under review

கிருஷ்ணவேணி

From Tamil Wiki
Revision as of 20:23, 27 February 2024 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கிருஷ்ணவேணி (பிறப்பு: ஜூன் 5, 1956) ஈழத்துப் பெண் எழுத்தாளர், திரைப்பட நடிகர். கவிதை, சிறுகதை, விமர்சனங்கள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கிருஷ்ணவேணி இலங்கை இரத்தினபுரி எஹலிகொடையில் ஜூன் 5, 1956-ல் பிறந்தார். இவரது தந்தை நல்லையா. ரத்தினபுரி பலாங்கொடை கனகநாயகம் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கை வானொலியின் கல்விச் சேவையில் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

கிருஷ்ணவேணியின் முதல் கவிதை சிந்தாமணி பத்திரிகையில் வெளிவந்தது. தொடர்ந்து படைப்புகள் தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோநியூஸ், உதயசூரியன் ஆகிய நாளிதழ்களிலும் வெளிவந்தன. கவிதை, சிறுகதை, விமர்சனங்கள் எழுதினார். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவை, வர்த்தக சேவை, ஊவா சமூக வானொலி, பிறை எப்.எம், வசந்தம் எப்.எம் தமிழ் வானொலி ஆகியவற்றிலும் முகநூலிலும் இவரது கவிதைகள் வெளியாகின.

கிருஷ்ணவேணி பாசம், காதல், இயற்கை, மலையக மக்களின் பிரச்சினை, பெண் பாசம், பெண் உரிமை, சமூக அவலங்கள், சிறுவர் துஷ்பிரயோகம், உறவுகளின் விரிசல், சிறுவர் நலன்கள், விழிப்புணர்வு ஆகிய பேசு பொருட்களில் எழுதினார். ஆரம்பத்தில் வானொலிக்கு ஆக்கங்கள் எழுதி வந்தார். குறிப்பாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் 'இசையும் கதையும்', 'பாட்டும் பரதமும்', 'பூவும் பொட்டும்', 'மங்கையர் மஞ்சரி', 'தேர்ந்த இசை', 'ஒலிமஞ்சரி' ஆகிய நிகழ்சிகளிலும் இவரின் ஆக்கங்கள் ஒலிபரப்பப்பட்டன.

கிருஷ்ணவேணி ஊவா சமூக வானொலியில் ஒலிபரப்பாகும் கவிதை அரங்கேறும் நிகழ்ச்சியிலும், பொங்கல், தீபாவளி, சிறப்பு கவிதை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.

திரை வாழ்க்கை

கிருஷ்ணவேணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். சிங்களப் படத் தயாரிப்பாளர் பெனட் ரட்நாயக்க தயாரித்து 2018-ல் வெளிவந்த 'நெலா' என்ற சிங்களப் படத்தில் நடித்தார்.

விருதுகள்

கிருஷ்ணவேணி மலையக மன்றத்தினால் நடத்தப்பட்ட கவிதை போட்டி, பிரதேச, மாகாண சபைகளினால் நடத்தப்படும் கவிதை, சிறுகதை, பாடல் ஆக்கப் போட்டிகளிலும் கலந்து கொண்டு சான்றிதழ்களும், பரிசில்களும் பெற்றார்.

உசாத்துணை


✅Finalised Page