டி.கே.சிதம்பரநாத முதலியார்

From Tamil Wiki
Revision as of 09:07, 29 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "டி.கே.சிதம்பரநாத முதலியார் ( 11 செப்டம்பர் 1881 - 16 பிப்ரவரி 1954) டிகேசி, ரசிகமணி. தமிழறிஞர், இலக்கிய விமர்சகர், சொற்பொழிவாளர். தமிழில் மரபிலக்கிய ரசனையில் புதிய பார்வையை கொண்டுவந்தவர்....")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

டி.கே.சிதம்பரநாத முதலியார் ( 11 செப்டம்பர் 1881 - 16 பிப்ரவரி 1954) டிகேசி, ரசிகமணி. தமிழறிஞர், இலக்கிய விமர்சகர், சொற்பொழிவாளர். தமிழில் மரபிலக்கிய ரசனையில் புதிய பார்வையை கொண்டுவந்தவர். ரசனை வாசிப்பை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்தவர். நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்துக்கும் தொடர்பை உருவாக்க முயன்றவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

தீத்தாரப்ப முதலியார் கிளங்காடு சிதம்பரநாதன் என்ற பெயரின் ஆங்கில முதலெழுத்துக்களை கொண்டு டி.கே.சி என்று இவர் தமிழ்ச் சூழலில் குறிப்பிடப்படுகிறார். திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தீத்தாரப்ப முதலியார் - தாய் மீனாம்பாள் இணையருக்கு 11 செப்டெம்பர் 1881 ல் (ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணஜெயந்தி அன்று) ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார். ஆரம்பக்கல்வி தென்காசியிலும், உயர்கல்வி திருச்சியிலும், பட்டப்படிப்பு (B.A) சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும், சட்டப்படிப்பு (B.L) திருவனந்தபுரத்திலும் முடித்தார்.

தனிவாழ்க்கை

டி.கே.சி 1908ஆம் வருடத்தில் தனது மாமாவின் மகளான பிச்சம்மாளை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 1909ஆம் வருடத்தில் தீபன் என்ற தீத்தாரப்பன் பிறந்தார். தன் தாய்மாமன் ஊரான ஸ்ரீவில்லிப்புத்தூரில் சிறிது காலம் வாழ்ந்த டி.கே.சி பின்னர் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் வழக்கறிஞர் பணி புரிந்தார்.மலேரியா காய்ச்சல் வந்தமையால் தொழிலை விட்டுவிட்டார். இக்காலகட்டத்தில்தான் முழுநேர இலக்கிய ஆய்வில் ஈடுபட்டார். தன் இல்லத்தில் வட்டத்தொட்டி என்னும் இலக்கியச் சந்திப்பு நிகழ்வை தொடங்கினார். சி.ராஜகோபாலாச்சாரியார், கல்கி போன்றவர்களுக்கு அணுக்கமானவராக இருந்தார்.

டி.கே.சி 1928 முதல்1930 வரை சட்டமேலவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1930 முதல்1935 வரை இந்து அறநிலையத்துறை ஆணையர் பணியில் இருந்தார். 1941 ஆண்டு தன் மகன் தீபன் இறந்த பின்னர் குற்றாலத்தில் குடும்ப இல்லத்தில் தன் மகனின் பிள்ளைகளுடன் வாழ்ந்தார். குற்றாலம் அவருடைய இலக்கியச் சந்திப்பு மையமாக அமைந்தது.

இலக்கியவாழ்க்கை

டி.கே.சிதம்பரநாத முதலியார் முதன்மையாக இலக்கிய வாசகர். கம்பராமாயணம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களை ரசிப்பதும் அவற்றைப் பற்றி உரையாடுவதுமே அவருடைய வாழ்க்கையாக இருந்தது. இலக்கிய உரையாடலுக்கான நண்பர்க்குழாம் அவருக்கு எப்போதும் இருந்தது. மிகக்குறைவாகவே அவர் தன்னுடைய ரசனையை பதிவுசெய்திருக்கிறார். அவையும் ரசனைக்குறிப்புகள் மட்டுமே. இலக்கிய விமர்சனத்திற்குரிய ஒப்பீட்டுப்பார்வை, ஆய்வுப்பார்வை, தொகுப்புப்பார்வை கொண்டவை அல்ல அவருடைய எழுத்துக்கள்.

வட்டத்தொட்டி

1924 முதல் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் குடியிருந்த காலகட்டத்தில் டி.கே.சி தன் வீட்டில் இலக்கியசங்கம் என்னும் அமைப்பை தொடங்கினார். ஆனால் அது அவர் இல்லத்தின் நடுமுற்றத்தில் நிகழ்ந்தமையால் பேச்சுவாக்கில் வட்டத்தொட்டி என்று அழைக்கப்பட்டு அவ்வாறே நீடித்தது. திருநெல்வேலியில் அன்று வாழ்ந்த இலக்கிய ஆர்வலர்களும், சி.ராஜகோபாலாச்சாரியார், கல்கி போன்ற இலக்கியவாதிகளும் அங்கே வந்தனர். அங்கே இலக்கிய ரசனைவிவாதம் நடைபெற்றது.

கம்பராமாயண ஆய்வு

டி.கே.சி தமிழில் முதன்மையான படைப்பாக கம்பராமாயணத்தையே கருதினார். தொடர்ந்து அதில் ரசனை ஆய்வு செய்துவந்தார். திருநெல்வேலி அறிஞர்களால் தொகுக்கப்பட்ட மர்ரே ராஜம் நிறுவனத்தின் கம்பராமாயண பதிப்பில் பங்கெடுத்தார். பின்னர் கம்பராமாயணத்தில் இடைச்செருகல்கள் என சில பாடல்களை வகுத்து,அவற்றை நீக்கி, புதிய கம்பராமாயணப் பதிப்பை வெளியிட்டார். கவிதைச்சுவை அற்றவை என அவர் எண்ணிய பாடல்கள் பெரும்பாலானவற்றை கம்பர் எழுதியவை அல்ல என அவர் எண்ணினார். ஆய்வுக்குரிய முறைமையை முன்வைக்காமல் வெறுமே தனிப்பட்ட ரசனையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அந்த தெரிவு செய்யப்பட்டமையால் அவருடைய அந்த திருத்தப் பணி கம்பராமாயண அறிஞர்களிடம் எதிர்ப்பைப் பெற்றது

கலைச்சொல்லாக்கம்

டி.கே.சி எஸ். வையாபுரிப் பிள்ளை ஆசிரியராகப் பணியாற்றிய தமிழ் பேரகராதி திட்டம், பெரியசாமி தூரன் ஆசிரியராக இருந்த தமிழ் கலைக்களஞ்சியத் திட்டம், மு. அருணாசலம் உருவாக்கிய தமிழிலக்கிய வரலாறு ஆகிய பெரும்பணிகளில் உறுதுணையாக இருந்தார். ஆங்கில, சம்ஸ்கிருதச் சொற்களுக்கு மாற்றாகத் தமிழ்ச் சொற்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். Radio என்ற சொல்லுக்கு வானொலி, Culture என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கலாச்சாரம் பின்னர் பண்பாடு போன்ற சொற்களை அவர் உருவாக்கினார்.

இதழியல்

டி.கே.சி கலைமகள் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார். வசந்தம் என்கிற மாதஇதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். கல்கி இதழுடனும் தொடர்பில் இருந்தார். கல்கியில் வெளிவந்த கோயில்கள் பற்றிய கட்டுரைகளையும், மர்புக்கவிதைகளையும் செம்மை செய்து கொடுத்தார்

மரபுகலை

மரபுக்கலைகளில் சிற்பவியலில் டி.கே.சி ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் டி.கெ.சியின் மாணவர். அவருடைய தூண்டுதலால்தான் தமிழகக் கலைக்கோயில்கள் பற்றிய கட்டுரைகளை எழுதினார்.தென்காசி கோயிலைக் கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னன் எழுதிய கல்வெட்டினை ஆய்வுசெய்து வெளியிட்டார். தென்காசி கோயில் மகா மண்டபத்தில் பத்துத் தூண்களில் வடித்துள்ள சிற்பங்களை படமெடுத்து கல்கி தீபாவளி மலரின் வெளிவரச் செய்தவர்.குற்றாலத்தில் கிணற்றுக்குள் கிடந்த பெரிய சிலைகளை மீட்டு, குற்றாலத்தில் உள்ள சித்திரசபை மண்டபத்தில் நிறுவினார்.

தமிழிசை இயக்கம்

டி.கே.சி தமிழிசை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். கவிதைச்சுவையும் இசைச்சுவையும் தாய்மொழியில் மட்டுமே ரசிக்கப்பட முடியும் என தொடர்ந்து வாதிட்டார். டி.கே.சியின் மாணவர்களில் மீ.ப.சோமு, ,மு. அருணாசலம் ஆகியோர் தமிழிசையில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார்கள். டி.கே.சியின் முயற்சியில் 1941ம் ஆண்டு சென்னையில் தமிழிசை மன்றம் தொடங்கப்பட்டது.

அமைப்புப்பணிகள்

தமிழில் முக்கியமான இலக்கிய இயக்கச் செயல்பாடுகள் பல டி.கே.சியின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டவை. எட்டையபுரத்தில் பாரதியாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி அவற்றில் முக்கியமானது

மறைவு

டி.கே.சிதம்பரநாத முதலியார் 16 பிப்ரவரி 1954ல் மறைந்தார். அவருடைய சமாதி குற்றாலம் பழைய அருவி சாலையில் அமைந்துள்ளது.

நூல்கள்

எழுதியவை
  • அற்புத ரஸம்
  • இதய ஒலி
  • கம்பர் யார்?
பதிப்பித்தவை
  • கம்பர் தரும் ராமாயணம் - பாகம் 1-3
  • முத்தொள்ளாயிரம்
  • தமிழிசைப் பாட்டுக்கள்
  • தமிழ்க் களஞ்சியம்
கடித இலக்கியம்
  • ரசிகமணி கடிதங்கள் பாகம் 1 -3

உசாத்துணைeditedit source

  • தமிழ்ப் புலவர் வரிசை எட்டாம் புத்தகம்,சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,1955
  • ரசிகமணி டி.கே.சி பற்றிய இணையதளம்
  • ரசிகமணி டி.கே.சி புகைப்படத் தொகுப்பு