சுகந்தி சுப்பிரமணியன்
சுகந்தி சுப்பிரமணியன் தமிழின் ஆரம்பகால பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சுப்ரபாரதி மணியனின் மனைவி. அவருக்கு இரு பெண்கள்.
இலக்கிய வாழ்க்கை
சுகந்தியை ஒரு மனச்சிகிழ்ச்சையாக கவிதை எழுத பழக்கினார் கணவர் சுப்ரபாரதி மணியன். சுகந்தி குறிப்பிட்ட மனநிலையில் பக்கம் பக்கமாக எழுதுவார். பெரும்பாலானவைகள் மனப்பிரம்மைகள், முறையீடுகள் சார்ந்து எழுதினார். அவற்றில் சிலவற்றை சுப்ரபாரதிமணியன் கவிதை வடிவ ஒழுங்குக்குக் கொண்டுவந்து 1988ல் அன்னம் பிரசுரம் வழியாக பிரசுரித்தார். சுகந்தி சுப்பிரமணியனின் கவிதைகள் தமிழினி வெளியீடாக இப்போது கிடைக்கின்றன. ”மீண்டெழுதலின் ரகசியம்” சுகந்தி சுப்பிரமணியனின் முதல் தொகுதி.
இலக்கிய இடம்
”இதுவரைக்கும் ஆண்கள் பயன்படுத்திக்கொண்டிருந்த மொழியைத்தான் பெண்களும் பயன்படுத்துகிறார்கள். பெண்களுடைய மொழியாக இதை மாற்றுவதற்குப் பெரிய முயற்சி எதுவும் இல்லை. ரொம்பக் குறைவான முயற்சிதான் நடந்திருக்கு. இதில் மாற்றுக் கருத்துக்கும் இடம் உண்டு. அப்படியான முயற்சியைத் தொடங்கிவைத்தவர் சுகந்தி சுப்பிரமணியன்” என கவிஞர் சுகுமாரன் மதிப்பிடுகிறார்.
"சுகந்தியின் கவிதைகளில் உணர்வுகள் மற்றும் சில அழகியல் மொழி வெளிப்பாடுகள் அவருடையவை என்றால் கவிதை வடிவம் வரியமைப்பு எல்லாமே சுப்ரபாரதிமணியனால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் உள்ள அசலான அக வெளிப்பாட்டை சுப்ரபாரதிமணியனின் உண்மையான வாசக மனம் அடையாளம் கண்டுகொண்டதனால்தான் அவை பிரசுரமாயின. அக்கவிதைகளில் பலவற்றில் வீட்டை தன்னைக் கொல்லும் எதிரியாகவே சுகந்தி சித்தரித்திருந்தார். அவை அச்சானபோது கற்பனை இல்லாத நம் வாசகச்சூழல் சுப்ரபாரதிமணியனையே ஒரு பெருங்கொடுமைக்காரராகச் சித்தரித்துக் கொண்டது. சுகந்தியின் மனச்சிக்கலுக்குக் காரணம் அவரே என்றுகூட நம்மவர்கள் வாசித்திருக்கிறார்கள். ஆரம்பகாலக் கவிதைகளில் இருந்த கோர்வையான வெளிப்பாடு பின்னர் சாத்தியமாகவில்லை. சுகந்தியின் கவிதைகளில் துயருற்று நலிந்த ஓர் ஆத்மாவின் வாதைகள் எளிமையாக பதிவாகியிருக்கும். அக்காரணத்தால்தான் அவர் இன்னும் தமிழில் நினைவுகூரப்படுகிறார்." என ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.
”அந்த வரிகளில் ஏதோ ஒரு உண்மை இருக்கு. அதுவும் ஒரு குரல்தானே. மனச்சிக்கல் நிலையில்தான் உண்மையான கவிதை வரமுடியும் என்ற எண்ணமும், அந்த நிலையில் அது தனியனுபவம் அல்லது பிறரது அனுபவங்களின் தொகுப்புதான்” என சுப்ரபாரதிமணியன் கருதினார்.
இணைப்புகள்
- அஞ்சலி - சுகந்தி சுப்ரமணியன்: ஜெயமோகன்