being created

திருவாசகம்

From Tamil Wiki
Revision as of 10:50, 5 April 2022 by Siva Angammal (talk | contribs)

This page is being created by ka. Siva



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


பன்னிரு சைவசமயத் திருமுறைகளில்  எட்டாம் திருமுறையாக உள்ள நூல் திருவாசகம். இந்நூலை இயற்றியவர் மாணிக்கவாசகர் ஆவார்.

ஆசிரியர் குறிப்பு

மாணிக்கவாசகர் மதுரையை அடுத்த திருவாதவூரில் பிறந்தவர். அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தவர். ‘தென்னவன் பிரமராயன்’ என்ற விருது பெற்றவர். இயற்பெயர் வாதவூரர். ஆளுடைய அடிகள், அழுது அடியடைந்த அன்பர் என்றெல்லாம் குறிக்கப்படுபவர்.

பாண்டியனுக்காகக் குதிரைகள் வாங்க நாகப்பட்டினம் துறைமுகத்துக்குச் சென்றார். செல்லும் வழியில் திருப்பெருந்துறையில் சிவனால் ஆட்கொள்ளப்பட்டார். வந்த வேலையை மறந்தார். கொண்டு வந்த பணத்தைச் சிவனுக்குக் கோயில் கட்டும் பணியில் செலவிட்டதால் மன்னனால்  தொல்லைகளை அடைந்தார். மாணிக்கவாசகரின் முன்பத்தைக் கண்ட இறைவன் நரிகளை பரிகளாக மாற்றி மதுரைக்கு கொண்டு வந்ததுடன் வைகையில் வெள்ளம் பெருக வைத்தார். மேலும் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்து மன்னனிடம் பிரம்படி பட்டார். அந்தப் பிரம்படி உலகிலுள்ள அனைத்து உயிர்களின் மீதும் பட்டதால் திகைத்த மன்னனிடம் திருவாதவூராருக்காக தான் வந்ததாக உரைத்தார்.  மன்னன் மாணிக்கவாசகரின் சிறப்பை உணர்ந்து வணங்கினான். மாணிக்கவாசகர் ஒவ்வொரு சிவ தலங்களுக்கும் சென்று வணங்கி பாடல்கள் பாடினார். சிதம்பரத்தில் இவர் இருந்தபோது இவரது பாடல்களை இறைவனே எழுதி கையொப்பம் இட்டதாக இவரது வரலாறு உரைக்கப்படுகிறது.

மாணிக்கவாசகர் இயற்றிய மற்றொரு நூல் திருக்கோவையார்.

நூல் அமைப்பு

திருவாசகத்தில்  38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன. திருவாசகம் எனும் இந்நூலில் கீழ்காணும்  51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன.

1. சிவபுராணம்

இவ்வருள் நூலுக்கு முகவுரையாக அமைந்துள்ளது. இறைவன் ஆன்மாக்களைப் பல பிறவியில் பிறக்கச்செய்து, படிப்படியாகத்

திருவருளுக்கு இலக்கு ஆக்கி, ஆட்கொள்ளுகின்றான் எனக் கூறி இறைவனை வாழ்த்துதல்.

2. கீர்த்தித் திருவகவல்

சிவபெருமானது பல அருட் செயல்களைப் புகழ்ந்து பாடுதல்.

3. திருவண்டப்பகுதி

சிவபெருமான் எங்கும் கலந்துள்ள திருவருட் செயலைப் புகழ்தல்.

4. போற்றித் திருவகவல்

ஆன்மாக்களுக்கு உண்டாகும் பல வகையான அல்லல்களை விளக்கிக் கூறி, அவற்றை மாற்றி வீடு அளிப்பவன் இறைவன்

எனக்கண்டு இடையறாது வணங்குதல்.

5. திருச்சதகம்

இத் திருச்சதகம் பத்து பிரிவுகளை கொண்டுள்ளது. அவை பின் வருமாறு,

  • மெய்யுணர்தல்
  • அறிவிறுத்தல்
  • சுட்டறுத்தல்
  • ஆன்ம சுத்தி
  • கைம்மாறு கொடுத்தல்
  • அநுபோக சுத்தி
  • காருணியத்து இரங்கல்
  • ஆனந்தத்து அழுத்தல்
  • ஆனந்த பரவசம்
  • ஆனந்த தீதம்

6. நீத்தல் விண்ணப்பம்

அடிகளார் தம்மை இறைவன் கைவிடக்கூடாது என்று முறையிடுதல்.

7. திருவெம்பாவை

மார்கழித் திங்களில் நீராடச் செல்லும் கன்னியர்கள் ஒருவரை யொருவர் அழைத்துச்சென்று நீராடும் வகையாக இறைவன்

புகழைப் பாடுதல்.

8. திருவம்மானை

இளம்பெண்கள் உட்கார்ந்து காய்களைத் தூக்கிப்போட்டு கையால் பிடித்து விளையாடும் விளையாட்டு அம்மானை. அப்போது

அவர்கள் பாடுவர். அப்பாடல் அமைப்பில் மாணிக்கவாசகர் பாடியது

9. திருப்பொற்சுண்ணம்

இறைவனுக்காக கலவை பொடி இடிக்கும் மகளிர் அவன் புகழைப் பாடுதல்.

10. திருக்கோத்தும்பி

இறைவன் திருவருளில் மக்கள் ஈடுபடவேண்டும் என்பதைத் தும்பியிடம் கூறுவதுபோல் அமைத்துக் கூறுதல்.

11. திருத்தெள்ளேணம்

விழாக் காலங்களில் மகளிர் ஒன்றாகக் கூடி வட்டமாக நின்று கைகொட்டி ஆடும் போது பாடும் பாடல் வடிவம்

12. திருச்சாழல்

தோழியர் இருவர் ஒருவரை ஒருவர் வினாவி விடை கூறும் விளையாட்டுப் பாடல்

13. திருப்பூவல்லி

பெண்கள் பூப்பறிக்கும்போது பாடும் அமைப்பில் எழுதப்பட்டது.

14. திருவுந்தியார்

மகளிர் உந்திக் குதித்து விளையாடும் ஆட்டத்தில் பாடுவதாக அமைத்து இறைவன் புகழைப் பாடுதல்.

15. திருத்தோள் நோக்கம்

ஒருவர் தோளை ஒருவர் தொட்டுக்கொண்டோ, பார்த்துக்கொண்டோ, விளையாடுவதான மகளிர் விளையாட்டில் பாடுவதாக

அமைத்து இறைவனைப் போற்றுதல்.

16. திருப்பொன்னூசல்

பெண்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடும்போது பாடும் பாடல் வடிவில் அமைத்த பாக்கள்,

17. அன்னைப்பத்து

இறைவன் திருவுருவில் உளம்வைத்த ஒரு பெண் தன்னை மறந்து கூறுவதாக அமைத்துப் பாடுதல்.

18. குயில்பத்து

இறைவனிடம் குயிலைத் தூது அனுப்புதல்.

19. திருத்தசாங்கம்

அரசனது பெயர், ஊர், நாடு, ஆறு, மலை, குதிரை, படை, பறை, மலை, கொடி என்ற பத்து உறுப்புக்களையும் பாடுகிற முறையில்

இறைவன் புகழைப் பாடுதல்.

20. திருப்பள்ளியெழுச்சி

இறைவனைத் துயில் எழுப்புகின்ற முறையில் அவன் புகழைப் பாடுதல்.

21. கோயில் மூத்த திருப்பதிகம்

இறைவன் திருவருளைப் பெறுவதற்குத் துணை செய்யக் கூடிய அடியார் கூட்டத்தில் தன்னை இருத்த வேண்டும் என்று

வேண்டுதல்

22. கோயில் திருப்பதிகம்

இறைவன் திருவருளோடு கலக்குங்கால் உளதாகும் பேரின்பத்தை ஒருவாறு உரைத்தல்.

23. செத்திலாப்பத்து

திருவருளோடு உறையத் தடையாயுள்ள உடற்பற்றையும், உயிர்ப்பற்றையும் நீக்க வேண்டுதல்.

24. அடைக்கலப்பத்து

இறைவன் திருவடியே உண்மையான பற்றுக்கோடு என்பதை உணர்ந்து, அடைக்களம் புகுதல்.

25. ஆசைப்பத்து

அடியார்களையும் இறைவனையும் காண ஆசைப்படுதல்.

26. அதிசயப்பத்து

இறைவன் தனக்கு அருள் செய்ததை எண்ணி வியப்புறுதல்.

27. புணர்ச்சிப்பத்து

ஞானசாரியனாக வந்து தன்னை ஆட்கொண்ட இறைவனோடு கலந்திருக்க வேண்டுதல்.

28. வாழாப்பத்து

இவ் உலகை விட்டுக் கயிலைக்குத் தன்னை அழைத்துக்கொள்ள வேண்டுதல்.

29. அருள்பத்து

உளம் கனிந்து தான் அழைக்கும் போது திருச்செவி சாற்றித் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுதல்.

30. திருக்கழுக்குன்றப் பதிகம்

இறைவனது அருட் கோலத்தைக் கண்டு பரவுதல்.

31. கண்டபத்து

இறைவனது ஆனந்தக் கூத்தை ஞானக்கண்ணுள் பார்த்தல்.

32. பிரார்த்தனைப் பத்து

நிலையான வீட்டின்பத்தை அருள வேண்டுதல்.

33. குழைத்த பத்து

திருவருட் செயலுக்குத் தன்னை ஒப்புவித்து விடுதல்.

34. உயிருண்ணிப்பத்து

தான் என்பது அற்றுத் திருவருளில் கலந்து திளைத்தல்.

35. அச்சப்பத்து

இறைவனிடத்து அன்பும் ஈடுபாடும் இல்லாதவரைக் காண அஞ்சுதல்.

36. திருப்பாண்டிப் பதிகம்

இறைவன் பாண்டிப் பிரானகக் குதிரையின்மேல் வந்து அருளிய கோலத்தைப் பரவுதல்.

37. பிடித்தபத்து

இறைவன் திருவருளை ஒரே நெறியாகத் தான் பற்றிக் கொள்ளுதல்.

38. திருஏசறவு

இறைவன் தம்மை ஆட்கொண்டமையை எண்ணி உளைதல்.

39. திருப்புலம்பல்

இறைவன் திருவடியையே தனக்குப் பற்றுக்கோடாகப் பற்றி அரற்றுதல்.

40. குலாப்பத்து

தில்லையில் கூத்தப்பெருமானைக் கண்ட காட்சியின் பேரின்ப விளைவைப் பேசுதல்.

41. அற்புதப்பத்து

திருவருட் பேற்றுக்குத் தகுதி இல்லாத தனக்குத் திருவருள் கூடியதை வியந்து பாடுதல்.

42. சென்னிப்பத்து

இறைவன் திருவடி தனது தலையில் மிளிர்கின்ற பேரின்பத்தைக் கூறுதல்.

43. திருவார்த்தை

இறைவனுடைய அருட் செய்தியைக் கூறுதல்.

44. எண்ணப்பதிகம்

அடியார் நடுவுள் இருக்கும் பேரின்பத்தை அருள வேண்டுதல்.

45. யாத்திரைப்பத்து

அடியார்களைத் திருவருள் இன்பத்தில் திளைக்க அழைத்தல்.

46. திருப்படையெழுச்சி

பேரின்ப உலகைக் கைப்பற்றுவதற்குத் தொண்டர்களைப் போர்க்கோலம் கொள்ளக் கூறுதல்.

47. திருவெண்பா

திருவருள் பெற்ற நிலையை ஒருவாறு உணர்த்துதல்.

48. பண்டாயநான்மறை

இறைவன் தன்னை ஆட்கொண்டதை உலகு அறியக்கூறுதல்.

49. திருப்படையாட்சி

இறைவன் திருவருட்கு இலக்கு ஆகின், எவ்விதப் பிறவித்துயரும் நம்மை நலியா என்பதும், நாம் பெறுதற்கு அரியன ஒன்றும்

இல்லை என்பதும் கூறுதல்.

50. ஆனந்தமாலை

பேரின்பப் பேற்றுக்குப் பிற்பட்டுத் திகைக்கும் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுதல்.

51. அச்சோப் பதிகம்

தனனை ஏற்றுக் கொண்ட திருவருளின் உயர்வைப் போற்றி வியத்தல்.

இவற்றுள் சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்னும் நான்கும் பெரும் பகுதிகளாக உள்ளன. இவற்றைத் தொடர்ந்து இவற்றைத் தொடர்ந்து திருச்சதகம் 100 பாடல்களையும்  நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களையும் கொண்டுள்ளது. திருவெம்பாவையும் திருவம்மானையும் 20 பாடல்கள் கொண்டுள்ளன. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் ஆக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன.

உள்ளடக்கம்

திருவாசகம், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவற்றைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறை பக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை முறையாகக் கூறுகிறது.

சிறப்பு

திருவாசகம் நூலை   மாணிக்கவாசகர் எழுதி தில்லையில் இறைவனிடம் வைக்க அவரே கையெழுத்தினை இட்டதாகக் கூறுவர்.

"வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே"

என்றும்

"திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்றும் வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் தெரிவித்துள்ளார்.

தெய்வம் (கண்ணன்) மனிதனுக்கு (அர்ச்சுனன்) கூறியது கீதை; மனிதன் (திருவள்ளுவர்) மனிதர்களுக்குக் கூறியது திருக்குறள்;  மனிதன் தெய்வத்திற்கு கூறியது திருவாசகம்; என்றொரு மூதுரையும் தமிழில் உள்ளது.

"பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் சிறப்புடையது. (10-ஆவது திருமுறை). ஆனால், அதைவிட சிறப்புடையதும் சிகரமானதும் திருவாசகமே' - என்பது திருமுருக கிருபானந்த வாரியார் கூற்று.

இசை வடிவில்

தேர்த்தெடுத்த சில திருவாசகப் பாடல்களுக்கு  இசையமைத்து வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர்  இளையராஜா.

உசாத்துணை

தமிழ் இணையக் கல்விக்கழகம் https//www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0012272_திருவாசகம்.pdf

https://youtu.be/fyu61w2wK3Y இளையராஜா இசையமைத்த பாடல்.