சுப்ரமண்ய ராஜு: Difference between revisions
(Stage updated) |
|||
Line 55: | Line 55: | ||
* [https://www.haranprasanna.in/2007/12/04/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/ சுப்ரமண்ய ராஜு கதைகள் – சுழலில் சிக்கித் தவிக்கும் கதைகள்: ஹரன் பிரசன்னா] | * [https://www.haranprasanna.in/2007/12/04/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/ சுப்ரமண்ய ராஜு கதைகள் – சுழலில் சிக்கித் தவிக்கும் கதைகள்: ஹரன் பிரசன்னா] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 21:48, 1 March 2023
சுப்ரமண்ய ராஜு (ஜூன் 6, 1948 – டிசம்பர் 10, 1987) நவீனத்தமிழ் எழுத்தாளர், கவிஞர். 39 வயதில் இறந்த சுப்ரமண்ய ராஜு எழுதிய கவிதைகளும் புனைவுகளும் ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகின்றன.
பிறப்பு, கல்வி
சுப்ரமண்ய ராஜு பாண்டிச்சேரியில் சுப்ரமண்யம், லட்சுமி இணையருக்கு ஜூன் 6, 1948-ல் பிறந்தார். பெற்றோர்கள் இட்ட பெயர் ராஜு. பள்ளி, சான்றிதழ்களில் விஸ்வநாதன் என்ற பெயர் உள்ளது. சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். சென்னை நியூ காலேஜில் புகுமுக வகுப்பு பயின்றார். சென்னை ஜெயின் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னை சுந்தரம் க்ளைடன் மற்றும் டி.டி.கே. நிறுவனங்களில் பணியாற்றினார்.
தனிவாழ்க்கை
எழுத்தாளர் தம்பதியரான சரோஜா ராமமூர்த்தி, து. ராமமூர்த்தியின் மகளான பாரதியை ஜூலை 6, 1975-ல் திருமணம் செய்து கொண்டார். இரு மகள்கள். ஸ்ரீவித்யா, காயத்ரி. சுப்ரமணிய ராஜு ராயப்பேட்டையில் டி.டி.கே. நிறுவனத்தில் பணியாற்றினார்.
சுப்ரமணிய ராஜூ அன்றைய எழுத்தாளர்கள் பலருக்கு பலவகையிலும் உதவி செய்பவராக இருந்தார். “சென்னைக்கு வந்த நாள் தொட்டு அவருடன் நட்பு கூடியது எனக்கு. எங்கள் நட்பு வட்டத்தில், ஒரு நல்ல வேலையும் சம்பளமும் வாய்த்த மனிதர் அவர். அக்காலத்து எழுத்தாளர் பலருக்கும் என்னையும் உள்ளிட்டு கணிசமாக உதவியவர்” என அவருடனான நட்பு குறித்தும் பிரபஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
ராஜு என்ற தன் பெயருடன் தன் தந்தையின் பெயரான சுப்ரமண்யனை இணைத்து 'சுப்ரமண்ய ராஜு' என வைத்துக் கொண்டார். 1970-களின் தொடக்கத்தில் ‘கசடதபற’ பத்திரிகையில் கவிதைகள் எழுதி இலக்கிய உலகில் அறிமுகமானார். ராஜூவின் கவிதைகள் தொகுக்கப்படாமல் உள்ளன.
விஸ்வாமித்திரன் என்ற புனைபெயரில் சினிமா விமர்சனங்களை சுப்ரமண்ய ராஜு சாவி இதழில் தொடர்ந்து எழுதினார். குமுதம், தினமணிகதிர், கசடதபற இதழ்களில் சிறுகதைகள் எழுதினார்.
‘இன்று நிஜம்’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு அவர் வாழ்ந்த காலத்தில் வெளியானது. அசோகமித்திரன் சுப்ரமணிய ராஜூவின் ஆதர்ச எழுத்தாளர். பாலகுமாரன், மாலன், கமல்ஹாசன், தேவகோட்டை வா. மூர்த்தி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவர்கள் ஓர் அணியாக இணைந்து செயல்பட்டனர்.
2006-ல் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக 'சுப்ரமண்ய ராஜு கதைகள்'(முழுத்தொகுப்பு) வெளிவந்தது. 486 பக்கங்கள் கொண்ட இத்தொகுப்பில் 32 கதைகள் உள்ளன. சிறுகதைகளும் மூன்று குறு நாவல்களும் அடங்கிய தொகுப்பு.
நினைவேந்தல்
சுப்ரமண்ய ராஜுவின் இறப்பிற்குப் பின் அவரின் நெருங்கிய நண்பர்களான பாலகுமாரனும் மாலனும் இணைந்து 20 எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து அவரது நினைவைப் போற்றும் விதமாக ‘அன்புடன்’ என்ற தொகுதியை இந்தியாடுடே வெளியீடாகக் கொணர்ந்தனர். பாலகுமாரன் சுப்ரமண்ய ராஜுவை சாயலாகக் கொண்ட கதாநாயகனை கொண்டு எழுதிய இரும்புக்குதிரைகள் நாவலை “முதல் ஸ்நேகிதனும் முழு ஸ்நேகிதனுமான விஸ்வநாதன் என்கிற சுப்ரமண்ய ராஜுவுக்கு” என சமர்ப்பித்தார். கமல்ஹாசன் தன் நண்பரின் நினைவாக ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் தன் ஒரு கதாப்பாத்திரத்திற்கு சுப்ரமண்ய ராஜு எனப் பெயர் வைத்தார்.
பாடலாசிரியர்
‘24C வேதபுரம் முதல் வீதி’ என்ற வெளிவராத படத்துக்கு ராஜு எழுதியிருந்த ஒரு பாடல், கங்கை அமரனின் இசையமைப்பில் சுசீலா பாடி ஒலிப்பதிவும் ஆகியது.
மறைவு
சுப்ரமண்ய ராஜு டிசம்பர் 10, 1987-ல் தன் 39-ஆவது வயதில் சென்னை நந்தனம் சிக்னல் அருகே ஏற்பட்ட விபத்தில் காலமானார்.
இலக்கிய இடம்
"சுப்ரமண்ய ராஜுவுக்கு முன்மாதிரி என்று யாரையும் குறிப்பிடத்தோன்றவில்லை. அவருடைய எழுத்தில் சமகாலத்து சமூக, தனி மனித ஒழுக்கச் சிக்கல்களும், மனசாட்சி நெருக்கடிகளும் சமகால நடையில் வடிவம் தரப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தச் சிக்கல்களையும் இந்த நெருக்கடிகளையும் இவர்தான் எழுதியிருக்கமுடியும் என்று தோன்றுகிறது” என அசோகமித்திரன் மதிப்பிடுகிறார்.
”காலத்தைக் கடந்தும் படிக்கிற மாதிரியாக இருக்கக்கூடிய ஒரு இருபத்தைந்து சிறுகதைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பத்துதான் தேறி இருக்கின்றன. அதில் சுப்ரமண்ய ராஜுவின் கதை ஒன்று” என சுஜாதா மதிப்பிட்டார்
சுப்ரமணிய ராஜூ பெருநகர் சார்ந்த நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையை அன்றைய புதிய வார இதழ்களின் தேவைக்கேற்க சற்றுமென்மையாகவும் நுட்பமாகவும் எழுதினார். இன்று அவை அக்காலகட்டத்தின் சித்தரிப்புகளாக மட்டுமே நிலைகொள்கின்றன.
நூல்கள்
- இன்று நிஜம்
- சுப்ரமண்ய ராஜு கதைகள்(கிழக்கு பதிப்பகம்)
உசாத்துணை
- எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜுவைத் தெரியுமா?: மனைவி பாரதியுடன் நேர்காணல்: சு.அருண் பிரசாத்: ஆனந்தவிகடன்
- சுப்ரமண்ய ராஜு: ‘வித்தியாசமானதெல்லாம் விசேசமானதல்ல’: சு.அருண் பிரசாத் வலைதளம்
- சுப்ரமண்ய ராஜு: ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு!: இந்து தமிழ்திசை: சு.அருண் பிரசாத்
- வாழ்விலே ஒரு முறை: சு.அருண் பிரசாத் வலைதளம்
- சுப்ரமண்ய ராஜு கதைகள்: பத்ரி சேஷாத்ரி
இணைப்புகள்
- சுப்ரமண்ய ராஜு படங்கள்: சு.அருண் பிரசாத் வலைதளம்
- சுப்ரமண்ய ராஜு: மாலன்
- காதலிக்கணும் சார்… சிறுகதை:சுப்ரமண்ய ராஜு: சிறுகதைகள்.காம்
- இரும்பு குதிரைகள் முன்னுரை: பாலகுமாரன்: siliconshelf
- சுப்ரமண்ய ராஜு கதைகள் – சுழலில் சிக்கித் தவிக்கும் கதைகள்: ஹரன் பிரசன்னா
✅Finalised Page