தமிழ் கலைக்களஞ்சியம்

From Tamil Wiki
Revision as of 10:31, 1 May 2022 by Jeyamohan (talk | contribs)

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில், கல்வி அமைச்சராக இருந்த தி.சு.வினாசிலிங்கம் செட்டியார் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தன்னாட்சி உரிமையுடைய ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அந்த அமைப்பின் சார்பில் தமிழில் ‘கலைக்களஞ்சியம்’ பல தொகுதிகளாக வெளியிடத் திட்டம் வகுக்கப்பட்டது. கலைக்களஞ்சியம் தயாரிக்கும் பணிக்கு தூரன் முதன்மை ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்தொன்பது ஆண்டுகள் உழைத்து கலைக்களஞ்சியத்தை உருவாக்கினார்.

பிறப்பு

சென்னையில் நடந்த எழுத்தாளர் மாநாடு ஒன்றில் (1947) தலைமை தாங்கிய பெரியசாமித் தூரன் ஆங்கிலமொழியில் உள்ள Encyclopedia Britanciaவுக்குச் சமமாகத் தமிழில் கலைக்களஞ்சியம் வெளியிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். (அப்போது அவர் பொருட்களஞ்சியம் என்னும் சொல் தொடரையே பயன்படுத்தினார்) தூரன் பேசிய பேச்சைப் பத்திரிகையின் வழி அறிந்த அன்றைய கல்வியமைச்சர் அவினாசிலிங்கம் அவர்கள் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை நிறுவி அதன் வழி கலைக்களஞ்சியத்தை வெளியிட அரசு முன்வரும் என்று அறிவித்தார். தமிழ் வளர்ச்சிக் கழகம் நிறுவப்பட்டபோது கலைக்களஞ்சியம் வெளியிட வேண்டும் என்ற தூரனின் முடிவையும் தமிழ் வளர்ச்சிக் கழக உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர். கலைக்களஞ்சியத்தின் முதன்மை ஆசிரியராக 1948-ல் தூரன் நியமிக்கப்பட்டார்.

பணி

கலைக்களஞ்சியப் பணி ஆரம்பித்து முதல் தொகுதி ஆறு ஆண்டுகள் கழித்து வந்தது. பின் தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு தொகுதி என 9 தொகுதிகள் வந்தது. ஒரு தொகுதியில் 750 பக்கங்கள், பத்து தொகுதிகள்; 1200க்கு மேற்பட்ட அறிஞர்கள் எழுதிய 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 20,000 கலைச்சொற்கள் என அமைந்த தமிழ்க் கலைக்களஞ்சியம் தான் இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியம்.

பொதுக் கலைக்களஞ்சியப் பணி முடிந்ததும் குழந்தைகள் கலைக்களஞ்சியத் தொகுப்பின் பொறுப்பை ஏற்கும்படி அரசு கேட்டுக்கொண்டதற்கேற்ப அதன் முதன்மை ஆசிரியர் ஆனார் தூரன். இந்த வேலை 7 ஆண்டுகள் நடந்தது (1969-1976). ஒரு தொகுதி 100 பக்கங்கள் என 10 தொகுதிகள் வந்தன. பொதுக் கலைக்களஞ்சியம் முழுதும் வந்தபோது (1963) முதலமைச்சர் காமராசர் தலைமையில் தூரனுக்குப் பாராட்டுக் கூட்டம் நடந்தது.

சிக்கல்கள்

பெரும்பாலும் தூரனின் கலைக்களஞ்சியத்தை நீர்த்துப்போன மொழியில் நகலெடுத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். அவற்றின் பெரும்பாலான கட்டுரைகள் கலைக்களஞ்சியம் என்ற தகுதிக்குள் வராதவை.

பயன்கள்

அவரது கலைக்களஞ்சியங்கள் வரத்தொடங்கியபின்னரே தமிழில் பொது அறிவு துறைசார்ந்த பல்லாயிரம் நூல்கள் எழுதப்பட்டன. மருத்துவம் இயற்பியல் போன்ற துறைகளில் கூட அடித்தள மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய நூல்கள் முதல் பலவகையான நூல்கள் வெளிவந்தன. அவற்றை பெரும்பாலும் தமிழாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். அவையெல்லாமே தூரனின் கலைக்களஞ்சியத்தின் மறு பிறப்புகள்.