தமிழச்சி தங்கபாண்டியன்

From Tamil Wiki
Revision as of 19:44, 28 August 2022 by Ramya (talk | contribs) (Created page with "தமிழச்சி தங்கபாண்டியன் (த. சுமதி)(பிறப்பு: ஜூலை 25, 1962) தமிழில் எழுதிவரும் கவிஞர். எழுத்தாளர், பாடலாசிரியர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி. == பிறப்பு, கல்வி == தமிழச்சி தங்கபாண்டியனின் இயற...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழச்சி தங்கபாண்டியன் (த. சுமதி)(பிறப்பு: ஜூலை 25, 1962) தமிழில் எழுதிவரும் கவிஞர். எழுத்தாளர், பாடலாசிரியர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி.

பிறப்பு, கல்வி

தமிழச்சி தங்கபாண்டியனின் இயற்பெயர் சுமதி. தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர், மல்லாங்கிணற்றில் தங்கப்பாண்டியனுக்கு ஜூலை 25, 1962இல் பிறந்தார். தந்தை தமிழகத்தின் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர். இவரின் தம்பி தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் முதல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு.

தமிழச்சி தங்கபாண்டியன் மல்லாங்கிணற்றில் தொடக்கக் கல்வியும், விருதுநகரில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் பயின்றார். மதுரை மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரியில் பயின்று புதுமுக வகுப்பில் தேறினார். மதுரை தியாகராயர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றார். ‘ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை புலம்பெயர் தமிழர்களின் ஆங்கில படைப்பிலக்கிய வெளிப்பாடுகள்’ என்னும் தலைப்பில் (குறிப்பாக, ஆஸ்திரேலிய வாழ் இலங்கைத் தமிழரான, எர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கின்டையர் எனும் நாடக ஆசிரியரது ஆங்கில நாடக ஆக்கங்களை முன்வைத்து) ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஆஸ்திரேலிய இந்திய கவுன்சில் (AIC) எனும் அமைப்பின் விருதான AIC Fellow 2002 எனும் விருதினை பெற்று, ஆஸ்திரேலிய மோனாஸ் (Monash) பல்கலைக்கழகத்தில் தன் கள ஆய்வை முடித்தவர்.

தனிவாழ்க்கை

சென்னை, இராணிமேரிக் கல்லூரியில், ஆங்கிலப் பேராசிரியையாக பனிரெண்டு ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். காவல்துறை அதிகாரி சந்திரசேகரை திருமணம் செய்து கொண்டார். இருமகள்கள்.

அரசியல்

தமிழச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் மகளிரணியில் முக்கிய பதவி வகித்து வருகிறார். 2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். மே 2019 முதல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உள்ளார்.

நாடக வாழ்க்கை

பரதநாட்டியத்தினை முறையாகப் பயின்றவர். ’அரங்கம்’ எனப்படும் மேடை நாடகத் தளத்தில் ஆர்வமும், பங்கேற்பும் கொண்டவர். தமிழ் நாடக அரங்கின் இயக்குநர், நாடக நெறியாளர் பிரசன்னா ராமஸ்வாமியின் பாரதியார் கவிதைகள் குறித்த நாடகத்தில் கலாஷேத்ராவிலும், சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் நடித்தார். அவரது இயக்கத்தில் சேரன், சுகுமாறன் ஆகியோரது கவிதைகள் குறித்த நிகழ்த்துக்கலை நிகழ்விலும் பங்கேற்றார். சென்னை, சேலத்தில் நாடக நெறியாளரான அ.மங்கையின் இயக்கத்தில், இன்குலாப்பின் ’குறிஞ்சிப் பாட்டு’ நாடகத்தில் நடித்தார்.'வெளி' ரங்கராஜன் அவர்களுடைய நாடகவெளி சார்பாக சென்னை அலையன்ஸ் ப்ராங்கை அரங்கில் கு.ப. ராஜகோபாலன்-ன் அகலிகை நாடகத்தில் அகலிகையாக நடித்தார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் அரங்கேற்றப்பட்ட கு. அழகிரிசாமியின் வஞ்சமகள் நாடகத்தில் சூர்ப்பனகையாக நடித்தார். ’இன்னொரு ஏதோ’ நவீன நாடகத்தை, கனடா வாழ் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சிறீசுவுடன் அரங்கேற்றினார். ’தியேட்டர் லேப்’ நாடகக் குழுவினருடன் இணைந்து சென்னை, அலையன்ஸ் ப்ராங்கை அரங்கில் ’மகாத்மா காந்தியின் கடைசி ஐந்து விநாடிகள்’ மொழிபெயர்ப்பு நாடகத்தில் (தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி) சி.ஜெயராவின் இயக்கத்தில் நடித்தார். தமிழச்சி தங்கபாண்டியனின் நூல் வெளியீட்டு நிகழ்வுகளின் துவக்க நிகழ்வாக அவரது கவிதைகளை நாடக வடிவில் கருணா பிரசாத்தின் நெறியாள்கையில் மூன்றாம் அரங்கு குழுவினர் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர்.

அமைப்புச் செயல்பாடுகள்

’களம் புதிது’ என்ற இலக்கிய குழுவை விருத்தாசலம், திருமுதுகுன்றத்தை மையமாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழச்சி தங்கபாண்டியன் முதல் படைப்பு குங்குமம் இதழிலில் வெளிவந்த தந்தை தங்கபாண்டியன் இறப்பு பற்றிய கையறுநிலைப் பாடல். முதல் கவிதைத் தொகுப்பு கரிசல் மண் மக்களது வாழ்க்கையினைப் பதிவு செய்த ’எஞ்சோட்டுப் பெண்’ மித்ர பதிப்பகம் வெளியீடாக 2004இல் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகளை சிறு பத்திரிக்கைகளிலும், வெகுஜனப் பத்திரிக்கைகளிலும் எழுதி வருகிறார். இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை த. சுமதி என்ற பெயரில் எழுதுகிறார். தமிழச்சி தங்கபாண்டியனின் சிறுகதைகள் ஆனந்த விகடன், அவள் விகடனில் வெளிவந்தன. பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்த இவரது நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு பேச்சரவம் கேட்டிலையோ 2009இல் வெளியானது. சிறு பத்திரிக்கைகளில் வெளியான இவரது கவிதைகளின் தொகுப்பு ’மஞ்சணத்தி’ 2009இல் வெளிவந்தது. அன்னை முத்தமிழ் பதிப்பகம் சார்பில், 2010இல் நவீனத்துவவாதி கம்பன் புத்தகம் வெளிவந்தது.

மொழிபெயர்ப்பு

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களது சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, சென்னைப் பல்கலைக்கழகத்திலும், பன்னாட்டு தேசிய கருத்தரங்கங்களிலும் அவை குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தார்.

தொகுப்புகள்

தமிழச்சி தங்கபாண்டியன் தன்னுடைய படைப்புகளைப் பற்றி பிறர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'காலமும் கவிதையும் - தமிழச்சியின் படைப்புலகம்’ என்னும் தலைப்பில் நூலாக 2010இல் வெளியிட்டார். தமிழச்சி தங்கபாண்டியனுக்கு பிறர் எழுதிய கடிதங்களைத் தொகுத்து காற்று 'கொணர்ந்த கடிதங்கள்' தொகுப்பை 2010இல் வெளியிட்டார்.

பாடலாசிரியர்

பிசாசு என்ற திரைப்படத்தில் 'போகும் பாதை தூரமில்லை' என்ற பாடலை எழுதியுள்ளார்.

படைப்பு பற்றிய ஆய்வுகள்

இளமுனைவர் பட்ட ஆய்வுகள்
  • தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண் - ஓர் ஆய்வு: அழகப்பா பல்கலைக்கழகம் (2006)
  • தமிழச்சி கவிதைகளில் உள்ளடக்கமும் உருவமும் - அழகப்பா பல்கலைக்கழகம் (2006)
  • தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண் கவிதைகளில் பன்முகத்தன்மை - பச்சையப்பன் கல்லூரி (2010)
  • தமிழச்சி தங்கப்பாண்டியன் கவிதைகளில் பன்முகப் பார்வை - மதுரைக் கல்லூரி (தன்னாட்சி - 2012)
  • பன்முகப்பார்வையில் தமிழச்சியின் வனப்பேச்சி - பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி - 2013),
  • தமிழச்சியின் மண்வாசத்தில் மருத்துவக் குறிப்புகளும் மக்கள் உறவுகளும் - பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி - 2014)
முனைவர் பட்ட ஆய்வேடு
  • ‘தமிழச்சியின் படைப்புகளில் பெண்ணியச் சிந்தனைகள்’ தலைப்பில் இவரது படைப்புகள் குறித்து கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் (2014) முனைவர் பட்ட ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
  • தமிழச்சியின் கவிதைகள் நோக்கும் போக்கும் என்னும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (2015) முனைவர் பட்டத்திற்காக ஆய்வேடு அளிக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

  • முதல் தொகுப்பான எஞ்சோட்டுப் பெண் கவிதை நூலிற்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது 2004, மகாகவி பாரதியார் அறக்கட்டளையின் ’மகாகவி பாரதியார் விருது’ 2005இலும் அளிக்கப்பட்டது.
  • வனப்பேச்சி கவிதைத் தொகுப்பிற்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஏலாதி இலக்கிய விருது 2008இலும், திருப்பூர் தமிழ்ச்சங்க விருது 2009இலும் அளிக்கப்பட்டது.
  • தமிழ்நாடு அரசு, 2009ஆம் ஆண்டிற்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது.
  • 2010ம் ஆண்டிற்கான சிறந்த கவி ஆளுமை விருது இவருக்கு களம் புதிது இலக்கியக் குழு சார்பாக வழங்கப்பட்டது.
  • விஸ்டம் பதிப்பகத்தாரின் சிறந்த இளவயது நாடகக் கலைஞர் விருது, நிகழ்த்துதல் கலைக்காக இவருக்கு வழங்கப்பட்டது.
  • கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளையின் 2013ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிஞர் விருது வழங்கப்பட்டது.
  • பாரதியார் சங்கத்தின் 2015ஆண்டிற்கான ’பாரதி பணிச் செல்வர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கலகம் கலை இலக்கியத் தமிழ்த் தேசியத்தடம் 2015 ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • MADRAS DEVELOPMENT SOCIETY (Chennai) ஏப்ரல் 2017 இல் இவருக்கு CROWN JEWEL OF SOCIAL ACTIVIST (சமூக ஆர்வலர் மாமணி) எனும் விருதினை வழங்கியது.
  • கவிமுகில் அறக்கட்டளை கவிஞாயிறு தாராபாரதி விருதினை 2017இல் வழங்கியது.
  • 2017 இல் கம்பன் கழகம் சென்னை, நீதியரசர் மு.மு.இஸ்மாயில் நினைவுப் பரிசு வழங்கியது.
  • SPARRC - IISM (Indian Institute of Sports Medicine) பிப்ரவரி - 2018 இல் இவருக்கு PRIDE OF INDIA எனும் விருதினை His Excellency ESL. Narasimhan, Hon. Governor Telangana & Andhra Pradesh மூலமாக வழங்கியது.
பாடத்திட்டத்தில்

எஞ்சோட்டுப் பெண் நூலின் சில கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, நந்தனம் அரசு கலைக்கல்லூரி, லயோலா கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி மற்றும் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் தமிழ் பட்டப் படிப்பிற்கான பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ’எஞ்சோட்டுப் பெண்’ முழுக் கவிதைத் தொகுப்பு, பெரியார் பல்கலைக் கழகம்(சேலம்), முதுகலை தமிழ் இலக்கியப் பிரிவு(2017 - 2020) பாடத்திட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. ’வனப்பேச்சி’ முழுக் கவிதைத் தொகுப்பும், நிர்மலா மகளிர் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - இளங்கலை முதலாமாண்டு தமிழ் இலக்கிய மாணவிகளுக்கான பாடத்திட்டத்திலும் (2018) சேர்க்கப்பட்டுள்ளது.

நூல்கள்

கவிதைகள் தொகுப்புகள்
  • எஞ்சோட்டுப் பெண் (2004)
  • வனப்பேச்சி (2007)
  • மஞ்சணத்தி (2009)
  • அருகன் (2011)
  • அவளுக்கு வெயில் என்று பெயர் (2015)
கட்டுரை தொகுப்புகள்
  • பாம்படம் (2010)
  • சொல் தொடும் தூரம் (2010)
  • மயிலறகு மனசு (2012)
  • மண்வாசம் (2013)
  • நவீனத்துவவாதி கம்பன் (2010)
  • உறவுகள் - எஸ்.பொ. (2004)
  • பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை (2015)
  • சொட்டாங்கல் (2018)
ஆராய்ச்சி தொகுப்புகள்
  • நிழல் வெளி (2018)
  • சிறுகதை நூல்
  • முட்டு வீடு (2019)
ஆங்கில நூல்கள்
  • Island to Island (The Voice of Sri Lankan Australian Playwright-Ernest Thalayasingham Macintyre) (2013)
  • Internal Colloquies, translated by C.T.Indra of selected poems from Vanapechi by Dr.Thamizhachi Thangapandian (2019)
விமர்சன நூல்கள்
  • காலமும் கவிதையும் - தமிழச்சியின் படைப்புலகம் (2010)
  • காற்று கொணர்ந்த கடிதங்கள் (2010)
நேர்காணல் தொகுப்பு
  • பேச்சரவம் கேட்டிலையோ (2009)

உசாத்துணை

இணைப்புகள்

  • தமிழச்சி தங்கபாண்டியன்: வலைதளம்