under review

ஆலவாய் அழகன்: Difference between revisions

From Tamil Wiki
m (Spell Check done)
(changed template text)
Line 40: Line 40:
*[https://www.dinamani.com/specials/nool-aragam/2014/may/12/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-895722.html ஆலவாய் அழகன் தினமணி மதிப்புரை]  
*[https://www.dinamani.com/specials/nool-aragam/2014/may/12/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-895722.html ஆலவாய் அழகன் தினமணி மதிப்புரை]  
*
*
{{finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Revision as of 13:38, 15 November 2022

ஆலவாய் அழகன்
ஆலவாய் அழகன்
ஆலவாய் அழகன்
ஆலவாய் அழகன்

ஆலவாய் அழகன் (1960) ஜெகசிற்பியன் எழுதிய வரலாற்று மிகுபுனைவு நாவல். பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையை சோழர் ஆதிக்கத்தில் இருந்தும் ஹொய்ச்சால படையெடுப்பில் இருந்தும் மீட்டு பாண்டிய அரசை உருவாக்கியதைப் பற்றிய நாவல் இது.

எழுத்து,வெளியீடு

ஜெகசிற்பியன் இந்நாவலை 1960-ல் ஆனந்தவிகடன் வார இதழில் தொடராக எழுதினார். இந்தத் தொடர்கதைக்கு கோபுலு வரைந்த கோட்டோவியங்கள் தமிழில் வரையப்பட்ட மிகச்சிறந்த கதைச் சித்திரங்களாக கருதப்படுகின்றன. வானதிப் பதிப்பகம் இந்நாவலை நூலாக்கியது.

வரலாற்றுப் பின்னணி

ஆலவாய் அழகன்

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பொயு 1216-ல் பதவிக்கு வந்தார். அவருடைய அண்ணன் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் சோழப்பேரரசர் மூன்றாம் குலோத்துங்க சோழரின் கீழ் கப்பம் கட்டி சிற்றரசராக இருந்து வந்தார். குலோத்துங்க சோழனுக்கு எதிராக ஒரு போரை தொடங்கிய குலசேகர பாண்டியனை சோழப்படைகள் தோற்கடித்து மதுரையைச் சூறையாடின. அதற்கு பழிவாங்குவதாக சூளுரைத்து மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்கு வந்தான் என்று சொல்லப்படுகிறது.

பதவி ஏற்ற சில ஆண்டுகளிலேயே மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழநாட்டின் மேல் படையெடுத்தான். நாற்பதாண்டுக்கால மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் சோழநாடு பலவகையிலும் வலுவிழந்திருந்தது. வலங்கை இடங்கை பூசல்கள் மிகுந்து உள்நாட்டுப்போர்கள் நடந்துகொண்டிருந்தன. மாறவர்மன் சுந்தரபாண்டியன் தஞ்சாவூரையும் உறையூரையும் கைப்பற்றினான். பட்டத்து இளவரசனாகிய மூன்றாம் ராஜராஜ சோழன் தலைநகர்களை கைவிட்டுவிட்டு தப்பி ஓடினான். சுந்தரபாண்டியன் தஞ்சாவூரிலுள்ள ஆயிரத்தளி என்னும் ஊரில் உள்ள முடிகொண்டசோழபுரம் என்னும் இடத்தில் தனக்கு வீராபிஷேகம் செய்துகொண்டான். சிதம்பரத்தையும் பொன்னமராவதியையும் கைப்பற்றினான். சிதம்பரம் ஆலயத்தில் துலாபாரம் என்னும் எடைக்கு எடை பொன்வழங்கும் வழிபாட்டை நிறைவேற்றினான்

மூன்றாம் குலோத்துங்க சோழன் தன் மருமகனாகிய இரண்டாம் வீரவல்லாளனிடம் உதவி கோரினான். பட்டத்து இளவரசன் வீரநரசிம்மனின் தலைமையில் ஒரு படை சோழநாட்டுக்கு வந்தது. சோழர்களுடன் ஒரு இடைக்கால ஒப்பந்தம் செய்துகொண்டாலும் மாறவர்மன் சுந்தர பாண்டியன் மீண்டும் சோழநாட்டின்மேல் படையெடுத்து ஹொய்சாலர்களையும் சோழர்களையும் வென்றான். இவ்வெற்றிச்செய்தி திருக்கோளூர் செப்பேடுகளில் சொல்லப்பட்டுள்ளது.1217-ல் பொன்னமராவதியில் சோழப்பேரசர் பாண்டியர்களின் ஆதிக்கத்தை ஏற்று சரணடைந்தார். சோழப்பேரரசின் காலம் முடிந்து இரண்டாம் பாண்டியப்பேரரசின் காலம் தொடங்கியது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் இரண்டாம் பாண்டியப்பேரரசை உருவாக்கியவர் என கருதப்படுகிறார்.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் வெற்றியைச் சொல்லும் கல்வெட்டுப் பாடல்

காரேற்ற தண்டலைக் காவிரி நாணனைக் கானுலவும்

தேறேற்றி விட்ட செழுந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்த்து

தாரேற்ற வெம்படை ஆரியர் தண்டு படத்தனியே

போரேற்று நின்ற பெருவார்த்தை இன்னும் புதுவார்த்தையே

பிறருடைய படைப்புகள்

அகிலன் எழுதிய கயல்விழி என்னும் நாவல் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் வாழ்க்கையை பின்புலமாக்கியது. இது மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்றபேரில் திரைப்படமாக வெளிவந்தது.

கதைச்சுருக்கம்

பாண்டிய இளவரசன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தென்பாண்டி நாட்டில் கொற்கையில் தன் நண்பன் காங்கேயனுடன் செல்கையில் ஒரு பெண்ணை அவள் எங்கிருந்தோ தப்பி ஓடுகையில் சந்திக்கிறான். அவள் ஒரு சோனகவணிகனின் தங்கை என தெரிகிறது. அவள் அன்பானந்த கௌசாம்பி என்னும் புத்தபிட்சுவிடம் அடைக்கலம் புகுகிறாள். அவள் எவர் என கௌசாம்பி சொல்வதில்லை.

மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரை சென்று தன் அன்னை திரைலோக்கிய முழுதுடையாளைச் சந்திக்கிறான். அவள் அவனுக்கு அவன் தந்தையும் அண்ணன் சடையவர்மன் குலசேகர பாண்டியனும் எப்படி சோழர்களால் அவமதிக்கப்பட்டார்கள் என்று விளக்குகிறாள். சடையவர்மன் குலசேகரபாண்டியன் தம்பியிடம் சோழநாட்டை வெல்வதாகச் சத்தியம் வாங்கிக்கொண்டு உயிர்விடுகிறான்.

மாறவர்மன் சுந்தரபாண்டியன் சந்தித்தது சோழ இளவரசி நல்லினி என்னும் அருள்மொழியை.அவள் மாறவர்மன் மேல் காதல்கொள்கிறாள். மாறவர்மன் படையெடுப்பால் சோழஅரசு வீழ்ச்சியடையும்போது அவள் கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்கு கரிகால் பெருவளத்தான் அளித்த பதினாறுகால் மண்டபம் இடிபடாமல் காத்து நிற்கிறாள். 'எண்ணுளே இருந்தபோதும் யாவரென்று தேர்கிலேன், கண்ணுளே இருந்தபோதும் என்கொல் காண்கிலாதவே’ என்னும் கம்பராமாயணப் பாடல் அருள்மொழியின் உளமொழியாகவே இந்நாவலில் ஒலிக்கிறது.

இலக்கிய இடம்

ஆலவாய் அழகன் பாண்டியர்களின் வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல்களில் ஒன்று. மிகையான புனைவுக்கலப்பும் சாகசங்களும் இல்லாமல் வரலாற்றை சித்தரிப்பது. அரசகுலச் சதிகள், ஒற்றர்களின் சூழ்ச்சிகள் ஆகியவற்றை கலந்து ஒரு காலகட்டத்தின் சித்திரத்தை அளிக்கிறது. ஜெயமோகன் இந்நாவலை தமிழின் வரலாற்று மிகைபுனைவுகளின் வரிசையில் வைக்கிறார்.

உசாத்துணை


✅Finalised Page