being created

ஆர். பி. எஸ். ராஜு

From Tamil Wiki
Revision as of 18:49, 3 September 2023 by Saalini (talk | contribs) (Created page with "thumb|481x481px ஆர். பி. எஸ். ராஜு (ஜூலை 26, 1953) பாடகர், இசைக்கலைஞர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், உரையாசிரியர் எனும் பன்முக ஆளுமையாளர். ஆர். பி. எஸ். ராஜு ஸ்ரீ அங்கா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஆர்.பி.எஸ்.ராஜு.png

ஆர். பி. எஸ். ராஜு (ஜூலை 26, 1953) பாடகர், இசைக்கலைஞர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், உரையாசிரியர் எனும் பன்முக ஆளுமையாளர். ஆர். பி. எஸ். ராஜு ஸ்ரீ அங்காசா விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

ஆர். பி. எஸ். ராஜு ஜூலை 26, 1953இல் தைப்பிங்கில் பிறந்தார். இவரின் பெற்றோர் ஆர். பி. எஸ். மணியம் - தணிகவதி இணையர். நான்கு சகோதரர்களும்  நான்கு சகோதரிகளும் கொண்ட குடும்பத்தில் ஆர். பி. எஸ். ராஜு மூன்றாவது பிள்ளை. இவரின் தந்தை ஆர். பி. எஸ். மணியம் 1950களிலிருந்து 1970 வரை தைப்பிங் வட்டாரத்தில் நாடகாசிரியராக, நாடக இயக்குனராக, இசைக்கலைஞராகத் திகழ்ந்தவர். பி. சுப்பையா, மலேசியா வாசுதேவன், மனு ராமலிங்கம், ந. மாரியப்பன், ரெ. சண்முகம் ஆகியோர் ஆர். பி. எஸ். மணியத்தின் இசையிலும் நாடகத்திலும் பங்குபெற்றவர்கள்.

ஆர். பி. எஸ். ராஜு தைப்பிங்கிலுள்ள கிங் எட்வர்ட் VII பள்ளியில் ஐந்தாம் படிவம்வரை  பயின்றார். ஆர். பி. எஸ். ராஜுவுக்கு ஜீவன் எனும் மகன் இருக்கிறார்.

தனி வாழ்க்கை

ஆர். பி. எஸ். ராஜு பள்ளிப்படிப்பை முடித்தவுடன் 1973இல் வேலை தேடி கோலாலம்பூர் வந்தார். வானொலி அறிவிப்பாளரும் பாடகருமான பி. சுப்பையாவின் உதவியால் ஆர். பி. எஸ். ராஜு வானொலிப்பிரிவில்  பகுதி நேர ஊழியராக இணைந்தார். முதலில் இசைக்கலைஞர்களுடன் பணியாற்றிய இவரைக் குரல் தேர்வு செய்து 'இவ்வார இசைக்கலைஞர்' நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை என். மாரியப்பன் வழங்கினார்.

ஆர். பி. எஸ். ராஜுவின் இசையமைக்கும் திறமைக்கு வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர்கள் வானொலிப் பிரிவிலிருந்த தீனரட்சகி, சந்திரா சூர்யா சகோதரிகள். அப்போதைய கல்வி ஒளிபரப்பில் இருந்த பவித்திரனின் இசைவோடு ஆர். பி. எஸ். ராஜு நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் பாடல்களுக்கு இசையமைத்தார்.

ஆர்.பி.எஸ்.ராஜு 2.png

ஆர். பி. எஸ். ராஜுவுக்கு இயக்குநர் குமார் தங்கையாவின் அறிமுகம் ஏற்பட்டது. குமார் தங்கையா புனே திரைப்படக்கல்லூரியில் பயிற்சி பெற்றவர். ஆர். பி. எஸ். ராஜு அவரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். ஆர். பி. எஸ். ராஜு குமார் தங்கையாவிடம் நாடக, திரைக்கதை தயாரிக்கும் முறைகளைக்  கற்றுக்கொண்டார்.

ஆர். பி. எஸ். ராஜுவின் இயக்கத்தில் ஒளிபரப்பான 'வரதட்சணை' எனும் பதின்முன்று வாரத் தொடர் ஆர்.டி.எம் 1 அலைவரிசையில் ஒளியேறிய முதல் தமிழ்த் தொடர்நாடகமாகும். இதனைத் தொடர்ந்து ஆர். பி. எஸ். ராஜு 52 வார மலாய்த் தொடரை இயக்கும் வாய்ப்பினைப் பெற்றார். ஆர். பி. எஸ். ராஜு தொலைக்காட்சிக்கென மூன்று படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் 'கு டெக்காட் படாமு' விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

இசைப்பயணம்

ஆர். பி. எஸ். ராஜு தன் தந்தையின் வழிகாட்டலில் கர்நாடக இசைப்பயிற்சி பெற்றார். இவரின் தந்தையின் கலைமகள் நாடகக்குழுவிலிருந்த ஹார்மோனியக் கலைஞர் எம். ஆர். வி கோவிந்தனிடம் இவர் இசைப்பயிற்சி பெற்றார். ஹார்மோனியம், பியானோவுடன் பள்ளி நாட்களிலேயே கற்ற கித்தார் இசையையும் தொடர்ந்து பயின்றார். கோலாலம்பூரில் இயங்கிய உதயசூரியன் இசைக்குழுவில்  கித்தார் கலைஞனாகவும் பாடகராகவும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். கர்நாடக இசையையும் மேலையிசையையும் இணைத்து இவர் முதலில் உருவாக்கிய அறிமுக இசை குழுவின் மூத்த உறுப்பினர்களைக் கவராது போயிற்று. இக்குழுவின் சித்தார் இசைக்கலைஞர் சாமுவேல்தாஸின் அறிமுகம் கர்நாடக இசைநுட்பங்களை மேலும் அறிவதற்குப் பெரிதும் துணைபுரிந்தது. ஆர். பி. எஸ். ராஜு  ஒலிச்சேர்க்கை தொழில்நுட்பத் துறையிலும் பயிற்சி பெற்றுள்ளார்.

டி. என். மாரியப்பனுடன் ஆர். பி. எஸ். ராஜு
ஸ்ரீ அங்காசா விருது, 2005

1983இல் பாடகி சுசிலா மேனனின் 'சரிகம' இசைக்குழுவில் இணைந்தார்.  இக்குழுவினரின் நிகழ்ச்சிகள் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. டாக்டர் வீ. பூபாலன் வானொலிப்பிரிவில் பொறுப்பேற்றபோது சுமார் 1000  உள்ளுர்ப் பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினை ஆர். பி. எஸ். ராஜுவுக்கு வழங்கினார். 1990களில் இருபத்துநான்கு மணிநேர வானொலி ஒலியலையாக மாற்றம் கண்டபோது வீ. ஆறுமுகத்தின் பொறுப்பில்  'தகவல் உல்லாச மையம், வானொலி ஆறு' என்ற வரிகளோடு புதிய அறிமுகஇசையை ஆர். பி. எஸ். ராஜு வடிவமைத்தார்.

செ. சீனி நைனா முகம்மது இயற்றிய  மலேசிய தமிழ் வாழ்த்தான 'நிலை பெற நீ வாழியவே' பாடலுக்கு ஆர். பி. எஸ். ராஜு இசையமைத்துள்ளார். 2005இல் டத்தோஸ்ரீ  காதிர் ஷேக் பட்ஷிர் தகவலமைச்சராக பொறுப்பேற்றிருந்தபோது, மலேசிய வானொலி நிலையங்களுக்கான சுய அடையாள இசைக்கான போட்டியை அறிவித்தார். இப்போட்டியில் தமிழ்ப் பிரிவான மின்னல் பண்பலைக்கான ஆர். பி. எஸ். ராஜுவின் அறிமுக இசை தெரிவு செய்யப்பட்டு  ஸ்ரீ அங்காசா விருதும் ஐயாயிரம்  ரிங்கிட்டும்  பெற்றது. அக்காலகட்டத்தில் பி. பார்த்தசாரதி மின்னல் பண்பலையின் தலைவராகயிருந்தார். ஆர். பி. எஸ். ராஜு 1995 முதல் 2015 வரை  ஐம்பதுக்கும் மேற்பட்ட நாதஸ்வரா, நாடாரியா, தீபாவளி சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு இசைவடிவமைப்புகளைச் செய்துள்ளார்.

பிற பங்களிப்புகள்

  • ஆர். பி. எஸ். ராஜு ஆர்.டி.எம்., ஆஸ்ட்ரோ நிறுவனம் நடத்திய இசைப்போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். ஸ்ரீ அங்காசா விருதுக்கான நீதிபதிகளின் குழுவில் உறுப்பினராகவும் இடம்பெற்றிருந்தார்.
  • மக்முர் மெகா புரொடக்சன் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் வடிவமைப்புப்பிரிவின்  தலைவராகச் செயலாற்றினார்.
  • சுசிலா மேனன் வெளியிட்ட ஜீவநாடி எனும் இசைத்தொகுப்புக்கும் ஆர். பி. எஸ். ராஜு இசையமைத்துள்ளார். இதில் பின்னணிப் பாடகர்கள் ஸ்ரீனிவாஸ்  பி. உன்னிகிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமியோடு  இவரின் மகன் ஜீவனும் பாடியிருந்தார்.
  • ஆஸ்ட்ரோ விண்மீன் ஒளியலையில் 'பயணம்' (2023) எனும் தீவுப் பயணச் சுற்றுலாத்தொடர் ஆர். பி. எஸ். ராஜுவின் தயாரிப்பாகும்.
  • ஆர். பி. எஸ். ராஜு 2015லிருந்து  தொலைக்காட்சிகளுக்கான நிகழ்ச்சித்  தயாரிப்பாளராகவும் ஆவணப்பட  இயக்குனராகவும் உரையாசிரியராகவும் செயலாற்றிவருகிறார்.

பரிசும் விருதுகளும்

  • ஸ்ரீ அங்காசா விருது 2005
  • இசைக் கலை அரசன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் & மலேசிய இந்தியர் கலை பண்பாட்டு சபா, 2014



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.