under review

குக்கூ இயக்கம்

From Tamil Wiki
Revision as of 12:54, 27 October 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Inserted READ ENGLISH template link to English page)

To read the article in English: Cuckoo Movement. ‎

குக்கூ அமைப்பு

குக்கூ குழந்தைகள் இயக்கம் குழந்தைகளுக்கு மாற்றுக்கல்வியை அறிமுகப்படுத்தும் தன்னார்வலர் இயக்கம். இது தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பொதுப்பணியாளரான சிவராஜ் தொடங்கியது.

குக்கூ குழந்தைகள் இயக்கம்

குழந்தைகளின் அகவுலகத்தில் மாறுதல்களை உருவாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் 2002-ல் 'குக்கூ குழந்தைகள் இயக்கம்’ துவங்கியது. மலைக்கிராமங்களில் நூலகங்கள் அமைத்தல், அரசுப்பள்ளிகளில் பல்வேறு கலைப் பயில்முகாம்களை நிகழ்த்துதல், சிறுசிறு நூல்கள் வெளியிடுதல் என முழுக்க குழந்தைகள் சார்ந்தும், சூழலியல் சார்ந்துமாக செயல்படுகிறது குக்கூ. கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில், புளியானூர் கிராமத்தில் 'குக்கூ காட்டுப்பள்ளி’ செயல்படுகிறது. குழந்தைகளுக்கு கலைகள், கைத்தொழில்கள், இலக்கியம் வழியாக மாற்றுக்கல்வியை அளிப்பதே நோக்கம்

குக்கூ காட்டுப்பள்ளி

குக்கூ காட்டுப்பள்ளி குக்கூ குழந்தைகள் வெளியின் சிவராஜ், பீட்டர் ஜெயராஜ் போன்றோரால் 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இயற்கையோடு வாழ் இயற்கைக்குத் திரும்பு என்பதையே இலக்காகக் கொண்டு செயல்படுவது. பொம்மை உருவாக்குபவரான அரவிந்த் குப்தா இதை திறந்துவைத்தார்.

தும்பி சிறார் இதழ்

வண்ணங்கள் நிரம்பிய ஓவியக்கதையுலகை குறைந்த செலவில் கிராமத்துக் குழந்தைகளுக்கு தமிழில் வாசிக்க வகைசெய்யும் நோக்கத்துடன் 'தும்பி சிறார் மாத இதழ்’ தேர்ந்த அச்சுத் தரத்தில் துவங்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கதைப்புத்தகமாக கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தும்பி வெளிவருகிறது. www.thumbigal.com

தன்னறம் நூல்வெளி

காந்தியம், சூழலியல், தற்சார்பு, கல்வி, வேளாண்மை, இறைமை, வாழ்வியல், தத்துவம் மற்றும் குழந்தைகள் சார்ந்த புத்தகங்களை நற்தேர்ந்த வடிவமைப்புடன், உயரிய தரத்துடன் தமிழில் தொடர்ந்து அச்சுப்படுத்தும்  கனவில் முளைத்தது 'தன்னறம் நூல்வெளி’. எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட வெவ்வேறு முக்கியமான படைப்பாளிகளின் புத்தகங்கள் தன்னறம் பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது. 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. www.thannaram.in

ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்

தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் பழங்கிணறுகளைத் தூர்வாரி, அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு உகந்த நீராதாரமாக மாற்றித்தரும் பொருட்டு உருவானதே ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம். 2019-ல் தொடங்கப்பட்டது

தன்னறம் விருது

இலக்கியத்தில் செயல்படும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் முகமாக தன்னறம் அமைப்பு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. ரூபாய் ஒருலட்சம் பரிசும் சிற்பமும் அடங்கியது இப்பரிசு. பரிசுபெறுபவர் பற்றி ஓர் ஆவணப்படமும் எடுக்கப்படும். 2020 முதல் அளிக்கப்படும் இவ்விருது யூமா வாசுகி (2021) தேவி பாரதி (2021) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது

முகம் விருது

குக்கூ அமைப்பால் பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு அளிக்கப்படும் விருது இது.

கொள்கைகள்

இளைய மனங்களுக்கு நேர்மறையான விடயங்களைக் கொண்டுசேர்க்கும் பொறுப்பும் விருப்பமுமே சமகாலத்தில் இன்றியமையாத தேவை என மனதிற்குப்படுகிறது. வாழ்விலிருந்து அந்நியப்படாத, இவ்வாழ்வை மீண்டும் மீண்டும் நம்பிகையோடு நேசிக்கச் செய்யும் அகவிசையைத் தருகிற எல்லா தத்துவங்களையும், ஆசான்களையும் உட்கிரகித்துக் கொள்வது தங்கள் அமைப்புகளின் கொள்கைகள் என்று சிவராஜ் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page