under review

தில்லானா மோகனாம்பாள்

From Tamil Wiki
Revision as of 13:44, 10 May 2022 by Kavitha (talk | contribs)
தில்லானா மோகனாம்பாள்

தில்லானா மோகனாம்பாள் (1970) கொத்தமங்கலம் சுப்பு (கலைமணி) எழுதிய நாவல். இசைவேளாளர் வாழ்க்கையின் பின்புலத்தில் மோகனாம்பாள் என்னும் நடனமங்கைக்கும் சிக்கல் சண்முகசுந்தரம் என்னும் நாதஸ்வர வித்வானுக்கும் இடையிலான காதலை விவரிக்கிறது. 1957 முதல் ஆனந்த விகடனில் வெளிவந்த புகழ்பெற்ற தொடர்கதை. 1970-ல் நூலாக வெளிவந்தது. 1968-ல் திரைப்படமாகவும் வெளிவந்தது.

எழுத்து, பிரசுரம்

தில்லானா மோகனாம்பாள் ஆனந்த விகடன் இதழில் 1957 முதல் தொடராக வெளிவந்தது. இரண்டு பாகங்கள் கொண்டது. கொத்தமங்கலம் சுப்பு இதை கலைமணி என்னும் புனைபெயரில் எழுதினார். இந்நாவலுக்கு கோபுலு ஓவியங்கள் வரைந்தார். 1970-ல் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் இந்நாவலை நூல்வடிவில் வெளியிட்டது. ஆனந்த விகடனில் வெளியான படைப்புகளுக்கு ஆனந்த விகடனே பதிப்புரிமை கோரியதும் அதையொட்டி எழுந்த வழக்கும் தீர்ப்பும் இந்த தாமதத்திற்கு காரணம். இந்நாவலில் தில்லானா மோகனாம்பாள் - சிக்கல் சண்முகசுந்தரம் திருமண நிகழ்வுக்கு ஆனந்த விகடன் இதழ் மரபான முறையில் மஞ்சள்தாளில் அழைப்பிதழ் அச்சிட்டு ஆனந்தவிகடன் வாசகர்களுக்கு இதழுடன் அனுப்பியது. பல்லாயிரம்பேர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

கதைச்சுருக்கம்

இந்நாவல் 1930-40-களில் தஞ்சாவூர் பகுதி இசைவேளாளர் வாழ்க்கைப் பின்புலத்தில் அமைந்துள்ளது. திருவாரூரைச் சேர்ந்தவர் மோகனாம்பாள். அவர் தில்லானா என்னும் விரைவான பாடல்முறைக்கு ஏற்ப ஆடும் திறன் கொண்டிருந்தமையால் தில்லானா மோகனாம்பாள் என அழைக்கப்பட்டார். அவருடைய அன்னை வடிவாம்பாள். சிக்கல் என்னும் ஊரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். மாபெரும் நாதஸ்வரக் கலைஞர். இருவரும் ஒரு கோயில் நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே அவர்களுக்கிடையே மோதல் உருவாகிறது. நாதஸ்வரம் வாசிக்கையில் கோயிலில் வேட்டு போட்டதனால் சினம்கொண்டு வெளியேறும் சண்முகசுந்தரத்தை எதிரில் வரும் மோகனாம்பாள் அவருடைய மனநிலை அறியாமல் தன் ஆட்டம் காண அழைக்கிறார். "என்ன வேட்டுச்சத்தத்துக்கு ஆடப்போகிறாயா?” என்று சண்முகசுந்தரம் கேட்க சீண்டப்படும் மோகனாம்பாள் சண்முகசுந்தரத்திடம் "என்ன பெரிய நாதஸ்வரம், எங்க திருவாரூர் பாரிநாயனத்தை வாசித்துவிடுவாயா?" என்று சவால் விடுகிறார். சவாலை சண்முகசுந்தரம் ஏற்றுக்கொள்கிறார். பாரிநாயனம் சாதாரணமான நாயனங்களைவிட நீளமும், அதிக காற்றும் தேவைப்படுவது. நெடுநாள் தனிப்பயிற்சி இல்லாமல் அதை வாசிக்கமுடியாது. சண்முகசுந்தரம் குறுகிய காலத்தில் அதில் பழகி அதை வாசிக்கிறார். தில்லானா மோகனாம்பாள் அதற்கு ஆடுகிறார். அவர்களின் ஆட்டம் புகழ்பெறவே இருவரும் இணையராக பல இடங்களில் இசை-நடன நிகழ்வுகள் நடத்துகிறார்கள். இருவரும் காதல்கொள்கிறார்கள். ஆனால் மோகனாம்பாளை செல்வந்தர்களுக்கு ஆசைநாயகியாக அனுப்பவேண்டுமென கனவு காணும் வடிவாம்பாள் அதற்கு எதிராக இருக்கிறார். சவடால் வைத்தி என்னும் தரகர் அவருக்கு உதவுகிறார். சிங்கபுரம் மைனர், மதன்பூர் மகாராஜா முதலியோர் மோகனாம்பாளை அடைய முயல்கிறார்கள். சண்முகசுந்தரம் சந்தேகம் கொள்ளும் இயல்பு கொண்டவராகவும் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகவும் இருக்கிறார். தடைகளை கடந்து, தவறான புரிதல்கள் நீங்கி அவர்கள் இருவரும் மணம்செய்துகொள்கிறார்கள். மோகனாம்பாளுக்கு குழந்தை பிறந்ததும் வடிவாம்பாள் அக்குழந்தையின் மேல் பேரன்பு கொண்டவராக ஆகிறார்.

கதைமாந்தர்

  • 'சிக்கல்' சண்முகசுந்தரம் - நாதஸ்வரக் கலைஞர், இசைமேதை
  • தில்லானா மோகனாம்பாள் - நடனக்கலைஞர், தில்லானா ஆடுவதில் திறம்பெற்றவர்
  • வடிவாம்பாள் - மோகனாம்பாளின் அன்னை
  • சவடால் வைத்தி - பெண்தரகர்
  • சிங்கபுரம் மைனர் - மோகனாம்பாள் மேல் ஆசை கொண்டவர். மனம் திருந்துபவர்
  • மரகதம் - சிங்கபுரம் மைனரின் மனைவி
  • பரமானந்த பரதேசி - இசையை யோகமாகப் பயிலும் ஒரு துறவி
  • முத்துராக்கு - தவில் கலைஞர்
  • சக்திவேல் - தவில் கலைஞர்
  • மதன்பூர் மகாராஜா - மோகனாம்பாளை அடைய முயல்பவர். பெருந்தன்மையானவர். அவர்களின் காதலை உணர்ந்து மனம்திருந்துகிறார்
  • தங்கரத்தினம் - சண்முகசுந்தரத்தின் தம்பி, அவருடன் இணைந்து வாசிப்பவர்
  • ஜில்ஜில் ரமாமணி - கூத்து, நாடகக் கலைஞர்
  • வரதன் - மோகனாம்பாளின் மிருதங்கக் கலைஞர்

இலக்கிய இடம்

தில்லானா மோகனாம்பாள் தொடர்கதையாக வெளிவந்தமையால் அதற்குரிய கட்டற்று ஒழுகிச்செல்லும் வடிவம் கொண்டது. நாவலுக்கான கட்டமைப்பு உருவாகவில்லை. கதைமாந்தர்கள் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருந்தாலும் கதைநிகழ்வுகளுக்கு சீரான வளர்ச்சிப்போக்கு இல்லை. கதை அன்றைய இதழியல் தேவைக்கு ஏற்ப தேவையில்லாமல் இலங்கைக்கும் சென்று மீள்கிறது. சண்முகசுந்தரமும் மோகனாம்பாளும் கொள்ளும் காதலின் மோதலும் விலகலும் இணைவும் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கின்றன. கதாபாத்திரங்களின் மனமாற்றமும் கதைப்போக்குக்காக உண்டுபண்ணப்பட்டது. இந்நாவல் தமிழின் இலக்கிய விமர்சகர்களால் பொருட்படுத்தப்படவில்லை. ஆனால் காதலை மையச் சரடாகக் கொண்ட இக்கதையில் பத்தொன்பது-இருபதாம் நூற்றாண்டு செவ்வியல் கலைஞர்களின் வாழ்க்கையின் விரிவான சித்திரம் உள்ளது. மரபாகவே இசையிலும் நடனத்திலும் ஈடுபடுபவர்கள். ஆலயங்களைச் சார்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள். 1870-களில் உருவான பஞ்சத்திற்குப்பின் தமிழக ஆலயங்கள் மீண்டும் உயிர்பெறும் சூழலில் அமைந்தது இந்நாவல். இதில் வெல்வெட் துணியின் வரவு, ஒலிப்பெருக்கியின் வரவு என பல நுட்பமான செய்திகள் உள்ளன. இசைக்கலைஞர்களின் மனநிலை, உறவுச்சிக்கல்கள் இயல்பாக பதிவாகியிருக்கின்றன. இந்நாவல் இதற்கு முன்னர் வந்த தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர் நாவலுடன் இணைத்து வாசிக்கத்தக்கது. தமிழில் நாதஸ்வரக் கலைஞரின் வாழ்க்கையைப் பற்றிய முதன்மையான நாவல் தில்லானா மோகனாம்பாள்.

இந்நாவலில் மையக்கதாபாத்திரமான சிக்கல் சண்முகசுந்தரம் நாதஸ்வரமேதை என புகழ்பெற்ற திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் சாயல்கொண்டது என்று சொல்லப்படுவதுண்டு. புகழ்பெற்ற இசையோகியான விளாத்திக்குளம் சுவாமிகளின் சாயல் பரமானந்தப் பண்டாரத்திடம் உண்டு என்றும் கூறப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page