under review

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்

From Tamil Wiki
Revision as of 20:12, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
1946-ல் நடந்த குறவஞ்சி நாடகத்தில் பங்கேற்றவர்கள். மதனவல்லியாக வீணாபாஷிணி அம்மாள் மற்றும் தோழிகள். வலது கோடியில் துரைக்கண்ணு அம்மாள்

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி (அஷ்டகோடிக் குறவஞ்சி) நாடகம் தஞ்சை சரபோஜி மன்னரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட குறவஞ்சி நூலாகும். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் நிகழ்த்துகலையாக நடிக்கப்பட்டு வந்தது. தற்போது பா. ஹேரம்பநாதனால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பார்க்க: சரபேந்திர பூபாலக் குறவஞ்சி

நிகழ்த்து கலை

தஞ்சையைச் சேர்ந்த நட்டுவனார் கே.பி. கிட்டப்பா பிள்ளை ( தஞ்சை நால்வர் சகோதரர்களில் ஒருவரான பொன்னையா பிள்ளையின் மகன்) முதன்முதலில் 1940ல்-சரபேந்திர பூபாலக் குறவஞ்சியை சென்னையில் நாட்டிய நாடகமாக இயக்கி அரங்கேற்றினார். அதன்பின் நடனக் கலைஞர் பாலசரஸ்வதி கிட்டப்பா பிள்ளையின் உதவியுடன் இணைந்து அரங்கத்தில் நிகழ்த்தினார். கே.பி. கிட்டப்பா பிள்ளையின் மாணவரும், தஞ்சை நால்வர் எனப் புகழ்பெற்ற நட்டுவனார்கள் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோரின் வழிவந்தவருமான ராஜாமணியின் குடும்பத்தினர் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் மன்மதநாடகம் மற்றும் சரபேந்திர பூபாலக் குறவஞ்சியை அரங்கேற்றினர்.

1946 வரை ஒவ்வொரு வருடமும் பிரம்மோற்சவத்தின் போது அஷ்டகோடி தினத்தன்று தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் மாலை 7 மணிக்குத் தொடங்கி இரவு முழுவதும் நடைபெற்றது. உற்சவத்தின் எட்டாம் நாள் ஒத்திகை அம்மன் சன்னிதியின் முன்பு நடைபெறுவது வழக்கம். ஒன்பதாம் நாளான அஷ்டகோடி தினத்தன்று மாலை தியாகராஜ சுவாமியின் உற்சவர் விக்கிரகம் பிரகாரத்தைச் சுற்றி ஊர்வலமாக வந்து வசந்த மண்டபத்தில் அமர்ந்ததும், கொடியேற்றம் நடைபெறும். நட்டுவனார்களுக்கு பரிவட்ட மரியாதைகள் அளித்த பின் சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம் தொடங்கி அதிகாலை வரை நடைபெற்றது.

விநாயகர், சந்திரமௌலீஸ்வரர் மேல் விருத்தங்கள் பாடி, அரசருக்கு மங்களம் பாடப்படுகிறது. கட்டியக்காரன் மேடையேறும்போது நாதநாமகிரியை ராகம் பாடப்பட்டது (இப்போது சாவேரி ராகம் பாடப்படுகிறது). கட்டியக்காரன் சரபோஜி அரசரின் புகழைப் பாடுவான். முதல் காட்சியில் மதனவல்லி தோழிகளுடன் பந்தாடிகொண்டிருக்கும்போது வீதியில் சரபோஜி மன்னர் உலா வருவதைக் காண்கிறாள். நாடகத்தில் அரசர் என்ற பாத்திரம் அரங்கிற்கு வருவதில்லை. அவரது வீரமும், தோற்றமும், குணங்களும் பாடல் மூலமாகவே சொல்லப்படுகின்றன.

மதனவள்ளி மன்மதனிடம் தன் காதலையும், துயரையும் விவரிக்கும் பகுதி விப்ரலம்ப சிருங்காரம் என்னும் சுவையில் பந்துவராளி ராகத்தில் அமைகிறது. தன் தோழியை மன்னரிடம் தூதனுப்புகிறாள். குறத்தி வருவதை அறிவிக்கும் பாடல் பேகடா ராகத்தில் அமைகிறது. ஆனந்தபைரவியில் தன் மலைவளம் கூறும் "குடிசை வைத்து வாழும் எங்கள்" என்ற பாடலுக்கு விறுவிறுப்பான நடனம் நடைபெறுகிறது. குறத்தி கூற்றாகவே சரபோஜி மன்னரின் நல்லாட்சியும் பாடப்படுகிறது. அதிகாலை 4 மணியளவில் குறத்தி குறி சொல்லும் பகுதி யதுகுலகாம்போதி ராகத்தில் அமைகிறது. குறத்தி பிரகதீஸ்வரரின் அருள் வேண்டி, மதனவல்லியின் கையை நோக்கி அவள் எண்ணம் நிறைவேறும் எனக் குறி சொல்கிறாள். மதனவல்லி மகிழ்ந்து அவளுக்குப் பல விலையுயர்ந்த பரிசுகளை அளிக்கிறாள். குறவன் குறத்தியைத் தேடிவர, பிரகதீஸ்வரருக்கும், சரபோஜி மன்னருக்கும் மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

மீட்டுருவாக்கம்

1946-ம் வருடத்துடன் நின்று போன இந்நிகழ்த்துகலையை பா. ஹேரம்பநாதன் மீட்டுருவாக்கம் செய்து அரங்கேற்றினார். அவரது மனைவியின் தாயார் துரைக்கண்ணு அம்மாள் 1940-களில் சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகத்தில் மதனவல்லியின் தோழியாக நடித்தவர். ரேவதி அம்மாளின் துணையுடன் இக்கலையை மீட்டுருவாக்கம் செய்தார்.

உசாத்துணை


✅Finalised Page