being created

கொங்கு மண்டல சதகம்

From Tamil Wiki
Revision as of 15:50, 18 July 2022 by Siva Angammal (talk | contribs)

This page is being created by ka. Siva

கொங்கு மண்டல சதகம்,  கார்மேகக் கவிஞர் இயற்றிய நூல். சதகம் என்னும் சிற்றிலக்கிய வகையில் எழுதப்பட்ட நூல். இந்நூலின் காலம் 11- ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.

பெயர்க்காரணம்

கொங்கு மண்டல சதகம் என்பது கொங்கு மண்டலத்தைப் பற்றிப் பாடப்பட்ட சதகம். சதகம் என்பது அகப்பொருளையோ புறப்பொருளையோ அடிப்படையாக வைத்து, ஏதாவது ஒரு பொருள் மீது  நூறு செய்யுட்களால் பாடுவது.

"விளையுமொருபொருண் மேலொருநூறு, தழையவுரைத்தல் சதகமென்ப" (இலக்கண விளக்கப்பாட்டியல் - 86 )

சதகம் பல பொருள் பற்றிப் பாடப்பெறும். அவற்றை பொதுவாக முப்பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம். அவை மண்டலச் சதகம், துதி சதகம் மற்றும் நீதி சதகம்.

மண்டலச் சதகம்;

ஒரு மண்டலத்தில் வாழ்ந்த மன்னர்கள், வள்ளல்கள், கவிஞர்கள் வரலாற்றையும், மண்டலத்தின் புகழ், வரலாறு ஆகியவற்றைப் பற்றி நூறு செய்யுள்களில் எடுத்துரைப்பது. உதாரணம்- தொண்டை மண்டல சதகம், கார்மண்டல சதகம்.

துதி சதகம்;

ஏதேனும் ஒரு தலத்தில் எழுந்தருளியுள்ள கடவுளை முன்னிலைப்படுத்தி அவரது பெருமைகளை நூறு செய்யுள்களில் எடுத்துரைப்பது. உதாரணம்- எம்பிரான் சதகம், அருணாசல சதகம்.

நீதி சதகம்;

இறைவனை துதிப்பது மட்டுமின்றி மக்கள் வாழ்வதற்கும் உதவும் அறிவு நெறிகளையும் அறமுறைகளையும் தொகுத்து நூறு செய்யுள்களில் எடுத்துரைப்பது. உதாரணம்- குமரேச சதகம், அறப்பளீசுர சதகம்.

கொங்கு மண்டல சதகம்,  மண்டல சதகம் வகையைச் சார்ந்தது. கொங்கு மண்டல சதகம், நூறு கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களால் கொங்கு மண்டலச் சிறப்பை உணர்த்தக் கருதிப் பாடப்பட்ட  நூல். இந்நூலின் ஒவ்வொரு செய்யுளும் கொங்கு மண்டலமே என்று முடியுமாறு இயற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு

கொங்கு மண்டல சதகம் நூலை இயற்றியவர் கார்மேகக் கவிஞர். இவரின் ஊர் விஜய மங்கலம் என்றும் இவர் சமணர் என்றும் கூறப்படுகிறது. கார்மேகக் கவிஞரைப் பற்றிய வேறு தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

பொருண்மை

கொங்கு மண்டல சதகம் நூலில், கிழக்கே மதில்கரையும், மேற்கே வெள்ளிமலையும், வடக்கே பெரும்பாலையும், தெற்கே பழநிமலையும் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ள கொங்கு மண்டலத்தின் பண்டைக்கால நிலப்பரப்பு, தெய்வீக விளக்கம், சித்தர், சமயாசிரியர், முடியுடை வேந்தர், குறுநிலமன்னர், வள்ளல், புலவர் மற்றும் பலவகை மாந்தர்களின் நீதி, வீரம், கொடை, ஆண்பாலர் பெண்பாலர் கல்வி, நட்பு, கற்பு, நன்றி மறவாமை, அடக்கமுடைமை, புலவர்களை ஆதரித்து வந்த அருமை புலவர்களின் பெருமை இன்னும் பல பழக்கவழக்கங்கள் சுருக்கிக் கூறப்பட்டுள்ளன.

கொங்கு மண்டல சதகம் நூலில் முதன்மையாக குறிப்பிடப்பட்டுள்ள தலங்கள், வீரர்கள், வள்ளல்கள், புலவர்கள், சித்தர்கள்;

தலங்கள்

திருப்பாண்டிக் கொடுமுடி, பவானி, திருமுருகன் பூண்டி, அவிநாசி, பேரூர், குரக்குத்தளி, வெஞ்சமாக்கூடல், திருச்செங்கோடு, அறப்பள்ளி, வெண்ணெய் மலை, கருவூர், பழனி, துடியலூர், குடக்கோட்டூர்.

வீரர்கள்

சூரிய காங்கேயன், பூந்துறை  குப்பிச்சி, காரையூர் மன்றாடி, தித்தன், கோப்பணன், தொண்டைமான், மும்முடிப் பல்லவராயன், முதலிக்காமிண்டன், உத்தமச்சோழன், செய்யான் பல்லவராயன்.

வள்ளல்கள்

குமணன், அதியமான், ஓரி, பேகன், அசதி, ஆணூர்ச் சர்க்கரை, காரையூர்ச் சர்க்கரை, சம்பந்தச் சர்க்கரை, ஆணூர் காமிண்டன், உலகுடையான், செட்டி பிள்ளையப்பன், வாணவராயன், அன்னத்தியாகி, பல்லவராயன்.

புலவர்கள்

செங்குன்றூர்க் கிழார், வேதாந்த தேசிகர், கொங்கு வேளிர், பவணந்தி முனிவர், காங்கேயன், அடியார்க்கு நல்லார், பூங்கோதையார், மசக்காளி மன்றாடி.

சித்தர்கள்

கரூர்ச்சித்தர், கஞ்சமலைச் சித்தர், போகநாதர் புலிப்பாணி, கொங்கணச் சித்தர்.

உரை

தி.அ. முத்துசாமிக் கோனார், கொங்கு மண்டல சதகம் நூலின் சுவடிகளை தேடிக் கண்டடைந்து, அவற்றிற்கு உரை எழுதி 1923- ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார்.  இவர் சதகச் செய்யுள்களுக்கு உரை எழுதியதோடு, தாம் சேகரித்த வரலாற்றுக் குறிப்புகளையும்,  பழங்கதைகளையும் பதிவு செய்துள்ளார். ஆனால் 99 -ஆம் செய்யுளுக்கு இவர்  உரை எழுதவில்லை.

உசாத்துணை

  • கொங்கு மண்டல சதகம், மூலமும் உரையும் முனைவர் ந. ஆனந்தி, சாரதா பதிப்பகம்.
  • கொங்கு மண்டல சதகம், தமிழ் இணையக் கல்விக் கழகம் https://www.tamilvu.org/library/l5730/html/l5730012.htm


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.