standardised

இறையனார் களவியல் உரை

From Tamil Wiki
archive.org

இறையனார் களவியல் என்னும் நூல் தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் இலக்கண நூல். இதனை இறையனார் அகப்பொருள் என்றும் குறிப்பிடுகிறோம். சங்க காலத்தில் எழுந்த இறையனார் அகப்பொருளுக்குச் சங்கப் புலவராகிய நக்கீரரே முதன்முதலாக உரை கூறினார்.இவ்வுரை காலத்தால் தொல்காப்பியத்துக்குப் பிந்தியது. இவரது காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு. இவரது உரையில் காதல் வாழ்க்கை பற்றி விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. முச்சங்க வரலாறு பற்றிய தொகுப்புக் குறிப்பினை முதன்முதலில் தந்த உரையாசிரியர் நக்கீரர். உரைநடை வளர்ச்சியில் சிலப்பதிகாரத்தில் வரும் உரைப்பாட்டு மடை என்னும் பகுதிக்குப் பின்னர்த் தமிழில் காணப்படும் உரைநடை இந்த உரைநூல். இறையனார் அகப்பொருளுக்கு எழுந்த நக்கீரர் உரையே இன்று நமக்குக் கிடைத்துள்ள உரைநூல்களில் காலத்தால் முந்தியது. தமிழ் உரைநடை வரலாற்றில் இது சிறப்பிடம் பெற்று விளங்குகின்றது. பல ஆண்டுகளாகச் செவி வழி கேட்டுப் பின் ஏட்டுச் சுவடியில் எழுதப்பட்டது என்பன போன்ற செய்திகள் அந்நூலின் உரைப்பகுதியில் உள்ளன.

நூல் அமைப்பு

களவின் இலக்கணத்தையும் கற்பின் இலக்கணத்தையும் உரைக்கும் இறையனார் களவியல் நூலில் களவுப் பிரிவில் 33 நூற்பாக்களும் கற்பு பிரிவில் 27 நூற்பாக்களும் மொத்தம் 60 நூற்பாக்கள் உள்ளன. இப்பாக்களுக்கான உரை நக்கீரரால் இயற்றப்பட்டு 'இறையனார் களவியல் உரை' அல்லது 'இறையனார் அகப்பொருள் உரை' எனப் பெயர்பெற்றது. . இவர் தாம் செய்த களவியல் உரையை வாய்மொழியாகத் தம் மகனார் கீரங்கொற்றனாருக்கு உரைத்தார். கீரம் கொற்றனார் தேனூர் கிழாருக்கு உரைத்தார். இவ்வாறாக இந்த உரை அடுத்தடுத்து மனப்பாடமாக எட்டு தலைமுறைக்கு ஒப்படைக்கப்பட்டது. இறுதியில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வாக்கில் முசிரி நீலகண்டன் இந்த உரையை ஓலைச்சுவடியில் எழுதி வைத்தார்.

நக்கீரர் கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை என்னும் நான்கு வகை உரைக் கூறுபாடுகளை விளக்கி, அதன் பின்னர் களவியல் நூற்பாக்கள் அறுபதுக்கும் முறையே நான்கு வகை உரைகளையும் வகுத்துக் கூறியுள்ளார். உரையில், உரைநடை கவிதைப் பண்பு கொண்டதாகவும், எளிமையானதாகவும், வினா விடை முறையிலும் அமைந்துள்ளது.

இறையனார் களவியல் உரையில் அமைந்த உரைநடைக்குச் சான்றாக அந்நூலிலிருந்து ஒரு பகுதியைக் காணலாம். ''இனிப் பயன் என்பது ‘இது கற்க இன்னது பயக்கும்’ என்பது. ‘இது கற்க இன்னது பயக்கு மென்பதறியேன்; யான் நூற்பொருள் அறிவல்’ என்னுமேயெனின், ‘சில்லெழுத்தினால் இயன்ற பயனறியாதாய், பல்லெழுத்தினான் இயன்ற நூற்பொருள் எங்ஙனம் அறிதியோ பேதாய்’ எனப்படுமாகலின் இன்னது பயக்குமென்பது அறியல் வேண்டும்''.

களவியல்

நூல் சிறப்பினாலும் உரைசிறப்பினாலும் பெயர்பெற்றது இறையனார் களவியல் உரை. தமிழில் ஐந்திணையின் வரலாறு, நூல்வரலாறு,  முதல், கரு,உரிப்பொருள்களின் விளக்கம், எட்டுவகைத் திருமணம், நயப்பு, பிரிவச்சம், வன்புறை, அருமையறிதல் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. அடுத்து தலைவன் தலைவியின் இடையே நடைபெறும் ஊடல்களைப் போக்கவும் இருவரையும் ஒன்றிணைத்து வைக்க பாங்கற் கூட்டம், உற்றது உரைத்தல், தலைவனை வியந்து கூறுதல் என்பவையும் இதில் அடங்கும். மடல் திறம் கூறல்,  தோழியின் பண்புநலன்கள், அறத்தோடு நிற்றல், புணர்ச்சியில் களிறுதரும் புணர்ச்சி, புனல் தரும் புணர்ச்சி, களவின் வழியே கற்பு, இரவுக்குறிம், அல்லல்குறி, பகற்குறி, களவு வெளிப்படுதல், அலர் தூற்றல், ஊரார், போவோர், கண்டோர்,  வேலனை கேட்டல் போன்ற இன்னும் பல செய்திகள் களவியியலில் குறிப்பிட்டுள்ளன. கற்பியல் பிரிவைப்பற்றி விரிவாகப் பேசப்படுகிறது.

பாடல் நடை

இறையனார் களவியல் உரையில் அமைந்த உரைநடைக்குச் சான்றாக அந்நூலிலிருந்து ஒரு பகுதியைக் காணலாம். ''இனிப் பயன் என்பது ‘இது கற்க இன்னது பயக்கும்’ என்பது. ‘இது கற்க இன்னது பயக்கு மென்பதறியேன்; யான் நூற்பொருள் அறிவல்’ என்னுமேயெனின், ‘சில்லெழுத்தினால் இயன்ற பயனறியாதாய், பல்லெழுத்தினான் இயன்ற நூற்பொருள் எங்ஙனம் அறிதியோ பேதாய்’ எனப்படுமாகலின் இன்னது பயக்குமென்பது அறியல் வேண்டும்''.

இறையனார் களவியல் தோன்றியதைப்பற்றிய தொன்மக்கதை

இறையனார் களவியல் என்ற நூல் கடைச் சங்க காலத்தின் இடைப்பகுதியில் தோன்றியது. பாண்டியனது ஆட்சிக்காலத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மழையின்றி பஞ்சம் வாட்டியுள்ளது. இவ்வாறு பல ஆண்டுகளாகப் பஞ்சம் தொடர்ந்துள்ளது. இதனை ‘வற்கடம்’ என்று அக்காலத்தில் அழைத்துள்ளனர். இந்த வற்கடம் வாட்டிய காலத்தில் ஆண்ட  பாண்டியனின் பெயர் இந்நூலில் குறிப்பிடப் படவில்லை. வேறு சில நூல்கள் இப்பாண்டியன் பெயரை உக்கிரப்பெருவழுதி  என்று கூறுகின்றன.  வற்கடம் தீர்ந்து மழை பெய்யும் காலம் வரும் வரை புலவர்கள் இந்த நாட்டில் வாழாமல் அனைவரும் வெளி நாட்டில் வாழ்ந்துவிட்டு மழைப் பெய்து நல்ல நிலைமையில் நாடு வந்தால் மட்டும் அனைவரும் வரவேண்டும் என்று மன்னன் அனைத்துப் புலவர்களுக்கும் ஓலைமூலம் செய்தி அனுப்பி வைக்கின்றான். அதேபோல மழைப்பொழிந்து வற்கடம் தீர்ந்துபோகிறது. சென்ற புலவர்கள் மீண்டும் நாடு திரும்புகின்றனர். அவ்வாறு மிண்டும் வந்த புலவர்கள் சில நூல்களையும் ஓலைச்சுவடிகள் மூலம் கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரும்போது தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் மட்டும் காணவில்லை.

எழுத்தும் சொல்லும் பொருளதிகாரத்தின் பொருட்டு அல்லாவா உருவாயின. அஃதின்றேன் எழுத்தும் சொல்லும் மட்டும் கிடைத்து என்ன பயன் என்று அரசன் வினவியிருக்கின்றான்; மதுரை ஆலவாயண்ணலிடம் முறையிட்டுள்ளான், அதுசமயம் மறுநாள் சொக்கலிங்கத்தின் பீடத்தில் செப்பேடு ஒன்றில் இறையனார் களவியல் என்ற பெயரில் 60 சூத்தரங்கள் கொண்ட பொருள் நூல் ஒன்று காணக்கிடைத்துள்ளது. அதற்கு உரையைக் கடைச்சங்கப் புலவர்கள் 49 பேரும் எழுதியிள்ளனர்.  இவ்வுரைகளில் எதைக் கொள்வது எதை விடுவது என்று சிக்கல் மன்னருக்கும் புலவர்களுக்கும் ஏற்பெற்றிருக்கிறது. இதனைப் போக்குவதற்கு இறைவன் மதுரைக்குப் புறத்தே உள்ள உப்பூரிக்குடியில் ஓர் ஊமை இருப்பதாகவும் அவன் பெயர் சிவகுமரன் (வடமொழியில் உருத்திரசன்மன்) என்றும் எந்த உரையை அவன் கேட்கும்போது கண்களில் நீர்மல்க தலையசைத்து கரவொலி எழுப்புகின்றானோ அதுவே சிறந்த உரை என்று அசரீரி எழுந்ததாகவும் வரலாறு கூறுகிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உரை நக்கீரரின் உரைதான் என்று கூறுவர். அதுவே இறையனார் களவியல் உரை என வழங்கி வருகிறது. இந்த உரைதான் தமிழ்ச் சங்கம் மூன்றின் வரலாறுகளைக் கூறும் ஆவணமாக அறிஞர்களால் போற்றப்படுகிறது.

சிறப்புகள்

இறையனார் அகப்பொருளுக்கு எழுந்த நக்கீரர் உரையே இன்று நமக்குக் கிடைத்துள்ள உரைநூல்களில் காலத்தால் முந்தியது. 'தமிழ் உரைநடையின் ஆரம்ப காலத்தை - கவிதை நிலையிலிருந்து உரைநிலைக்குத் தமிழ் மாறுகிற ஒரு காலப்பகுதியைக் களவியல் உரை காட்டுகிறது'' என்று மு.வரதராசன் குறிப்பிட்டார். இவ்உரைநடை பற்றி அ.மு.பரமசிவானந்தம் கூறும்போது, ''இக்களவியல் உரை தமிழ் உரைநடை வளர்ச்சியில் ஒரு மைல் கல்.அடுத்து வரப்போகின்ற பெரிய உரையாசிரியர்க்கெல்லாம் வழிகாட்டியாகவும், மணிப்பிரவாள நடைக்கு வித்திட்டதோ என்னுமாறும் இவ்வுரை செல்கிறது'' என்று குறிப்பிடுகிறார். "நூலின் பொருளை வினாவிடைகளால் விளக்கும் தருக்க நூல்மரபும் இயற்கைக் காட்சிகளையும் ஆடவர் மகளிராகிய இருபாலாரின் உள்ளத்துணர்வுகளையும் சொல்லோவியமாகப் புனைந்துரைக்கும் கற்பனைத் திறமும் பாடல்களின் பொருள்களை நயம்பெற விளக்கும் இலக்கியச் சுவைநலமும் உலக வாழ்க்கையின் நுட்பங்களைச் சிறந்த உவமைகளாலும் பழமொழிகளாலும் புலப்படுத்தும் நுட்பமும் தமிழ்மொழியின் இலக்கணங்களைத் தெளிய வைக்கும்திட்பமும் ஒருங்கே பெற்றுத் திகழும் சீரிய உரைநடை இலக்கியம் இறையனார் களவியலுரையாகும்" என க. வெள்ளைவாரணர் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

தமிழ் இணைய கல்விக் கழகம்

இறையனார் அகப்பொருள் உரை-மதுரைத் திட்டம்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.