being created

கிராதம் (வெண்முரசு நாவலின் பகுதி - 12)

From Tamil Wiki
Revision as of 19:15, 23 February 2022 by Dr.P.Saravanan (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

கிராதம் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 12)

கிராதம் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 12) இந்திரனுக்கும் விருத்திரனுக்குமான போரினை ஓர் இழையாகவும் சைவ நெறிகளை மறு இழையாகவும் நுட்பமாகப் பின்னுகிறது. அர்ஜுணன் பாசுபதத்தை அடைவதுடன் இது நிறைவு பெறுகிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் 12ஆவது பகுதியான ‘கிராதம்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் அக்டோபர் 2016 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜனவரி 2017இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் கிராதத்தை அச்சுப் பதிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

வேதங்களுக்கு மாற்றாகப் புதிய வேதத்தை இளைய யாதவர் நிலைநிறுத்த விரும்புவதையும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்துத் தெய்வங்களும் ஓர் அணியில் திரள்வதையும் மையமாகக் கொண்டுள்ளது ‘கிராதம்’. இதில், கிராதனாகச் சிவனும் கிராதியாகக் காளியும் இந்தக் கிராதத்தில் இடம்பெறுகின்றனர். இந்தக் கிராதத்தில் சிவன் பல்வேறு வடிவங்களில் கிராதனாக வருவது கூடுதல் சிறப்பு.

கிராதத்தின் கதைப்பின்னல் இரண்டு பெரிய இழைகளைக் கொண்டுள்ளது. முதலாவது, இளைய யாதவருக்கு நிகர் நிற்பதற்காகவே அர்சுணன் நாற்திசைகளை வெற்றிகொண்டு, அதன் வழியாக ஒவ்வொரு திசைத் தெய்வத்திடமிருந்தும் ஒவ்வொரு மெய்மையைப் படைக்கலமாகப் பெற்றுக் கொள்வது. இரண்டாவது, புதிய வேதத்தைத் தடுக்கும்பொருட்டு இளைய யாதவருக்கு எதிராக அர்சுணனைப் போரில் நிறுத்தவே இந்திரன் முதலான அனைத்துத் தெய்வங்களும் பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றன. அதன் உச்ச நிகழ்வாக இந்திரன் இந்திரலோகத்திற்கு வரும்  அர்சுணனிடம் குருஷேத்திரப் போரின் பின்விளைவுகளை முன்கூட்டியே உரைக்கிறார். ஆனாலும் அர்சுணன் பிடிவாதமாக இளைய யாதவருக்கு நிகராகவும் அவருக்கு என்றென்றும் நண்பனாகவும் திகழவே விழைகிறார்.

தர்மர் வேதமெய்மையை முற்றறிவதோடு ‘சொல்வளர்காடு’ நிறைவு பெறுகிறது. அதனைத் தொடரும் இந்த கிராதத்தில், அர்சுணன் வேதமெய்மைகளைப் படைக்கலங்களாகக் கைக்கொள்ளும் விதங்கள் பற்றி விரிவாகக் காட்டப்பட்டுள்ளன. அந்தத் தேடல் சார்ந்த அவரின் வீர தீரப் பயணம் பெரும்பாலும் வழிநடைப்பயணிகளின் வழியாகவே கூறப்பட்டுள்ளது. சூதர்களின் மொழியாகவும் எழுத்தாளர் ஜெயமோகனின் கூற்றாகவும் அர்சுணனின் பயணம் விரிந்து விரிந்து நம் கண்முன்னால் நீள்கிறது. அர்சுணனால் நாற்திசைத் தெய்வங்களையும் வெற்றிகொண்டு, அத்திசைகளின் மையமான பாசுபதத்தைப் பெற்று, நிறைவுகொள்ள முடிகிறது.

இந்தக் கிராதத்தில், பிச்சாண்டவர், வைசம்பாயனன், மகாகாளர், கண்டன், ஜைமினி, பைலன், பிரசாந்தர், பிரசண்டன் ஆகியோரின் வழிநடைப் பயணத்தின் வழியாகவே எண்ணற்ற கதைகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அவர்களின் பயணத்தில் வழியாக வெவ்வேறு வணிகப்பாதைகள், வணிகக்குழுக்கள், வணிகப் பொருட்கள், பல்வேறு பருவங்களைக் கொண்ட பெருநிலங்கள், அடர்காடுகள், பெருமலைகள் எனப் பலவற்றையும் காட்சிப் படுத்தியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

அத்தனை திறன்களைப் பெற்றிருந்தும் வாழ்க்கை முழுவதும் தனிமையில் தவிப்பவர் அர்சுணன். தன்னந்தனியர். அதனால்தான் அவரால் ஓர் இடத்திலும் அமைவுகொண்டு இருக்க முடிவதில்லை. அவர் காற்றின் போக்கிற்கு அலையுறும் சருகுபோலவே தன்னுடைய தனிமையைப் போக்கிக்கொள்ள ஏதேதோ காரணங்களை முன்வைத்து, தனிப் பயணியாக அலைந்துகொண்டே இருக்கிறார்.   அர்சுணன் எங்கும் எந்நிலையிலும் தோல்வியை எதிர்கொள்ள விரும்பாதவர். வெற்றிகொண்டு முன்னேறிச் செல்வதே அவரின் வழி. அவர் பெறும் மெய்மையும் அதுவே. அர்சுணன் தான் நாற்திசைத் தெய்வங்களிடமிருந்து பெற்ற அதிஅம்புகளைக் கொண்டு போரிட்டும் இறுதியில் தோற்பது கிராதரான சிவனிடம் மட்டுமே. ஆனால், ‘அர்சுணன் கிராதரான சிவனைத் தன் ஆசிரியராகக் கொள்வதால், இந்தப் போரில் நீ தோல்வியை அடையவில்லை. ஏனென்றால் இது போரே அல்ல; பயிற்சி, கல்வி’ என்ற கருத்தில் கிராதியான காளி கூறுகிறார்.

ஜாததேவனின் குழந்தையை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக அர்சுணன் யமலோகத்திற்குச் செல்வதும் 28 வாயில்களைக் கொண்ட ‘பரிச்சேதம்’ என்பதில் அச்சமின்றி நுழைந்து, மீள்வதும் யமனிடம் இருந்து அன்புப் பரிசாகத் ‘தண்டகை’யைப் பெற்றுக்கொள்வதும் ஜாதவேதனின் இறந்த குழந்தையின் உயிருக்கு ஈடாகத் தன் மகனின் உயிரை வைத்து, அந்தக் குழந்தையை உயிர்ப்பிப்பதும் உணர்ச்சிகரமாகக் காட்டப்பட்டுள்ளன. அர்சுணன், ‘இலக்கு ஒன்றே என் வேதம்’ என்ற கொள்கையுடையவர். அதனால்தான் ‘பரிச்சேதம்’ வாயிலுக்குள் நுழைந்த அவர், யாருடைய குரலுக்கும் செவிசாய்க்காமல், ஜாதவேதனின் இறந்த குழந்தையை உயிர்ப்பிக்கும் இலக்கினை மட்டும் எய்து, திரும்புகிறார்.

ஸ்ரீராமரின் அம்புக்குப் பலியான வாலி, இந்திரலோகத்தில் பாலியாக அமர்ந்திருக்கிறார். அர்சுணனைப் போலவே பாலியும் இந்திரனின் மகன்தான். இளைய யாதவர் முன்பு ஸ்ரீராமராக இருந்தவர். ஆக, இப்போது இளைய யாதவர் அர்சுணனுக்கும் எதிரிதான். இளைய யாதவர் இந்திரனுக்குத் தம் குலத்தில் பூஜைகள் ஏதுமில்லாமல் செய்து, இந்திரனை ஒரு திசைத் தெய்வமாக மட்டும் அமரச் செய்துவிட்டார்.

விஸ்வாமித்திரனின் கொடிவழிவந்த காலவர், தன்னை இழிவு செய்த சித்தரசேனன் என்ற கந்தர்வனைக் கொல்வதற்காக இளைய யாதவரைத் தேர்கிறார். சித்தரசேனனின் மனைவி தன் கணவரைக் காத்துக்கொள்வதற்காக அர்சுணனைத் தேர்கிறார். ஆனால், சித்தரசேனனைக் கொல்வதாக இளைய யாதவர் வாக்களித்திருப்பதை அர்சுணன் பின்னரே அறிகிறார்.

வாக்களித்துவிட்டதால் அர்சுணன் இளைய யாதவரை எதிர்கொள்ள விழைகிறார். அஸ்வபகஷத்தில்  இளைய யாதவருக்கும் அர்சுணனுக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்தது. ஆனால், காலவரும் கந்தர்வன் சித்ரதேசனனும் தங்களுக்குள் சமரசமானதால், அந்தப் போர் பாதியிலேயே நிறைவுற்றது. அர்சுணன் உயிர்ப் பிழைத்தான். அதன்பின்னரே இளைய யாதவருக்கு நிகர்நிற்பதற்காகப் புதிய படைக்கலத்தைத் தேடி நான்கு திசைகளுக்கும் அலைந்தான் அர்சுணன். ஆனால், உண்மையில் அவனின் நோக்கம் வேறுவிதமாக இருப்பதை இந்திரலோகத்தில் பாலியைச் சந்தித்துத் திரும்பும் அர்சுணனின் மனவோட்டத்திலிருந்து அறிய முடிகிறது. அர்சுணன் இந்த உலகத்தில் அஞ்சுவது இளைய யாதவரிடம் மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பின்வரும் கதைநிகழ்வுகள் இந்தக் கிராதத்தில் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. அர்சுணன் தன் தந்தை இந்திரனின் கோரிக்கையைப் புறக்கணித்து, எதை இழந்தாலும் தான் இளைய யாதவனுடனேயே இருப்பேன் என்று கூறுவது. ஊர்வசி தன்னை விலக்கிய அர்சுணனின் மீது தீச்சொல்லிட்டு, அவனைப் பெண்ணாக்குவது. பெண்ணுருவை விரும்பி ஏற்ற அர்சுணன் மனத்தளவில் ராதையாக மாறி, இளைய யாதவருடன் செல்ல நினைப்பது. குழந்தை உக்ரன் தெய்வ அருள்கொண்டு வியாசரின் மனவோட்டத்தில் பேசுவதும் பாடுவதும். ஒருநிலையில் அவன் குழந்தையாகவும் மறுநிலையில் பெருஞ்சூதனாகவும் திகழ்கிறான். அவனை வழிநடைப் பயணிகள் நால்வரும் ‘மகாசூதன்’ என்று பாராட்டித் தம்முடன் நடைவழிப் பயணத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். நாற்திசைக்கும் நடுவில் உள்ள பாசுபதத்தைப் பெறுவதற்காகத் தம்மைத் தேடி வரும் அர்சுணனைச் சிவனும் காளியும் விநாயகரும் முருகரும் வேட்டுவக்குலத்தினர் போல உருமாறி, அவனை எள்ளிநகையாடுவது. இந்திரலோகத்தைக் கைவிட்ட இந்திரன் சதகூபம் பெருங்காட்டில் பிரபாலம் ஆலமரத்தின் உச்சிப்பொந்தில் ஒளிந்துகொண்டு, தேனுக்குள் தேனீயாக மயங்கிக் கிடக்கும் காட்சி. அவனை நாரதர் தெளிவிக்கும் பொருட்டு மேற்கொள்ளும் உரையாடல்.

இந்தக் கிராதத்தில் ஓர் ஒத்திசைவு நிகழ்ந்துள்ளது. இதனை எழுத்தாளர் ஜெயமோகன் திட்டமிட்டுச் செய்தாரா அல்லது அது தானே நிகழ்ந்துவிட்டதா எனத் தெரியவில்லை. அத்ரி முனிவரின் மனைவி மகாகாலரைக் குழந்தைவடிவில் காண்பது. அதன் வழியாகத் தன் கணவரின் சினத்திலிருந்து தப்புகிறார். இந்திரகீலத்திற்குச் செல்லும் அர்சுணனை இறுதியாக வழிநடத்தும் இளம்பெண்ணின் பெயர் மத்யை. சிறுமியாக உருமாறும் அவளை அர்சுணன் தூக்கிக் கொஞ்சிக்கொண்டே மலையேறுகிறார். அதனால்தான் அவர் இறுதித் தடையையும் கடந்து, இந்திரனைச் சந்திக்க முடிகிறது. அன்னை தன் மைந்தனைக் குழந்தையாகப் பார்ப்பதும் தந்தை தன் இளமகளைச் சிறுமியாகப் பார்ப்பதும் என இந்த இரண்டு நிகழ்வுகளும் இருநிலையெதிர்வுகளாக அமைந்துள்ளன.

கதை மாந்தர்

சிவன், இளைய யாதவர், அர்சுணன், இந்திரன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் ஸ்ரீராமர், பாலி, சித்தரசேனன், ஊர்வசி, பார்வதி, விநாயகர்,முருகன் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

[[Category:Tamil Content]]