இரா. மீனாட்சி

From Tamil Wiki
Revision as of 10:23, 23 August 2022 by Ramya (talk | contribs) (Created page with "இரா. மீனாட்சி தமிழில் எழுதி வரும் கவிஞர், ஆய்வாளர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், புதுக்கவிதைப் படைப்பில் குறிப்பிடத்தக்கவர். == வாழ்க்கைக் குறிப்பு == தற்போது ஆரோவில் சர்வதேச நகர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இரா. மீனாட்சி தமிழில் எழுதி வரும் கவிஞர், ஆய்வாளர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், புதுக்கவிதைப் படைப்பில் குறிப்பிடத்தக்கவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தற்போது ஆரோவில் சர்வதேச நகரத்தில் பணியாற்றுகிறார்.

அமைப்புப் பணிகள்

1978 கோவை அவிநாசி அரசு உயர்நிலைப்பள்ளியில் முதன்முறையாக பாரதிசிலை வைக்க அரசாணை பெற்று சிலை நிறுவினார். பாரதி நூற்றாண்டு விழாத் தலைமையேற்று கவியோகி சுத்தானந்த பாரதியார், பாரதிதாசன் புதல்வர் திரு.மன்னர் மன்னன் உள்ளிட்டோரைக் கொண்டு பாரதி நூற்றாண்டு விழா மாநாடு நடத்தினார். பாரதிதாசனுக்கு விழா மலர் வெளியிட்டார். 2007 டிசம்பர் 7,8 ஆகிய நாட்களில் பாரதி - 125 விழாநிறைவு நடத்தியமை. இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரதி வாழ்வியல் பயிலரங்கு, தமிழின் ஓருலகக் கருத்துணர்வு (ONE WORLD CONCEPT IN TAMIL ) என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல்கள் வெளியீடு நடத்தினார். 2008 சாகித்திய அகாதெமியுடன் இணைந்து வருங்காலத் கவிதையும் கவிதையின் வருங்காலமும் குறித்த கருத்தரங்கம் நடத்தினார். 2010 தாகூர்-150 சாகித்திய அகாதெமியுடன் சேர்ந்து கருத்தரங்கு நடத்தினார். அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட கீழ்த்திசை நாடுகளிலும் பலமுறை கவிதை வாசிப்பு நிகழ்வுகளில் பங்கேற்பு, மற்றும் இந்தியக் கலாச்சாரம் பற்றிய வகுப்புகளை வருகைதரு சிறப்புப் பேராசிரியராக இருந்து நடத்தி வருகிறார். 2005 நவம்பரில் சென்னைப் பல்கலைக் கழகமும் மைசூர் நடுவண் அரசின் இந்திய மொழிகள் நிறுவனமும் இணைந்து நடத்திய செம்மொழித் திட்டக் கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். 2006 டிசம்பர் தொடங்கி 2007 டிசம்பர் வரை பாரதி - 125 விழாவினைத் தொடங்கிக் கொண்டார். ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனால் தொடங்கப் பெற்ற இவ்வியக்கம் பாரதி தொடர்பான கருத்தரங்கள், கவிதைப் பயிற்சிப் பட்டறை, கவிஞர்கள் சந்திப்பு, 125 இளைஞர்கள் மற்றும் 125 குழந்தைகளுக்குப் பாரதி பயிலரங்குகள் மற்றும் விழாக்கள் நடத்திவருகின்றது.

ஆரோவில்

1995 -ஆம் ஆண்டு ஐ.நா. சபை பொன்விழாவையொட்டி ஆரோவில்லிற்கு வழங்கப்பட்ட நட்புப் பரிசினைப் பெற ஆரோவில் சார்பாளராக நியூயார்க் சென்றார். 2003-ஆம் ஆண்டு யுனெஸ்கோ - பாரீஸில் ஆரோவில் சர்வதேச நகர வளர்ச்சி பற்றிய நிகழ்வில் தமிழ்க் கலாச்சாரத் தொடர்பாளராகப் பங்கு பெற்றார். 2006 மார்ச், ஆரோவில் இந்திய ஆப்பிரிக்க நட்புக் கழகம் தொடங்குவதற்காக, ஆரோவில் பிரதிநிதிகளுள் ஒருவராகத் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்திற்குப் பயணம், ஆப்பிரிக்க இந்திய இளைஞர்களுக்கிடையே நட்புறவுப் பாலமாக ஆரோவில் இளைஞர்கள் கல்வி மையத்தைக் கொண்டு செயல்பட்டார். ஆரோவில் தமிழ் மரபு மைய நிர்வாகியாக பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் ஆரோவில்லில் குழந்தைகளுக்கான புத்தகத் திருவிழாவினைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். 2009இல் மக்கள் காப்பியம் சிலப்பதிகாரம் எனும் 10 நாள் பயிலரங்கினை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் ஆரோவில்லும் இணைந்து நடத்தினார்.

ஆய்வு

”Preservation of the Tamil Language, heritage and culture” என்ற தலைப்பில் யுனெஸ்கோவின் பங்களிப்போடு தமிழ்மரபு - கலாச்சாரம், வரலாறு, மற்றும் மொழிப்பாதுகாப்பு ஆய்வுகளில் இளைஞர்களுக்கு நெறியாளராக இருந்து பணியாற்றியதோடு, அது தொடர்பான பொருண்மைகளில் நூல்களை வெளியிட்டார். ”அருகி வரும் மாட்டுவண்டி (The technology economy and history of the traditional wooden wheel bullock cart) மற்றும் சிறுபாணன் சென்ற பெருவழி” என்ற ஆய்வு நூலை வெளியிட்டார்.

இலக்கிய வாழ்க்கை

சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ காலத்தில் இருந்து எழுதத் தொடங்கியவர். பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி 1982-இல் புதுச்சேரி (பாரதி பாடிய) சித்தானந்தச் சாமி திருக்கோயில் வளாகத்தில் அனைத்து வானொலி நிலையங்கள் சார்பில் கவியோகி சுத்தானந்த பாரதியார் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கவிதை பாடினார். 1982-ஆம் ஆண்டு புதுதில்லி - அகில இந்திய கவிசம்மேளனம் பங்கேற்றார்.

விருதுகள்

  • இவர் எழுதிய “உதய நகரிலிருந்து” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  • இவர் எழுதிய செம்மண் மடல்கள் என்னும் நூலும் 2012ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் விருதினைப் பெற்றது.
  • சிறந்த சித்த மருத்துவச் சேவைக்காக ஸ்ரீபுத்து மகரிஷி அறக்கட்டளை வழங்கிய சித்த மருத்துவச் சேவைச் செம்மல் என்னும் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.
  • 1964இல் கோவை. பூ.சா.கோ. நாவலர் மன்றத்தின் சிறந்த கல்லூரிப் பேச்சாளருக்கான தங்கப் பதக்கம் பெற்றார்.
  • 1978இல் சிறந்த கிராமப்புற இளைஞர் பணிக்கான ஜெர்மன் டாக்டர் ஹேயின்ரிச் அவார்டு பெற்றார்.
  • சிறந்த பல்நோக்குச் கல்விச் சிந்தனையாளர் விருது சென்னை சுந்தர்ஜா அறக்கட்டளை சார்பில் அளிக்கப்பட்டது.
  • 1999இல் கோவை அமரர் கவிஞர் தேவமகள் அறக்கட்டளை சார்பில் முதலாமாண்டுச் சிறப்புப் பொற்கிழியும், பாராட்டும் பெற்றார்.
  • 2005இல் கவிஞர் சிற்பி இலக்கிய விருது.
  • 2007இல் புதுச்சேரி கவிஞர் கல்லாடனார் இலக்கிய விருது.
  • ‘உதயநகரிலிருந்து’ நூலுக்காக தமிழக அரசின் 2006-ஆம் ஆண்டு சிறந்த புதுக்கவிதை நூலுக்கான பரிசு பெற்றார்.
  • திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருது 2007
  • 2010இல் புதுவை பாரதி விருது
  • 2010இல் சென்னை கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை சார்பில் கவிக்கோ விருது
  • தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் விருது

நூல்கள்

கவிதைத்தொகுப்பு
  • நெருஞ்சி - சாரல் வெளியீடு (1970)
  • சுடுபூக்கள் - சாரல் வெளியீடு (1978)
  • தீபாவளிப் பகல் - அன்னம் வெளியீடு (1983)
  • மறுபயணம் (இருமொழி) - ஆரோவில் (1998)
  • மீனாட்சி கவிதைகள் (தொகுப்பு) - காவ்யா பதிப்பகம் (2002)
  • வாசனைப் புல் - மித்ர வெளியீடு (2006)
  • உதயநகரிலிருந்து - கபிலன் பதிப்பகம் (2006)
  • கொடிவிளக்கு - கபிலன் பதிப்பகம் (2009)
  • செம்மண் மடல்கள் - கபிலன் பதிப்பகம் (2012) (தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் 2012ஆம் * * * ஆண்டுக்கான சிறந்த நூல் விருது)
  • ஓவியா - கபிலன் பதிப்பகம் (2009)
பிற தொகுப்பு நூல்களில்
  • பறத்தல் அதன் சுதந்திரம்
  • கொங்கு தேர் வாழ்க்கை
  • சிற்றகல்
  • இணையாசிரியராக எழுதிய நூல்கள்
  • மகாகவி பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி, கபிலன் பதிப்பகம். (2006)
  • அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர், கபிலன் பதிப்பகம். (2007)
பிறமொழித் தொகுப்புகளில்
  • The Penguin new writing in India.
  • In their own voice – The Penguin anthology of contemporary Indian women poets.
  • The Oxford anthology of Modern Indian Poetry The Oxford University Press.
  • World Poetry. An anthology of verses from antiquity to our time (4000 yrs. Poetry) W.W.Norton and company. * Newyork – 1998. (நாலாயிரமாண்டு உலகக் கவிதைகளில் இருபதாம் நூற்றாண்டின் ஒரே தமிழ்க்கவிதையாக இவர்தம் சுடுபூக்கள் தொகுப்பிலிருந்து கவிதை இடம் பெற்றுள்ளது.)
ஆய்வு நூல்கள்
  • அருகி வரும் மாட்டுவண்டி (The technology economy and history of the traditional wooden wheel bullock cart) மற்றும் சிறுபாணன் சென்ற பெருவழி
  • மொழிவளம் பெற ( தமிழ் - ஆங்கிலம் கவிதைகள்)
  • பனைமரமும் நாட்டுப்புற மக்களும் (Palmyrah tree and the native people)
  • தமிழக மகளிரின் கலைகளில் ஒன்றான கோலக்கலை பற்றிய ஆய்வு (Kolam – The floor drawing )
  • தமிழில் கடித இலக்கியம்.
  • புனிதச் சமையல் (Sacred cooking)
  • கவிதை தொகுதி: Seeds France Duat and Dreams

வெளி இணைப்புகள்

உசாத்துணை