சிங்காரவேலர்

From Tamil Wiki
Revision as of 20:05, 24 May 2022 by Navingssv (talk | contribs)
Singaaravelar6.jpg

சிங்காரவேலர் (பிப்ரவரி 18, 1860 - 1946) எழுத்தாளர், விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சியர், பொதுவுடைமைச் சிந்தனையாளர்.

பிறப்பு, கல்வி

Singaaravelar.jpg

சிங்காரவேலர் சென்னை மைலாப்பூரில் பிப்ரவரி 18, 1860 அன்று வெங்கடாசலம் செட்டியார், வள்ளியம்மையார் இணையருக்கு மூன்றாம் மகனாகப் பிறந்தார். சிங்காரவேலரின் குடும்பம் சைவ சமயத்தவர்கள். சிங்காரவேலர் தன் ஆரம்பப் பள்ளியை திண்ணைப் பள்ளிக் கூடத்திலும், பின் இந்து உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். 1881 ஆம் ஆண்டு மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1884-ல் எஃப்.ஏ. தேர்வில் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் தேர்ச்சிப் பெற்றார். சிங்காரவேலரின் குடும்பம் பர்மாவிலிருந்து அரிசியையும், தேக்கு மரத்தையும், கடல் வழியாகக் கொண்டு வந்து தமிழகத்தில் வணிகம் செய்தனர். சிங்காரவேலரும் குடும்ப வணிகத்தில் ஈடுபட்டதால் அவரது கல்வி பாதியிலேயே நின்றது.

பின்னர் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டத்தையும் (பி.ஏ), சட்டக்கல்லூரியில் பி.எல் பட்டத்தையும் பெற்றார். வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளை கற்றறிந்தார்.

தனி வாழ்க்கை

Singaaravelar2.jpg

நவம்பர், 1907 சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இவர் அலுவலகம் பாரிஸ் கார்னர் சுபாஷ் சந்ஹ்டிரபோஸ் சாலையில் இருந்த ஜேக்கப் அண்டு கம்பெனியின் முதல் மாடியில் இருந்தது. 1889 ஆம் ஆண்டு அங்கமையைக் காதல் திருமணம் செய்துக் கொண்டார்.

பொது வாழ்க்கை

Singaaravelar1.jpg

மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நீதிமன்றத்தில் எதிராளியால் அவமானப்படுத்தப்பட்டபோது, அந்த வழக்கை வென்றுவிட்டு வெளியே வந்து, தன் கருப்பு அங்கியைக் களைந்து இனி நீதிமன்றத்துக்கு வரப்போவதில்லை என்றும், என் மக்களுக்காகவே பாடுபடுவேன் என்றும் கூறினார். காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். தேச விடுதலைப் போராட்டங்களில், சமூக சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ஊர் ஊராகச் சென்று கல்வியறிவு இல்லாத தன் மக்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தார். பின்னாளில் காந்தியையும், காங்கிரஸையும் பூர்ஷ்வா இயக்கம் எனச் சொல்லி அங்கிருந்து விலகினார்.

மார்க்சியம்

1900 ஆம் ஆண்டு முதல் மார்க்சிய நூல்கள் அவருக்கு அறிமுகமாயின. 1917 இல் நடந்த சோவியத் புரட்சி மார்க்சியம் மீது அவரது ஈர்ப்பை மேலும் தூண்டின. பிரிட்டிஷ் ஆட்சியில் பொதுவுடைமை நூல்கள் தடை செய்யப்பட்டிருந்தன. புதுச்சேரியின் உள்ள தன் உறவினர்களின் உதவியால் வெளிநாட்டிலிருந்து கப்பல் வழியாக நூல்களை சென்னை கொண்டு வந்தார்.

1922-ல் கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘Dear Comrades, உலக கம்யூனிஸ்டுகள் சார்பாக நான் இங்கு வந்துள்ளேன்.’ எனத் தொடங்கி பொருள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களைத் திரட்டுவது பற்றி பேசினார். அவ்வுரையில் பூரண விடுதலைக் குறித்த தீர்மானத்தை முன்வைத்தார். 1920 முதல் மார்க்சியரான எம்.என். ராய்யுடன் கடிதத் தொடர்பில் இருந்தார்.

தொழிற்சங்கம்
Singaaravelar3.jpg

1918-ல் இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார். ‘லேபர் கிஸான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான்’ என்ற கட்சியை 1923-ல் தொடங்கினார்.

இதழாளர்

சிங்காரவேலரின் கட்டுரை அயோத்திதாச பண்டிதர் வெளியிட்ட ‘தமிழன்’ இதழில் வெளிவந்தது. ஆங்கிலக் கட்டுரைகள் இந்து ஆங்கில நாளிதழில் 1918 ஆம் ஆண்டு முதல் வெளிவந்தது. இந்துவில் ‘Open Letter to Mahatma Gandhi’ எனும் தலைப்பில் கட்டுரைகள் எழுதினார்.

மே தினத்தை முன்னிட்டு ஆங்கிலத்தில் ‘Labour and Kissan Gazette’ (தொழிலாளி - விவசாயி இதழ்) என்ற மாத இதழையும், தமிழில் ‘தொழிலாளன்’ என்ற மாத இதழையும் வெளியிட்டார். பின் ‘தோழர்’ என்ற மாத இதழையும் தொடங்கினார். இவ்விதழ்களில் தொழிலாளி, விவசாயி உரிமைக்குறித்தும், முன்னேற்றம் குறித்தும், மக்கள் பிரச்சனையைக் குறித்தும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். போதிய ஆதரவு கிடைக்காத காரணத்தினால் சில ஆண்டுகளில் அவ்விதழ் நின்றது.

இ.எல்.அய்யர் 1921 முதல் 23 வரை நடத்தி வந்த ’சுதர்மா’ (Swadahrma) என்ற ஆங்கில மாத இதழிலும் தொழிலாளர் முன்னேற்றம் குறித்து எழுதினார். ஈ.வெ.ரா குடியரசு வார இதழை ஈரோட்டில் இருந்து மே 2, 1925 முதல் வெளியிட்டார். இவ்விதழிலேயே 1927 முதல் கட்டுரைகள் எழுதினார். குடியரசு தடை செய்யப்பட்ட பின் ஈ.வெ.ராவின் ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ இதழ்களில் தொடர்ந்து எழுதினார். இவை தவிர ‘சுதேசமித்திரன்’, ‘சண்டமாருதம்’ இதழ்களிலும் எழுதினார்.

1935 ஆம் ஆண்டு மீண்டும் சொந்த செலவில் ‘புது உலகம்’ என்ற மாத இதழைத் தொடங்கினார்.

பௌத்தம்
Singaaravelar4.jpg

சிங்காரவேலரின் குடும்ப சைவ சமயத்தைப் பின்பற்றிய போதும் இவர் பௌத்தம் மேல் ஈடுபாடுக் கொண்டார். சிங்காரவேலர் தன் இல்லத்திலேயே ’மகாபோதி சங்கம்’ என்ற பெயரில் சங்கம் ஒன்றை அமைத்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் பௌத்த கொள்கைகளைப் பற்றி கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அதில் அயோத்திதாஸ பண்டிதர், இலட்சுமி நரசு நாயுடு (பச்சையப்பன் கல்லூரித் தத்துவப் பேராசிரியர்) போன்றோர் உரையாற்றினர். இந்நிகழ்வுகளை திரு.வி.க தன் ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ நூலில் குறிப்பிட்டுள்ளார். 1899 புத்தரின் நினைவு ஆண்டை தன் இல்லத்தில் கொண்டாடினார். 1902-ல் லண்டனில் நடந்த உலக பௌத்தமத மாநாட்டில் பங்கேற்றார். பௌத்த மதம் கூறும் சமத்துவ நோக்கு சிங்காரவேலரைக் கவர்ந்ததால் அதன் விளைவாக மார்க்சிய சிந்தனையும் அவரை ஈர்த்தது.

நகரண்மைக் கழகப் பணி
Singaaravelar5.jpg

சிங்காரவேலர் 1924 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரசின் சுயராஜ்ய கட்சி வேட்பாளராக நின்று யானை கவுனி வட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான மதன கோபால நாயுடுவை வென்றார். 1927 நகராண்மைக் கழக உறுப்பினராக இருந்தார்.

சிங்கார வேலர் மாளிகை

மீனவர் வீட்டு வசதித் திட்டத்துக்கு தமிழக அரசு இவர் பெயரைச் சூட்டியுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ‘சிங்கார வேலர் மாளிகை’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மறைவு

பாரிச வாயு நோய் காரணமாக சிங்காரவேலர் தன் 86 வயதில் பிப்ரவரி 11, 1946 இரவு இயற்கை எய்தினார்.

நூல்கள்

சிங்காரவேலர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த நூல்கள்
  • சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 1 (1931 கற்பகம் கம்பெனி, சென்னை)
  • சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 2 (1932 சமதர்ம பிரசுராலயம், சென்னை)
  • தொழிலாளர் துயரமும் உலக நெருக்கடியும் (1932, சிறு வெளியீடு சமதர்ம் பிரசுராலயம்)
  • கடவுளும் பிரபஞ்சமும் (1932, சுயமரியாதை பிரசுராலயம், ஈரோடு)
  • மெய்ஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும் பாகம் 1 (1932, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு)
  • நாத்திகர் மாநாட்டின் தலைமையுரை (சிறு வெளியீடு, 1932, குடியரசு பதிப்பகம், ஈரோடு)
  • சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 3 (1934, சமதர்ம பிரசுராலயம், சென்னை)
  • மெய்ஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும் பாகம் 2 (1934, பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம், ஈரோடு)
  • மனித உற்பவம் (1934, சமதர்ம பிரசுராலயம், சென்னை)
  • சோசலிச மாநாட்டின் தலைமையுரை (1934, சிறு வெளியீடு, குடியரசு பதிப்பகம், ஈரோடு)
சிங்காரவேலர் மறைந்த பின் வெளிவந்தவை
  • தத்துவமும் வாழ்வும் (தொகுப்பு - டி.என். இராமச்சந்திரன், மே 1957, இமயப் பதிப்பகம், நாகப்பட்டினம்)
  • வாழ்வு உயர வழி (தொகுப்பு - டி.என். இராமச்சந்திரன், நவம்பர் 1957, இமயப் பதிப்பகம், நாகப்பட்டினம்)
  • விஞ்ஞானமும் வாழ்வும் (தொகுப்பு - டி.என். இராமச்சந்திரன்)
  • மூலதனம் (தொகுப்பு - நாகை.கே.முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியன், ஜூலை 1973, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
  • பொதுவுடைமை விளக்கம் (தொகுப்பு - நாகை.கே.முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியன், ஜூலை 1974, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
  • சிங்காரவேலர் சொற்பொழிவுகள் (கம்யுனிஸ்ட் கட்சியின் பொன்விழா வெளியீடு, தொகுப்பு - நாகை.கே.முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியன், ஜூலை 1975, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
  • தத்துவஞான-விஞ்ஞானக் குறிப்புகள் (கம்யுனிஸ்ட் கட்சியின் பொன்விழா வெளியீடு, டிசம்பர்1975, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
  • அரசியல் நிலைமை (கம்யுனிஸ்ட் கட்சியின் பொன்விழா வெளியீடு, டிசம்பர்1975, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
  • வாழு - வாழவிடு (தொகுப்பு - நாகை.கே.முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியன், டிசம்பர்1975, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
  • சமூகம் - பொருளாதாரம் (தொகுப்பு - நாகை.கே.முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியன், ஜூலை 1985, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
  • சமூகம் - அரசியல் (தொகுப்பு - நாகை.கே.முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியன், ஜூலை 1985, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
  • சமூகம் - சமயம் (தொகுப்பு - நாகை.கே.முருகேசன், சி.எஸ். சுப்பிரமணியன், ஜூலை 1985, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை)
தொகுப்புகள்
  • சிங்காரவேலர் கட்டுரைகள் (தொகுப்பு - கழஞ்சூர் செல்வராசு, 2001)
  • சிங்காரவேலர் கட்டுரைகள் (தொகுப்பு - பேரா. முத்து. குணசேகரன், 2002)
  • சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம் - மூன்று தொகுதிகள் (2006, தொகுப்பு - பேராசிரியர் முத்து. குணசேகரன், பா.வீரமணி. தென்னக ஆய்வு மையம், இராயப்பேட்டை, சென்னை)
  • சிங்காரவேலர் (சிங்காரவேலர் கட்டுரைகளின் தொகுப்பு, பா.வீரமணி, 2007, திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம், ஆந்திரா)
  • சிங்காரவேலரின் சிந்தனைப் பொழிவுகள் (சிங்காரவேலரின் எல்லாப் பேச்சுகளும் அடங்கிய முதல் தொகுப்பு - 2014, தொகுப்பு: பா.வீரமணி, அன்னை முத்தமிழ் பதிப்பகம், திருவான்மியூர், சென்னை)
  • சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள் (தொகுப்பு: பா.வீரமணி, 2015, சாகித்திய அகாதெமி, சென்னை)
சிங்காரவேலர் எழுதிய இதழ்கள்
தமிழ் இதழ்கள்
  • தமிழன்
  • குடியரசு
  • பகுத்தறிவு
  • புரட்சி
  • புதுவை முரசு
  • நவசக்தி
  • சுதேசமித்திரன்
  • தொழிலாளன்
  • தோழர்
  • புது உலகம்
  • வெற்றி முரசு
  • சமதர்மம்
  • சண்ட மாருதம்
ஆங்கில இதழ்கள்
  • The Hindu
  • Swadharma
  • Labour and Kissan Gazette
  • New India
  • Vanguard of Indian Independence
  • Mail
  • Sunday Observer

உசாத்துணை

  • இந்திய இலக்கிய சிற்பிகள் - சிங்காரவேலர் (பா. வீரமணி, சாகித்திய அகாதெமி)

வெளி இணைப்புகள்