டிசாமி பங்கெடுத்தார். ஜெய்சங்கர் நடித்து ராமகிருஷ்ணா இயக்கத்தில் 1975ல் வெளிவந்த ஹோட்டல் சொர்க்கம் படத்திற்கு கதைவசனம் எழுதினார். படம் வெற்றிபெறவே தொடர்ந்து எட்டு படங்களுக்கு கதைவசனம் எழுதினார். புனித அந்தோனியார் என்னும் படத்திற்கு கதை,வசனம் எழுதியதுடன் துணை இயக்குநராகவும் பணியாற்றினார். அதைத்தொடர்ந்து பாடும் பச்சைக்கிளி என்றபடத்தை தானே தயாரித்து இயக்கினார். கதை வசனமும் தானே எழுதினார். அப்படம் வெளிவராமல் போகவே சேர்த்த பணத்தை முழுமையாகவே இழந்தார்.
விருதுகள்
நாஞ்சில் பி.டி.சாமி 2003ல் நாடகத்துகான கலைமாமணி விருதை பெற்றார்.
மறைவு
12 செப்டெம்பர் 2004 ல் பி.டி.சாமி மறைந்தார்.
உசாத்துணை
https://www.aanthaireporter.com/a-famous-ghost-writer-p-t-samy/