first review completed

தாழை மதியவன்

From Tamil Wiki
Revision as of 10:02, 26 March 2023 by Tamizhkalai (talk | contribs)
தாழை மதியவன்
எழுத்தாளர் தாழை மதியவன்

எஸ். முகம்மது அலி (தாழை எஸ். எம். அலீ; தாழை மதியவன்; தாழை; பிறப்பு: அக்டோபர் 25, 1945) தமிழக எழுத்தாளர். இதழாளர், பதிப்பாளர், நாடக ஆசிரியர். தனியார் சரக்குந்து நிறுவனத்தில் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய நூல்களையும், வரலாற்று நூல்களையும், இஸ்லாமியப் பின்னணி கொண்ட நூல்களையும் எழுதினார். திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராகச் செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

எஸ். முகம்மது அலி என்னும் இயற் பெயரை உடைய தாழை மதியவன், அக்டோபர் 25, 1945 அன்று, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள நம்புதாளை என்னும் கிராமத்தில், செய்யது முகமது புகாரி - ஆசியா மரியம் இணையருக்குப் பிறந்தார்.  பூண்டியில் உள்ள செய்யது முகமது கழக உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார்.

தனி வாழ்க்கை

தாழை மதியவன், சென்னையில் தனியார் சரக்குந்து நிறுவனம் ஒன்றில் எழுத்தராக, கணக்குப் பதிவாளராகப் பணியாற்றினார். திண்டிவனத்தில் அரிசி மண்டி வைத்து நடத்தினார். இதழாளராக இயங்கினார். மனைவி: மேரா நாச்சியார். மகன்: சேகு நைனா முகமது. மகள்கள்: ஜாஸ்மின் ரைஹானா, மும்தாஜ், தாஜு நிஷா, சுரையா, பாத்திமா.

தாழை மதியவன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

தாழை மதியவன் டாக்டர் மு.வரதராசன், அண்ணா, மு. கருணாநிதி, காண்டேகர், எம்.ஆர்.எம். அப்துற் றஹீம் ஆகியோரது நூல்களை வாசித்து தனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். கவிதைகள் மீது ஆர்வம் கொண்டு கவிதைகள் எழுதினார். முதல் கவிதை, அரு.கோபாலன் ஆசிரியராக இருந்த ‘சீர்தூக்கி’ நாளிதழில் வெளிவந்தது. தொடர்ந்து முல்லைச்சரம், தமிழ்ப்பணி, குயில் (டாக்டர் கே.எம்.ஏ.வகாப் நடத்திய இதழ்), பிறைக்கொடி, முஸ்லிம் முரசு, மறுமொழி, குவ்வத், புதிய காற்று, சிந்தனைச் சரம், இளைய நிலா, சென்னை நண்பன் போன்ற இதழ்களில் எழுதினார். முதல் சிறுகதை, ‘கண்ணிலே நீரெதற்கு' குயில் இதழில் வெளியானது. முதல் கட்டுரை நூல், ‘பாரதம் பச்சையாகுமா', 1983-ல் வெளியானது. தொடர்ந்து பல கதை, கவிதை, கட்டுரை, குறுநாவல்களை எழுதினார்.

தாழை மதியவன், 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தாழை மதியவனின் நூல்களை ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டத்திற்காகப் பல மாணவர்கள் ஆய்வு செய்து பட்டம் பெற்றனர்.

எழுத்தாளர், பதிப்பாளர் தாழை மதியவன்

இதழியல்

தாழை மதியவன், திண்டிவனத்தில் டாக்டர் கே.எம்.ஏ.வகாப் அவர்கள் நடத்திய ‘குயில்’ இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். ‘சமரசம்' இதழில் பணியாற்றினார். ஐ.எஃப்.டி. (Islamic Foundation Trust) என்னும் இஸ்லாமிய அறக்கட்டளை நிறுவனத்தின் மூலம் வெளிவரும் புத்தகங்களில் மெய்ப்பு ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

பதிப்பு

தாழை மதியவன், தனது படைப்புகளை வெளியிடுவதற்காக தாழையான் பதிப்பகம், மனக்குகை வெளியீட்டகம், தோணித்துறை பதிப்பகம் ஆகிய பதிப்பகங்களைத் தொடங்கி நடத்தினார்.

நாடகம்

தாழை மதியவன், குட்டிச்சுவர், அஸ்தமனத்தின் உதயம், யாத்திரை, பூ விழியில் பூ, தியாக தீபம், மரகதச் சிலை போன்ற நாடகங்களை எழுதினார்.

அரசியல்

தாழை மதியவன், திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராகச் செயல்பட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். திராவிடமுன்னேற்றக் கழகம் நடத்திய எரிசாராய போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

பொறுப்புகள்

தாழை மதியவன், எழுத்தாளர் முன்னேற்றக் கழகத்தின் சென்னைக் கிளையைத் தொடங்கினார். அதன் பொறுப்பாளராகச் செயல்பட்டார். இஸ்லாமிய இலக்கியக் கழக மாநாட்டிலும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழக மாநாடுகளிலும் கலந்துகொண்டு பல்வேறு பணிகளைச் செய்தார்.

தாழை மதியவனுக்கு விருது

விருதுகள்

  • தென்னாற்காடு மாவட்ட தமிழ்க் கவிஞர் மன்றம் வழங்கிய கவிதைச் செல்வர் பட்டம்.
  • முஸ்லிம் முரசு நடத்திய கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு.
  • சீதாக்காதி அறக்கட்டளை நிறுவனம் வழங்கிய இசைப்பாடலுக்கான ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு.
  • இலங்கை மானா மக்கீன் அறக்கட்டளை நிறுவனம் வழங்கிய சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான பாராட்டுப் பத்திரம்.
  • தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமும் நியூ செஞ்சூரி புத்தக நிறுவனமும் இணைந்து வழங்கிய சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு - பூ மழை பொழியும் தொகுப்பு.
  • நெய்வேலி நிலக்கரிச் சுரங்க புத்தகத் திருவிழாவில் சிறந்த எழுத்தாளருக்கான பாராட்டும், பரிசும்.
  • சென்னைப் புத்தக விற்பனையாளர் சங்கம் வழங்கிய பாராட்டு மடல், பரிசு.
  • சீதக்காதி அறக்கட்டளை நிறுவனம் வழங்கிய இலக்கிய விருது.
  • தேவகோட்டை தமிழ் இலக்கியப் பேரவை  அளித்த ‘இலக்கியச் சுடர்’ விருது.
  • தமிழ் மாமணி விருது.
  • வாழ்நாள் சாதனையாளர் விருது.

ஆவணம்

தாழை மதியவனின் வாழ்க்கையை, ‘தாழை மதியவனின் சுவடுகள்' என்ற தலைப்பில், அ.ருக்னுதீன், நா.இம்ரான், வ.ரமீஸ் ரஹ்மான் ஆகியோர் இணைந்து தொகுத்துள்ளனர்.

தாழை மதியவனின் வாழ்க்கை ஆவணப்படமாக எடுக்கப்பட்டுள்ளது [1] .

இலக்கிய இடம்

தாழை மதியவன், பொது வாசிப்புக்குரிய பல சிறுகதை, நாவல்களை எழுதினார். இஸ்லாமிய மக்களின் மனவோட்டம் சார்ந்த உணர்வுகளை மையப்படுத்தி எழுதினார். தென் தமிழ்நாட்டு இஸ்லாமிய மக்களின் வாழ்க்கைப் பண்பாட்டைத் தனது படைப்புகளில் ஆவணப்படுத்தினார். சென்னையின் பழைய பெயர் ‘மதரஸா பட்டினம்’ என்ற தலைப்பில் இவர் ஆய்வு செய்து எழுதியிருக்கும் நூல், சென்னையின் வரலாறு பற்றிய ஒரு மாறுபட்ட பார்வையை முன் வைக்கிறது. இஸ்லாமிய இலக்கியம் சார்ந்து செயல்பட்ட எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவராக தாழை மதியவன் மதிக்கப்படுகிறார்.

தாழை மதியவனின் நூல்கள்

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • கலைஞர் குரல்
  • வானம் பார்க்கும் வட்டத்தில் ஒரு புள்ளியின் புலம்பல்
  • காஷ்மீர் பெண்ணின் கவலைகள்
சிறுகதைத் தொகுப்புகள்
  • துப்பாக்கிகளில் பூக்கும் பூபாளம்
  • அவர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள்
  • டாக்டர் பெரியார்
  • கருணாநிதி கவுண்டர்
  • செங்கிஸ்கான் பேரர்கள்
  • ஒரு வீணையின் விசும்பல்
  • பூ மழை பொழியும்
நாவல்கள்
  • ஜலசந்தி
குறு நாவல்கள்
  • அரண்மனைக்காரத் தெரு
  • தப்புத்தாளங்கள்
  • கடல் குதிரைகள்
கட்டுரைத் தொகுப்புகள்
  • பாரதம் பச்சையாகுமா-?
  • பிரகடனம் செய்யப்படாத போர்கள்
  • பூந்தாழைப் பூங்காற்று
  • தாழம் புதர்
  • கடல் குதிரைகள்
  • வட்டி ஓர் உயிர்க்கொல்லி
  • தஸ்லீமா காற்றுப் போன பலூன்
  • ஏகாதிபத்தியத்தின் எதிரி சதாம் ஹுசைன்
  • மண் மக்கள் மகுடங்கள்
  • இஸ்லாம் கூறும் பண்பாடுகள்
வரலாற்று நூல்கள்
  • கழுகு தேசம்
  • காதியானிகள்
  • முஸ்லிம் மன்னர்கள் ஆண்ட இந்தியா
  • மதரஸாப்பட்டினம்
  • கடாபி கர்ஜிக்கிறார்
  • சிறைப்பறவை
  • மாவீரன் சதாம்
  • குறிஞ்சிப் பூக்கள்
  • அண்ணல் நபி அழகிய வரலாறு
  • நபிகள்நாயகம் வாழ்க்கை வரலாறு
  • மதிநாவில் மாநபிகள்
  • தென்னாட்டு வேங்கை திப்பு சுல்தான்
  • அரண்மனைக்காரத் தெரு

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.