நவவேதாந்தம்
நவவேதாந்தம் (புதுவேதாந்தம்) : இந்திய வேதாந்த மரபின் நவீன வடிவம். வேதாந்தம் காலப்போக்கில் சாதிய அமைப்புடனும், இந்திய ஆசாரவாதத்துடனும், இந்து வழிபாட்டு முறைகளுடனும் சமரசம் செய்துகொண்டு அதன் அடிப்படைகளை தவறவிட்டுவிட்டது என்று எண்ணிய ஞானிகள் வேதாந்தத்தின் தத்துவ அடிப்படைகள் சமரசமில்லாமல் வலியுறுத்தியமையால் உருவானது. பின்னர் அவர்களின் மாணவர்களால் இந்திய வேதாந்தத்தை நவீன காலகட்டத்தின் மானுடவிடுதலைக் கருத்துக்களுடனும், சமூக மறுமலர்ச்சிக் கருத்துக்களுடனும், நவீன ஐரோப்பிய தத்துவக் கருத்துக்களுடமும் இணைத்து விரிவாக்கம் செய்வதன் வழியாக விரிவாக்கப்பட்டது. இந்திய மறுமலர்ச்சியில் நவவேதாந்தம் பெரும் பங்களிப்பாற்றியது.
வரலாறு
முதற்காலகட்டம்
இந்திய வேதாந்தத்திற்கு பல காலகட்டங்களிலாக பல பரிணாமப்படிநிலைகள் உண்டு. ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம் என்னும் பாடல்பகுதியே வேதாந்தத்தின் தொடக்கப்புள்ளி எனப்படுகிறது. அதில் பிரம்மவாதம் கவித்துவதரிசனமாக உள்ளது. பிரம்மமே முழுமுதன்மை கொண்டது, பிற அனைத்துமாகி நின்றிருப்பது அதுவே என அப்பாடல் உணர்த்துகிறது. வேதங்களின் தத்துவ அடிப்படையை விளக்கும் ஆரண்யகங்கள் வழியாக பிரம்மவாதம் வளர்ச்சி அடைந்தது. பின்னர் உருவாகி வந்த உபநிடதங்கள் வழியாக திட்டவட்டமான தத்துவக் கொள்கையாக திரண்டது. பாதராயணர் எழுதிய பிரம்மசூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரங்கள் வேதாந்தத்தின் பிரம்மவாதக் கொள்கையை வரையறை செய்தது. வேதாந்தத்தின் இலக்கணநூலாக அது கருதப்படுகிறது. பிரம்மசூத்திரத்தின் பிரம்மவாத தத்துவத்தை பிற தத்துவங்களுடன் இணைத்து மேலும் வளர்த்தெடுத்த நூல் பகவத் கீதை. உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை ஆகியவை மூன்றும் மூன்று தத்துவ மரபுகள் (வேதாந்தம்) எனப்படுகின்றன. (பிரஸ்தானத் த்ரயம்)
இரண்டாவது காலகட்டம்
பொமு 3 ஆம் நூற்றாண்டுக்குப்பின் இந்திய தத்துவ சிந்தனை மரபில் சமண- பௌத்த மதங்கள் மேலாதிக்கம் பெற்றன. அவை வேதாந்தத்திற்கு எதிரானவை என்பதனால் வேதாந்தம் பின்னடைவு பெற்றது. பின்னர் பொயு 7 ஆம் நூற்றாண்டில் சங்கரர் தோன்றி பௌத்த சமயத்தின் தத்துவங்களுடன் விவாதித்து வேதாந்தத்தை தர்க்கபூர்வமாக விரிவாக்கினார். அது அத்வைதம் எனப்படுகிறது. அத்வைதத்திற்குப்பின்னர் வேதாந்த மரபு அத்வைதத்திற்கு எதிர்த்தரப்புகளாகவும் மாற்றுத்தரப்புகளாகவும் ஓரு விவாதக்களத்தை உருவாக்கிக்கொண்டது. விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், சுத்தாத்வைதம் போன்ற வேதாந்தப் பிரிவுகள் உருவாயின. வேதாந்தத்துடன் விவாதித்து சைவசித்தாந்தம் உருவாகியது.
மூன்றாவது காலகட்டம்
ொயுக12டஆம் நூற்றாண்டுக்குப்பின் கடுமையான போக்கு கொண்ட இஸ்லாமிய அரசுகள் இந்தியாவில் உருவானமையால் இந்து மரபை ஒருங்கிணைத்துக் காக்கும் பொறுப்பை வேதாந்தம் ஏற்றுக்கொண்டது. ஏனென்றால் வேதாந்தத்தின் பிரம்மவாதக் கோட்பாடு இந்து மதத்தின் எல்லா பிரிவுகளுக்கும் ஏற்புடையது. சங்கரர் ஆறு மதங்கள் (இந்து மரபு) ஐ ஒன்றாக்கினார். பொதுவான பூசகர்களின் மரபையும் சங்கர மடங்கள் உருவாக்கி நிலைநிறுத்தின. இதன் விளைவாக, மரபான வேதாந்தம் காலப்போக்கில் இந்தியச் சாதியமைப்புடனும், ஆசாரவாதத்துடனும் சமரசம் செய்துகொண்டது. வேதாந்தத்தை அது ஓர் உயர்நிலை தத்துவமாக மட்டுமே வைத்துக்கொண்டு நடைமுறையில் ஆசாரவாதம், வழிபாட்டுமுறைகள், சடங்குவாதம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தது.
பொயு 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஐரோப்பிய ஆதிக்கமும், ஐரோப்பியக் கல்வியும் பரவியது. ஐரோப்பிய மனித சமத்துவக் கருத்துக்களும், மனித உரிமைக் கருத்துக்களும் வேரூன்றத்தொடங்கின. அக்கருத்துக்களின் விளைவாக இந்து மதத்தின் பழமைவாதம், ஆசாரவாதம், சாதிமுறை, மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிரான சீர்திருத்தங்கள் உருவாயின. இது இந்து மறுமலர்ச்சி எனப்படுகிறது. இந்து மறுமலர்ச்சியின்போது இந்துமதத்தின் அறிவார்ந்த மையமாக வேதாந்தமே முன்னிறுத்தப்பட்டது. வேதாந்தம் நவீன சிந்தனைகளுடன் உரையாடி தன்னை மறுஆக்கம் செய்துகொண்டது. அந்த புதியவேதாந்தம் நவவேதாந்தம் என பிற்கால தத்துவ வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படுகிறது.
தத்துவம்
வேதாந்தத்தின் அடிப்படைக் கருத்துக்கள் இரண்டு. ஒன்று 'தூய அறிவு' என்னும் அணுகுமுறை. இது ஞானமார்க்கம் எனப்படுகிறது. இரண்டு 'அனைத்தும் ஒன்றே' என்னும் கொள்கை. இது பிரம்மவாதம் எனப்படுகிறது.
தூய அறிவு
வேதாந்தம் அறிந்து கடத்தல் வழியாக விடுதலை அடையப்படும் என முன்வைக்கும் அறிவுப்பாதை (ஞானமார்க்கம்) ஆகும். வேதங்கள் தூய அறிவையே முன்வைக்கின்றன என்று வேதாந்தம் சொல்கிறது.
நவவேதாந்தம் வேதாந்தத்தின் இரண்டு அடிப்படைக் கருத்துக்களை முதன்மைப்படுத்தியது. ’தூய அறிவு’ மற்றும் ‘அனைத்தும் ஒன்றே’ என்னும் இரு தரிசனங்கள் அவை. பல்வேறு அறிதல்கள் வழியாகச் சென்று ஆத்மஞானம் அல்லது கேவலஞானம் என்னும் தூயதன்னறிதலையே முன்வைத்தது. அதன் விளைவாக ஆலயவழிபாடு, சடங்குகள் போன்றவற்றை அது நிராகரித்தது. அவற்றை இரண்டாம்நிலையானவை என வகுத்தது. அனைத்தும் பிரம்மமே என்று அத்வைதம் கூறுவதனால் உயிர்களிடையே வேறுபாடில்லை, மானுடரிடையேனும் வேறுபாடில்லை. சங்கரரின் மனிஷாபஞ்சகம் போன்ற படைப்புகளின் சாராம்சம் அதுவே. ஆகவே நவவேதாந்தம் மானுடரிடையே பிரிவினையை நிராகரித்தது. உயிர்க்கொலையையும் மறுத்தது.