under review

சட்டி சுட்டது (நாவல்)

From Tamil Wiki
Revision as of 20:12, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சட்டி சுட்டது

சட்டிசுட்டது தமிழ் நாவலாசிரியர் ஆர்.சண்முகசுந்தரம் எழுதிய நாவல். தமிழின் யதார்த்தவாத நாவல்களில் முக்கியமானது என்று குறிப்பிடப்படுகிறது. கொங்குவட்டார நாவல்களிலும் இதுவே முன்னோடியானது.

உருவாக்கம்,வெளியீடு

1965-ல் சட்டிசுட்டது எழுதப்பட்டது. ஆர். சண்முகசுந்தரம் அவரே நடத்திய புதுமலர் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்

சட்டிசுட்டது பெரிய பண்ணாடி என அழைக்கப்படும் சாமிக் கவுண்டர் என்னும் விவசாயியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படைப்பு. தாராபுரம் அருகே உள்ள ஒரத்தப்பாளையம் என்னும் சிற்றூர் கதைக்களம். வரண்டு வெடித்து கிடக்கும் கரட்டு நிலத்தின் நடுவே சாமிக்கவுண்டரின் நிலம் மட்டும் பசுமை செழித்து கிடக்கும் என்று விவரித்தபடி நாவல் தொடங்குகிறது. அவருடைய மூதாதையர் அனைவருமே வானம்பார்த்த மண்ணில் விவசாயம் செய்தவர்கள். நிலத்திலேயே வாழ்ந்தவர்கள். தந்தை மகன் இருவரில் ஒருவர் எந்நேரமும் தோட்டத்தில் இருப்பார்.

சாமிக்கவுண்டரின் பிள்ளைகள் தந்தையின் உழைப்பையும் தியாகத்தையும் புரிந்துகொள்ளவில்லை. அவர் மனைவியை இழந்தவர். தன் மகள் வேலாத்தாவுடன் 'சாளை’ எனப்படும் தோட்டத்துக் குடிசைக்கே குடிவந்துவிடுகிறார். சாமிக்கவுண்டர் நோயுறும்போதும் மகன்கள் பொருட்படுத்துவதில்லை. குறிசொல்லும் மீனாட்சி தன் மகன் அங்கமுத்துவுடன் அருகே உள்ள காட்டுக்குடிசையில் குடிவருகிறாள். அடக்கமும் துணிவும்மிக்க வேலாத்தாள் குடும்பப்பெருமை ஆகியவற்றில் நம்பிக்கை இழக்கிறாள். அவள் எளியவனாகிய அங்கமுத்துவை மணம்புரிந்துகொள்ள முடிவெடுத்து அதை தந்தையிடம் சொல்லும்போது நாவல் முடிகிறது.

இலக்கிய இடம்

இந்திய இலக்கியத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தை ஒட்டி மண்ணுக்கும் விவசாயிக்குமான உறவை விவரிக்கும் நாவல்கள் ஏராளமாக வெளிவந்தன. அவை காந்திய இயக்கம் உருவாக்கிய பார்வையை கொண்டிருந்தன. ஆர்.சண்முகசுந்தரமும் காந்திய நம்பிக்கை கொண்ட இலட்சியவாதி. ஆனால் இந்நாவல் இலட்சியவாதத்திற்குரிய மிகைநம்பிக்கையோ உணர்ச்சிகரமோ கருத்துரைக்கும் தன்மையோ இல்லாமல் முற்றிலும் யதார்த்தமாகவே செல்கிறது. சாமிக்கவுண்டரை அவர் மகன்கள் புறக்கணிப்பது நாடகீயமாக ஆக்கப்படவில்லை. நாவல் முடியும்போது "நான் அங்கமுத்துவைக் கட்டிக்கிறேங்கோ" என வேலாத்தா சொல்ல "சரிங்கம்மணி" என்று சாமிக்கவுண்டர் சொல்கிறார். இந்த துல்லியமான யதார்த்தவாதமே இந்நாவலின் சிறப்பு.

"அவரது நாவல்கள் கோயம்புத்துர் மாவட்டத்து விவசாயிகளின் வாழ்க்கையைச் சுற்றி எழுந்தவை. கிரேக்க அவல நாடகங்களின் மைய இழையோட்டத்தை அவற்றில் காணலாம். எதிலும் ஒரு மகிழ்ச்சி தரும் முடிவு இருப்பதில்லை." என்று சொல்லும் விமர்சகராகிய வெங்கட் சாமிநாதன் சட்டிசுட்டது தமிழின் பெரும்படைப்புகளில் ஒன்று என்கிறார்.

உசாத்துணை


✅Finalised Page