சபாரத்தின முதலியார்
சபாரத்தின முதலியார் (1858-1922) ஈழத்து தமிழ்ப்புலவர். சைவப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் செய்யுள்கள் பாடினார். சமய நூல்கள், கண்டனங்கள் பாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
சபாரத்தின முதலியார் இலங்கை யாழ்ப்பாணம், கொக்குவில் என்னும் ஊரில், முல்லைத்தீவுக்கச்சேரியில் எழுதுவினைஞராக பணியாற்றிக் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை, ஆச்சிமுத்துவிற்கு மகனாகப் பிறந்தார். ஏடு தொடக்கியபின் சுயம்புநாதபிள்ளை என்பவரிடம் தமிழ் பயின்றார். ஆங்கிலக் கல்வி பெற்றுக்கொள்வதற்காக "கொக்" பாடசாலை எனப்பட்ட மத்திய கல்லூரியில் பயின்றார். வண்ணார்பண்ணையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆறுமுகநாவலரிடத்திலும் கற்றார்.
தனி வாழ்க்கை
சபாரத்தின முதலியார் 1878இல் யாழ்ப்பாணக் கச்சேரியில் எழுதுவினைஞராகப் பணியாற்றத் தொடங்கி முல்லைத்தீவு, கொழும்பு, கண்டி, காலி முதலிய இடங்களிலும் பணியாற்றினார். அதற்குப்பின், யாழ்ப்பாணக் கச்சேரியில் தமிழ் முதலியாராக நியமிக்கப்பட்டார். 1917ஆம் ஆண்டிலே சமாதான நீதவானக நியமிக்கப்பட்டார். 1921இல் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
சபாரத்தின முதலியார் பத்தொன்பது வயதில் "உதயபானு' பத்திரிகையில் சாள்ஸ் பிரட்லாங்கின் என்ற தத்துவவாதியின் நிரீச்சுரவாதத்தை(எல்லாம் இயற்கை, மேலே சக்தி ஏதுமில்லை. நாம் காண்பவை உண்மையானவை) மறுத்து பல கண்டனங்களை எழுதினார். அரசாங்கப் பணியிலிருந்த காலத்தில் "இந்து சாதனம்" என்னும் பத்திரிகையில் இவர் எழுதிய கட்டுரைகள் வெளிவந்தன. சபாரத்தின முதலியார் தமிழ் நூல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். விரிவுரைகள் பல ஆற்றினார்.
இவர் கண்டனங்கள், சமய நூல்கள், தனிப்பாடல்கள் பலவற்றை எழுதினார். முன்னை நாதசுவாமி வடிவழகம்மை ஆசிரிய விருத்தம், கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி தோத்திரம், மும்மணிக் கோவை, வெண்பா, அந்தாதி, கந்தர் கலிப்பா, சரவணபவமாலை, நல்லை நான்மணி மாலை, கொக்குவில் சித்திவிநாயகர் இரட்டை மணிமாலை முதலிய பல செய்யுள்களையும் இயற்றினார்.
பட்டம்
- 1905இல் இவருக்கு முதலியார்ப் பட்டமும் அரசினரால் அளிக்கப்பட்டது.
- 1919இல் இராசவாசல் முதலியார் பட்டத்தினைப் பெற்றார்.
மறைவு
நூல் பட்டியல்
- சீவான்ம பேதம்
- ஈச்சுர நிச்சயம்
- பிரபஞ்ச விசாரம்
- நல்லை நான்மணி மாலை
- கொக்குவில் சித்திவிநாயகர் இரட்டை மணிமாலை
ஆங்கில நூல்கள்
- Essentials of Hinduism
- Life of Thiru Gnana Sambanthar.
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:சபாரத்தின முதலியார், சபாபதிப்பிள்ளை: நூலகம்
- கொக்குவில்: சபாரத்தின முதலியார்: முகநூல்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.