குன்றக்குடி அடிகளார்
குன்றக்குடி அடிகளார் (திருக்கயிலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி பரமாச்சாரிய சுவாமிகள்) தமிழ்ச் சைவ மெய்யியலாளர். துறவி. தமிழறிஞர். சமூகப்பணியாளராகவும் சைவசமயப் பேச்சாளராகவும் புகழ்பெற்றிருந்தார்.
பிறப்பு, கல்வி
பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூர் அருகே உள்ள சிறுகிராமமாகிய நடுத்திட்டு (வைத்தீஸ்வரன் கோயி- திருப்பனந்தாள் சாலையில் உள்ளது) என்னும் சிற்றூரில் சீனிவாசம் பிள்ளைக்கும் சொர்ணத்தம்மாளுக்கும்11 ஜூலை 1925ல் கடைசிக்குழந்தையாக குன்றக்குடி அடிகளார் பிறந்தார். இயற்பெயர் அரங்கநாதன். அவருக்கு இரண்டு அண்ணன்களும் ஒரு அக்காவும் இருந்தனர்.
குன்றக்குடி அடிகளாரின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்ககலையில் படிப்பதற்காக அவர் குடும்பம் சிதம்பரத்திற்கு இடம்பெயர்ந்தது.சிதம்பரம் அருகே திருவேட்களம் என்னும் ஊரில் வாடகவீட்டில் வசித்தனர். சீனிவாசம் பிள்ளையும் குடும்பத்தினரும் மாடுகளை வளர்த்து பால் வணிகம் செய்தனர். பல்கலை கழகப் பேராசிரியர்களுக்கு பால் கொண்டுசென்று அளித்தபோது அவர்களிடம் அணுக்கமான குன்ற்றக்குடி அடிகளார் ந. மு. வேங்கடசாமி நாட்டார் ,ரா.பி. சேதுப்பிள்ளை , சுவாமி விபுலானந்தர் ஆகியோரிடம் அணுக்கமாகி தமிழார்வத்தை அடைந்தார்.
இளமையில் ரா.பி.சேதுப்பிள்ளை குன்றக்குடி அடிகளாருக்கு பொருளுதவி செய்திருக்கிறார். குன்றக்குடி அடிகளாரின் மரபுவழி நிலங்களை சிலர் பறித்துக்கொண்டதை அறிந்து வழக்கறிஞரான சேதுப்பிள்ளை சட்ட உதவியும் பொருளுதவியும் செய்து அந்த நிலங்களை மீட்டு அளித்தார். விபுலானந்தர் சிற்றூர்களில் அந்தியில் ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கச் செல்லும்போது கைவிளக்கு ஏந்தி உடன்செல்வதை குன்றக்குடி அடிகளார் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
குன்றக்குடி அடிகளாரின் தமையன் கோபாலகிருஷ்ணன் புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டி என்னும் ஊரில் தமிழாசிரியப் பணியில் சேர்ந்தார். குன்றக்குடி அடிகளார் அங்கேயே தன் பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். தருமபுரம் மடத்தில் துறவியாக ஆனபின் 1945- 1948 ஆம் ஆண்டில் தமிழ் கற்று வித்வான் பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
பள்ளிப்படிப்பு முடிந்தபின் பணிக்கு முயன்ற குன்றக்குடி அடிகளார் ராணுவத்தில் சேர முயன்றும் உயரம் இல்லாமையால் வாய்ப்பு கிடைக்கவில்லை. பேருந்து நடத்துநர் உரிமம் பெற்றும் வேலை கிடைக்காமல் இராயவரத்தில் காகித உற்பத்தி குடிசைத்தொழிற்கூடத்தில் பணிசெய்தார். ஊனியூர் என்னும் ஊரில் சிறிதுநாள் ஆசிரியப்பணி புரிந்தார்.பதினாறு வயதில் தருமபுரம் ஆதீனம் சுப்ரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் தபால்களை அனுப்பும் உதவியாளராக பணி ஏற்றார்.
தருமபுரம் ஆதீனம் குன்றக்குடி அடிகளாரை துறவுபூணும்படி வழிகாட்டினார். தன் பதினேழரை வயதில் 1942 இறுதியில் தருமபுரம் ஆதீனத்திடமிருந்து யாத்திரைக்காஷாயம் என்னும் முதல்நிலைத் துறவை பெற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு கந்தசாமிப் பரதேசி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. துறவின் நெறிப்படி குன்றக்குடி அடிகளார் தெற்கே செல்லும்படி தன் ஆசிரியரிடமிருந்து ஆணைபெற்று மதுரை, திருநெல்வேலி, கன்யாகுமரி வரை 47 நாட்கள் நடந்து பிச்சை எடுத்தபடிச் சென்று திரும்பியபின் குருவிடம் மந்திரகாஷாயம் என்னும் அடுத்தநிலை துறவைப் பெற்றுக்கொண்டார். 1945 ல் தாருமபுரிஅம் ஆதீனத்தின் கட்டளைத் தம்புரான் என்னும் பதவியை அடைந்தார்.
ய்அரசியல்
பள்ளி நாட்களில் குன்றக்குடி அடிகளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தேவநேசன், இதழாளர் இரா. பத்மநாபன் போன்றவர்கள் முன்னெடுத்த சமபந்தி விருந்து நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த சூ.பழனியப்பா என்பவரிடமிருந்து குடியரசு, விடுதலை இதழ்களை பெற்று வாழிக்கலானர். கடியாப்பட்டியில் இருந்த ஜோதி வாசகசாலையில் நூல்களை வாசித்துவந்த குன்றக்குடி அடிகளார் வ.வு.சி பற்றி பாரதி எழுதிய பாடல்களை அங்கே பாடியமையால் அங்கு நூல்களை வாசிக்கவரக்கூடாதென விலக்கப்பட்டார். ஆகவே நண்பர்களின் உதவியுடன் வினோபா பாவே வாசகசாலை என்ற ஒன்றை ஆரம்பித்தார்.