உமா வரதராஜன்

From Tamil Wiki
Revision as of 15:16, 24 December 2022 by Theivigan (talk | contribs) (உமா வரதராஜன்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
உமா வரதராஜன்

உமா வரதராஜன் எனப்படும் - உடையப்பா மாணிக்கம் வரதராஜன் - ( பிறப்பு: நவம்பர் 19, 1956) ஈழத்து எழுத்தாளர். சிறுகதை, கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து, நாடகப்பிரதி, நடிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பு, நாவல் ஆகிய பிரிவுகளில் கடந்த 45 வருடங்களாக இயங்கி வருபவர். வெவ்வேறு துறைகளில் உமா வரதராஜன் செயற்பட்டிருந்தாலும், அவரது ஒரேயொரு நாவலும் சிறுகதைத்தொகுப்பும் அவரை ஈழத்தின் மிக முக்கிய புனைவெழுத்தாளனாக இன்றுவரை அடையாளப்படுத்திவருகின்றன. உமா வரதராஜன் ஈழத்து இலக்கியத்தில் முற்போக்குக் கருத்தியலின் செல்வாக்கும் ஆதிக்கமும் மேலோங்கி இருந்த காலகட்டத்தின் தலைமுறையைச் சேர்ந்தவர். அல்லது அதனையடுத்து உடனடியாக வரும் தலைமுறையின் பிரதிநிதி.

பிறப்பு – கல்வி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பெருநகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பு என்ற இடத்தில் உமா வரதராஜன் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி பிறந்தார். ஆரம்பக்கல்வியை கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையிலும், மட்டக்களப்பு சிவானந்தாக் கல்லூரியிலும் உயர் கல்வியை கல்முனை பாத்திமா கல்லூரியிலும் பயின்றார்.

இலக்கியம்

சிறுவயதிலேயே வாசிப்பிலும் இலக்கியத்திலும் தீவிர ஈடுபாடுகொண்டிருந்த உமா வரதாராஜன், எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்துக்களால் பெரிதும் கவரப்பட்டார். தனது 17 வயதில் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலைப் படித்துவிட்டு, தனது வாசிப்பு அனுபவத்தினை தமிழகத்தின் “தீபம்” இலக்கிய சஞ்சிகைக்கு எழுதி அனுப்பினார். தீபத்தின் அப்போதைய ஆசிரியர் நா. பார்த்தசாரதி, அதனைத் தீபம் இதழில் பிரசுரித்து, உமா வரதராஜனை தமிழ் இலக்கிய உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.

இந்தியா டுடேயில் வெளியான, இவரது “அரசனின் வருகை” – என்ற சிறுகதை இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் உமா வரதராஜனின் புனைவுத்திறனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. படிம உத்தியில் எழுதப்பட்டிருக்கும் அரசனின் வருகை, ஈழத்தின் நீடித்த இனரீதியான ஆக்கிரமிப்பு அதிகார அரசியலை சித்திரிக்கிறது. அதனை ஈழ அரசியலுடன் மாத்திரமில்லாது உலக அரசியலுடனும் ஒப்பிடலாம். இந்தக்கதை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

இதழியல்

மூத்த எழுத்தாளர் இளங்கீரன் அவர்களின் புதல்வர் மீலாத் கீரனுடன் இணைந்து “காலரதம்” – என்ற இலக்கிய சஞ்சிகையை தனது 17 வயதிலேயே நடத்தினார் உமா வரதராஜன். இதைவிட, "களம்" மற்றும் "வியூகம்" ஆகிய இலக்கிய சஞ்சிகைகளிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தொலைக்காட்சி

உமா வரதாராஜன் சிறிது காலம், இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.

இலக்கிய இடம்

உமா வரதராஜனின் சிறுகதைகள் குறித்து எழுத்தாளரும் விமர்சகருமான ஜிப்ரி ஹாசன் குறிப்பிடும்போது - கதைகள் அனைத்தும் இயல்பாக மனித வாழ்வை அதன் புறவயத்தையும் அகத்தையும் பேசுபவை. யதார்த்தத்தை மீறிய தர்க்கங்களோஇ வெறும் குதர்க்கங்களோ அற்றவை. சில பாசாங்கான மனிதர்களைஇ வாழ்வின் போலியான பக்கங்களை சமரசமற்று நையாண்டிசெய்பவை. இதனால் உமாவின் படைப்புலகின் ஒரு பகுதி மென்மையானதாகவும் மீதி வன்மையாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு முரண்நிலைகளில் வாழும் மனிதர்களைஇ அனுபவங்களை புனைவின் அதீதச் சிடுக்குகள் குறைந்த இயல்பான சுவாரஸ்யமான மொழியில் கதையாடுகிறார் உமா – என்கிறார்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிடும்போது - எழுத்தாளர் ந.முத்துசாமியின் சிறுகதைகளுக்குத் தனி இயல்பு உண்டு. அவர் நிலக்காட்சிகளை விரித்துக்கொண்டு போய்ச் சிறு சம்பவம் ஒன்றை அதில் பொருத்திவிடுவார். கதையின் பின்புலத்தை அவரைப் போல யாரும் துல்லியமாக விவரிக்கமுடியாது. சில நேரங்களில் அந்த நிலக்காட்சிகளின் வசீகரத்தாலே கதை எழுந்து நிற்கவும் செய்யும். அது போன்றதொரு எழுத்துமுறை கொண்டதே உமா வரதராஜனின் கதைகள். நிகழ்வை துல்லியமாக விவரிப்பதுடன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்தே கதை சொல்கிறார் உமா வரதராஜன். அதுவே இவரது சிறப்பு இவருக்கும் வண்ணதாசனுக்கும் நிறைய ஒப்புமைகள் இருக்கின்றன. இருவரும் தனிமையைப் பேசுகிறவர்கள். அன்பின் சிறுதுயரைப் பாடுகிறவர்கள். இருவரது கதைகளிலும் இடம்பெற்றுள்ள ஆண்களும் பெண்களும் நினைவின் தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்வின் நெருக்கடி மனிதர்களைத் தனது வாழ்விடத்திலிருந்து துரத்தியடிப்பதை இருவரும் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். வண்ணதாசன் நீர்வண்ண ஒவியங்களைப் போலச் சிறுகதைகளை உருவாக்குபவர் என்றால் உமா வரதராஜன் கோட்டோவியம் போலச் சிறுகதைகளை எழுதிக்காட்டுகிறார் – என்கிறார்.

நூல்கள்

சிறுகதை

  • உள்மன யாத்திரை ( அன்னம் பதிப்பகம் - தமிழ்நாடு-1989 ) சிறுகதைத் தொகுப்பு
  • உமா வரதராஜன் கதைகள் (காலச்சுவடு வெளியீடு - தமிழ்நாடு- 2011)

நாவல்

மூன்றாம் சிலுவை.jpg

மூன்றாம் சிலுவை (காலச்சுவடு வெளியீடு - தமிழ்நாடு- 2009) -நாவல்

கட்டுரைத் தொகுப்புக்கள்

  • மோகத்திரை (காலச்சுவடு வெளியீடு - தமிழ்நாடு- 2019)
  • எல்லாமும் ஒன்றல்ல - இலங்கை கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல் திணைக்களம் (2022)

பிற மொழிகளில்

உமா வரதராஜனின் "அரசனின் வருகை"  புதுடில்லியிலிருந்து வெளிவரும் Little magazine என்ற இதழில் The advent of the king என்ற பெயரிலும், "எலியம்" என்ற கதை A Lankan Mosaic என்ற தொகுப்பில் Rattology என்ற பெயரிலும்  "முன் பின் தெரியா நகரில்" என்ற கவிதை கனடாவிலிருந்து வெளிவந்த "In our translated world” என்ற தொகுப்பில் ஆங்கிலத்தில் "Alien city” என்ற பெயரிலும்  வெளிவந்துள்ளன.  

இவருடைய 'எலியம்' சிறுகதை இலங்கைப் பாடசாலைகளில் தரம் 10-11 இற்கான 'தமிழ் இலக்கிய நயம் ' பாடத் திட்டத்திலும்  சேர்த்துக் கொள்ள ப்பட்டுள்ளது.

தொகுப்பு

உமா வரதராஜனின் சிறுகதைகள் சா. கந்தசாமி தொகுத்த சாகித்ய அக்கடமியின் “அயலக தமிழ் இலக்கியம்”, சாகித்ய அக்கடமிக்காக மாலன் தொகுத்த “கண்களுக்கு அப்பால் இதயத்துக்கு அருகில்” ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளன.

விருதுகள்

இலங்கை வடகிழக்கு மாகாணசபை விருது - உள்மன யாத்திரை (1989)

இலங்கை வடகிழக்கு மாகாணசபை விருது - மோகத்திரை (2019)

உசாத்துணை

எஸ்.ராமகிருஷ்ணன் -

உமா வரதராஜனின் சிறுகதைகள் - நூலகத்தில்