தேவதேவன்
தேவதேவன் (பி. கைவல்யம், பிறப்பு: மே, 5 1948) நவீனத் தமிழின் முதன்மை கவிஞர். கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். நவீன தமிழ் கவிதையில் மிக அதிக கவிதைகளை எழுதிய கவிஞர்.
பிறப்பு, கல்வி
தேவதேவன் மே 5 1948 அன்று சோ. பிச்சுமணி, பாப்பாத்தி தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். தேவதேவனின் பூர்வீக ஊர் கோவில்பட்டி அருகே உள்ள இ.ராஜாகோயில், தாயின் பூர்வீகம் வேடப்பட்டி. தந்தை தன் 19ஆம் வயதில் மில் வேலைக்காகத் தூத்துக்குடிக்கு வந்தது முதல் தூத்துக்குடியே சொந்த ஊரானது.
தேவதேவனின் தந்தை பிச்சுமணி ஈ.வெ.ராவின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். தேவதேவன் பிறந்த அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த கரும்படைக்கான மாநாட்டில் ஈ.வெ.ரா கலந்துக் கொண்டார். அதில் தேவதேவனைத் தூக்கிச் சென்று அவருக்கு பெயர்சூட்டும் படி ஈ.வெ.ராவிடம் வேண்டினார். ஈ.வெ.ரா தன் நண்பரின் (கைவல்யம் நவநீதன்) பெயர் கைவல்யம் எனத் தேவதேவனுக்கு பெயர் சூட்டினார்.
தேவதேவன் ஆரம்ப பள்ளியை தூத்துக்குடி டுவிபுரம் தெருவில் உள்ள டி.டி.டி.ஏ. ஆரம்ப பள்ளியில் பயின்றார். சுப்பையா வித்யாலயம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை பயின்றார். பின் மூன்று ஆண்டுகள் சிறு சிறு வேலைகள் செய்தார்.
குருவிக்குளத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியர் பயிற்சி முடித்தார். பின் வேலை கிடைக்காததால் சிறிது காலம் அச்சகம் வைத்திருந்தார். கேரளத்தில் சிறு வேலை ஒன்றில் சில காலம் இருந்தார். உடலுழைப்பு வேலைகளில் ஈடுபட்டார். தேவதேவனின் 33 ஆம் வயதில் அவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது.
தனி வாழ்க்கை
தேவதேவன் தன் 35 ஆம் வயதில் சாந்தியை திருமணம் செய்துக் கொண்டார். இரு குழந்தைகள் மூத்த மகள் அம்ருதா ப்ரீதம், இளைய மகன் அரவிந்தன். குடும்பத்தின் மீதும், தூத்துக்குடி மணி நகரில் சொந்தமாகக் கட்டிய வீடு மீதும் தேவதேவனுக்கு மிகுந்த பிரியம் உண்டு. விலாசம்: தேவதேவன், 4-5 மணி நகர், தூத்துக்குடி - 628003, தமிழ்நாடு.
முப்பத்தி மூன்றாம் வயதில் தூத்துக்குடி சிவந்தாக்குளம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 25 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்றி 2005 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
தேவதேவன் எளிய உணவு பழக்கம் உடையவர். பழங்கள், குறிப்பாகப் பப்பாளிப் பழம் மீது பிரியம் அதிகம். முட்டை மற்றும் அசைவ உணவு உண்பதில் கருணையின்மை மட்டுமல்ல அதில் ஒருவகை ஒழுங்கின்மையும் உண்டு என்னும் கொள்கைக் கொண்டவர்.
தேவதேவனின் உறவினர்களில் கணிசமானவர்கள் இலங்கைக்குக் கப்பலேறிச் சென்று மறைந்து போனார்கள். அவர்கள் ஞாபகமாகச் சில இலங்கை பாணி மரப் பொருட்களும் ஒரு மூட்டை தூக்கும் ஊசியும் தேவதேவன் குடும்பத்தில் உள்ளது.