under review

உப்புவேலூர் ஆதிநாதர்கோயில்

From Tamil Wiki
Revision as of 18:39, 25 February 2022 by Ramya (talk | contribs) (Created page with "உப்புவேலூர் ஆதிநாதர்கோயில் பொ.யு. 15ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டத்தில் உப்புவேலூரில் அமைந்த சமணக் கோயில். == இடம் == திண்டிவனத்திலிருந்து இருபத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

உப்புவேலூர் ஆதிநாதர்கோயில் பொ.யு. 15ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டத்தில் உப்புவேலூரில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

திண்டிவனத்திலிருந்து இருபத்து மூன்று கிலோமீட்டர் தென்கிழக்கிலுள்ள உப்புவேலூர் எனவும் வேலூர் என்றும் அழைக்கப்படும் இடத்தில் ஆதிநாதர்கோயில் உள்ளது

வரலாறு

பொ.யு. 15-ஆம் நூற்றாண்டிலிருந்தே உப்புவேலூர் சமண சமய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது.

அமைப்பு

ஆதிநாதர் கோயி முன்பு கருவறை அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றைக் கொண்டதாக இருந்தது. பலமுறை புதுப்பிக்கப்பட்டதால் பண்டைய கலையம்சங்களை இழந்தது. தற்போது இக்கோயில் நீண்ட மண்டபம் போன்ற அமைப்பிலும், இதன் பின்பகுதி கருவறையாகவும், நடுப்பகுதி அர்த்தமண்டபமாகவும், அடுத்துள்ள பகுதி மகாமண்டபமாகவும், முன்பகுதி முகமண்டபமாகவும் உள்ளது. கோயிலைப்போன்று திருச்சுற்றுமதிலும், கோபுரமும், அதனை ஒட்டி வடபுறம் அமைக்கப்பட்டுள்ள மண்டபமும் பலமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளன. இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறுதியாகக் கோவில் புனரமைக்கப்பட்டது.

இக்கோயிலின் சில சிற்பங்களின் கலைப்பாணி, மெக்கன்சிச் சுவடிகளின் வாயிலாக ஆதிநாதர் கோயில் பொ.யு. 15 ஆம் நூற்றாண்டைச் சார்ண்டஹ்து என்பதை அறியலாம்.

சிற்பங்கள்

கோயிலின் கருவறையில் நான்கு அடி உயரத்தில், தியான கோலத்தில் ஆதிநாதர் சிற்பம் உள்ளது. பீடத்தின் அடிப்பகுதியில் இவரின் இலாஞ்சனையாகிய எருது சிறிய அளவில் உள்ளது. இந்த சிற்பத்தில் பிற திருவுருவங்களிலுள்ளவை போன்று அலங்காரப் பிரபையோ அல்லது முக்குடையோ காணப்படவில்லை. இச்சிற்பம் பொ.யு. 15 ஆம் நூற்றாண்டிற்குரிய கலைப்பாணியைக் கொண்டது. கருவறைக்கு அடுத்துள்ள மண்டபத்தின் வடக்குச்சுவரை ஒட்டி அழகு மிக்க தருமதேவி யக்ஷியின் சிற்பம் உள்ளது. தருமதேவியின் வலதுகாலுக்கருகில் இரு குழந்தைகளும், இணையாக இரண்டு சாமரம் வீசுவோர் சிற்பங்களும் உள்ளன. இத்தேவியின் தலைக்குப்பின்புறம் பிரபைக்குப் பதிலாக, மகுடத்தின் மேற்பகுதியில் மடல்களையுடைய கமுக மரத்தின் வடிவம் உள்ளது. இவை பொ.யு.15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோயிலில் காணப்படும் சேத்திரப்பாலகர், ஜுவாலமாலினி தனியாகப் பீடத்தில் நிறுவப்பட்டுள்ள ரிஷபநாதர் முதலிய பிற சிற்பங்கள் அனைத்தும் இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை.

செப்புத் திருமேனிகள்

ஆதிநாதர் கோயிலில் ஏராளமான செப்புத் திருமேனிகள் காணப்படுகின்றன. இவற்றுள் ஆதிநாதர், மகாவீரர் பார்சுவநாதர், பாகுபலி, கணதரர், சதுர்விம்சதி தீர்த்தங்கரர்கள் தரும தேவி சர்வானயக்ஷன், பூரணபுட்கலை, தரணேந்திரன், ஜினவாணி, பத்மாவதி, ஜுவாலமாலினி ஆகியோரது படிமங்கள் குறிப்பிடத்தக்கவை. இவையனைத்தும் நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் வார்க்கப்பட்டவை.

கல்வெட்டுக்கள்

உப்பு வேலூரிலுள்ள கோயிலில் முன்பு ஏராளமான கல்வெட்டுக்கள் இருந்திருக்க வேண்டும். கோயில் பலமுறை கட்டப்பட்டிருப்பதால் சாசனங்கள் அழிந்திருக்கலாம். கல்வெட்டுத் துறையினர் 1919 ஆண்டு இக்கோயிலின் வடபுறச்சுவரிலிருந்து ஒரு கல்வெட்டினைப் படியெடுத்துள்ளனர். இச்சாசனம் ஜெயசேனர் என்பவர் (18 அல்லது 19 ஆம் நூற்றாண்டில்) இக்கோயிலைப் புதுப்பித்ததாகக் கூறுகிறது.

கோபுரத்திற்கு வடக்கிலுள்ள மண்டபத்திலுள்ள தூண் ஒன்றின் அடிப்பகுதியிலும் கல்வெட்டொன்று காணப்படுகிறது. கிரந்தமும், தமிழும் கலந்த இந்த சாசனத்தின் முழுமை செய்தியினை அறிய முடியவில்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சாலிவாகன ஆண்டு பொ.யு. 1909 ஆம் வருடத்திற்குப் பொருந்தி வருவது. 1909 ஆம் ஆண்டு உப்பு வேலூரைச் சார்த்த சமுத்திரவிஜயநயினார், அய்யண்ண நயினார் இந்த மண்டபத்தைக் கட்டியிருக்க வேண்டும் அல்லது புதுப்பித்தியிருக்க வேண்டுமென இதன் மூலம் அறியலாம்.

கோயில் மண்டபத்தினுள் இடம் பெற்றிருக்கும் உலோகத் திருமேனிகளின் பீடங்கள் சிலவற்றில் அவற்றை அளித்தவர்களது பெயர்கள் உள்ளன. இவற்றுள் காலத்தால் முந்தியதெனக் கருதப்படும் பார்சுவநாதர் திருவுருவத்தின் பீடத்தில் 1932 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட செய்தி உள்ளது.

வீரசேனாச்சாரியர்

உப்புவேலூரைச் சார்ந்த சமண சமய அறவோருள் முதன்மையானவர் வீரசேனாச்சாரியார். இவர் பொ.யு. 16 ஆம் நூற்றாண்டில் சித்தாமூர் மடத்தைத் தோற்றூவித்தார். செஞ்சிப்பகுதியை ஆட்சிபுரிந்த வேங்கடபதி என்னும் நாயக்கமன்னன் சமணசமயத்தவர்களுக்கு இன்னல்கள் விளைவித்ததால் சமணர் பெருமளவில் வேறு ஊர்களுக்குச் சென்றனர். அந்த சமயத்தில் உப்புவேலூரைச் சார்ந்த அறநெறியாளர் ஒருவர் கர்நாடக மாநிலத்திலுள்ள சிரவணபெல்கோலாவிற்குச் சென்று சமண சாத்திரங்களைக் கற்றுத்தேர்ந்து, வீரசேனாச்சாரியார் என்னும் பெயர் பூண்டார். இவர் செஞ்சிப்பகுதிக்குத் திரும்பி வந்து சித்தாமூரில் மடத்தினை நிறுவி, மக்களுக்குச் சமய தீட்சை அளித்தும், அறநெறிபோற்றியும் வந்தார் என மெக்கன்சி சுவடித்தொகுப்பு தெரிவிக்கிறது. சித்தாமூரில் முதன் முதலாக சமணமடத்தினை ஏற்படுத்திய பெருமை உப்புவேலூரைச் சார்ந்த துறவியருக்குரியது.

உசாத்துணை

  • தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.