குமுதினி

From Tamil Wiki

குமுதினி (1905-1986) தமிழ் எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். தமிழில் பொதுவாசிப்பு உருவாகி வந்த தொடக்க காலத்தில் எழுதியவர். பெண்களின் வாழ்க்கையை குடும்பப்பின்னணியில் சித்தரித்தவர். தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். வங்காளம், குசராத்தி, இந்தி ஆகிய மொழிகளையும் அறிந்தவர். காந்தியக் கருத்துக்களில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர்.

பிறப்பு, கல்வி

குமுதினியின் இயற்பெயர் ரங்கநாயகி. ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாச ஆச்சாரியார், லட்சுமியம்மாள் இணையருக்கு 1905ல் பிறந்தார். இவர் தந்தை ஸ்ரீனிவாச ஆச்சாரியார் சம்ஸ்கிருத அறிஞர், நீதிபதியாகப் பணிபுரிந்தவர்.மூன்று சகோதரிகள் மூன்று சகோதரர்கள் கொண்ட பெரிய குடும்பம். இவர் அன்னை லட்சுமியம்மாள் கொடியாலம் வாசுதேவ ஐயங்காரின் மகள். தந்தையிடமிருந்து குமுனிதி ஆரம்பக் கல்வியை அடைந்தார்.

தனிவாழ்க்கை

குமுனிதிக்கு 10 வயதில் 16 வயதான ஸ்ரீனிவாச ஐயங்காருடன் மணம் நிகழ்ந்தது. கணவனின் ஆதரவில் இலக்கியங்களை வாசித்தார். அவருக்கு இளமையில் ஒரு காய்ச்சல் வந்தபின் செவிகள் கேட்காமலாயின. அதன் தனிமையே அவரை எழுதத் தூண்டியது. ஆனால் நகைச்சுவையான எழுத்தின் வழியாக அந்த தனிமையை கடந்தார்.

இலக்கியவாழ்க்கை

குமுதினி தனக்கு தாகூரின் நாவலான ’யோக யோக்’ கதையின் கதாநாயகி பெயரைப் புனைபெயராகச் சூட்டிக்கொண்டார். குமுதினியின் முதல்கட்டுரை பிரம்மாவின் பக்‌ஷபாதம் 1932ல் வெளியாகியது. அன்றிருந்த ஜகன்மோகினி, நந்தவனம், ஆனந்தபோதினி உள்ளிட்ட இதழ்களில் எழுதிவந்தார். குமுதினி என்னும் பெயரில் எழுதியமையால் அவர் எழுதுவது அவருடைய கணவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவர் எழுதத் தொடங்கி பதிநான்கு ஆண்டுகளுக்குப்பின்னர் கல்கி அவருடைய படத்துடன் அவரைப் பற்றி எழுதியபோதுதான் அவர் குடும்பம் அவர் எழுதுவதை அறிந்தது. ஆனால் அவர் அப்போது நாடறிந்த எழுத்தாளராக ஆகிவிட்டிருந்தார்.

1930 களில் குமுதினி ஆனந்த விகடனில் ’பொழுது போக்கு’ என்னும் தலைப்பில் பல கட்டுரைகள் எழுதினார். பல்வேறுத் தலைப்புகளில் இதழ்களில் இவர் எழுதிய சில கட்டுரைகள் 'சில்லறை சங்கதிகள்' என்னும் தொகுப்பாக 1948 இல் கல்கியின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டன. குமுதினியின் பல கட்டுரைகள் பயணங்கள் குறித்தவையாகவும் இருந்தன. ராஜஸ்தான் குஜராத் போன்ற மாநிலங்களுக்கும் துவாரகை, ஆக்ரா, இமாலயம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்த அனுபவங்களைத் தம் கட்டுரைகளில் எழுதினார். மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்து பயணக் கட்டுரைகள் எழுதினார். 1939ல் ஆனந்த விகடன் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் குமுதினி நடுவராக இருந்தார் (அதில் பிற்காலத்தில் புகழ்பெற்ற மீ.ப.சோமு, புரசு பாலகிருஷ்ணன் ஆகியோர் பரிசு பெற்றனர்)

அரசியல்

குமுதினி அவர் கணவர் ஸ்ரீனிவாச ஐயங்கார் இருவருமே தீவிரமான காந்திய ஆதரவாளர்கள். எப்போதுமே கதராடை அணியும் நெறி கொண்டவர்கள்.ஜே. சி. குமரப்பாவின் ’கிராம இயக்கம்’ என்னும் நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். யாழ்ப்பாணத்து அரியநாயகம் காந்தியின் வார்தா ஆசிரமப் பள்ளியை நடத்தியபோது வார்தா சென்று அங்கே தங்கியிருந்து உதவினார். குழந்தைகள் பள்ளி அமைத்த மாண்டிசரி அம்மையாரைநேரில் அறிந்தவர். குழந்தைக் கல்வி இயக்கத்திலும் ஈடுபட்டார். திருச்சி சேவாசங்கம் என்னும் சமூகசேவை அமைப்பை உருவாக்கினார். காந்திய வழியில் பணியாற்றும் அந்த அமைப்பு இப்போதும் தொடர்கிறது.

மொழிபெயர்ப்புகள்

சமய, ஆன்மீக நூல்களை மொழி பெயர்ப்பதில் ஆர்வம் கொண்டார். நம்மாழ்வாரின் நூறு பாசுரங்கள் இவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு நூலாக வெளிவந்தது. . இரவீந்திர தாகூரின் 'யோகாயோக்' எனும் புதினத்தை மொழிபெயர்த்தார். பெண்களின் அவலநிலைகளைச் சுட்டிக் காட்டும் புதினம் இது.

நாடகங்கள்[தொகு]

1939 இல் ’குடும்பக் காதல்’ என்னும் ஓரங்க நாடகத்தை குமுதினி எழுதினார். இந்நாடகம் பொருளார்ந்த நகைச்சுவையுடன் எழுதப்பட்டது. 'விசுவாமித்திரர்', 'டில்லி சென்ற நம்பெருமாள்' என்னும் நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. திருவரங்கம் கோவிலில் உள்ள துலுக்க நாச்சியார் சந்நிதி உள்ளதை எண்ணிப் பெருமிதம் கொண்டு இந்து-முசுலிம் ஒற்றுமைக்கு வழிகோலும் துலுக்க நாச்சியார் பற்றி ஒரு நாடகம் எழுதினார். இந்நாடகம் திருவரங்கத்தில் 1975 ஆம் ஆண்டில் அரங்கேறியது. 'புத்திமதிகள் பலவிதம்' என்னும் நாடகம் 1981 இல் எழுதப்பட்டு அரங்கேறியது.

புதினங்கள்[தொகு]

குமுதினியின் சிறுகதைகளில் நகைச்சுவையும் அங்கதமும் பரவலாகக் காணலாம். இந்தி மொழி, கதர் தேசியம், விடுதலைப் போராட்டம், குழந்தை வளர்ப்பு எனப் பல விடயங்களைப் பற்றி குமுதினி எழுதினார். 'மக்கள் மலர்ச்சி' என்னும் இவரது நூல் 1944 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ’திவான் மகள்’ என்னும் புதினம் சாதி மறுப்புத் திருமணத்தின் தேவையைச் சித்தரிக்கிறது. குடும்ப வாழ்க்கை, கணவன்-மனைவி உறவுகள் ஆகியனவும் பெண்களின் கல்வி, துணிவு, தொழில் போன்றனவும் குமுதினியின் படைப்புகளில் இடம்பெறுகின்றன. காவிரிக் கரையருகில் உள்ள திருவரங்கத்தின் வரலாறு அந்நகராட்சியின் செயல்பாடு கல்வி ஆகியவற்றைப் படம்பிடித்துக் காட்டுகிறார். நாட்டு மருத்துவம், சமையல் குறிப்புகள், யாத்திரை செய்யக் கூடிய புனிதத் தலங்கள் போன்ற பல செய்திகளைச் சேகரித்து 'சதாங்கம்: ஆயிரம் விஷயம்' என்று ஒரு பெரிய நூலை எழுதி வெளியிட்டார்.

பிற பணிகள்[தொகு]

காந்தியக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு குமுதினி கதராடை உடுத்திக் கொண்டார். கைக்குத்தல் அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டார். வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தார். காந்தியுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். திருவரங்கத்தில் வாழ்விழந்த பெண்களுக்காக ஒரு சங்கமும் பள்ளியும் தோற்றுவித்தார். காந்தியடிகளின் நினைவாகத் திருச்சியில் சேவா சங்கத்தைத் தோற்றுவித்தார்.

உசாத்துணை

குமுதினி, ஆசிரியர்:பிரேமா நந்தகுமார், சாகித்திய அகாதமி வெளியீடு

குமுதினி கதைகள், இணையத்தில்