under review

குறிஞ்சிக்குமரனார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Category:கவிஞர்கள் சேர்க்கப்பட்டது)
Line 37: Line 37:
[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கவிஞர்கள்]]

Revision as of 19:37, 23 December 2022

குறிஞ்சிக்குமரனார்

குறிஞ்சிக்குமரனார் (மே 5, 1925 – அக்டோபர் 18, 1997) மலேசியாவில் தமிழ் மொழி வளர்ச்சியிலும் தனித்தமிழ் ஆய்வுகளிலும் பங்களித்த கவிஞர். தேவநேயப் பாவாணர் மீது ஆழமான பிடிப்பு கொண்ட பாவலர் குறிஞ்சிக்குமரனார் மலேசிய தனித்தமிழ் இயக்கங்களுக்கு வழிகோலிய முன்னோடியாவார்.  எழுத்தாளராகவும், கவிஞராகவும் சித்தமருத்துவராகவும் இருந்த இவர் பலருக்கு வழிகாட்டியாகவும்  சிற்றிதழ் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.  

பிறப்பும் கல்வியும்

குறிஞ்சிக்குமரனாரின் இயற்பெயர் சா. சி சுப்பையா.  இவர் மே 5, 1925 அன்று, தமிழ்நாட்டில்  இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் அருகே, இரணசிங்கபுரம் என்ற ஊரில் சாத்தையா-சிட்டாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.  தன் ஐந்தாவது வயதில், திருப்பத்தூர் புலவர் தமிழ்ப்பள்ளியில் சேர்ந்தார். புலவர் காதர்மீரான், பிரான்மலை இருவரும் இவருக்கு ஆசிரியர்களாக அமைந்தனர். இலக்கியம், இலக்கணம், கவனகம், கணியம், கணிதம் போன்ற பல பாடங்களை பள்ளியில் கற்றார். மேலும் தன் தந்தைவழி கல்வியாக, மருத்துவம், வர்மம், சிலம்பம், போர்க்கலை போன்றவற்றையும் கற்றுத்தேறினார். இளம்வயதில், காந்தியவாதியாக பாரதியார் எழுதிய தேசபக்திப் பாடல்களை பாடி மக்களைக் கவர்ந்தார்.

தனிவாழ்க்கை

குறிஞ்சிக்குமரனார் 1938-ஆம் ஆண்டு மலாயாவுக்கு தோட்டத் தொழிலாளியாக வந்தார். ஆயினும் தன் குடும்பத் தொழிலான சித்த மருத்துவத்தையே தொழிலாக செய்து வந்தார். 

அரசியல்

கோ. சாரங்கபாணி தமிழ் முரசு இதழில் எழுதிய தமிழர் உணர்வு கட்டுரைகள் வழி மொழி உணர்வும் இன உணர்வும் பெற்றார். மலாயா திராவிட இயக்கத் தொடர்பில் பெரியார் வெளியிட்ட விடுதலை, பகுத்தறிவு போன்ற இதழ்களைத் தொடர்ந்து வாசித்து தன்மான இயக்க உணர்வாளராக மாறினார். 1946-ல் பேராக் மாநில,  மலேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் இலக்கியப்பிரிவு பொறுப்பாளராக சில காலம் சேவையாற்றியனார்.  அக்காலகட்டத்தில் பல தமிழக பேச்சாளர்களையும் அறிஞர்களையும் மலேசியாவுக்கு அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தினார்.

குறிஞ்சிக்குமரனார் பேராக் மாநில தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் இணைந்து தொழிலாளர் நலன் நோக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டார். அப்போது ஈப்போவிலிருந்து வெளிவந்த ‘சோதி’ எனும் இதழில் சம்மட்டி, மதிவாணன், துலாக்கோல் போன்ற புனைப்பெயர்களில் தொழிலாளர் உரிமை பற்றியும் மேலாளர்களின் அநீதிகள் பற்றியும் கட்டுரைகள் எழுதினார்.

அமைப்புப்பணிகள்

குறிஞ்சிக்குமரனார் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், முனைவர் அ. சிதம்பரநாதன் போன்ற அறிஞர்கள் குறிஞ்சிக் குமரனாரின் அழைப்பை ஏற்று மலாயா வந்து சொற்பொழிவுகள் ஆற்றச்செய்தார்

1974-ஆம் ஆண்டு பெருஞ்சித்திரனார் மலேசியா வந்த போது அவருக்கு துணையாக நின்று பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். வ. சுப. மாணிக்கம், முனைவர் மு. தமிழ்க்குடிமகன், கு. சா. ஆனந்தன் போன்றவர்களும் பாவாணர் மன்ற விருந்தினராக வருகைதந்து பல கலந்துரையாடல்களில் கலந்துகொண்டனர்.  இதன் வழி குறிஞ்சிக்குமரனார் தனித்தமிழ் இயக்கத்தில் ஆழ்ந்த பற்றுகொண்டவரானார்.

பெருஞ்சித்திரனாரை ஆசிரியராக கொண்டு தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'தென்மொழி' இதழை மலேசியாவுக்கு தருவித்து நாடுமுழுதும் பரவச்செய்தார்.   தென்மொழி இதழின் வளர்ச்சியில் பங்காற்றியதோடு, 'தமிழ்ச்சிட்டு', 'தமிழ்நிலம்' போன்ற இதழ்களின் வளர்ச்சியிலும் பங்காற்றினார். தைப்பிங் செலாமாவில் 1983-ல் அ.பு. திருமாலனார் தொடங்கிய  தமிழ்நெறிக்கழகத்தில் இணைந்து தீவிரப் பணியாற்றினார்.  ஈழ விடுதலை போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு நல்கி வந்தார்.

பாவாணர் தமிழ் மன்றம்

தேவநேயப் பாவாணர் எழுதிய ‘ஒப்பியன் மொழிநூலை’ வாசித்ததன் வழி குறிஞ்சிக்குமரனார் தனித்தமிழ் பற்றாளரானார். தேவநேயப் பாவாணர் மேல் மிகுந்த அன்பு கொண்ட குறிஞ்சிக் குமரன், பாவணாருடன் நீண்ட காலம் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். பாவாணர் சிந்தனைகளை மலேசியாவில் பரப்பும் விதமாக 1960-ஆம் ஆண்டு 'பாவணார் தமிழ் மன்றம்' என்ற அமைப்பை தோற்றுவித்தார். அதுவே, தேவநேயப் பாவாணர் பெயரில் அமையப்பெற்ற முதல் மன்றமாகும்.   அந்த அமைப்பின் வழி மலேசியாவில் பல கவிஞர்களும் மேடைப்பேச்சாளர்களும் உருவாகினர். கவிஞர் எல்லோன், கவிஞர் பெ. கொ மலையரசன் போன்றவர்கள் அவ்ர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.  மேலும் மன்றத்தின் வழி,  தமிழ்  நாட்டில் தனித்தமிழ் மொழித்தூய்மை பற்றிய பரப்புரைகளை முன்னின்று நடத்திய பல மொழி உணர்வாளர்களை மலேசியாவுக்கு அழைத்து கூட்டங்கள் நடத்தினார்.

இலக்கிய பங்களிப்பு

குறிஞ்சிக்குமரனார் பல இதழ்களில் கவிதைகள் எழுதினார். பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு மொழிசார்ந்த  கட்டுரைகள் வாசித்துள்ளார்.  மேலும்,  ‘கோமான் குமணன்’, ‘பாண்டியத் தலைவன்’ ஆகிய நாடகங்களையும் எழுதினார். சித்தமருத்துவத்துவம் தொடர்பான பல கட்டுரைகள் எழுதியதோடு மக்களுக்கு சில மருத்துவ ஆலோசனைகளும் வழங்கினார். அவர் சித்த மருத்துவ குறிப்புகளில் தூயதமிழ் பயன்பாட்டையே கடைபிடித்தார்.

மரணம்

குறிஞ்சிக்குமரனார் அக்டோபர் 18, 1997-ல் தனது 72-வது வயதில் மரணமடைந்தார்.

விருதுகள்

  • தமிழ்ச்செல்வர் பொற்பதக்கம் -பேராக் மாநில அரசு
  • சித்தமருத்துவ செந்தமிழ்ப் புலவர்-பேராசிரியர் இலக்குவனார்(1971),
  • பாவலர் செந்தமிழ்குறிஞ்சி-பத்துகாஜா பாரதி படிப்பகத்தார் (1971)
  • தமிழனல்-  மலேசிய திராவிட முன்னேற்றக்  கழகம் (1989)

இலக்கிய இடம்

கொ.சாரங்கபாணி மலேசியாவில் தொடங்கிவைத்த தமிழுணர்வு வலுப்பெறுவதற்காக போராடியவர் குறிஞ்சிக்குமரனார். மரபிலக்கிய வளரவும் தமிழ்க்கல்வி பரவவும் பணியாற்றியவர்.

நூல்கள்

  • தமிழருவி (1992)
  • நிலைபெற்ற தலைவன்
  • பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகள்

உசாத்துணை


✅Finalised Page