under review

எம்.ஆர்.எம். சுந்தரம்

From Tamil Wiki
Revision as of 23:36, 27 March 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added: Link Created: Proof Checked.)
சுந்தா@எம்.ஆர்.எம். சுந்தரம்

எம்.ஆர்.எம். சுந்தரம் (சுந்தா; சுந்தரம்; மீனாட்சிசுந்தரம்; மேலநத்தம் ராமச்சந்திர ஐயர் மீனாட்சிசுந்தரம்; மே.ரா.மீ. சுந்தரம்) (ஏப்ரல் 19, 1913 – நவம்பர் 11, 1995) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர். திருச்சி மற்றும் தில்லி வானொலியில் தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றினார். லண்டன் பி.பி.சி. தமிழோசை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றினார். ’பொன்னியின் புதல்வர்’ என்ற தலைப்பில் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

பிறப்பு, கல்வி

எம்.ஆர்.எம். சுந்தரம், ஏப்ரல் 19, 1913 அன்று திருநெல்வேலி மாவட்டம் மேலநத்தம் கிராமத்தில், ராமசந்திர ஐயர் - ருக்மணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். மேலநத்தத்தில் பள்ளிக் கல்வி கற்றார். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

எம்.ஆர்.எம். சுந்தரம் தொடக்க காலத்தில் கிராம முன்சீப்பாகப் பணியாற்றினார். அகில இந்திய வானொலியில் அதிகாரியாகப் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: மீனாட்சி. இவர்களுக்கு ஜெயமணி சங்கரன், ரமாமணி சுந்தர் என இரு மகள்கள்.

எம். ஆர். எம். சுந்தரம்

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

எம்.ஆர்.எம். சுந்தரம் ராபர்ட் லிண்ட், ஜி.கே. செஸ்டர்டர்ன், மேக்ஸ் பீர்பம், ஏ.ஜி. கார்டினர் போன்றோரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அவர்களது எழுத்துக்களை முன் மாதிரியாகக் கொண்டு ’தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’ போன்ற ஆங்கில இதழ்களில் சிறு சிறு கட்டுரைகளை, கவிதைகளை எழுதினார். டி.கே. சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டியால் தமிழ் இலக்கிய ஆர்வம் பெற்றார். முதல் கவிதை கலைமகள் இதழில் வெளியானது. கலைமகள் நடத்திய கவிதைப் போட்டியில் எம்.ஆர்.எம். சுந்தரத்தின் கவிதை முதல் பரிசு பெற்றது. கல்கி, ராஜாஜி, தொ.மு.சி. பாஸ்கரத் தொண்டைமான், டி.என். சுகி சுப்பிரமணியன் போன்றோரால் ஊக்குவிக்கப்பட்டார்.

கல்கி, கலைமகள், தினமணி கதிர் போன்ற இதழ்களில், ‘மே.ரா.மீ. சுந்தரம்’, ‘சுந்தா’ போன்ற புனை பெயர்களில் கதை, கட்டுரைகளை எழுதினார். ‘மேரி கண்ட மகாத்மா’, ‘லண்டன் பிள்ளையார்’ போன்ற சிறுகதைகள் குறிப்பிடத்தகுந்தவை. சாவி தந்த ஊக்குவிப்பால் தினமணி கதிரில் ‘தலைநகரில் ஒரு தலைமுறை’ என்ற தொடரை எழுதினார்.

எம்.ஆர்.எம். சுந்தரம், கேலி, கிண்டல் வகைக் கவிதைகள் எழுதுவதில் தேர்ந்தவர். கதாகாலட்சேபம் செய்வதிலும் வல்லவர். அந்நிகழ்வுகளில் சுப்புடு சுந்தாவுக்கு ஹார்மோனியம் வாசித்தார். எம்.ஆர்.எம். சுந்தரம், தமிழ் இதழ்களின் தீபாவளி சிறப்பிதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார்.

கல்கியின் வாழ்க்கை வரலாறு

எம்.ஆர்.எம். சுந்தரத்தின் எழுத்தால் ஈர்க்கப்பட்ட கல்கியின் புதல்வர் கல்கி ராஜேந்திரன், எம்.ஆர்.எம். சுந்தரத்தை கல்கியின் வரலாற்றை எழுதப் பணித்தார். எம்.ஆர்.எம். சுந்தரம் ‘சுந்தா’ என்ற புனை பெயரில், ‘பொன்னியின் புதல்வர்’ என்ற தலைப்பில், கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அத்தொடர் கல்கியின் வரலாறாக மட்டுமல்லாமல் அக்கால எழுத்துலகின், இதழியல் உலகின் வரலாறாகவும், சமூக, அரசியல், வரலாற்றுப் பதிவாகவும் அமைந்தது.

நான்கு ஆண்டுகள் தொடராக வந்த இவ்வரலாறு பின்னர் நூலாக்கம் பெற்றது. சுந்தாவின் நூற்றாண்டையொட்டி ’பொன்னியின் புதல்வர்’ நூல், கல்கியின் பெயர்த்தி கௌரி ராம்நாராயணனால் ‘கல்கி கிருஷ்ணமூர்த்தி: ஹிஸ் லைஃப் அண்ட் டைம்ஸ்‘ (Kalki Krishnamurthy: His Life & Times) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

அமைப்புப் பணிகள்

எம்.ஆர்.எம். சுந்தரம், தில்லி தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டபோது அதன் வளர்ச்சிக்கு உதவினார். தமிழ்ச் சங்கம் தயாரித்தளித்த ‘சுடர்’ இதழின் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்தார். சென்னைத் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டபோது பயிற்சி பெற்ற செய்தி ஆசிரியர்கள் இல்லாததால் ‘சுந்தா’வின் உதவியைச் சென்னைத் தொலைக்காட்சி நிலையம் சிலகாலம் பெற்றது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (Indian Institute of Mass Communication.) நிறுவனத்தில் பல மாணவர்களுக்கு இதழியல் பயிற்சி அளித்தார்.

வானொலி

எம்.ஆர்.எம். சுந்தரம், திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றினார். செய்தி, ஒலிபரப்புப் பிரிவில் பல்வேறு அனுபவங்கள் பெற்றார். தில்லியில் தொடங்கப்பட்ட ஆகாசவாணியின் தமிழ்ச் செய்திப் பிரிவுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தில்லி வானொலியின் தமிழ்ச் செய்திப் பிரிவில் பணியாற்றினார். தமிழ்ச் செய்தித் தயாரிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார்.

வானொலியின் தமிழ்ச் செய்திப் பிரிவில், பல ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிந்து பயன்படுத்தினார். வடமொழிச் சொற்களுக்குப் பதிலாக புதிய பல தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தினார். ’அஸ்திவாரம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு மாற்றாக ‘அடிக்கல் நாட்டுதல்' என்பதைப் பழக்கத்துக்குக் கொண்டுவந்தார். ‘குழந்தைகள் காப்பகம்' போன்ற பல புதிய தமிழ்ச் சொற்றொடர்களை உருவாக்கிப் பயன்படுத்தினார். ‘நாம் இருவர் நமக்கு இருவர்', ‘அதிகம் பெறாதீர், அவதியுறாதீர்' போன்றவை குடும்பக் கட்டுப்பாடு பிரசாரத்துக்காக எம்.ஆர்.எம். சுந்தரம் உருவாக்கிய சொற்றொடர்கள்.

1957-ல், எம்.ஆர்.எம். சுந்தரம், லண்டன் பி.பி.சி. தமிழோசை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். பின் தில்லி திரும்பி, 1971-ல், அகில இந்திய வானொலி நிலையத்தில் மீண்டும் சேர்ந்து பணியாற்றினார். செய்திப் பிரிவின் தலைவராகப் பணி ஓய்வு பெற்றார்.

நாடகம்

எம்.ஆர்.எம். சுந்தரம் வானொலிக்காகப் பல நாடகங்களை எழுதினார். பூர்ணம் விஸ்வநாதன் குழுவினருடன் இணைந்து பல நாடகங்களில் நடித்தார். பெண் வேடம் உள்பட பல வேடங்களில் நடித்தார். குறவன்-குறத்தி நடனம் என்ற நகைச்சுவை நாடகத்தை நடத்தினார்.

விருதுகள்

எம்.ஆர்.எம். சுந்தரம், கலைமகள் மற்றும் ஆனந்த விகடன் இதழ் நடத்திய பல்வேறு சிறுகதை, நாவல், கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றார்.

மறைவு

எம்.ஆர்.எம். சுந்தரம், நவம்பர் 11, 1995-ல், காலமானார்.

மதிப்பீடு

எம்.ஆர்.எம். சுந்தரம் என்னும் சுந்தா, சிந்தனையைத் தூண்டும் பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதினார். அரசியல் சார்ந்து பல கட்டுரைகளை எழுதினார். தனது பல படைப்புகளை இலக்கியக் கவிதை நடையில் எழுதினார். தமிழின் மூத்த படைப்பாளிகளூள் ஒருவராக எம்.ஆர்.எம். சுந்தரம் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • இதய மலர்கள்
கட்டுரைத் தொகுப்பு
  • புன்னகை
சிறுகதைத் தொகுப்பு
  • 40 சிறுகதைகள்
  • கருநீலக் கண்கள்

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.