கிருஷ்ணன் நம்பி
Under Progress. M.Thangapandiyan
கிருஷ்ணன் நம்பி (ஜூலை 24, 1932), மென்மையும் கிண்டலும் நகைச்சுவையும் முதன்மையான இயல்புகளாகக்கொண்ட தமிழ் எழுத்தாளர். இயற்பெயர் அழகிய நம்பி. இவரும் சுந்தர ராமசாமியும் இலக்கிய இரட்டையர் என்று அறியப்பட்டார்கள். இந்தப் பிரபஞ்சமே கவிதை, சிறுகதை, நாவல்களால் ஆனது எனத் தீர்மானம் கொண்டவர். குழந்தைகளின் மன உலகை நுட்பமாகக் கட்டமைத்த கதைகளை எழுதியவர். "அழகிய பிதற்றல்களால் லௌகீக வாழ்க்கையைப் பாழடித்துக்கொண்ட கற்பனைப் பேர்வழிகளில் நானும் ஒருவன். ஆனால், இதில் எனக்கு தன்னிரக்கம் எதுவும் கிடையாது" என்று தன்னைப்பற்றி சொல்லிக்கொண்டவர்.
தனிவாழ்க்கை
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவிலில் இருந்து எட்டு மைல் தொலைவில் உள்ள அழகியபாண்டிபுரம் எனும் சிற்றூரில் ஜூலை 24, 1932ல் கிருஷ்ணன் நம்பி பிறந்தார். பெற்றோர்களுக்கு கிருஷ்ணன் நம்பி முதல் குழந்தை. கிருஷ்ணன் நம்பியுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஒரு சகோதரர் ; இரண்டு சகோதரிகள்.
அழகியபாண்டியபுரத்தில் விவசாயம் செய்துவந்த கிருஷ்ணன் நம்பியின் தந்தை 1939இன் பிற்பகுதியில் நாகர்கோவிலில் உர வியாபாரத்தை ஆரம்பித்தார். கிருஷ்ணன் நம்பிக்கு எட்டு வயது இருக்கும்போது, 1940 ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு குடும்பம் மாறியது. நாகர்கோவிலில் தொடங்கிய பள்ளிப் படிப்பு உகந்ததாக இருக்கவில்லை. குறிப்பாக கணிதம். எட்டாவதிலும், பள்ளி இறுதி வகுப்பிலும் முதல் முறை தேறாமல் மீண்டும் எழுதிதான் வெற்றிபெற்றார். பின்பு நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் சேர்ந்து இண்டர்மீடியட் படித்தார். அதில் இறுதித் தேர்வில் அவரால் தேர்ச்சிபெற இயலாததால் படிப்பு ஒரு முடிவுக்கு வந்தது. அதன்பின் தந்தையின் உர வியாபாரத்தை கவனித்தார். ஆனால் வியாபாரமும் வசூலும் மிகவும் குறைவாக இருந்தது.
ஆகஸ்ட் 20, 1958ல் கிருஷ்ணன் நம்பிக்கு ஜெயலட்சுமி உடன் திருமணம் ஆயிற்று. காங்கிரஸ் தியாகி கொடுமுடி ராஜகோபாலன் சிபாரிசில் நம்பிக்கு `நவசக்தி’யில் ஃபுருஃப் ரீடர் வேலை கிடைத்தது. மாதம் எண்பது ரூபாய் சம்பளம். சென்னையில் ராயப்பேட்டை மணிக்கூண்டு எதிரே `சங்கர் லாட்ஜி’ல் அறை எடுத்துக் கொண்டார்.
நம்பியின் உடல் நிலை மோசமாகிக்கொண்டே வந்ததால் `நவசக்தி’யில் வேலையை விட்டு ஊர் திரும்பினார். “ஏராளமான இருமல்களுடனும், அரைக் கிலோ திராட்சையுடனும் நம்பி வெற்றிகரமாக நாகர்கோவில் திரும்பினார்’’ என்று அவரது சகோதரர் கே. வெங்கடாசலம் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். ஊருக்குத் திரும்பி சிறிது காலம் விவசாயம் செய்தார். பின்னாளில் அவரது தந்தையின் உடல்நிலை மோசமாகி படுத்த படுக்கையானதால் மொத்த நிர்வாகத்தையும் நம்பியே கவனிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வியாபாரத்தில் நம்பிக்கு அவரது தந்தையின் நண்பர்கள் உதவினர். தோவானைத் தாலுகாவுக்கான திகிசிஜி நிறுவனத்தாரின் மொத்த வியாபார உரிமத்தையும் நம்பி வாங்கினார். அப்புறம் பூதப்பாண்டியில் வியாபாரத்தை நிறுவுவது என்று தீர்மானித்து குடும்பத்துடன் 1963 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பூதப்பாண்டிக்குச் சென்றார். இந்நிலையில் அவரது தந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகவே அவர் நாகர்கோவிலைவிட்டு பூர்வீகமான அழகியபாண்டியபுரம் வந்து குடியமர்ந்தார். எனவே நம்பியின் பொறுப்பு குடும்பத்தில் இன்னும் அதிகமானது. ஆனாலும் மிகவும் சிரமத்துடன்தான் அவர் சமாளித்து வந்தார். கிருஷ்ணன் நம்பிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். ஒரு மகன் 1986 இல் மறைந்து விட்டார்.
இலக்கிய வாழ்க்கை
கிருஷ்ணன் நம்பியின் இலக்கியப் பிரவேசம், 1948 ம் ஆண்டில் வை. கோவிந்தனின் `சக்தி' பத்திரிகையில் `நாட்டுப்பாடல்கள்’ பற்றிய கட்டுரையின் மூலம் ஆரம்பமாயிற்று. அப்போது நம்பிக்கு 16 வயது, பத்தாவது படித்துக்கொண்டிருந்தார். கிருஷ்ணன் நம்பியின் ஆரம்பகாலப் படைப்புகள் கம்யூனிஸ்ட்டுகளான தொ.மு.சி.ரகுநாதன், வ.விஜயபாஸ்கரன் ஆகியோர் நடத்திய இலக்கிய இதழ்களான `சாந்தி', `சரஸ்வதி'யில் வெளியாகின. தொடர்ந்து `தாமரை’ `கலைமகள்', `சதங்கை', `ஆனந்த விகடன்', `கணையாழி', `தீபம்' போன்ற பல இதழ்களிலும் எழுதினார்.
1950 ஆம் ஆண்டு கலைமகள் நிறுவனத்தின் பத்திரிகையான `கண்ணன்’ ல் குழந்தைப் பாடல்களை `சசிதேவன்’ என்கிற பெயரில் எழுதினார். சிறுவயதிலேயே நம்பிக்கு குழந்தைகளிடம் அபரிமிதமான ஈடுபாடு இருந்தததால் அவரது ஆரம்பகால இலக்கிய முயற்சிகள் பெரும்பாலும் குழந்தைப் பாடல்களாகவே இருந்தது. அச்சில் வெளிவந்த நம்பியின் முதல் சிறுகதை `சுதந்திர தினம்’. குழந்தைகளை மையமாக வைத்து எழுதப்பட்டது. விஜயபாஸ்கரன் தொடங்கிய `சரஸ்வதி’ இதழில் 1951 ஆகஸ்ட் மாத சுதந்திர தின இதழில் இக்கதை வெளியானது. மேலும், கிருஷ்ணன் நம்பி சுமார் 11 குழந்தைக் கவிதைகளை `சரஸ்வதி’ இதழில் எழுதியுள்ளார்.
தமிழ்ப் புத்தகாலயம் 1965 ஆம் ஆண்டு கிருஷ்ணன் நம்பியின் 39 குழந்தைப் பாடல்களை தொகுத்து அழ. வள்ளியப்பாவின் முன்னுரையுடன் `யானை என்ன யானை?’ புத்தகத்தை கொண்டு வந்தது.
`நீலக்கடல்’கதையை தனது 18-வது வயதில் எழுத ஆரம்பித்து முழுமையாகப் பூர்த்திசெய்தபோது, நம்பியின் வயது 28. இந்தக் கதை 1961-ம் ஆண்டில், 'சரஸ்வதி’ இதழில் வெளிவந்தது. நம்பியின் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதை இந்தக் கதை' என்று சுந்தரராமசாமி குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மைதான். ஏனெனில், அது கிருஷ்ணன் நம்பியின் கதை.
1995 ஆம் ஆண்டு ஸ்நேகா பதிப்பகம் `காலை முதல்’, `நீலக்கடல்’ இரண்டு தொகுப்புகளிலுமுள்ள கதைகளை தொகுத்து 19 கதைகளடங்கிய `கிருஷ்ணன் நம்பி கதைகள்’ புத்தகத்தை கொண்டு வந்தது.
கிருஷ்ணன் நம்பிக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையேயான 25 வருட நட்பு, சுந்தர ராமசாமி கொண்டுவந்த `புதுமைப்பித்தன் நினைவு மலரை’ ஒட்டி ஏற்பட்டது.
இலக்கிய அழகியல்
சுந்தர ராமசாமி சொல்வதுபோல ‘பாதியில் முறிந்த பயணம்’ எனினும் அந்தப் பயண காலத்துக்குள் இலக்கியத்தின் எல்லா வகைகளிலும் கிருஷ்ணன் நம்பி ஈடுபட்டிருக்கிறார். சிறுகதைகள், கவிதைகள், குழந்தைப் பாடல்கள், கட்டுரைகள், இலக்கியக் குறிப்புகள், முன்னுரைகள், கடிதங்கள் என. கிருஷ்ணன் நம்பியின் பலம் தோற்றுக் கொண்டு இருக்கும் மனிதர்களின் மனப் போராட்டத்தை சித்தரிப்பது. அவருடைய சிறந்த கதைகள் எல்லாவற்றிலும் இது அடி நாதமாக ஓடி பல முறை வீரியத்துடன் வெளிப்படுகிறது, கதை எங்கேயோ போய்விடுகிறது. கிருஷ்ணன் நம்பியின் கதை உலகம் பற்றாக்குறை உலகம். அதில் சந்தோஷமாக இருப்பவர்கள் குறைவு [1]. நம்பியின் இரண்டாவது பலம் குழந்தைகளை சித்தரிப்பது. குழந்தைகளின் புத்துணர்ச்சியூட்டும் தன்மை, குரூரம் இரண்டையும் அருமையாகக் கொண்டு வருவது.
கிருஷ்ணன் நம்பியின் நெருங்கிய சகாவாக 1952-ம் ஆண்டு முதல் அவரது இறுதிக்காலம் வரை இணைந்து பயணித்த எழுத்தாளர் சுந்தரராமசாமி, சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள `இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் கிருஷ்ணன் நம்பியைப் பற்றி மிகச் சிறப்பான அறிமுகத்தை எழுதியுள்ளார். `தன்னைப் பாராட்டிக்கொள்வதைவிடவும் தன் மீதான விமர்சனத்தை விளம்பரப்படுத்திக்கொள்வதில் அவருக்கு தனி உற்சாகம் இருந்தது. இடைவெளி விடாமல் எழுதக்கூடிய பழக்கம் அவரிடம் இல்லை. நினைத்து நினைத்துத் தள்ளிப்போட்டு ஒருநாள் எழுதக்கூடியவர். ஆகவே, மிகக் குறைவாகத்தான் அவரால் எழுத முடிந்தது. நன்றாக எழுத வேண்டும் என்ற ஆசைதான் சதா அவரைத் தூண்டிக்கொண்டிருந்தது. எழுதிக் குவிக்க வேண்டும் என்ற எண்ணம், அவருக்கு எப்போதும் இல்லை. அத்துடன் நம்பி, வெகுஜனப் பத்திரிகைகளுக்கு தன் கதைகளைப் பொதுவாக அனுப்ப விரும்பவில்லை. வித்தியாசமான கதைகளையே எழுத வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்த நம்பியின் கதைகள் பிரபல இதழ்களில் வெளிவருவதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருந்தது. அவர் தம் வாழ்நாளில் எழுத்துகள் மூலம் பெற்ற வருமானம் மிகக் குறைவாகவே இருந்திருக்கும்' என்பது சுந்தரராமசாமி வரையும் சித்திரம்.
‘மருமகள் வாக்கு’ என்கிற சிறுகதை, 1980இல், ‘நேஷ்னல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’, நியூ டெல்லி, ‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ என்கிற தலைப்பில் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு (தொகுப்பாசிரியர் அசோகமித்திரன்), 1994இல், கலைஞன் பதிப்பகத்தார் வெளியிட்ட“இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்” தொகுப்பு (தொகுப்பாசிரியர் விட்டல் ராவ்), 1999ஆம் ஆண்டுCONTEMPORARY Tamil Short Fiction என்கிற தலைப்பில் East West Books (Madras) Pvt. Ltd., தமிழின் சில சிறந்த சிறுகதைகள் (மொழிமாற்றம் - வசந்த சூர்யா; தொகுப்பாசிரியர் எழுத்தாளர் திலிப் குமார்) மற்றும் 2014ல் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்த தமிழின் 100 சிறந்த சிறுகதைகள் ஆகியவற்றுள் இடம்பிடித்துள்ளது. இது கன்னட மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தன் சிறுகதைகளில் நல்ல தரத்தை எட்டியவர் அவருடைய முற்போக்குச் சிந்தனையால் அந்தத் தரத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு தரத்தை அவரால் எட்ட முடியாமல்போனது என்று க.நா.சு எழுதியிருக்கிறார்.
நகுலன் நம்பியைப்பற்றி கூறும்போது “குறுகிய நீதி அநீதி வரம்புகளைத் தாண்டி அனுபவத்தைக் குழந்தைக் காண்பது போல், அதன் முழு வடிவத்தில் கண்டு, வாழ்க்கையின் சம்பிரதாய மதிப்புகளைப் புறக்கணித்துவிட்டு கிருஷ்ணன் நம்பி என்னும் கலைஞன் வாழ்க்கையைத் தன் போக்கில் பரிசீலனை செய்கிறான். ஒவ்வொரு கதையையும் ஒரு கவிதை மாதிரி ரசிக்கலாம்” என்கிறார் [2].
எழுத்தாளர் ஜெயமோகனின் தமிழ்ச் சிறுகதை – திறனாய்வாளன் பட்டியலில் கிருஷ்ணன் நம்பியின் ’மருமகள் வாக்கு’, ’தங்க ஒரு…’, ’சத்திரத்து வாசலில்’ ஆகிய கதைகள் இடம்பெற்றுள்ளன [3].
மறைவு
1974 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக கிருஷ்ணன் நம்பியின் இடது காலை ஆபரேஷன் செய்து எடுத்தபிறகு ஒன்றரை ஆண்டுகள் உயிருடன் இருந்தார். நுரையீரல் பாதிக்கப்பட்டு ஜூன் 16, 1976 அன்று காலையில் தனது 44-ஆவது வயதில் நாகர்கோவில் மத்தியாஸ் மருத்துவமனையில் காலமானார்.
நூல் பட்டியல்
1. `நாட்டுப்பாடல்கள் - கட்டுரை - 1948
2. யானை என்ன யானை?’ குழந்தைப்பாடல்கள் - 1965
3. காலைமுதல் சிறுகதைத்தொகுப்பு
4. நீலக்கடல் சிறுகதைத்தொகுப்பு - 1961
5. மருமகள் வாக்கு சிறுகதை- 1974
6. கிருஷ்ணன் நம்பி கதைகள் - 1995 - ஸ்நேகா பதிப்பகம் (`காலை முதல்’, `நீலக்கடல்’ இரண்டு தொகுப்புகளிலுமுள்ள 19 கதைகளடங்கியது)
7. கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் -2009- ராஜமார்த்தாண்டன் (தொகுப்பாசிரியர்) - காலச்சுவடு பதிப்பகம்