under review

நரன்

From Tamil Wiki
Revision as of 14:30, 15 March 2024 by Ramya (talk | contribs)
நரன்

நரன் (பிறப்பு: ஏப்ரல் 4, 1981) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர், திரைக்கதையாசிரியர். சால்ட் பதிப்பகத்தின் நிறுவனர். ஊடகத்துறையில் பணியாற்றுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

நரன் ஏப்ரல் 4, 1981-ல் விருதுநகரில் பிறந்தார். கே.வி.எஸ் கல்விக்குழுமத்தில் பள்ளிக்கல்வி பயின்றார். V.H.N.S.N கல்லூரியில் வணிகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். 2010 வரை பங்குச்சந்தையில் பணியாற்றினார். அதன்பின் ஆறுவருடங்கள் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றினார். 2016 முதல் ஹாட்ஸ்டாரில் மூத்த நிர்வாக தயாரிப்பாளராகப் (Senior Executive Producer) பணியாற்றுகிறார். திரைத்துறையில் கதையாசிரியராகப் பணியாற்றுகிறார். நரேன் திருமணமானவர்.

இலக்கிய வாழ்க்கை

நரன் 2002 முதல் எழுதி வருகிறார். நரனின் முதல் கவிதைத் தொகுப்பு "உப்பு நீர் முதலை" 2010-ல் காலச்சுவடு பதிப்பாக வெளியானது. விகடனில் வேட்டை நாய்கள், பராரி (ஏழு கடல், ஏழு மலை) ஆகிய கதைகள் தொடராக வெளிவந்தன. கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். ”361 டிகிரி” என்ற இதழின் ஆசிரியர். புதிய படைப்பாளிகளின் படைப்புகளை அடையாளம் காணும் நோக்கில் சால்ட் பதிப்பகத்தை நிறுவினார்.

இலக்கிய இடம்

சர்ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம், ஃபேன்டசி, ஜென் எனப் பல தளங்களில் இயங்கக்கூடிய கவிதைகளை எழுதுபவர். நரன் கதைகள் வாழ்க்கையில் அதிகம்பேசப்படாத திரிபுநிலைகளை, இருண்ட தருணங்களை, விந்தையான இக்கட்டுகளைச் சித்தரிப்பவை.

"ஜென் கவிதைகளை கருத்துக்களாக்கி அக்கருத்துக்களை திரும்ப படிமங்களாக ஆக்குவதுதான் பெரும்பாலும் பல கவிஞர்களால் செய்யப்படுகிறது. அக்கருத்துக்களை தன் அனுபவங்களாக ஆக்கிக்கொண்டு அவ்வனுபவங்களை படிமங்களாக்குபவர்கள் குறைவு. அவர்களில் ஒருவர் நரன். ஜென்கவிதைகளில் இருந்து நரன் கவிதைகள் மாறுபடுவது நேரடியான உணர்வுநிலைகள் அவற்றில் வெளிப்படுவதனால் என்று சொல்லலாம். நுண்வடிவ தத்துவச் சிக்கல்களுக்குப் பதிலாக சமகாலத்தைய வாழ்வின் இக்கட்டுகளை நோக்கி அக்கவிதைகள் திறக்கின்றன. ஆகவே அன்றாடவாழ்க்கையிலிருந்து படிமங்களைக் கண்டடைகின்றன. ஜென் கவிதைகளிலிருந்து முற்றாக மாறுபட்ட நேரடியான உணர்ச்சிவெளிப்பாடுகளும் அப்பட்டமான கசப்பும் தனிமைகொள்ளலும் கொண்ட கவிதைகளையும் நரன் எழுதியிருக்கிறார். ஒன்றையொன்று நிரப்பும் தன்மை கொண்ட இரு உலகங்களாக அவருடைய கவிதையில் இவை இரண்டும் அமைந்துள்ளன" என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • சிறந்த சிறுகதைகளுக்கான விகடன் விருது
  • வாசகசாலை விருது, சுஜாதா விருது
  • எழுத்தாளர் க.சி.சிவக்குமார் நினைவு விருது
  • பாலகுமாரன் இலக்கிய விருது

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • உப்பு நீர் முதலை
  • ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்
  • லாகிரி
  • மிளகு பருத்தி மற்றும் யானைகள்
நாவல்
  • வேட்டை நாய்கள்
சிறுகதைத் தொகுப்பு
  • கேசம்
  • சரீரம்
  • பராரி (ஏழு கடல், ஏழு மலை)

இணைப்புகள்


✅Finalised Page