under review

எஸ்.ரமேசன் நாயர்

From Tamil Wiki
Revision as of 21:37, 14 December 2023 by Madhusaml (talk | contribs) (Finalized)
ரமேசன் நாயர்
எஸ்.ரமேசன்நாயர்.

எஸ்.ரமேசன் நாயர் (மே 3, 1948 - ஜூன் 18, 2021) மலையாள கவிஞர், மொழிபெயர்ப்பாளர், திரைப்பாடலாசிரியர். வானொலியில் நிகழ்ச்சியமைப்பாளராகப் பணிபுரிந்தார். தமிழிலிருந்து செவ்வியல்நூல்களை மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தவர். தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதியின் நண்பர்,

பிறப்பு, கல்வி

எஸ்.ரமேசன் நாயர் குமரிமாவட்டம் குமாரபுரம் என்னும் ஊருல் ஏ.ஷடானன் தம்பி- எல்.பரமேஸ்வரியம்மா இணையரின் மூத்தமகனாக மே 2, 1948-ல் பிறந்தார்.

குமாரபுரத்தில் ஆரம்பக்கல்வி பயின்ற ரமேசன்நாயர் நாகர்கோயில் தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகக் கல்லூரியில் மலையாள மொழியில் முதுகலை பயின்றார். பல்கலைக்கழக அளவில் முதலிடத்தில் வெற்றிபெற்றார்

தனிவாழ்க்கை

எஸ்.ரமேசன் நாயர் 1973-ல் கேரள இன்ஸ்டிடியூட் ஆப் லாங்வேஜஸ் (கேரள மொழியாராய்ச்சி நிறுவனத்தில்) ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது 'புத்தமதம் தரிசனமும் சரித்திரமும்' எனும் நூலை எழுதினார்

ஜனவரி 17, 1975-ல் இந்திய தேசிய வானொலி திரிச்சூரில் நிகழ்ச்சி அமைப்பாளராகப் பொறுப்பேற்றார். வானொலிப்பணியில் இருக்கையிலேயே திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். கேரள காங்கிரஸ் கே.கருணாகரனின் வாரிசு அரசியலை கேலிசெய்து எழுதிய 'சதாபிஷேகம்' என்னும் வானொலிநாடகத்திற்காக அந்தமானுக்கு பணிமாற்றம் அளிக்கப்பட்டபோது 1996-ல் பணியை துறந்தார்.

திரிச்சூர் விவேகோதயம் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய வி.ரமா இவர் மனைவி. ரமா ஓர் எழுத்தாளர். ஒரே மகன் மனு ரமேசன் திசைப்பட இசையமைப்பாளர்.

இலக்கியப் பணி

கவிதைகள்

எஸ்.ரமேசன் நாயர் கேரள மரபுக்கவிதை இயக்கத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகக் கருதப்படுகிறார். அவரது கவிதைகள் இசைத்தன்மை கொண்டவை. நாராயணகுருவின் வாழ்க்கையை கவிதைவடிவில் எழுதிய 'குருபௌர்ணமி' என்னும் கவிதைநூல் புகழ்பெற்றது. அந்நூலுக்காக 2018-ல் கேரளத்தின் கேந்திர சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

பாடல்கள்

எஸ்.ரமேசன் நாயர் சபரிமலை ஐயப்பன், குருவாயூரப்பன் ஆகிய தெய்வங்களைப் பற்றி ஏராளமான பக்திப்பாடல்களை மலையாளத்தில் எழுதியிருக்கிறார். அவை கே.ஜே.யேசுதாஸ், கே.எஸ்.சித்ரா உள்ளிட்ட பாடகர்களால் பாடப்பட்டு புகழ்பெற்றன.

மொழியாக்கங்கள்

எஸ்.ரமேசன் நாயர் தமிழிலிருந்து செவ்வியல் நூல்களை மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்தார். அவரது திருக்குறள் மொழியாக்கம், சிலப்பதிகாரம் மொழியாக்கம் ஆகியவை புகழ்பெற்றவை. முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார் எஸ்.ரமேசன்நாயர். கருணாநிதியின் அழைப்பின்பேரில் 2000-த்தில் நிகழ்ந்த திருவள்ளுவர் சிலைதிறப்பு விழாவில் கலந்துகொண்டார். சென்னையில் ஒரு விழா எடுத்து ரமேசன் நாயரை மு.கருணாநிதி கௌரவித்திருக்கிறார். கருணாநிதியின் கோரிக்கையின்பேரில் அவரது 'தென்பாண்டிச்சிங்கம்' நாவலை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தார்.

திரைத்துறை

எஸ்.ரமேசன் நாயர் 1985-ல் வெளிவந்த 'பத்தாமுதயம்' என்னும் திரைப்படத்திற்கு முதல் பாடலை எழுதினார். ஏறத்தாழ 450 திரைப்பாடல்கள் எழுதியிருக்கிறார். இளையராஜாவுக்கு நெருக்கமாக இருந்த ரமேசன் நாயர் அவர் இசையில் அதிகமாக பாடல்கள் எழுதினார். அவர் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன

ரமேசன் நாயர் நான்கு தொலைத்தொடர்களுக்கு திரைக்கதைவசனம் எழுதியுள்ளார்.

அமைப்புப் பணிகள்

இந்துத்துவ பார்வை கொண்ட இலக்கிய அமைப்பான 'தபஸ்யா'வின் மாநிலத் தலைவராக ரமேசன் நாயர் நீண்டகாலம் பணியாற்றினார்

இறப்பு

எஸ்.ரமேசன் நாயரின் மருமகள் டாக்டர் உமா மார்ச் 18,2021-ல் மறைந்தார். அது ரமேசன் நாயரை உளவியல் சார்ந்த சோர்வுக்கு ஆளாக்கியது. கோவிட் தொற்றும் ஏற்பட்டது. முன்னரே நீண்டகாலமாக புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். எர்ணாகுளம் லட்சுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கே தன் 73-ஆம் வயதில் ஜூன் 18, 2021-ல் மறைந்தார்

விருதுகள்

  • புத்தேழன் விருது
  • இடச்சேரி விருது
  • கேரளபாணினி விருது
  • வெண்மணி விருது
  • பூந்தானம் நினைவு விருது
  • மகாகவி உள்ளூர் விருது
  • ஜன்மாஷ்டமி விருது
  • மகாகவி வெண்ணிக்குளம் விருது
  • ரேவதி பட்டத்தானம் கிருஷ்ணகீதி விருது
  • குமாரனாசான் விருது
  • கேரள சாகித்ய அக்காதமி விருது 2010
  • கேந்திரசாகித்ய அக்காதமி விருது 2018

இலக்கிய இடம்

எஸ்.ரமேசன் நாயர் மலையாளத்தின் குறிப்பிடத்தக்க பாடலாசிரியராக மதிக்கப்படுகிறார். அவருடைய சிலப்பதிகார மொழியாக்கமும் திருக்குறள் மொழியாக்கமும் மிகச்சிறப்பானவை என கருதப்படுகின்றன

நூல்கள்

கவிதை
  • கன்னிப்பூக்கள்
  • பாம்பாட்டி
  • ஹ்ருதயவீண
  • சூரிய ஹ்ருதயம்
  • கிராமக்குயில்
  • உண்ணி திரிச்சு வருந்நு
  • பாகபத்ரம்
  • சிவசதகம்
  • குருவாயூரப்ப சதகம்
  • குருபௌர்ணமிஊர்வசி பூஜை
  • துக்கத்தின் நிறம்
  • கஸ்தூரி கந்தி
  • அக்ரே பஸ்யாமி
  • ஜன்மபுராணம்
பாடல்கள்
  • 101 கிருஷ்ணகானங்கள்
  • வனமாலா
  • ஹரிவராசனம்
நாடகங்கள்
  • ஆள்ரூபம்
  • சதாபிஷேகம்
  • ஸ்வாதிமேகம்
  • அளகநந்தா
  • விகடவிருத்தம்
குழந்தை இலக்கியம்
  • பஞ்சாமிர்தம்
  • உறும்புவரி
  • குழந்தைகளுக்கான சிலப்பதிகாரம்
  • களிப்பாட்டங்கள்
கட்டுரை
  • புத்தமதம் தர்சனமும் சரித்திரமும்
  • சரித்திரத்தினு பறயானுள்ளது
  • விவேகானந்தர் தர்சனமும் பிரசக்தியும்
  • புத்ரதுக்கம்
திரைப்பாடல்தொகுதிகள்
  • பூமுகவாதுக்கல்
  • ஓ பிரியே
  • மஞ்ஞு போலே
திரைக்கதைகள்

ரமேசன்நாயர் நான்கு தொலைத்தொடர்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்

  • சுவாமி ஐயப்பன்
  • தேவி மகாத்மியம்
  • கிருஷ்ணகிருபா சாகரம்
  • ராமாயணம்.
மொழியாக்கம்
  • திருக்குறள்
  • பாரதியார் கவிதைகள்
  • நீதிசாரம்
  • சிலப்பதிகாரம்
  • இளையராஜாவின் இசைக்கனவுகள்
  • தென்பாண்டிச் சிங்கம்

உசாத்துணை



✅Finalised Page