ஜே.ஜே. சில குறிப்புகள்

From Tamil Wiki
Revision as of 10:57, 11 October 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஜே.ஜே.சிலகுறிப்புகள் (1982) சுந்தர ராமசாமி எழுதிய இரண்டாவது நாவல். இந்நாவல் ஜே.ஜே. என்னும் மலையாள எழுத்தாளனின் வாழ்க்கையையும், அவன் வாழ்ந்த கேரளப்பண்பாட்டுச் சூழலையும் சித்தரிப்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜே.ஜே.சிலகுறிப்புகள் (1982) சுந்தர ராமசாமி எழுதிய இரண்டாவது நாவல். இந்நாவல் ஜே.ஜே. என்னும் மலையாள எழுத்தாளனின் வாழ்க்கையையும், அவன் வாழ்ந்த கேரளப்பண்பாட்டுச் சூழலையும் சித்தரிப்பதுபோன்ற கற்பனை கொண்டது. பகடியும் அங்கதமும் கொண்டது. சீரான கதை வடிவம் அற்றது.

எழுத்து, வெளியீடு

சுந்தர ராமசாமி இந்நாவலை 1982 ல் எழுதினார். க்ரியா பதிப்பகம் இதை வெளியிட்டது

பின்னணி

சுந்தர ராமசாமி மலையாள சிந்தனையாளர் எம்.கோவிந்தன் மற்றும் அவர் நண்பர் சி.ஜே.தாமஸ் ஆகியோருக்கு அணுக்கமானவர். அவர்கள் இருவரும் பங்குகொண்ட இலக்கியமாநாடு ஒன்று எம்.கே.கே.நாயர் மற்றும் எம்.கோவிந்தன் ஒருங்கிணைப்பில் கொச்சி ஃபாக்ட் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றபோது அவர்களை சுந்தர ராமசாமி சந்தித்தார். அந்நினைவுகள் சி.சு.செல்லப்பா பற்றிய நினைவோடை நூலில் உள்ளன. அவ்வனுபவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட நாவல் இது.

கதைச்சுருக்கம்

மரபான கதையமைப்பு இந்நாவலில் இல்லை. சுந்தர ராமசாமியின் சாயல்கொண்ட பாலு என்னும் கதாபாத்திரத்தின் இளமைப்பருவமும், தேடலும் சொல்லப்படுகிறது. பாலு ஜே.ஜே என சுருக்கமாக அழைக்கப்படும் ஜோசப் ஜேம்ஸை ஓர் இலக்கியவிழாவில் சந்திக்கிறான். மானசீகமாக அவரை பின் தொடர்கிறான். அவரைப்பற்றி ஒரு நூல் எழுத நினைக்கிறான். அவர் எழுதிய நாட்குறிப்புகள் மற்றும் அவரைப்பற்றிய நினைவுகளைச் சேகரிக்கிறான். அவையே இந்நாவல். இது ஜே.ஜே. என்னும் எழுத்தாளனின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகளின் ஒழுங்கற்ற தொகுப்பு என்னும் அமைப்பு கொண்டது.

இலக்கிய இடம்

ஜே.ஜே.சில குறிப்புகள் நகுலன் எழுதிய நினைவுப்பாதை நாவலின் வழிவந்த படைப்பு. ஆனால் நகுலனின் நாவல் சிலபகுதிகளிலேயே படைப்புத்தன்மை வெளிப்படுவது. ஜே.ஜே. சில குறிப்புகள் அதன் பகடியும் எள்ளலும் கலந்த நடைக்காகவும், மொழியில் வெளிப்பட்ட நவீன கவித்துவத்திற்காகவும் மிகப்பெரிய அளவில் வாசிக்கப்பட்டது. குமுதம் போன்ற இதழ்களில் அந்நாவலைப் பற்றிய குறிப்புகள் வெளியானமையால் தமிழ்ச்சிற்றிதழ்ச் சூழலுக்கு வெளியேயும் வாசிக்கப்பட்டது. அவ்வகையில் தமிழில் புகழ்பெற்ற முதல் வடிவச்சோதனை நாவல் இதுவே. வடிவரீதியாக நவீனத்துவத்தின் உச்சமாகவும், அதனூடாக பின் நவீனத்துவம் உருவாக வழியமைத்ததாகவும் இந்நாவல் மதிப்பிடப்படுகிறது.

ஜே.ஜே. சில குறிப்புகள் ஓர் எழுத்தாளனின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பாவனையில் அடிப்படையான இருத்தலியல் வினாக்களை உருவாக்கிக் கொள்கிறது. அறிவியக்கம், அரசியல் செயல்பாடு ஆகியவற்றினூடாக மனிதன் உருவாக்கிக்கொள்ளும் ஒட்டுமொத்த பயன் என்ன என உசாவுகிறது. அரவிந்தாக்ஷ மேனன், சம்பத் , ஜே.ஜே என வெவ்வேறு ஆளுமைகளின் வழியாக அதன் மாறுபட்ட சாத்தியங்களை முன்வைக்கிறது.தமிழில் இருத்தலியல் பேசப்பட்ட நாவல்களிலும் ஜே.ஜே. சில குறிப்புகள் முக்கியமானது.

உசாத்துணை