being created

தொ.மு.சி. ரகுநாதன்

From Tamil Wiki
Revision as of 18:09, 29 January 2022 by Dr.P.Saravanan (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


This page is being created by User:Dr.P.Saravanan

தொ. மு. சிதம்பர ரகுநாதன்

தொ.மு.சி. ரகுநாதன் (அக்டோபர் 20, 1923 - டிசம்பர் 31, 2001) ‘தொ.மு.சி’ என்று பரவலாக அறியப்பட்டார். இயற்பெயர் தொ. மு. சிதம்பர ரகுநாதன். இவர் சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர், இதழாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், விமர்சகர். இவரின் ‘பஞ்சும் பசியும்’ (1951) நாவல் தமிழ் நாவல்களில் முதன் முதலில் பிறமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாகக் கருதப்படுகிறது. இதனை கமில் சுவலபில் ‘செக்’ மொழியில் மொழிபெயர்த்தார். தொ.மு.சி. ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். இவர், ‘சாந்தி’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களைத் தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகம் செய்துவைத்தார். புதுமைப்பித்தன் இவரைத் ‘தன் வாரிசு’ என்று குறிப்பிட்டார். இவரின் படைப்புகளில் இடதுசாரி முற்போக்குச் சிந்தனைகள் கலைநோக்குடன் அல்லாமல் பிரச்சாரத் தன்மையில் வெளிப்பட்டிருக்கும். இவரது ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற இலக்கிய விமர்சன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.

பிறப்பு, கல்வி

தொ.மு.சி. யின் தாத்தா சிதம்பரத் தொண்டைமான் தமிழறிஞர். அவர் `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை', `நெல்லைப்பள்ளு' போன்ற நூல்களை எழுதியுள்ளார். தொ.மு.சி. யின் அப்பா தொண்டைமான் முத்தையா ஓவியர்; புகைப்படக் கவிஞர். அண்ணன் பாஸ்கர தொண்டைமான் பேச்சாளர்; எழுத்தாளர்.  பிற்காலத்தில் அவர் மாவட்ட ஆட்சியாளராகவும் இருந்தார். தொண்டைமான் முத்தையாவுக்கும் அவரின் இரண்டாவது மனைவி முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக அக்டோபர் 20, 1923இல் திருநெல்வேலியில் பிறந்தார். இவருக்கு ஓர் அண்ணன், மூன்று தமக்கையர், ஒரு தங்கை.

தனிவாழ்க்கை

1942-ல் `வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று, சிறை சென்றார். சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ நேர்ந்தது. கம்யூனிஸ்ட் கட்சியிலும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திலும் இணைந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். சென்னைக்குச் சென்று தினமணி, முல்லை, சக்தி, சோவியத் நாடு போன்ற இதழ்களில் ஆசிரியர் குழுவிலும் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். பத்திரிகைத் துறையில் இருந்து விலகி, சென்னையிலிருந்து மீண்டும் நெல்லைக்குத் திரும்பி, 1954-ல் `சாந்தி' என்ற இலக்கிய இதழை அவரே தொடங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

தொ.மு.சி. ரகுநாதன்

இவரது முதல் சிறுகதை 1941-ல் ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளிந்தது. முதல் நாவல் ‘புயல்’ 1945-ல் வெளியானது.

இவர் 1949 இல் எழுதிய ‘முதலிரவு’ என்ற நாவல் ‘பாலியல் சார்ந்த விஷயங்களை வெளிப்படையாகப் பேசுவதாகவும் ஓரினச் சேர்க்கை குறித்தும் முறை தவறிய உறவுகள் பற்றியும் எழுதப்பட்டதாகவும் கருதப்பட்டு, அன்றைய கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியாரால் தடை செய்யப்பட்டது. இந்தத் தடையாணையை எதிர்த்து இவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தோல்வியடைந்தார். இறுதியில், கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றம் விதித்த அபராதத்தைச் செலுத்தியதால் விடுவிக்கப்பட்டார்.

தமிழகக் கைத்தறி நெசவாளர்களின் துயர வாழ்வை உருக்கமாக விவரிக்கும் ‘பஞ்சும் பசியும்’ (1951) இவரது முக்கியமான நாவல். இது செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘தமிழில் இருந்து ஐரோப்பிய மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் நாவல்’ என்ற பெருமையைப் பெற்றது.

இவர், ‘திருச்சிற்றம்பலக் கவிராயர்’ என்ற புனைபெயரில் கவிதைகளை எழுதினார்.

இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர், சோவியத் நாடு பதிப்பகம் மூலம் ரஷ்யப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

தொ.மு.சி. புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அவரது மறைவுக்குப் பின், அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

இலக்கிய இடம்

“ ரகுநாதன் எழுதிய `ஆனைத்தீ’ என்ற சிறுகதைக்கு ஈடான ஒரு கதையை, தமிழில் வேறு யாரும் எழுதவில்லை” என்பது எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் அழுத்தமான கருத்து.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  1. நீயும் நானும்
  2. ஷணப்பித்தம்
  3. சேற்றிலே மலர்ந்த செந்தாமரை
  4. ரகுநாதன் கதைகள்
கவிதை தொகுப்புகள்
  1. ரகுநாதன் கவிதைகள்
  2. கவியரங்கக் கவிதைகள்
  3. காவியப் பரிசு
  4. திருநெல்வேலி காந்திமதியம்மை பேரில் கவித்துறை அந்தாதி
நாவல்கள்
  1. புயல் - 1945
  2. முதலிரவு - 1949
  3. பஞ்சும் பசியும் - 1951
  4. கன்னிகா
நாடகங்கள்
  1. சிலை பேசிற்று
  2. மருது பாண்டியன்
வாழ்க்கை வரலாறு
  1. புதுமைப்பித்தன் வரலாறு
ஆய்வு நூல்
  1. இளங்கோ அடிகள் யார்?
இலக்கிய விமர்சனம்
  1. அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்
  2. கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்)
  3. சமுதாய இலக்கியம்
  4. பாஞ்சாலி சபதம் - உறைபொருளும் மறைபொருளும்
  5. பாரதி - சில பார்வைகள்
  6. பாரதியும் ஷெல்லியும்
  7. பாரதி - காலமும் கருத்தும்
  8. புதுமைப்பித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விஷமத் தனங்களும் - 1999
  9. விடுதலை வீரர்கள் ஐவர்
மொழிபெயர்ப்பு நூல்கள்
  1. இதயத்தின் கட்டளை
  2. சந்திப்பு
  3. சோவியத் நாட்டுக் கவிதைகள்
  4. தந்தையின் காதலி
  5. தாய் (மாக்சிம் கார்க்கியின் ‘தி மதர்’ )
  6. நான் இருவர்
  7. லெனின் கவிதாஞ்சலி (விளடிமிர் இலிச் லெனின் ‘மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா’ )

விருதுகள், பரிசுகள்

  1. சாகித்திய அகாதமி விருது - 1983
  2. சோவியத் லேண்ட் நேரு விருது
  3. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் ‘தமிழ் அன்னை’ பரிசு
  4. பாரதி விருது - 2001

உசாத்துணை

http://narumpunathan.blogspot.com/2020/09/blog-post_52.html