சண்முக.செல்வகணபதி

From Tamil Wiki
Revision as of 09:31, 5 March 2022 by Tamizhkalai (talk | contribs)

முனைவர் சண்முக. செல்வகணபதி (1949) தமிழ் இலக்கியங்களிலும், தமிழிசையிலும் ஆழ்ந்த புலமைபெற்று, எழுத்தாலும் பேச்சாலும் தமிழ்ப்பணி செய்து வருபவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றிய பேராசிரியர்.. இராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் நூலினை இசைச்சித்திரமாக 15 பொழிவுகளாகத் திருச்சிராப்பள்ளி வானொலியில் வழங்கியவர் (2009 சூன் - 2009 ஆகத்து). இதுவரை 650 மேற்பட்ட மேடைகளில் இலக்கியப் பொழிவுகளாற்றியுள்ளவர்

பிறப்பு, கல்வி

சண்முக.செல்வகணபதி திருவீழிமிழலையில் கி. சண்முகம், குப்பம்மாள் ஆகியோருக்கு ஜனவரி 15,1949 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைத் திருவீழிமிழலையிலும்,புகுமுக வகுப்பைக் குடந்தை அரசு கல்லூரியிலும், பி.ஓ.எல், முதுகலைப் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

டாக்டர் வ.சுப. மாணிக்கனாரின் நாடகங்கள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் 1987 இல் இளம் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1991 இல் ஒப்பியல் நோக்கில் பாரதிதாசன்- கார்ல் சாண்ட்பர்க்கு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.