standardised

இளங்கோ கிருஷ்ணன்

From Tamil Wiki
Revision as of 12:28, 6 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)
இளங்கோ கிருஷ்ணன்

இளங்கோ கிருஷ்ணன் (மார்ச் 15, 1979) தமிழில் நவீனக்கவிதைகள் எழுதும் கவிஞர். உருவகத்தன்மையும் இசைத்தன்மையும் கொண்ட கவிதைகளை எழுதுபவர். கவிதை பற்றிய அழகியல் கோட்பாடுகளை விவாதிப்பவராகவும் விமர்சகராகவும் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

இளங்கோ கிருஷ்ணன் கோவையில் மார்ச் 15, 1979 அன்று பாலகிருஷ்ணன், சரஸ்வதி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார்.

ஆரம்பக்கல்வியை சி.எஸ்.ஐ. ஆரம்பப்பள்ளி, பாப்ப நாயக்கன் பாளையம், கோவையிலும் உயர்நிலை கல்வியை ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம், கோவையிலும் கற்றார். மேல்நிலைக்கல்வி மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, இராமநாதபுரம், கோவை. பட்டயக்கணக்காயர் கல்வியை சி.ஏ பவுண்டேஷன் மற்றும் இண்ட்டர் ICAI, கோவையில் கற்றார். அண்ணாமலைப் பல்கலையில் அஞ்சல் வழி இளங்கலை வணிகவியல் கற்றார்

தனிவாழ்க்கை

இளங்கோ கிருஷ்ணனின் மனைவி பெயர் யுவராணி. நவம்பர் 02, 2011 அன்று மணநாள். மகள் லயாஸ்ரீ (2012)

இளங்கோ கிருஷ்ணன் பட்டயக்கணக்காளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். இதழியலாளராக பணியாற்றி வருகிறார்.

திரைத்துறை

இளங்கோ கிருஷ்ணன் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் ஆகிறார்

பங்களிப்பு

இளங்கோ கிருஷ்ணன் தன் சிந்தனைகளைப் பற்றிச் சொல்லும்போது “அடிப்படையில் இயங்கியல் பொருள்முதல்வாத நோக்கில் ஆர்வம் இருந்தாலும் ஓர் எல்லை வரை கருத்து முதல்வாத சிந்தனையோட்டங்களை அனுமதிப்பது மெய்யியலுக்கு உதவும் என்ற மனநிலை உள்ளது. அரசியல் வெளியில் தாரளவாத இடது ஜனநாயகவாதி எனலாம்” என்கிறார். நவீனத்தமிழ்க்கவிதைகளில் மரபார்ந்த படிமங்களையும் தொன்மங்களையும் முற்றிலும் புதியமுறையில் கையாள்வது, இசைத்தன்மைகொண்ட வரிகளை அமைப்பது, அங்கதம், மற்றும் அரசியல்பிரக்ஞையை அழகியலுடன் வெளிப்படுத்துவது ஆகியவற்றால் இளங்கோ கிருஷ்ணன் முக்கியமான கவிஞராக கருதப்படுகிறார்.

படைப்புகள்

இளங்கோ கிருஷ்ணன் கல்லூரி நாட்களிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். 2003 முதல் 2005 வரை இவர் எழுதிய கவிதைகள் 2007ல் காயசண்டிகை என்னும் நூலாக வெளிவந்தன.

பாரதி, ஆத்மாநாம், மனுஷ்யபுத்திரன் ஆகியோரின் செல்வாக்கு தன்னிடம் உண்டு என்றும் புனைவுகள் மற்றும் சிந்தனைகளில் கோவை ஞானி, ஜெயகாந்தன், ஜெயமோகன், ரமேஷ் பிரேம் ஆகியோரின் செல்வாக்கு உண்டு என்றும் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • தேவமகள் அறக்கட்டளை விருது (2008)
  • சென்னை இலக்கிய விருது (2015)
  • வாசகசாலை விருது (2021)

நூல்கள்

  • காயசண்டிகை (கவிதைகள்)
  • பட்சியன் சரிதம் (கவிதைகள்)
  • பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் ( கவிதைகள்)
  • வியனுலகு வதியும் பெருமலர் (கவிதைகள்)
  • மருதம் மீட்போம் (கட்டுரைகள்)



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.