being created

உதயேந்திரம் செப்பேடு

From Tamil Wiki

உதயேந்திரம் செப்பேடு முதலாம் பராந்தக சோழன் ஆட்சி காலத்தில் எழுதப்பட்டது. உதயேந்திரம் செப்பேட்டில் சோழ மன்னன் பரம்பரையும், கங்க மன்னன் பிருதிவிபதியின் பரம்பரையும் இடம்பெற்றுள்ளதால் இதனை சோழன் செப்பேடு என்றும், கங்க மன்னனின் செப்பேடு என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

செப்பேடு அமைப்பு

உதயேந்திரம் செப்பேட்டில் ஏழு இதழ்கள் உள்ளன. 8.75 முதல் 8.875 அங்குலம் நீளமும் 3.25 அங்குல அகலமும் கொண்டது. ஒரு செப்பு வளையத்தில் செப்பிதழ்கள் கோர்க்கப்பட்டுள்ளன. உதயேந்திரம் செப்பேட்டில் முதல் பகுதி வடமொழியிலும், இரண்டாவது பகுதி தமிழிலும் எழுதப்பட்டுள்ளது.[1] வடமொழியில் 28 ஸ்லோகங்களும், தமிழ் பகுதி உரைநடையிலும் எழுதப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 101 வரிகளில் 71 வரிகள் வடமொழியிலும், 30 வரிகள் தமிழிலும் உள்ளன.

செப்பேட்டின் காலம்

உதயேந்திரம் செப்பேடு முதலாம் பராந்தக சோழனின் பதினைந்தாம் ஆட்சி ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது என அதன் தமிழ் பகுதியில் குறிப்பு உள்ளது. முதலாம் பராந்தகனின் ஆட்சி பொ.யு. 907ல் தொடங்குவதால் இச்செப்பேடு பொ.யு. 922ல் பதிக்கப்பட்டதாகும். உதயேந்திரம் செப்பேட்ட்டை கங்க மன்னன் இரண்டாம் பிருத்விபதி வெளியிட்டதால் இதனை கங்கர் செப்பேடு என ஹுல்சு, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.வை. சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் முனைவர் ஆர். நாகசாமி பதிப்பித்த வேளஞ்சேரிச் செப்பேட்டின் முன்னுரையில், “உதயேந்திரம் செப்பேட்டில் பிருத்விபதி விண்ணப்பதாரன் மட்டுமே. அதனால் இது பராந்தகனின் செப்பேடு மட்டுமே” எனக் குறிப்பிடுகிறார்.

மேலும் செப்பேட்டின் வடமொழி பகுதியில் 24 ஆம் செய்யுளில் ஹஸ்திமல்லனான பிருத்விபதி, பரகேசரியான பராந்தகனின் ஆணையைக் கேட்டான் என கூறியுள்ளதும், அடுத்த செய்யுளில் பராந்தகனே தானத்தைக் காக்கும் படி வேண்டிக் கொண்டதும் இச்செப்பேடு பராந்தகனின் செப்பேடு என்பதற்கான சான்றாக உள்ளன. ’இப்பரிசேய் அறையோலைப் படி சாஸனஞ்செய்வித்து குடுத்தேன் செம்பியன் மாவலிவாணராயனேன்’ என்னும் வரிகளால் பராந்தகனின் ஆணைப்படி கங்க மன்னன் வெளியிட்ட சாசனம் இது என்றும். இதுவே சோழர் செப்பேடுகளில் பழமையானது என்றும் புலவர் வே. மகாதேவன் குறிப்பிடுகிறார்.

செப்பேட்டின் நோக்கம்

உதயேந்திரம் செப்பேடு உதயசந்திர மங்கலத்தில் வாழும் அந்தணர்களுக்குக் கடைக்கோட்டூர், உதயசந்திர மங்கலம் கிராமத்தை வழங்குவதற்காகக் கங்க மன்னன் பிருத்விபதி விண்ணப்பத்தின் பெயரில் முதலாம் பராந்தகன் ஆணை வெளியிட்டான். இவ்விரு கிராமங்களும் வீரநாராயணச்சேரி என்னும் பெயரால் வழங்கப்பட்டது என செப்பேடு ஆவணம் கூறுகிறது.

பதிப்பு வரலாறு

உதயேந்திரம் செப்பேடு ஹுல்சு பதிப்பித்த தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி இரண்டின் மூன்றாம் பாகத்தில் இடம்பெற்றுள்ளது. ஹுல்சு இதனை 76-ஆம் எண்ணுள்ள சாசனமாகப் பதிப்பித்தார். மூன்றாம் பாகத்தில் பக்கம் எண் 375-390ல் இச்செப்பேடு பற்றிய விவரம் உள்ளன.

இலச்சினை விவரம்

செப்பேட்டின் வளையம் பொருத்தப்பட்ட இடத்தின் அடியில் இலச்சினை 2.215 வட்ட வடிவில் இடம்பெற்றுள்ளது. வலதுபக்கம் பார்த்த காளையின் உருவமும் அதற்கு இருபக்கமும் அலங்கரிக்கப்பட்ட விளக்குத் தாங்கிகளும் இடம்பெற்றுள்ளன. காளையின் மேல் மனிதனின் உருவமும் பிறை சந்திரனும் இடம்பெற்றுள்ளன. அதற்கு மேல் சாமரங்களும் அதன் நடுவே குடையும் பொறிக்கப்பட்டுள்ளது. காளையின் கீழே கிரந்த எழுத்தில் ’ப்ரபுமேரு’ என பொறிக்கப்பட்டுள்ளது. பாண அரச மரபில் வந்த இரண்டாம் விக்கிரமாதித்தனின் பாட்டனார் பெயர் பிரபுமேரு என்ற விவரம் இரண்டாம் விக்கிரமாதித்தன் வெளியிட்ட உதயேந்திரம் செப்பேடு மூலம் அறியமுடிகிறது.

உதயேந்திரத்தில் கிடைத்த ஏழு செப்பேட்டிற்கும் பிரபுமேருவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை வளையமற்று இருந்த செப்பேட்டில் வேறு செப்பேட்டினுடைய வளையத்தை சேர்த்திருக்கலாம் என ஹுல்சு குறிப்பிடுகிறார்.

செப்பேடு கண்டுபிடிக்கப்பட்ட விதம்

உதயேந்திரம் செப்பேட்டை ஹுல்சு பதிப்பிக்கும் போது அவை உதயேந்திரம் சௌந்தரராஜப் பெருமாள் கோவிலின் தர்மகர்த்தாவிடம் இருந்தது. எஃப்.ஏ. நிக்கோல்ஸன் உதவியால் ஹுல்சு அதனை கண்டுபிடித்தார். இச்செப்பேடு பற்றிய முதல் விவரம் பொ.யு. 1850 ஆம் ஆண்டு ரெவ்.டி. ஃபோல்க்ஸ் எழுதிய Manual of the Salem District என்ற நூலின் இரண்டாம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுத்தியல்

செப்பேட்டின் வடமொழிப் பகுதி கிரந்த எழுத்தில் அமைந்துள்ளது. குறிப்பாகக் குறில் நெடில் போன்றவற்றின் வேறுபாடு ஓரள்வு தெளிவாக உள்ளது என சோழர் கால செப்பேடுகளை தொகுத்த புலவர் வே. மகாதேவன் குறிப்பிடுகிறார். வடமொழிப் பகுதியிலும் தமிழின் சிறப்பெழுத்துகள் தமிழிலேயே பதிக்கப்பட்டுள்ளன. தமிழ் பகுதியிலுள்ள வடமொழி சொற்களும் கிரந்த எழுத்துகளிலேயே பதிப்பிக்கப்பட்டுள்ளன.

அடிக்குறிப்புகள்

  1. பொதுவாக செப்பேடுகளில் அரசப்பரம்பரையின் புகழ் வடமொழியில் எழுதப்படுவது வழக்கம். இதனை பிரசஸ்தி என்றழைப்பர். அதன் பின்னுள்ள தமிழ் பகுதியில் தானச் செய்தி இடம்பெறும்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.