உமாசந்திரன்
உமாசந்திரன் (பூர்ணம் ராமச்சந்திரன்; பிறப்பு : ஆகஸ்ட் 14, 1914; ஏப்ரல் 11, 1994) எழுத்தாளர், நாடக ஆசிரியர். திரைப்படக் கதை-வசன ஆசிரியர் என இயங்கியவர். அகில இந்திய வானொலியில் பல பொறுப்புகளை வகித்தவர். பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளித்தவர்.
பிறப்பு, கல்வி
உமாசந்திரன், ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில், ஆகஸ்ட் 14, 1914-ல், பூர்ண கிருபேஸ்வர ஐயர்-உமா பார்வதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர்:ராமச்சந்திரன். திருநெல்வேலியில் உள்ள முன்னீர்பள்ளம் இவர்களது சொந்த ஊர். அவ்வூரில் உறையும் பூர்ண கிருபேஸ்வரர் இவர்கள் குடும்ப குல தெய்வம். அதனால், இறைவனின் நினைவாக, ‘பூர்ணம்’ என்பதை அடைமொழியாகக் கொண்டே குடும்பத்து ஆண்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டனர். ராமச்சந்திரன் பூர்ணம் ராமச்சந்திரன் ஆனார். பூர்ணம் விஸ்வநாதன், பூர்ணம் சோமசுந்தரம், பூர்ணம் பாலகிருஷ்ணன் மூவரும் இவரது சகோதரர்கள்.
உமாசந்திரன், பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். விடுதலை உணர்வால் சுதந்திர உணர்வைத் தூண்டும் பல போராட்டங்களில் கலந்து கொண்டார். இண்டர்மீடியட் முடித்ததும் ஆசிரியர் பணி கிடைத்தது.
தனி வாழ்க்கை
கமலா அம்மையாருடன் திருமணம் நிகழ்ந்தது. தமிழ் மட்டுமில்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளையும் நன்கு அறிந்திருந்தார் உமாசந்திரன். தமக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களை வாசிப்பதில் செலவிட்டார்.
இலக்கிய வாழ்க்கை
வாசிக்க எழுத்தின் சூட்சுமம் பிடிப்பட்டது. முதல் சிறுகதை, “சொர்ணத்தேவன்” 1937-ல் வெளியானது. தொடர்ந்து முன்னணி இதழ்களுக்கு எழுத ஆரம்பித்தார். தாயின் மீது கொண்ட அன்பு காரணமாக, தாயின் பெயருடன் தன் பெயரை இணைத்துக் கொண்டு ‘உமாசந்திரன்’ என்ற புனை பெயரில் எழுத ஆரம்பித்தார். அஜந்தா, காதம்பரி, பாரிஜாதம், கல்கி, ஆனந்தவிகடன் என பல இதழ்கள் இவரது படைப்புகளை வெளியிட்டு ஊக்குவித்தன.
வானொலி வாழ்க்கை
உமாசந்திரனுக்கு வானொலி நிலையத்தில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. டில்லியில் சிலகாலம் பணியாற்றினார். பின்னர் திருச்சிக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னை வானொலி நிலையத்திற்குப் பணி மாற்றம் நிகழ்ந்தது. நிகழ்ச்சி அமைப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், வர்ணனையாளர், ஒருங்கிணைப்பாளர், தயாரிப்பாளர் என வானொலியில் பலதரப்பட்ட பணிகளை மேற்கொண்டார். அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள் பற்றிய செய்திகளையும், விளக்கங்களையும் மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். வானொலி நாடகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். 25க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை இவர் படைத்தார்.
முள்ளும் மலரும்
உமாசந்திரன் சிறுகதை, நாவல், கட்டுரை எனப் பல படைப்புகளைத் தந்தவர்.வானொலியில் பணியாற்றிய காலத்தில் குந்தா அணைத் திட்டம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உமாசந்திரன் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சென்று தங்கி, அங்குள்ள மலைவாழ் மக்களுடன் பழகி, அவர்கள் வாழ்க்கையை அவதானித்து, அவற்றோடு தனது கற்பனையையும் சேர்த்து உருவாக்கிய படைப்புதான் ‘முள்ளும் மலரும்.’ இப்படைப்பு, கல்கி வெள்ளிவிழா பரிசுத் திட்டத்தில் முதல் பரிசு ரூ.10000/- பெற்றது. தமிழ் இலக்கிய உலகில் அது வரை எந்த ஒரு நாவலுக்கும் இவ்வளவு அதிகமான தொகை பரிசாக வழங்கப்பட்டதில்லை. முதன் முதலில் அதனைப் பெற்ற பெருமைக்குரியவர் உமாசந்திரன். மூதறிஞர் ராஜாஜி அந்தப் பரிசை உமாசந்திரனுக்கு அளித்துச் சிறப்பித்தார்.
ஆகஸ்ட் 7, 1966, கல்கி வெள்ளி விழா இதழில் ஆரம்பித்த ‘முள்ளும் மலரும்.’ தொடர், தொடர்ந்து 36 வாரங்கள் வெளியாகி ஏப்ரல் 9, 1967ம் இதழோடு முற்றுப்பெற்றது இப்படைப்பு உமாசந்திரனுக்கு மிகுந்த புகழைத் தேடிக் கொடுத்தது. ரஜினி, ஷோபா நடிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளியாகி வெற்றி பெற்றது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.