சுவாமி விபுலானந்தர்
சுவாமி விபுலானந்தர் (மார்ச் 27, 1892 – ஜுலை 19, 1947) தமிழறிஞர், பேராசிரியர், துறவி. இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை என பல துறைகளில் இயங்கியவர். எழுத்தாளர், கட்டுரையாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், தத்துவவாதி, சொற்பொழிவாளர் என பன்முகங் கொண்டவர். இசைத்தமிழ் ஆய்வு, இலக்கிய ஆய்வு, நாடகத்தமிழ் ஆய்வு, மொழியியல் என ஆய்வுப்பணிகளை விரித்துக் கொண்டவர். யாழ் நூல் என்ற இசைவரலாற்று நூலும், மதங்க சூலாமணி என்ற நாடக ஆய்வு நூலும் இவரின் முக்கியமான படைப்புகளாகும். ஆங்கிலம் வழியாகத் தமிழ் இலக்கியங்களைப் பிற நாட்டவருக்குக் கற்பித்தது, அறிவியல் நூல்களைத் தமிழில் படிப்பிக்க முயற்சி செய்தது, மொழிபெயர்ப்பில் தனக்கென்ற தனி உத்தியைக் கையாண்டது என தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்பாற்றியுள்ளார்
பிறப்பு,கல்வி
விபுலானந்தர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் மார்ச்சு 27, 1892 அன்று சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்குப் பிறந்தார். மயில்வாகனனாகப் (இயற்பெயர்) (1892) பிறந்து பிரபோத சைதன்யர் ஆகி (1921) இறுதியில் விபுலானந்தராக (1924) பெயர் பெற்று துறவியானார்.
ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் பயின்றார். கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) சோதனையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார். 1915-ல் கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916-இல் அறிவியலில் பட்டயத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே. 1920-ல் லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார்.
தனிவாழ்க்கை
- 1912-ல் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.
- கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
- 1917-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றினார்.
- வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
- திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில், 1925-ஆம் ஆண்டிலிருந்து முகாமையாளராகப் பணியாற்றினார்
- 1928-ல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.
- 1926-1930 வரை திருகோணமலையில் இருந்தபடியே யாழ்ப்பாணம் இராமகிருட்ண மிஷன் வைத்தீசுவர வித்தியாலயத்தின் முகாமையாளராகவும் பணியாற்றினார்.
ஆசிரியப்பணி
- அர்ச்சம் பந்திராசரியர் கல்லூரி (1919)
- மானிப்பாய் இந்துக் கல்லூரி (1920)
- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1931-33)
துறவறம்
ஆசிரியப் பதவியைத் துறந்து 1922-ல் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்தார். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சர்வானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டது. இரண்டு வருடங்கள் அங்குப் பயின்றார். 1924-ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சர்வானந்தரால் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.ஆரம்பக்காலத்தில் சித்தாந்தியாக இருந்தவர் பிற்காலத்தில் முழு வேதாந்தி ஆனார். தான் பயிற்றுவித்த வகுப்புகளில் சமபோசனம், சமஆசனம் என்பதை நடைமுறையில் கொண்டுவந்தார்.
இலக்கியவாழ்க்கை
இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும்,வேதாந்த கேசரி (Vedanta Kesari) என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார்.
மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்சையின் பரீட்சார்த்தகராக நியமிக்கப்பட்டார். மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ் எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளை எழுதினார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், 'மதங்க சூளாமணி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
ஆங்கிலவாணி என்னும் தலைப்பில் உள்ள தொகுப்பில் விபுலானந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகள் உள்ளன. வால்டர் ஸ்காட் (நீர் நிலைக் கன்னி), டென்னிசன் (இரங்கற்பா), மில்டன், வேர்ட்ஸ்ஒ ர்த், கீட்ஸ் ஆகியோரின் கவிதைகள் அதில் உள்ளன.
சுவாமி விபுலாநந்தரின் தலைமையில் கலைச் சொல்லாக்க கழகம் 1934 இல் அமைக்கப்பட்டு 'கலைச் சொற்கள்' என்னும் அகராதி நூல் 1938-ல் சென்னைத் தமிழ்ச்சங்கத்தினால் வெளியிடப்பட்டது. தமிழில் கலைச்சொற்களை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் ஒரே பொருளுடன் தொடர்புடைய ஒவ்வோர் ஆங்கிலச் சொற்களுக்கும் தமிழில் தனிச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதையும் கவனப்படுத்தினார். (Mirror= கண்ணாடி, Glass = படிகம்) மொழிபெயர்ப்பு பற்றிய அவரது கருத்து நெகிழ்ச்சியானது. மூலத்தின் பொருளிலிருந்து விலகாமல் இருப்பது முக்கியம் என்பது அவரது மொழிபெயர்ப்பியல் கருத்தாக்கம்.
பத்திரிகையாளர்
- வேதாந்த கேசரி (ஆங்கிலம்),
- பிரபுத்த பாரதி (ஆங்கிலம்)
- இராமகிருஷ்ண விஜயம் (தமிழ்)
போன்ற பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராக இருந்தார்.
கலைச்சொல்லாக்கம்
சுவாமி விபுலாநந்தர் தலைமையேற்று நடத்திய தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாடு 1936 செப்டெம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை சென்னை பச்சையப்பன் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக்கழகம், இலங்கை அரசாங்கம், தென்னிந்திய ஆசிரியர் சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் ஆகியன அறிஞர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பியிருந்தன. சுவாமி விபுலாநந்தர் கலைசொல்லாக்கக் குழுவின் தலைவராகவும், வேதியியல் கலைச்சொல் நூற் குழுவின் தலைவராகவும் இருந்து செயற்பட்டார். 1936 செப்டம்பர் 27 அன்று சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்ற போது, கலைச்சொல்லாக்கத்தைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இசை ஆராய்ச்சி
சுவாமி விபுலானந்தர் 1931-ல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக ஆனபோது புராதன தமிழர் இசை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934-ல் இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா(Almorah) என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்த போது 'யாழ் நூல்' எழுதினார்.
விருதுகள்
- ஈழத்து மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது.
- நாட்டில் உள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு நாளான அன்றே கொண்டாடப்படுகின்றது.
மறைவு
யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார்.ஜுலை 19, 1947-ல் சுவாமி விபுலாநந்தர் காலமானார். அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
நூல்கள் பட்டியல்
இசை
- வங்கியம் (1942)
- சங்கீத பாரிஜாதம் (1942)
- பாரிஜாத வீணை (1944)
- யாழ்நூல்
பிற
- மதங்க சூளாமணி
- சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் (127 கட்டுரைகளின் தொகுப்பு, 3 பாகங்கள், 1997)
- விபுலானந்தர் இலக்கியம் (தொகுப்பு)
கட்டுரைகள்
- பயனற்ற கல்வி (குமரன் 1934)
- பயனுள்ள கல்வி (குமரன் 1934)
- புதிய கல்வித் திட்டத்திற்கு ஆதரவு (1938)
- லகர எழுத்து (தமிழ்ப் பொழில்)
- சோழ மண்டலமும் ஈழ மண்டலமும்(கலைமகள்)
- கலைச்சொல்லாக்கம்(பச்சையப்பன் கல்லூரி மலர்)
- யவனபுரத்துக் கலைச் செல்வம்
- ஐயமும் அழகும்
- இலக்கியச் சுவை
சிறு பிரபந்தங்கள்
- கணேச தோத்திர பதிகம்
- மாணிக்க பிள்ளையார் இரட்டைமணி மாலை
- சுப்பிரமணிய இரட்டை மணி மாலை
- குமரவேள் நவமணிமாலை
வசன நூல்கள்
- நடராஜ வடிவம்
- தில்லைத் திருநடனம்
ஆங்கிலக் கட்டுரைகள்
- The Phonetics of Tamil
- The Gift of Tongues
- An Essay on the Study of Language
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலவாணி (கவிதைகள்)
- சாரல் மழை (ஷேக்ஸ்பியரின் Tempest)
விபுலாநந்தர் பற்றிய ஆக்கங்கள்
- அடிகளார் படிவமலர் - ம. சற்குணம்
- விபுலானந்தர் இமயம் - மட்டக்களப்புத் தமிழ் சங்கம்
- விபுலானந்தர் காவியம் - சுப்பிரமணியம் சிவலிங்கம்
- சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும் - சி. மௌனகுரு
- சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள் - கா. சிவத்தம்பி
- யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் - அ. கௌரிகாந்தன்
உசாத்துணை
- அ.கா. பெருமாள்: தமிழறிஞர்கள் புத்தகம்
- https://www.e-thaksalawa.moe.gov.lk/web/si/library-section/e-library-content/item/499-swami-vipulanadar.html
- http://kanaga_sritharan.tripod.com/vipulanandar_DM.htm
- http://arayampathy.lk/personalities/148-210717?showall=1
- https://ourjaffna.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/
- https://yarl.com/forum3/topic/197362-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.