under review

குரு நமசிவாயர்

From Tamil Wiki
Revision as of 03:49, 21 November 2023 by Jagadeesan.hongkong (talk | contribs) (spell check)
குரு நமசிவாயர்
திரு அண்ணாமலை
குகை நமசிவாயர்
அண்ணாமலை வெண்பா
குகை நமசிவாயர் சமாதி ஆலயம், திருவண்ணாமலை

குரு நமசிவாயர், (பொ.யு. 15-ஆம் நூற்றாண்டு) திருவண்ணாமலையில் வாழ்ந்த குகை நமசிவாயரின் சீடர். தனது குருவாலேயே ‘குரு நமசிவாயர்’ என்று அழைக்கப்பட்டார். குருவின் வாக்கை ஏற்று சிதம்பரம் திருத்தலம் சென்று, பல்வேறு ஆலய, ஆன்மிக நற்பணிகளை மேற்கொண்டு அங்கேயே நிறைவெய்தினார். இவர் பாடிய ‘அண்ணாமலை வெண்பா’ மிக முக்கியமான ஆன்மிக நூல். இவரது காலம் பொ.யு. பதினைந்தாம் நூற்றாண்டு.

தோற்றம்

குரு நமசிவாயரது இயற்பெயர் நமசிவாயமூர்த்தி. இவர் எங்கு பிறந்தார், எப்போது பிறந்தார் என்பது பற்றிய முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை. தொன்மக்கதைகளின்படி பிறவியிலேயே ஞானம் வாய்க்கப் பெற்றிருந்த அவர் தனக்கு ஒரு நல்ல குருவைத் தேடிக் கொண்டிருந்தார். பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து, இறுதியில் திருவண்ணாமலையை அடைந்தார். அங்கு வாழ்ந்த துறவி குகை நமசிவாயரைத் தனது குருவாகக் கொண்டார்.

தொன்மக்கதைகள்

குரு குகை நமசிவாயர் செல்லும் இடங்களில் எல்லாம் பின் செல்வதும், அவர் தங்கும் இடத்திலேயே தங்குவதும் சீடர் நமசிவாயத்தின் வழக்கமானது.

குருப் பிரசாதம்

குகை நமசிவாயருக்குப் பசித்தால் ஏதாவது வீடுகளின் முன் போய் நிற்பார். கையை மெல்லத் தட்டுவார். ‘அருணாசலம்! அருணாசலம்!‘ என்பார். உடனே அவ்வீட்டிலுள்ளவர்கள் வெளியே வருவர். கைகள் இரண்டையும் ஒன்று சேர்த்துக் குவிப்பார் குகை நமசிவாயர். அகல விரிந்த அந்த திருக்கரங்களில் அவ்வீட்டுப் பெண்கள் கூழையோ, பழங்கஞ்சியையோ ஊற்றுவர். அதனை உறிஞ்சிக் குடிப்பார். பின் சென்று விடுவார். சமயங்களில் அந்தக் கைகளின் வழியே மிகுதியான கஞ்சியானது கீழே வழியும். அப்படிக் கீழே விழும் அதனைக் கையேந்தி அருந்துவார் இளைஞர் நமசிவாயர். குரு உண்டு எஞ்சியவற்றை, குரு மிச்சத்தை எந்த வித மன வேறுபாடுகளும் இல்லாமல், ‘குருப் பிரசாதம்‘ என்று கருதி அருந்துவார்.

சீடரின் சிரிப்பு

அண்ணாமலையின் அடிவாரத்து மலைப் பகுதியில் அமர்ந்திருப்பார் குகை நமசிவாயர். சமயங்களில் படுத்துக் கொண்டுமிருப்பார். இளைஞர் நமசிவாயம், குருவுக்கான பணிவிடைகளைச் செய்வார். பாதங்களை மெல்லப் பிடித்து விடுவார். குரு உறங்கிய பின்தான், தான் உறங்கச் செல்வார்.

ஒரு நாள் குருவின் பாதங்களை மென்மையாகப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார் இளைஞர் நமசிவாயம். பின் திடீரென்று பெருங்குரலில் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். திடுக்கிட்ட குகை நமசிவாயர், “நமசிவாயம், ஏன் சிரித்தாய், என்ன விஷயம்?” என்று கேட்டார்.

“ குருவே! திருவாரூர் தியாகராஜர் சன்னதியில் சதிர்க் கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது. அங்கே வேகமாக நாட்டியமாடிக் கொண்டிருந்த பெண்ணொருத்தி கால் தடுக்கிக் கீழே விழுந்து விட்டாள். அதனைப் பார்த்த மக்கள் எல்லாம் சிரித்தார்கள். அதுதான் நானும் சிரித்தேன்” என்றார்.

”இருப்பது இங்கே! ஆனால் காட்சி என்னவோ அங்கே! ஆச்சர்யம்!” என்று வியந்த குகை நமசிவாயர், சீடர் நமசிவாயத்தை ஆசிர்வதித்தார்.

அங்கேயும் இங்கேயும்

ஒருநாள்... ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தார் குகை நமச்சிவாயர். அருகே நின்று கொண்டிருந்த சீடர் நமசிவாயம், திடீரெனத் தன் வேஷ்டி நுனியை இரண்டு கைகளாலும் கசக்கினார். எரிந்து கொண்டிருக்கும் எதையோ அணைப்பது போல பாவனை செய்தார்.

குகை நமசிவாயர் வியந்து, “என்னப்பா, என்ன ஆயிற்று?” என்று கேட்டார்.

”குருவே, தில்லைக் கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் திரியை ஒரு எலி இழுத்து வந்து திரைச் சீலை அருகே போட்டு விட்டது. அதனால் திரைச் சீலை தீப்பற்றி விட்டது. அதைக் கண்ட குருக்கள் அந்தத் தீயை அணைத்தார். உடனே நானும் அது மேலும் எங்கும் பற்றிப் பரவி விடாமல் இருக்க அணைத்தேன்” என்றார். ஆச்சர்யம் அடைந்த குகை நமசிவாயர் எழுந்து கொண்டு, ”நமசிவாயம் நீ இருப்பது மிக மிக உயர் நிலையப்பா, மிக மிக உயர்நிலை” என்று சொல்லி ஆசிர்வதித்தார். இளைஞர் நமசிவாயமும், குருவின் பாதங்களில் பணிந்து வணங்கினார்.

குரு நமசிவாயர்
குருவின் சோதனைகள்

ஒரு நாள் குருவான குகை நமசிவாயர், சீடர் நமசிவாயத்தை நோக்கி,

ஆல்பழுத்துப் பட்சியினுக் காகார மானதென
வேல் பழுத்து நின்ற நிலை வீணிலென

- என்று ஒரு வெண்பாவில் பாதியைப் பாடினார். பின் சீடர் நமசிவாயத்திடம் மீதியைப் பாடும்படிப் பணித்தார்.

உடனே சீடரான நமசிவாயர்,

- சாலவனச்
செய்யா ஒருத்தருடன் சேர்ந்தும் இருப்பீரோ
ஐயா நமச்சிவா யா”

என்று பாடி, பாடலை நிறைவு செய்தார்.

சீடரின் அறிவுத்திறனைக் கண்டு வியந்தார் குகை நமசிவாயர்.

*

குரு நமசிவாயர் ஜீவ சமாதி

மற்றொரு சமயம் தான் உண்ட உணவைச் செரிக்காமல் ஒரு மண் பாண்டத்தில் உமிழ்ந்த குகை நமசிவாயர், 'இதனை மனிதர் காலடி படாத இடமாகப் பார்த்து கொட்டி விட்டு வா' என்று சீடரிடம் சொன்னார். சீடரும் அவ்வாறே செய்துவிட்டு வந்தார். ‘எங்கு கொட்டினாய்?’ என குகை நமசிவாயர் வினவ, தன் வயிறைக் காட்டிய சீடர், ‘இதோ இங்கே, இதை விட மனிதர் காலடி படாத இடம் இந்த உலகத்தில் வேறு ஏது குருவே' என்றார்.

அதனைக் கண்டு அயர்நத குகை நமசிவாயர், சீடரைத் தழுவி, ‘நீ இருப்பது மிக உயரிய நிலை. நீ இன்று முதல் சீடன் நமசிவாயமல்ல; குரு நமசிவாயம்’ என்று வாழ்த்தினார்.

பின் சீடனிடம், ’சிதம்பரம் திருத்தலம் சென்று அங்கேயே வசிப்பாயாக!’ என்று கூறினார். கலங்கிய குரு நமசிவாயரிடம், குகை நமசிவாயர், "அப்பனே, ஒரு கம்பத்தில் இரண்டு யானைகளைக் கட்ட முடியாது. கட்டவும் கூடாது. நீ சிதம்பரம் செல்வதுதான் சிறந்தது. அங்கே உன்னால் பல வேலைகள் ஆக வேண்டியிருக்கிறது. ஆகவே அங்கே செல்க! " என்று கூறி ஆசிர்வதித்தார்.

குருவின் வார்த்தையைத் தட்ட முடியாததாலும், குரு வாக்கிற்கு மறு வாக்கு இல்லை என்பதாலும், சிதம்பரம் புறப்பட்டார் குரு நமசிவாயர். செல்லும் வழியிலெல்லாம் உண்ணாமுலை அன்னையிடம் உணவு வேண்ட, அன்னை பல்வேறு ரூபங்களில் வந்து குரு நமசிவாயருக்கு உணவளித்தார். பல தலங்களையும் தரிசித்துவிட்டு இறுதியில் சிதம்பரத்தை அடைந்தார் குரு நமசிவாயர். நடராஜப் பெருமானைத் தரிசித்தார். பல பாடல்களைப் பாடித் துதித்தார்.

ஆன்மிகப்பணிகள்

குரு நமச்சிவாயர் தில்லை மூவாயிரரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆலயத்தின் அருகே உள்ள திருப்பாற்கடலில் தங்கினார். அவரைக் காண வந்த பக்தர்கள் பொன்னையும், பொருளையும் அவரது அடியிற் குவித்தனர். அதனைக் கொண்டு ஆலயத் திருப்பணிகள் பலவற்றைச் செய்தார். மடம் ஒன்றை ஏற்படுத்தினார். தன்னை நாடி வந்த பக்தர்கள் பலருக்கும் பல நன்மைகளைச் செய்தார். இறைவன் மீது பரம ரகசிய மாலை, சிதம்பர வெண்பா போன்ற பல பாடல்களைப் பாடினார். அவர் பாடிய பாடல்களுள் ஒன்று ‘அண்ணாமலை வெண்பா’.

அண்ணாமலை வெண்பா

குரு நமசிவாயரால் பாடப்பெற்ற ‘அண்ணாமலை வெண்பா‘, குருவின் பெருமையையும், அருணாசலத்தின் அருமையையும் சிறப்பாகக் கூறுகிறது.

சீல முனிவோர்கள் செறியு மலை...
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை...
ஞான நெறி காட்டு மலை...
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை...

என்றும்

அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை - அன்பருக்கு
மெய் ஞானச் சோதி விளக்கு மலை

என்றும்

நீதி தழைக்கு மலை ஞானத் தபோதனரை வா என்று
அழைக்கு மலை அண்ணா மலை.

- என்றும்

பலவாறாக குரு நமசிவாயர், தனது ‘அண்ணாமலை வெண்பா’வில் அண்ணாமலைத் தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

சமாதி

குரு நமசிவாயர், சிதம்பரம் தலத்தில், திருப்பாற்கடல் குளக்கரை அருகே இருக்கும் திருப்பெருந்துறையில் மகாசமாதி அடைந்தார். அவரது சமாதி நிலையம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு அருகே, ஆலயத்தின் வடபுறத்தில் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஸ்ரீ மடமும் உள்ளது.

உசாத்துணை


✅Finalised Page