under review

கோ. முனியாண்டி

From Tamil Wiki
Revision as of 05:43, 18 November 2022 by Saalini (talk | contribs)
கோ.முனியாண்டி.jpg

கோ. முனியாண்டி மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் ஒருவர். நாவல், கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை எனத் தமிழ் இலக்கியத் துறையில் பல படைப்புகளைப் படைத்துள்ளார்.

பிறப்பு, கல்வி

கோ. முனியாண்டி மே 4, 1948இல் லுமுட்டில் பிறந்தார். இவர் பேராக், சித்தயவான், சப்போக் தோட்டத்தைப் பிண்ணனியாகக் கொண்டவர். இவரின் தந்தையார் பெயர் கோவிந்தசாமி, தாயார் பெயர் அன்னம்மாள். கோவிந்தசாமி-அன்னம்மாள் இணையருக்குப் பிறந்த பதினொன்று பிள்ளைகளில் கோ. முனியாண்டி முதல் பிள்ளையாவார்.

கோ.முனியாண்டி 1.png

கோ. முனியாண்டி   முதலாம் ஆண்டு கல்வியைப் பேராக்கில் உள்ள ஆயார் தாவார் மெதடிஸ் ஆங்கிலப் பள்ளியில் தொடங்கினார். பின் தோட்டத் துண்டாடல் காரணமாக கோ. முனியாண்டி மூன்றாம் ஆண்டு கல்வியைப் புருவாஸ் தோட்டத்திலும் நான்காம் ஆண்டு கல்வி முதல் ஆறாம் ஆண்டு வரை பேராக் ஆயர் தாவர் செயின் திரேசா தமிழ்ப்பள்ளியிலும் கற்றார். கோ. முனியாண்டி குடும்ப வறுமையின் காரணமாக 1961ஆம் ஆண்டு தொடக்கக் கல்வியோடு தமது கல்வியை முடித்துக் கொண்டார்.

தனிவாழ்க்கை

1961ஆம் ஆண்டு தொடக்கக் கல்வியை முடித்தப் பின், கோ. முனியாண்டி மரம் சீவுதல், வெளிக்காட்டு வேலைக்குச் செல்லுதல், மாடு வளர்த்தல் போன்ற வேலைகளைச் செய்தார். பின்னர், 1966ஆம் ஆண்டு மணல் கற்கள் செய்யும் தொழிலைத் துவங்கினார். தொடக்கத்தில் வியாபாரம் லாபம் அடைந்தாலும் நாளடைவில்  தொழில் பின்னடைவைக் கண்டது.  1980ஆம் ஆண்டு தமது நண்பரின் ஆலோசனைக்கிணங்கி கோ. முனியாண்டி ஒவ்வொரு ஊராக சென்று படம் போடும் தொழிலில் ஈடுபட்டார். அதோடு வீடியோவையும் விநியோகம் செய்தார். கோ. முனியாண்டிக்குச் சினிமா பாடல்களின்மீது விருப்பம் இருந்ததால் இத்தொழிலில் பெரிய ஆதாயம் இல்லையென்றாலும் விரும்பிச் செய்தார். 1997ஆம் ஆண்டு 'தமிழ் ஓசை' நாளிதழின் சித்தியவான் வட்டார நிருபராக கோ. முனியாண்டி நியமிக்கப்பட்டார்.

1969ஆம் ஆண்டு கோ. முனியாண்டி தமது 21-வது வயதில் சிவகாமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கோ. முனியாண்டி - சிவகாமி இணையருக்கு நான்கு பிள்ளைகள்.

இலக்கிய ஆர்வம்

தோட்டக்காட்டில் வேலை செய்த காலத்தில், தோட்ட நிர்வாகி, நண்பர்கள் துணையோடு ஆனந்த விகடன், குமுதம், கலைக்கதிர், கலைமகள் போன்ற இதழ்களை வாசித்தார்.  கோ. முனியாண்டிக்கு இலக்கியம் சார்ந்த ஆர்வத்தைத் விதைத்தது கோ. முனியாண்டியின் தாத்தாவும் பாட்டியும் ஆவர்.  கோ. முனியாண்டிக்கு எட்டு வயது இருக்கும் பொழுதே கோ. முனியாண்டியின் தாத்தா பாட்டி மகாபாரதம், இராமாயணம், புராண இதிகாசங்கள், பெரிய எழுத்து மதன காமராஜன் கதைகள், காத்தவராய சுவாமி கதைகள் போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்ததோடு அவற்றை முறையான தொனியோடு வாசிக்கவும் கோ. முனியாண்டிக்குக் கற்பித்தனர். தாத்தா பாட்டியின் அருகாமை கோ. முனியாண்டிக்கு வாசிக்கும் ஆர்வத்தை இளம் வயதிலே உண்டாக்கியது.

இலக்கிய வாழ்க்கை

எழுத்துப் பணி

கோ. முனியாண்டி 1960ல்  தனது 15-வயதில் வானொலியில் இடம்பெற்ற இளைஞர் உலகம் எனும் பகுதிக்கு எழுத ஆரம்பித்தார். 1977ஆம் ஆண்டு முதல் இவர் படைப்புகள் இதழ்களில் வரத்துவங்கின. குறிப்பாக வானம்பாடி நாளிதழில் அவரது படைப்புகள் வெளியாயின. அப்போது அவர் புகழ்பெற்ற எழுத்தாளராகத் திகழ்ந்தார்.

கோ.முனியாண்டி 3.png

1979ஆம் ஆண்டில் எம். ஏ. இளஞ்செல்வன், சீ. முத்துசாமி, நிலாவண்ணன் ஆகியோர் முயற்சியில் கெடாவிலுள்ள நவீன இலக்கிய சிந்தனை அமைப்பு மலேசியாவில் முதலாவது புதுக்கவிதை கருத்தரங்கை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் புதுக்கவிதை போட்டியும் நடந்தது. இப்போட்டியில் கோ. முனியாண்டியின் ‘நித்திய கதாநாயகர்கள்’ எனும் புதுக்கவிதை முதல் பரிசைப் பெற்றது. இது மேலும் கோ. முனியாண்டிக்குப் புதிய ஆர்வத்தை ஊட்டியது. இதனால் நாட்டில் உள்ள பிரபலமான புதுக்கவிதை எழுத்தாளர்களிடையே நட்புறவு ஏற்பட வாய்ப்பாக அமைந்தது.   1982-ஆண்டு கோலாலம்பூர் இலக்கிய சிந்தனை நடத்திய சிறுகதைப் போட்டியில் கோ. முனியாண்டியின் 'யக்ஞ' எனும் சிறுகதை சிறந்த கதையாகத் தேர்வுப் பெற்றுச் சிறப்புப் பரிசுப் பெற்றது. இதனால் கோ. முனியாண்டி அவர்கள் தொடர்ந்து புதுக்கவிதையிலும் சிறுகதையிலும் கவனம் செலுத்தி எழுதினார்.

2006இல் வெளியான ‘காதல்’ இதழ் கோ. முனியாண்டியை மீண்டும் புதுக்கவிதை எழுத தூண்டியது. காதல் இதழ் கோ. முனியாண்டியை மலேசியாவின் தனித்துவமான எழுத்தாளராக முன்னெடுத்தது.  ‘காதல்’ இதழ் நிறுத்தப்பட்டவுடன் ‘வல்லினம்’ இதழுக்கு கோ. முனியாண்டி எழுத ஆரம்பித்தார். கோ. முனியாண்டியின்  ‘இராமனின் நிறங்கள்’ எனும் தொடர்கதை நயனத்தில் வெளிவந்தது. பின் 2002ஆம் ஆண்டு இந்நாவலை குறுநாவலாகச் செறிவாக்கி எழுதி செம்பருத்தி குறுநாவல் போட்டிக்கு அனுப்பினார். அதில் கோ. முனியாண்டிக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. தொடர்ந்து இக்குறுநாவலை நாவலாக விரிவாக்கம் செய்து நூலாக்கினார்.

கோ.முனியாண்டி 4.jpg

கோ. முனியாண்டி மௌனம், அநங்கம்  போன்ற கவிதைக்கான இதழ்களிலும் எழுதிக் கொண்டு வந்தார்.

இலக்கிய இயக்க ஈடுபாடு

1988-ஆம் ஆண்டு இரண்டாவது புதுக்கவிதை கருத்தரங்கு கூலிம் நகரில் நடந்தது. இக்கருத்தரங்கு எம். ஏ. இளஞ்செல்வன் மற்றும் கோ. முனியாண்டி ஆகியோர் இணைந்து நடத்திய கருத்தரங்காகும். மூன்றாவது புதுக்கவிதை கருத்தரங்கு 1995-ஆம் ஆண்டு கோ. முனியாண்டியின் முன்னெடுப்பில் நடந்தது. ஆதி. குமணன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கு பேராக், மஞ்சோங் ஆயார் தாவார் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது. 'மலேசிய தமிழ்ப் புதுக்கவிதைகள் ஓர் ஆய்வு'எனும் தொகுப்பு நூலை எம்.ஏ.இளசெல்வன் மற்றும் கோ. முனியாண்டி ஆகிய இருவரும் தொகுத்தனர்.

கோ.முனியாண்டி 5.jpg

சமுதாயப் பணி

  • 1980ல்  ஆயார் தாவார் மணிமன்ற துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டவுடன்.   சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இலக்கியப் போட்டிகள், கருத்தரங்குகள் எனப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தார்.
  • கோ. முனியாண்டி தன்னுடைய தலைமையில் பிற எழுத்தாளர்களின் 67 நூல்களை சித்தியவான் வட்டாரத்தில்  வெளியீடு  செய்திருக்கிறார்.
  • செம்பருத்தி இயக்கத்தோடு தமிழ் நெறிக் கழகத்தோடும்  இணைந்து தமிழ் ஈழத்திற்கான 20 நிகழ்ச்சிகளின் வழி நிதியுதவியும் பெற ஏற்பாடு செய்துள்ளார்.
  • 1981ஆம் ஆண்டு சித்தியவானில் பாரதி நூற்றாண்டு விழாவை நடத்தினார்.
  • ஈப்போ தமிழர் திருநாளின் செயற்குழு உறுப்பினாராக இணைந்து பணியாற்றினார்.
  • ஆசிரியர் திரு. கருப்பண்ணன் அவர்களுடன் இணைந்து மலேசிய இந்தியர்களுக்கு பிறப்புப் பத்திரமும் அடையாள அட்டையும் பெற்று தந்துள்ளார்
  • சமுக இலாகாவின் மூலம் ஏழை எளியவர்களுக்கு உதவியுள்ளார்  
மனஹரன் 4.jpg

நவீன இலக்கிய சிந்தனை

கோ. முனியாண்டி நவீன சிந்தனை அமைப்பைத் தொடக்கி வைத்து பல நிகழ்வுகளை நடத்தினர். அவற்றில் குறிப்பிடத்தக்கவை ;

  • 1988ஆம் ஆண்டு ஆண்டு 2வது புதுக்கவிதை மாநாடு. இம்மாநாட்டுக்கு மு.மேத்தா தலைமை தாங்கினார்.
  • 1997ஆம் ஆண்டு 3வது புதுக்கவிதை கருத்தரங்கு. இக்கருத்தரங்கத்திற்கு ஆதி. குமணன்  தலைமை தாங்கினார்.

விருது/பரிசு

  • மலேசிய இலக்கியச் சிந்தனை புதுக்கவிதைப் பரிசு (1979)
  • கோ.முனியாண்டி 7.jpg
    கோலாலம்பூர் இலக்கிய சிந்தனை நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘யக்ஞ’ சிறுகதை சிறந்த கதைக்கான பரிசைப் பெற்றது.(1985)
  • செம்பருத்தி மாத இதழ் குறுநாவல் பரிசு (2002)
  • செம்பருத்தி இயக்கத்தின் இலக்கியவாதி விருது (2004)
  • மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் ஆதி விருது (2013)
  • ஈப்போ தமிழர் திருநாள் இயக்கத்தின் குறிஞ்சி குமாரனார் விருது (2013)

நூல்கள்

கோ.முனியாண்டி 6.jpg
  • இராமனின் நிறங்கள் (2010)
  • கோ. முனியாண்டி சிறுகதை தொகுப்பு (2019)

ஆவணப்படம்

  • வல்லினம் வழி கோ.முனியாண்டியின் ஆவணப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. (2018)

இணைப்பு : கோ. முனியாண்டி ஆவணப்படம்

இலக்கிய இடம்

கோ. முனியாண்டியின் பங்களிப்பு சிறுகதை துறையில் நிகழ்ந்துள்ளதாகவும் மேலும் அவர் ஓர் இயக்கவாதியாக மலேசியாவில் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளார் என்றும் எழுத்தாளர் ம. நவீன் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.