under review

குறிஞ்சிக்குமரனார்

From Tamil Wiki
Revision as of 20:38, 7 November 2022 by Navin Malaysia (talk | contribs) (Created page with "thumb|குறிஞ்சிக்குமரனார் குறிஞ்சிக்குமரனார் (மே 5, 1925 – அக்டோபர் 18, 1997) மலேசியாவில் தமிழ் மொழி வளர்ச்சியிலும்  தனித்தமிழ் ஆய்வுகளிலும் பங்களித்த கவிஞராவார். தேவநேயப் பாவாணர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
குறிஞ்சிக்குமரனார்

குறிஞ்சிக்குமரனார் (மே 5, 1925 – அக்டோபர் 18, 1997) மலேசியாவில் தமிழ் மொழி வளர்ச்சியிலும்  தனித்தமிழ் ஆய்வுகளிலும் பங்களித்த கவிஞராவார். தேவநேயப் பாவாணர் மீது ஆழமான பிடிப்பு கொண்ட பாவலர் குறிஞ்சிக்குமரனார் மலேசிய தனித்தமிழ் இயக்கங்களுக்கு வழிகோலிய முன்னோடியாவார்.  எழுத்தாளராகவும், கவிஞராகவும் சித்தமருத்துவராகவும் இருந்த இவர் பலருக்கு வழிகாட்டியாகவும்  சிற்றிதழ் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.  

பிறப்பும் கல்வியும்

குறிஞ்சிக்குமரனாரின் இயற்பெயர் சா. சி சுப்பையா.  இவர் மே 5, 1925ஆம் ஆண்டு சனிக்கிழமை, தமிழ்நாடு,  இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் அருகே, இரணசிங்கபுரம் என்ற ஊரில் சாத்தையா சிட்டாள் இணையருக்கு மகனாக பிறந்தார்.  தன் ஐந்தாவது வயதில், திருப்பத்தூர் புலவர் தமிழ்ப்பள்ளியில் சேர்ந்தார். புலவர் காதர்மீரான், பிரான்மலை இருவரும் இவருக்கு ஆசிரியர்களாக அமைந்தனர். இலக்கியம், இலக்கணம், கவனகம், கணியம், கணிதம் போன்ற பல பாடங்களைக் பள்ளியில் கற்றார். மேலும் தன் தந்தைவழி கல்வியாக, மருத்துவம், வர்மம், சிலம்பம், போர்கலை போன்றவற்றையும் கற்றுதேரினார். இளம்வயதில், காந்திய பற்றாளராக பாரதியார் தேசப்பற்று பாடல்களை பாடி மக்களைக் கவர்ந்தார்.

மலேசியா வருகை

குறிஞ்சிக்குமரனார் 1938ஆம் ஆண்டு மலாயாவுக்கு தோட்டத் தொழிலாளியாக வந்தார். ஆயினும் தன் குடும்ப தொழிலான சித்த மருத்துவத்தையே தொழிலாக செய்து வந்தார்.  கோ. சாரங்கபாணி தமிழ் முரசு இதழில் எழுதிய தமிழர் உணர்வு கட்டுரைகள் வழி மொழி உணர்வும் இன உணர்வும் பெற்றார். மலாயா திராவிட இயக்கத் தொடர்பில் பெரியார் வெளியிட்ட விடுதலை, பகுத்தறிவு போன்ற இதழ்களைத் தொடர்ந்து வாசித்து தன்மான இயக்க உணர்வாளராக மாறினார். 1946-ல்   பேரா மாநில,  மலேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் இலக்கியப்பிரிவு பொருப்பாளராக சில காலம் சேவையாற்றியனார்.  அக்காலகட்டத்தில் பல தமிழக பேச்சாளர்களையும் அறிஞர்களையும் மலேசியாவுக்கு அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தினார். பேரா. அ.ச. ஞானசம்பந்தன், முனைவர் அ. சிதம்பரநாதன் போன்ற அறிஞர்கள் குறிஞ்சிக் குமரனாரின் அழைப்பை ஏற்று மலாயா வந்து சொற்பொழிவுகள் ஆற்றினர்.

குறிஞ்சிக்குமரனார் பேராக் மாநில தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் இணைந்து தொழிலாளர் நலன் நோக்கிய செயல்பாடுளில் ஈடுபட்டார். அப்போது ஈப்போவிலிருந்து வெளிவந்த ‘சோதி’ எனும் இதழில் சம்மட்டி, மதிவாணன், துலாக்கோல் போன்ற புனைப்பெயர்களில் தொழிலாளர் உரிமை பற்றியும் மேலாளர் அநீதிகள் பற்றியும் கட்டுரைகள் எழுதினார்.

பாவாணர் தமிழ் மன்றம்

தேவநேயப் பாவாணர் எழுதிய ‘ஒப்பியன் மொழிநூலை’ வாசித்ததன் வழி குறிஞ்சிக்குமரனார் தனித்தமிழ் பற்றாளரானார். தேவநேயப் பாவாணர் மேல் மிகுந்த அன்பு கொண்ட குறிஞ்சிக் குமரன், பாவணாருடன் நீண்ட காலம் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். தேவநேயப் பாவாணர் சிந்தனைகளை மலேசியாவில் பரப்பும் விதமாக 1960ஆம் ஆண்டு பாவணார் தமிழ் மன்றம் என்ற அமைப்பை தோற்றுவித்தார். அதுவே, தேவநேயப் பாவாணர் பெயரில் அமையப்பெற்ற முதல் மன்றமாகும்.   அந்த அமைப்பின் வழி மலேசியாவில் பல கவிஞர்களும் மேடைப்பேச்சாளர்களும் உருவாகினர். கவிஞர் எல்லோன், கவிஞர் பெ. கொ மலையரசன் போன்றவர்கள் அவ்ர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.  மேலும் மன்றத்தின் வழி,  தமிழ்  நாட்டில் தனித்தமிழ் மொழித்தூய்மை பற்றிய பரப்புரைகளை முன்னின்று நடத்திய பல மொழி உணர்வாளர்களை மலேசியாவுக்கு அழைத்து கூட்டங்கள் நடத்தினார். 1974 ஆம் ஆண்டு பெருஞ்சித்திரனார் மலேசியா வந்த போது அவருக்கு துணையாக நின்று பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். வ. சுப. மாணிக்கம், முனைவர் மு. தமிழ்க்குடிமகன், கு. சா. ஆனந்தன் போன்றவர்களும் பாவாணர் மன்ற விருந்தினராக வருகைதந்து பல கலந்துரையாடல்களில் கலந்துகொண்டனர்.  இதன் வழி குறிஞ்சிக்குமரனார் தனித்தமிழ் இயக்கத்தில் ஆழ்ந்த பற்றுகொண்டவரானார்.

பெருஞ்சித்திரனாரை ஆசிரியராக கொண்டு தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தென்மொழி இதழை மலேசியாவுக்கு தருவித்து நாடுமுழுதும் பரவச்செய்தார்.   அதேப்போன்று, தேவநேய பாவணார் நூல்களையும் மலேசியாவில் பரவச் செய்தார்.  தென்மொழி இதழின் வளர்ச்சியில் பங்காற்றியதோடு, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் போன்ற இதழ்களின் வளர்ச்சியிலும் பங்காற்றினார். தைப்பிங் செலாமாவில் 1983-ல் அ.பு. திருமாலனார் தொடங்கிய  தமிழ்நெறிக்கழகத்தின் ஏடலராக இருந்து தீவிரப் பணியாற்றினார்.  ஈழ விடுதலை போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு நல்கி வந்தார்.

இலக்கிய பங்களிப்பு

இலக்கிய ஆர்வமுடைய குறிஞ்சிக்குமரனார் பல இதழ்களில் கவிதைகள் எழுதினார். பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு மொழிசார்ந்த  கட்டுரைகள் வாசித்துள்ளார்.  மேலும்,  ‘கோமான் குமணன்’, ‘பாண்டியத் தலைவன்’ ஆகிய நாடகங்களையும் எழுதினார். சித்தமருத்துவத்துவம் தொடர்பான பல கட்டுரைகள் எழுதியதோடு மக்களுக்கு சில மருத்துவ ஆலோசனைகளும் வழங்கினார். அவர் சித்த மருத்துவ குறிப்புகளில் தூயதமிழ் பயன்பாட்டையே கடைபிடித்தார்.

மரணம்

குறிஞ்சிக்குமரனார் அக்டோபர் 18, 1997-ல் தனது 72-வது வயதில் மரணமடைந்தார்.

விருதுகள்

பேரா மாநில அரசு 'தமிழ்ச்செல்வர்' என்ற பொற்பதக்கம் வழங்கி கெளரவித்தது.  1971-ல் பேரா. இலக்குவனார், சித்தமருத்துவர் செந்தமிழ்ப் புலவர் என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார். பத்துகாஜா பாரதி படிப்பகத்தார், பாவலர் செந்தமிழ்குறிஞ்சி என்ற விருதை வழங்கினர். 1989  மலேசிய திராவிட முன்னேற்ற  கழகம்  தமிழன்னல் விருதை வழங்கியது.

நூல்கள்

  • தமிழருவி (1992)
  • நிலைபெற்ற தலைவன்
  • பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள்

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.