under review

இமயத் தியாகம்

From Tamil Wiki
Revision as of 17:20, 1 September 2022 by Navin Malaysia (talk | contribs)

To read the article in English: Imayath Thiyagam. ‎

இமையத்தியாகம்

இமயத் தியாகம் (2006) மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமி எழுதிய வரலாற்று நாவல். மலாயாவை ஜப்பானியர் ஆக்ரமித்திருந்த காலகட்டத்தையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை வழிநடத்தியதையும் சித்தரிக்கிறது. நேதாஜியின் விடுதலைப்போர் என்னும் துணைத்தலைப்புடன் இந்நாவல் வெளியாகியது.

எழுத்து, வெளியீடு

இந்நாவல் 2000-த்தில் அ. ரெங்கசாமியால் எழுதப்பட்டது. 2006-ல் இளங்கோ நூலகம் (கள்ளக்குறிச்சி) பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. மறுபதிப்புகளை தமிழினி பிரசுரம் வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் தென்கிழக்காசிய வெற்றியில் தொடங்குகிறது இமயத் தியாகம், இந்திய சுதந்திரச் சங்கம், இந்திய தேசிய இராணுவத்தின் தோற்றம், நேதாஜியின் தலைமைப்பண்பு ஆகியவற்றைச் சித்தரிக்கிறது. பர்மிய, வடகிழக்கு இந்தியப் போர்முனைகளில் தமிழ்வீரர்கள் பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்துப் போராடியதும் அவர்களின் தியாகமும் விவரிக்கப்படுகிறது.

370 பக்கங்களைக் கொண்ட இமயத் தியாகம் மூன்று பாகம் உடையது. ஒவ்வொரு பாகமும் மிக மெல்லிய இடைவெளியைக் கொண்டது. முதல் பாகம் ஜப்பானிய படை மலாயாவுக்குள் புகுந்து பரவுவது, ஜப்பானியர்களின் போர் தந்திரம், இந்திய தொண்டர் படை தோற்றம் ஆகியவற்றை விவரிக்கிறது. இரண்டாம் பாகம் இந்தியச் சுதந்திரச் சங்கம், இந்திய தேசிய இராணுவத்தின் தோற்றம், நேதாஜியின் தலைமைத்துவம் இவற்றினூடே தமிழ் வீரர்களின் தியாகங்கள் ஆகியவற்றை சொல்கிறது. மூன்றாம் பாகம் ஐ.என்.ஏ வீரர்கள் இந்தியப் போர் எல்லையை நோக்கி பயணிப்பதில் தொடங்கி அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை விவரித்து நேதாஜியின் மரணத்தில் முடிவுறுகிறது.

"தென்கிழக்காசிய தமிழர்களின் வாழ்க்கை ஓட்டத்தில் சந்தித்த வீரப்போராட்ட நிகழ்வான ஐ.என்.ஏ வரலாற்றை இன்றைய தலைமுறையும் எதிர்வரும் தலைமுறையும் அவசியம் அறிந்திருக்கவேண்டும், உணரவேண்டும். அவ்வரலாற்றை என்றென்றும் நினைவில் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்ற கருத்தில்தான் இந்நாவலைப் படைத்திருக்கிறேன்" என்று ஆசிரியர் நாவலின் முகப்பில் குறிப்பிடுகிறார்

இலக்கிய இடம்

அ.ரெங்கசாமியின் நாவல்களில் இமயத்தியாகம் சிறந்தது என விமர்சகர்களால் கூறப்படுகிறது. இது ஏற்கனவே சொல்லப்பட்டுவரும் மரபான வரலாற்றை ஒட்டி வீரவழிபாட்டுத் தன்மையுடனும், போர் பற்றிய கற்பனாவாதத் தன்மையுடனும் எழுதப்பட்ட நாவல். ஆனால் துல்லியமான தகவல்கள், போர்ச்சித்தரிப்புகள் ஆகியவை குறிப்பிடும்படி உள்ளன. "நாவலை வாசித்து முடித்தபோது ஒரு காலத்தில் வாழ்ந்து முடித்த அகச்சோர்வு தொற்றிக்கொண்டது. வரலாற்றின் முன் லட்சியங்களின் தியாகங்களின் அர்த்தம் என்ன என்ற கேள்வி முன்வந்து நிற்பதே 'இமயத் தியாகம்’ நாவலை மேம்பட்ட படைப்பாக்குகிறது." என மலேசிய விமர்சகர் ம. நவீன் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page