கொ.மா. கோதண்டம்
கொ.மா. கோதண்டம் (கொட்டு முக்கல மாடசாமி கோதண்டம்: பிறப்பு - செப்டம்பர் 15 1938) தமிழ் எழுத்தாளர். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், நாவல்களையும் சிறார்களுக்கான பல படைப்புகளையும் தந்தவர். கானகம் சார்ந்து பல அரிய தகவல்களை வெளிக் கொணர்ந்தவர். கதை, கவிதை, கட்டுரை, நாவல், மொழிபெயர்ப்பு, பத்திரிகைப் பணி என படைப்பின் பல தளங்களிலும் செயல்பட்டு வருகிறார். சாகித்ய அகாதமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர்.
பிறப்பு, கல்வி
கொ.மா. கோதண்டம், ராஜபாளையத்தில், செப்டம்பர் 15 1938-ல், கொட்டு முக்கல மாடசாமி ராஜா - சீதாலட்சுமி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். ‘கொட்டு முக்கல’ என்பது இவர்களது பரம்பரை குடும்பப் பெயர். குடும்பச் சூழல்களால் கோதண்டம் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றார்.
தனி வாழ்க்கை
கொ.மா. கோதண்டம், மளிகைக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். விடுமுறை நாட்களில் வாசகசாலைகளுக்குச் சென்று ‘கண்ணன்’, ‘முயல்’, ‘அணில்’ போன்ற நூல்களை வாசித்தார். அக்காலத்தில் சென்னை ராஜதானி முதலமைச்சராக இருந்த குமாரசாமி ராஜா, தான் சேகரித்து வைத்திருக்கும் நூல்களைப் பாதுகாக்கும் வகையில், தனது இல்லத்தை நூலகமாக மாற்றினார். அங்கு நூலகராக இருந்த நண்பர் மூலம் பன்மொழிப்புலவர் மு. ஜகந்நாத ராஜா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இலக்கண, இலக்கியம் யாவற்றையும் ஜகந்நாத ராஜாவிடமிருந்து கற்றுத்தேர்ந்தார்.
ராஜேஸ்வரியுடன் திருமணம் நிகழ்ந்தது. ராஜேஸ்வரி கோதண்டம், சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகள் அறிந்தவர். அம்மொழிகளிலிருந்து பல நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். மகன்கள் கொ.மா.கோ. குறளமுதன், கொ.மா.கோ. இளங்கோ இருவரும் எழுத்தாளர்கள்.
இலக்கியவாழ்க்கை
ஜகந்நாத ராஜா தொடங்கிய ‘மணிமேகலை மன்றம்’ என்ற இலக்கிய அமைப்பின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். கொ.மா. கோதண்டத்தின் முதல் சிறுகதையான ‘மனமும் மணமும்’, 1967-ல், ‘சிவகாசி முரசு’ இதழில் வெளியானது. அவர் வாழ்ந்த பகுதி மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் பகுதி. அங்கு வாழ்ந்த பளியர்களின் நட்புக் கிடைத்தது. அவர்களின் வாழ்க்கை முறையை அவர்களுடன் தங்கி அறிந்துகொண்டார். அதனை அடிப்படையாகக் கொண்டு ‘ஒரு வாய்க்கஞ்சி’ என்ற சிறுகதையை எழுதினார். அது ‘தாமரை’ இதழில் வெளியானது. பளியர்கள் வாழ்வைப் பற்றிக் கூறும் தமிழின் முதல் சிறுகதையாக அச்சிறுகதை மதிப்பிடப்படுகிறது.
தொடர்ந்து மலை வாழ் மக்கள் பற்றி, கானகம் பற்றி, தனது அனுபவங்கள் பற்றி இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதத் தொடங்கினார். ‘தீபம்’, ‘செம்மலர்’, ‘கோகுலம்’, ‘தினமணி கதிர்’ போன்ற இதழ்களில் இவரது கதை, கட்டுரைகள் வெளியாகின. கோதண்டத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஆரண்யகாண்டம்’ 1976-ல் வெளியானது. முதல் நாவல் ‘ஏலச்சிகரம்’ 1980-ல் வெளிவந்தது. இவரது இரண்டாவது நாவலான ‘குறிஞ்சாம் பூ’ இலங்கை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவல வாழ்க்கையைக் கூறும் நாவல்.
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம் எனப் பன்மொழிகள் அறிந்தவர் கொ.மா. கோதண்டம். தெலுங்குக் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தெலுங்கு மொழித் துறைப் பேராசிரியர்களைக் கொண்டு தமிழில் மொழிபெயர்த்து, நூலாக வெளியிட்டுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம், குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி, மதுரை லேடி டோக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் இவரது படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் பாரதபிரதமர் இந்திராகாந்தி நேரில் அழைத்துப் பாராட்டிய பெருமை கோதண்டத்திற்கு உண்டு. இவரது ‘ஆரண்ய காண்டம்’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள சில சிறுகதைகள் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ரஷ்ய, ஜெர்மன், பிரெஞ்ச், ஹிந்தி, வங்காளம், சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரில் நாட்டுப்புற இலக்கியம் குறித்து ஆய்வுக்கட்டுரை படைத்துள்ளார். அப்பூரி சாயாதேவி எழுதி, சாகித்ய அகாதமி விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பை, ‘அவளது பாதை’ என்ற தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
சிறார் படைப்புகள்
தனது படைப்புகள், பெரியோர்களுக்கு மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கும் பயன்படக்கூடியதாய் அமைய வேண்டும் என்று கோதண்டம் விரும்பினார். ‘திக்குத் தெரியாத காட்டில்’ என்பது சிறார்களுக்காகக் கோதண்டம் எழுதிய முதல் சிறுகதை. தொடர்ந்து சிறார்களுக்காகப் பல படைப்புகளைத் தந்துள்ளார். ‘நீலன்’ என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை மையமாக வைத்துப் பல சிறார் சிறுகதைகளை எழுதியுள்ளார். கற்பனைக் கதாபாத்திரமான ‘நீலனுக்கு’ சிறுவர்கள் ரசிகர் மன்றம் அமைத்து வரவேற்றனர்.
இதழியல் வாழ்க்கை
கொ.மா. கோதண்டம் ‘நவீனம்’, ‘கோபுரம்’ போன்ற இலக்கியச் சிற்றிதழ்களின் ஆசிரியர்.
சமூகப் பணிகள்
கொ.மா. கோதண்டம், ‘மலைவாழ் மக்கள் நலச் சங்கம்’ என்ற அமைப்பின் செயலாளர். தனது கட்டுரைகள் மூலம், மலை வாழ் மக்கள் பற்றிய பல செய்திகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, கொத்தடிமைகளாக வாழ்ந்த பலரை விடுவித்துள்ளார். மலைவாழ் மக்கள் அரசிடமிருந்து பல்வேறு வாய்ப்புகளைப் பெறவும் இவர் பல விதங்களில் உதவி புரிந்து வருகிறார்.
ஆய்வுகள்
கொ.மா. கோதண்டத்தின் படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து பலர் முனைவர் மற்றும் இளமுனைவர் (எம்.பில்) பட்டம் பெற்றுள்ளனர்.
”கொ.மா.கோதண்டம் நாவலில் சங்க கால மக்கள் வாழ்வியல்” என்ற தலைப்பில், திருமதி செ. செல்லப்பாண்டி அவர்கள், ஸ்ரீ பராசக்தி கல்லூரி மூலம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்காக முனைவர் பட்ட ஆய்வினைச் செய்துள்ளார்.
விருதுகள்
- மத்திய அரசின் குடியரசுத் தலைவர் விருது: ஆரண்ய காண்டம் (நாவல்)
- அனந்தாச்சாரி அறக்கட்டளை பரிசு: குறிஞ்சாம்பூ (நாவல்)
- ஏவி.எம் அறக்கட்டளையினரின் தங்கப் பதக்கம்: மழைத்துளிகள் (கவிதைத் தொகுப்பு)
- குழந்தை எழுத்தாளர் சங்கச் சிறுவர் போட்டி, இரண்டாம் பரிசு: உச்சிமலை ரகசியம் (நாவல்)
- பால சாகித்ய புரஷ்கார்: காட்டுக்குள்ளே இசை விழா (சிறார் நாவல்)
- இலக்கியப் பீடம் விருது: குளத்தில் விழுந்த சந்திரன் (சிறுகதைத் தொகுப்பு)
- அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது: குட்டி யானையும் சுட்டிகளும் (சிறார் படைப்பு)
- இலங்கை தமிழ் பல்கலைக்கழக விருது
- இலண்டன் தமிழ்ச் சங்க விருது
- கலை இலக்கியப் பெருமன்ற விருது
- குறிஞ்சிச் செல்வர் பட்டம்
- சிறுகதைக் கிழார் பட்டம்
- பண்டித ரத்னா பட்டம்
- திருக்குறள் தொண்டர் பட்டம்
- மலேசிய சர்வதேச தொலைநிலைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்
இலக்கிய இடம்
கொ.மா. கோதண்டத்தின் சிறார் படைப்புகள் குறிப்பிடத்தகுந்தவை. எளிமையான மொழியில் சிறார்களை ஆர்வத்துடன் மென்மேலும் வாசிக்கத் தூண்டும் வகையில் எழுதுபவராக கொ.மா. கோதண்டம் மதிப்பிடப்படுகிறார். தமிழகத்தின் பல அடர் வனப் பகுதிகளில் தங்கி, அங்குள்ள மலை வாழ் மக்களுடன் பழகி, வாழ்ந்து தான் பெற்ற அனுபவங்களைப் படைப்பாகம் செய்து வருகிறார். சுற்றுச்சூழல், வனம், கானுயிர்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கதை, கட்டுரை, நாவல்களை எழுதியுள்ளார். காடுகளுக்குச் செல்ல வாய்ப்பே இல்லாத சிறுவர்களுக்கு வனம் குறித்த செய்திகளை, அந்தச் சூழல்களை, கானுயிர்களைப் பற்றிய உண்மைகளை அறிவியல் ரீதியாக எடுத்துச் சொல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் செயல்பட்டு வருகிறார். “சங்ககாலக் குறிஞ்சிக் கபிலருக்குப் பிறகு மலை பற்றிய நூல்களை கொ.மா.கோதண்டம் தவிர்த்து யாருமே எழுதவில்லை. இருபதாம் நூற்றாண்டின் குறிஞ்சிக் கபிலர்” என்று கி. ராஜநாராயாணன் பாராட்டியுள்ளார்.
“தமிழ் இலக்கிய வரலாற்றின் இயற்கை குறித்த நூல்களில் கொ.மா.கோதண்டத்தின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. தன் வாழ்க்கையையும் படைப்புகளையும் இயற்கையோடு மிக நெருக்கமாக அர்ப்பணித்துக்கொண்டவர் கொ.மா.கோதண்டம்” என்கிறார் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன்.
நூல்கள்
நாவல்கள்
ஏலச்சிகரம்
ஜென்ம பூமிகள்
குறிஞ்ஞாம்பூ
சிறுகதை தொகுப்புகள்
ஆரண்ய காண்டம்
மலையின் மைந்தர்கள்
வெடிக்கத் துடிக்கும் வேர்ப் பலாக்கள்
காட்டு குயில்கள்
இருண்ட வழிகளில் வெளிச்சம்
முட்டம் போட்ட இதயங்கள்
வானகத்தில் ஒரு கானகம்
கொ.மா.கோதண்டம் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு : இரண்டு பாகங்கள்)
சிறார் நாவல்கள்
உச்சிமலை ரகசியம்
இருண்ட வானத்தில் இளம் சிங்கங்கள்
சிறார் சிறுகதை நூல்கள்
திக்குத் தெரியாத காட்டில்
பிறந்த பூமி
நீலன் நமது தோழன்
எங்கிருந்தோ வந்தான்
நீலனும் மலைப்பாம்பும்
காக்கை குருவி எங்கள் ஜாதி
தேனி வனம்
காட்டுக்குள்ளே திருவிழாக் கொண்டாட்டம்
காட்டுக்குள்ளே பட்டிமன்றம்
காட்டுக்குள்ளே கும்மாளம்
கரடியுடன் ஒரு கம்பு விளையாட்டு
கானகம் சென்ற சிறுவர்கள்
உயிர் காப்பான் தோழன்
குளத்தில் விழுந்த சந்திரன்
பச்சைக்கிளி பாடுது
காட்டில் கேட்ட பாட்டுப் போட்டி
நட்புறவுப் பூக்கள்
காடு மலைகளில் ஆடிப் பாடுவோம்
காட்டுச் சிறுவன் நீலன்
ஊருக்குள் சிறுத்தை
நாடகங்கள்
புனித பூமி
மணிமேகலை
திருவள்ளுவர்
கவிதைத் தொகுப்புகள்
கோழிக் குட்டிகளும் பன்றிக் குஞ்சுகளும்
சின்னச்சின்ன அரும்புகள்
கங்கை காவிரி
மழைத்துளிகள்
முத்தொள்ளாயிரம் (புதுக்கவிதையில்)
மணிமேகலை (புதுக்கவிதையில்)
மருத்துவ நூல்கள்
இயற்கை உணவும் தீரும் நோய்களும்
நமக்கு நாமே நல்லதொரு மருத்துவர்
நமது மனமே நல்ல மருந்தகம்
இனிய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம்
மொழிபெயர்ப்பு
ஆண்டாள் காவியம் (தெலுங்கு மூலம் : ஆமுத்ய மால்யதா, கிருஷ்ண தேவராயர்)
கிளிகளின் கிராமம் (மலையாள மூலம்: தத்தைகளுடைய கிராமம், சிற்பி பள்ளிபுரம்)
கட்டுரை நூல்கள்
திருக்குறள் எளிய உரை
மணிமேகலை தெளிவுரை
அழகினைப் பழகுவோம்
இலக்கியத்தில் இன்பக் காட்சி
தியாகி அரங்கசாமி ராஜா (வாழ்க்கை வரலாறு)
மற்றும் பல நூல்கள்.
உசாத்துணை