செ. சீனி நைனா முகம்மது
செ. சீனி நைனா முகம்மது மலேசியாவில் குறிப்பிடத்தக்க மரபுக்கவிஞர், தமிழறிஞர் ஆவார். 'உங்கள்குரல்' எனும் இதழின் ஆசிரியர். இவர், இறையருட்கவிஞர், நல்லார்க்கினியர், தொல்காப்பிய ஞாயிறு போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டார். மரபிலக்கியத்தில் முதன்மையான பங்கினையாற்றியவர்.
பிறப்பு, கல்வி
செ. சீனி நைனா முகம்மது செப்டம்பர் 11, 1947 அன்று, தமிழ்நாட்டில் கீழாயுர் இளையான்குடி சிவகங்கை மாவட்டத்தில் செய்யது ஆலம்-இபுறாம் பீ தம்பத்தியனருக்கு மூத்த பிள்ளையாகப் பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் அறுவர். தமிழ்நாட்டில் இளையான்குடி இடைநிலைப்பள்ளியில் படிவம் 3 வரை பயின்று பிறகு மலேசியாவில் படிவம் 5 வரை கல்வியைத் தொடர்ந்தார். 1966ஆம் ஆண்டு கெம்பிரிட்ஜ்(Cambridge) பள்ளி இறுதி சான்றிதழைப் பெற்றார். தமிழகத்தில் ஜமால் முஹம்மது கல்லூரியில் புகுமுக வகுப்பில் 1967ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரை இளங்கலை படிப்பில் இணைந்து முடிவு பெறாத நிலையில் மலேசியாவிற்குத் திரும்பினார்.
தனிவாழ்க்கை
பள்ளி பருவம் முடித்தவுடன் இவர் கிள்ளானில் உள்ள கப்பல் நிறுவணத்தில் ஊழியராகப் பணிபுரிந்தார். பிறகு, அலோர் ஸ்டாரில் பள்ளிகளுக்கு அறிவியல் பொருட்களை விணியோகிக்கும் நிறுவணத்தில் பணியாற்றினார். பின்னர் பினாங்கில் மளிகை கடை ஒன்றை நடத்தினார். இவர் நவகற்களை விற்கும் விற்பனையாளராகவும் இருந்தார். இவரின் மனைவியின் பெயர் இரகிமா.
1994-ஆம் ஆண்டு மே மாதம் ‘உங்கள்குரல்’ கணினி அச்சு நிறுவணத்தைத் தொடங்கினார். 1997-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘உங்கள்குரல்’ இதழாசிரியராகப் பொறுப்பேற்று, முதல் ‘உங்கள்குரல்’ இதழை வெளியிட்டார். இவர் ஆசிரியர்களுக்கு இலக்கண பயிலரங்குகளும் கவிதைப் பட்டறைகளும் நடத்தியுள்ளார். வானொலி, மேடைக் கவியரங்கங்களிலும் பாடியுள்ளார். இவர் ஆகஸ்டு 7, 2014 அன்று காலமானார்.
இலக்கிய வாழ்க்கை
செ. சீனி நைனா முகம்மது தமிழ் இலக்கணம், மரபிலக்கியம் மீது ஆர்வம் காட்டியவர். ‘உங்கள்குரல்’ மாத இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றி தமிழ் இலக்கண கட்டுரைகளையும் இலக்கிய படைப்புகளையும் வெளியிட்டார். இவர் மரபிலக்கியங்கள் மீது நாட்டம் கொண்டிருந்தாலும், இவர் நவீன எழுத்தாளரான ஜெயகாந்தனின் வாசகராக இருந்தார். மரபு கவிதை எழுதுவதில் சிறந்து விளங்கினார். 1958ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை செ.சீனி நைனா முகம்மது எழுதிய 200க்கும் மேற்பட்ட மரபு கவிதைகள் ‘தேன்கூடு’ எனும் கவிதைத்தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது.
தமிழ் இலக்கணத்தில் இவர் தீவிரமான தேடலைக் கொண்டிருந்தார். நூற்பாக்களை நேரடியாக ஆராயத் தொடங்கி புணர்ச்சி விதிகளை எளிமையான முறையில் முன்வைத்தார். கோவை செம்மொழி மாநாட்டில் தமிழ்ச் சொற்புணர்ச்சி கோட்பாடுகளும் புதிய விதிகளும் எனக் கட்டுரையைப் படைத்தார். நல்ல தமிழ் இலக்கணம், புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள், தொல்காப்பியக் கடலில் ஒரு துளி போன்ற நூல்கள் வழி செ. சீனி நைனா முகம்மது தமிழ் இலக்கணத்தை எளிய முறையில் படைத்துள்ளார். இவர் ஆசிரியர்களுக்கு இலக்கண பயிலரங்குகளும் கவிதைப் பட்டறைகளும் நடத்தியுள்ளார்.
செ. சீனி நைனா முகம்மது இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தவுடன் தமிழின் செம்மொழித் தகுதி பற்றி நாற்பது உலக அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய செம்மொழிச் சிறப்பு மலரை முதன் முதலாக வெளியிட்டார். 'கவிதை பூங்கொத்து' என இவர் வெளியிட்ட 25 கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு மலேசியாவில் பள்ளி இறுதி நிலை அரசுத் தேர்வுக்குரிய தமிழ் இலக்கியப் பாட நூலாக இருந்தது.
செ. சீனி நைனா முகம்மது எழுதிய ‘நிலைபெறநீ வாழியவே’ எனும் கவிதை, மலேசிய தமிழ் வாழ்த்தாக நாடெங்கும் இசைக்கப்பட்டு வருகின்றது. மேலும் இவர் வானொலி, மேடைக் கவியரங்கங்களில் பாடியுள்ளார்.
பொது வாழ்க்கை
1997ஆம் ஆண்டு நவம்பர் தொடங்கி 2014ஆம் ஆண்டு வரை ‘உங்கள்குரல்’ மாத இதழில் இதழாசிரியராகச் செயல்பட்டார். ‘நம்குரல்’ என்ற இஸ்லாமிய இதழுக்கும் இதழாசிரியராகப் பணியாற்றியதோடு இஸ்லாமிய மத படைப்புகளையும் புனைந்துள்ளார். மேலும் வானொலியில் 'குர் ஆன்' குறித்த உரைகளையும் நிகழ்த்தியுள்ளார். 80களில் மலேசிய நண்பன் நாளிதழுக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
செ. சீனி நைனா முகம்மது 1970ஆம் ஆண்டு முதல் 1974ஆம் ஆண்டு வரை தமிழ் இலக்கிய கழகத்தின் துணைத்தலைவராகச் செயலாற்றினார். 1978ஆம் ஆண்டு பெர்மின் தேசிய நிறுவணத்தின் செயலாளராகவும் 1982ஆம் ஆண்டு அந்நிறுவணத்தின் உதவி தலைவராகவும் பொறுப்பேற்றார். 2011ஆம் ஆண்டு மலேசியாவில் நடத்தப்பட்ட உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் இலக்கிய பகுதியில் பொறுப்பாளராகச் செயல்பட்டு பங்காற்றினார். 2007ஆம் ஆண்டு தொடங்கி ஈப்போ குறிஞ்சித்திட்டின் ஆலோசகராகவும் செயல்பட்டார்.
இலக்கிய இடம்
மரபுக் கவிதைகளையும் யாப்பிலக்கணத்தையும் இளைஞர்களிடம் கொண்டு செல்ல பங்காற்றியவர். அதே சமயம் ஆசிரியர்கள் மத்தியில் இலக்கணத்தை எளிமையாக கற்பிக்கும் திறனையும் தமது பட்டறைகள் மூலம் கடத்தியவர்.
விருதுகள், பரிசுகள்
- தேன்கூடு கவிதை தொகுப்பு நூல் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசை வென்றது.
- மலேசிய இந்திய காங்கிரசு (ம. இ. கா) வைரவிழாவில் தமிழ்மொழி இலக்கியப் பணிக்காக தங்கப் பத்தக்கம் பெற்றார்.
- 2007ஆம் ஆண்டில் தமிழறிஞர் முனைவர் ஒளவை நடராசன் அவர்களால் இறையருட்கவிஞர் எனும் விருதைப் பெற்றார்.
- 2013ஆம் ஆண்டில் அறிஞர் சிலம்பொலி செல்லப்பனாரால் ‘தொல்காப்பிய ஞாயிறு’ எனும் விருதைப் பெற்றார்
- 2014ஆம் ஆண்டு கும்பகோணம் நகரில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் ‘இலக்கியச் சுடர்’ விருதும் 10,000 ரூபாய் பொற்கிழியும் பெற்றார்.
- தமிழ்நேசன் ஞாயிறு கவியரங்கத்தில் இருமுறை பரிசு பெற்றார்.
- மதுரையில் வெளிவந்த ‘குரானின் குரல்’ நடத்திய வெள்ளிவிழாக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.
வாழ்க்கை வரலாறுகள், ஆவணப்படங்கள்
- கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை உலக வரலாறு என ஐ.சண்முகநாதன் எழுதிய நூலில் உள்ள படைப்பாளர்களின் குறிப்புகளில் சீனி நைனா முகம்மது குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
நூல்கள்
கவிதை
- தேன்கூடு (செ.சீனி நைனா முகம்மது அவர்களின் கவிதைத் தொகுப்பு நூல், 2011)
- கவிதைப் பூங்கொத்து (25 கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூல், 2004)
இலக்கணம்
- நல்ல தமிழ் இலக்கணம் (2013)
- புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள் (2013)
- தொல்காப்பியக் கடலின் ஒரு துளி (2015)
இதழ்கள்
- தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர் (40 உலக அறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகள்)
- உங்கள்குரல்
- நம்குரல்
உசாத்துணை
- சீனி நைனா முகம்மது, செ. (2011). தேன்கூடு கவிதைத் தொகுப்பு, பினாங்கு: உங்கள்குரல்
- சீனி நைனா முகம்மது, செ. (2007). செம்மொழி மலர், பினாங்கு: உங்கள்குரல்.
- சீனி நைனா முகம்மது, செ. (2014). புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள், பினாங்கு: உங்கள்குரல்.
- சீனி நைனா முகம்மது, செ. (2015). தொல்காப்பியக் கடலின் ஒரு துளி, பினாங்கு: உங்கள்குரல்.
- பவானி, ஆ. & மனோன்மணி தேவி, அ. (2021). தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ் (பக். 69-75). தஞ்ஜோங் மாலிம் : சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம்
- சீனி நைனா முகம்மது வாழ்க்கை குறிப்பு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.